கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

மோடியின் சாதனை: ஏழைகள் எங்கே இருக்கிறார்கள்?

பி.ஏ.கிருஷ்ணன்
02 Apr 2024, 5:00 am
0

மிகவும் மெலிந்து இருந்தாள். 

காலில் மெட்டி இல்லாமல் இருந்தால் பள்ளிச் சிறுமி என்று சொல்லிவிடலாம். ஆனால் மூன்று குழந்தைகள்.

“சம்பளம் என்ன?” 

“தினம் 250 ரூபாய்ங்க. வர்லைன்னா தர மாட்டாங்க” 

நான் தற்சமயம் இருக்கும் குடியிருப்பில் வேலை பார்க்கும் பெண்ணுடன் சென்ற வாரம் பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த செய்தி து. அதே நாள் மாலை இன்னொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

“அயோத்தி போயிருந்தேன், சார்.” 

“எங்கே தங்கினீர்கள்? ஓட்டல்ல ரூம் கிடைக்கிறது கஷ்டங்கறாங்களே?” 

“ஏர்கண்டஷன்ட் டென்ட், சார். ஒரு நாளைக்கு 15,000 ரூபாய்.”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஏற்றத்தாழ்வு

இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிவிட்டன என்று சொன்னால் மோடி அரசின் காவலர்களாகப் பணிபுரிந்துவரும் வாட்ஸப் பல்கலைக்கழக முனைவர்கள் அடிக்க வருகிறார்கள். ஆனால், புள்ளிவிவரங்கள் பொய் சொல்வதில்லை. 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஏழை – பணக்காரருக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தைவிட அதிகம் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம் உள்ளவை என்று கருதப்படுபவை. அவற்றைவிட இங்கு வித்தியாசம் அதிகம்.  

இங்கு வருமான பிரமீட்டின் உச்சத்தில் இருப்பவர்கள் பத்தாயிரத்திற்கும் குறைவானவர்கள். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.42 கோடி. இந்தியாவில் வேலை பார்க்கும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 92 கோடி. இந்தியனின் சராசரி வருமானம் வருடத்திற்கு சுமார் ரூ. 2 லட்சம். 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

நேரு: அன்றைய இந்தியர்களின் பார்வையில்!

பி.ஏ.கிருஷ்ணன் 17 Nov 2021

உச்சத்தில் இருப்பவர்கள் சாதாரண இந்தியனைவிட இரண்டாயிரம் மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து சராசரி எடுப்பதால்தான் இந்தியாவில் உண்மையான நிலை மறைந்துபோகிறது; அதாவது, 90% பேர் சராசரியைவிடக் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதே அந்த உண்மை நிலை!

அம்பானியின் வருமானத்தையும் அவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பத்தாயிரம் அடித்தட்டு மக்களின் வருமானத்தையும் சேர்த்து சராசரி எடுத்தால் எல்லோரும் கோடீஸ்வரர்களாகத்தான் தெரிவார்கள்.

இன்னொரு கசப்பான உண்மை

தில்லியில் நான் இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் இந்தியாவின் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அடுக்ககம் கட்டியிருக்கிறது. விலை மிகவும் மலிவு. வெறும் 35 கோடி ரூபாய்தான். டாலர் கணக்கில் சுமார் நாற்பது லட்சம் டாலர்.

அமெரிக்காவில் இந்த விலையில் நியூயார்க் நகரில் மையப் பகுதியில் எல்லா வசதிகளும் கொண்ட குடியிருப்பை வாங்கலாம். அதாவது, இந்தியப் பணக்காரர்களுக்கும் அமெரிக்கப் பணக்காரர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை.

நான் முதலில் குறிப்பிட்ட பெண்ணின் தினக் கூலி 250 ரூபாய். டாலர் கணக்கில் மூன்று டாலர். இவரைப் போன்றே அமெரிக்காவில் வீட்டு வேலை செய்பவரின் தினக் கூலி சுமார் 100 டாலர். அதாவது, முப்பது மடங்குகள் அதிகம். இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ‘வாங்கும் சக்தி’ வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும். 

இந்த வித்தியாசம் எட்டு மடங்குகளுக்கு மேல் இருக்கும். அதாவது அமெரிக்காவின் அடித்தட்டு மக்கள் இந்திய அடித்தட்டு மக்களைவிட குறைந்தது எட்டு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதனால்தான் இந்தியாவில் கீழ் மத்தியதர மக்கள் வீட்டு வேலை செய்பவர்களை வைத்துக்கொள்ள முடிகிறது. மத்திய தர மக்கள் கார் ஓட்டுநர்களை அமர்த்திக்கொள்ள முடிகிறது. 

அமெரிக்காவில் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நாம் கொடுப்பது உணவுத் தேவைக்கும் அடிப்படைத் தேவைக்கும்கூடப் போதுமா என்பது சந்தேகம். ஆனாலும், அந்தச் சம்பளத்தில் வேலை செய்ய பலர் கிடைக்கிறார்கள் என்பது இந்தியாவின் உண்மை நிலையைக் காட்டுகிறது. 

இன்னும் சில புள்ளிவிவரங்கள்

மோடி அரசை ஆதரிப்பவர்களின் கோபத்தைத் தூண்டுவது உலகப் பட்டினி அட்டவணை. அதில் இந்தியாவின் இடம் 111. மொத்தம் 125 நாடுகள். நைஜீரியா, பாகிஸ்தான், வங்கதேசம், காங்கோ போன்ற நாடுகள் இந்தியாவைவிட உயரிய நிலையில் இருக்கின்றன. இப்புள்ளிவிவரத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம் என்றே வைத்துக்கொள்வோம். 

இந்திய அரசு தரும் சில புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம். பிரதமரின் ஏழ்மை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவசமாக தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்திய மக்கள்தொகையில் 55% ஏழ்மை நிலையில் சொந்தப் பணத்தில் தானியம் வாங்க முடியாமல் இருப்பதாக அரசே ஒப்புக்கொள்கிறது.  

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அரசு இந்த நிதி ஆண்டில் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 10% இத்திட்டத்தின் கீழ் பணிசெய்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இத்திட்ட அட்டையை வைத்திருப்பவர்கள் 1.22 கோடி பேர். திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் 92 லட்சம் பேர்கள். இவர்களில் 86%க்கும் மேல் பெண்கள்.

இவர்களுக்கு இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தொகை 10,574 கோடி ரூபாய். அதாவது, ஒருவருக்கு சுமார் ஆண்டுக்கு 11,000 ரூபாய் இத்திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. இரண்டு மாத வேலை. மற்ற மாநிலங்களில் நிலைமை படுமோசம். ஆனால், நாம் இத்திட்டம் சோம்பேறிகளை வளர்க்கிறது என்று அவதூறு செய்துகொண்டிருக்கிறோம். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்காவில் காந்தி

பி.ஏ.கிருஷ்ணன் 21 Sep 2021

பிரதமர் மோடியே இத்திட்டத்தைக் கடுமையாக நாடாளுமன்றத்தில் சாடினார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், ஏழ்மை இருப்பதால் வேறு வழியில்லை என்று அவருக்குத் தெரிந்திருப்பதால்தான் இத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம்.

ஏழைகள் இங்குதான் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி, நமக்குப் பணிசெய்துகொண்டு இருக்கிறார்கள். நாம்தான் பார்க்க மறுக்கிறோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நேரு: அன்றைய இந்தியர்களின் பார்வையில்!
தென்னாப்பிரிக்காவில் காந்தி
சாவர்க்கர்: இளம் வாழ்க்கை
சாவர்க்கர்: இங்கிலாந்து வாழ்க்கை
சாவர்க்கர்: சிறை, சித்திரவதை, சித்தாந்தம்
சாவர்க்கர்: இந்து மகாசபை யுகம்
சாவர்க்கர்: காந்தி கொலையோடு வந்த அஸ்தமனம்
எதிரியைப் பற்றி அறிந்துகொள்ளாமலே எதிர்ப்பேன் என்பது அறிவுடைமையா?
மேற்கத்திய மருந்துகள்: மறுக்க முடியாத சில உண்மைகள்
ஐன்ஸ்டைனும் குழந்தைகளும்
அறிவியலுக்கு பாரத ரத்னா

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


7

1





பழங்குடிநதி நீர் பிரச்சினைசிறப்பு நீதிமன்றம்ஸ்வீடன்சூரியகாந்திஅசோக் கெலாட்கொலையில் பிறந்த கடவுள்கள்இந்தி அரசியலின் உண்மையான பின்னணிஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத்தின் கண்டனம்பெரியார் காந்திராஜஸ்தானில் பிராமணர்குற்றவுணர்ச்சிதென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்மோசடிஅருஞ்சொல்பனவாலிவிரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!எதேச்சதிகாரத்தின் உச்சம்தனியார் நிறுவனங்கள்பிரியங்கா காந்திபள்ளிப்படிப்புசமஸ் ஜெயலலிதாஎழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டிஅம்பேத்கர் எனும் குலச்சாமிகல்வியாளர்காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதொல்லைபண்டிட்கேசவானந்த பாரதிமோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!