கட்டுரை, இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

எதிரியைப் பற்றி அறிந்துகொள்ளாமலே எதிர்ப்பேன் என்பது அறிவுடைமையா?

பி.ஏ.கிருஷ்ணன்
12 Nov 2021, 4:30 am
0

சாவர்க்கர் தொடர் குறித்த ராஜன் குறையின் ‘சாவர்க்கர்: தனிமனிதர்களும் வரலாறும்’ கட்டுரையை வாசித்தேன். கார்ல் மார்க்ஸைத் துணைக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்.

உண்மையில், மார்க்ஸின் ‘தி எய்டீன்த் ப்ரூமேய்ர் ஆஃப்  லூயி  போனபார்ட்’ (The Eighteenth Brumaire of Louis Bonaparte)  புத்தகத்தைச் சரியாகத்தான் அவர் படித்திருக்கிறாரா என்பதே ஐயமாக இருக்கிறது. சரியாகப் படித்திருந்தால், மார்க்ஸின் இந்த மேற்கோளை அவர் பயன்படுத்தியிருக்க மாட்டார்.

வரலாற்றைத் தனிமனிதர்களின் செயலாகப் பார்ப்பதற்கும் மார்க்ஸிய நோக்கில் வரலாற்றை அணுகுவதற்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்து அந்த மேற்கோள் பேசவில்லை. மாறாக, பழங்கதைகளைப் பேசுவது எவ்வாறு புதிய மாறுதல்களுக்கும் புரட்சிகளுக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது என்பதையே சொல்கிறது.

மார்க்ஸ் மேலும் சொல்கிறார்: “பூர்ஷுவா சமூகமானது, நாயகர்களைத் தேடாத சமூகமாக இருந்தாலும், அதற்கும் வீரம், தியாகம், வன்முறைச்செயல்கள், உள்நாட்டுப்போர், தேசங்களுக்கு இடையே போர் போன்றவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. க்ராம்வெல்லும் ஆங்கிலேய மக்களும் பழைய ஏற்பாட்டுக் கதைகளையும், உணர்வுகளையும், மாயங்களையும் தங்கள் பூர்ஷ்வா புரட்சி வெற்றியடைவதற்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அது நடந்ததும் பழைய நாயகர்களை விட்டு விட்டு புதிய நாயகர்களைத் தேடிக்கொண்டார்கள்.”

(But unheroic though bourgeois society is, it nevertheless needed heroism, sacrifice, terror, civil war, and national wars to bring it into being…Cromwell and the English people had borrowed from the Old Testament the speech, emotions, and illusions for their bourgeois revolution. When the real goal had been achieved and the bourgeois transformation of English society had been accomplished, Locke supplanted Habakkuk). 

ஆகவே, மார்க்ஸ் இங்கே எவ்வாறு பழம்பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பது புதுப் புரட்சிக்கு உதவுகிறது என்பதையே  சொல்கிறார். 

னிமனிதனுக்கு, குறிப்பாக நாயகர்களுக்கு வரலாற்றில் பங்கு என்ன என்பதை மார்க்ஸிய அறிஞர் ப்ளக்கனாவ், ‘வரலாற்றில் தனிமனிதர்களின் பங்கு’ (On the role of Individuals in history) கட்டுரையில் தெளிவாக சொல்கிறார்: “ஒரு மாமனிதனுடைய தனிப்பட்ட குணங்களால் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என்பதற்காக மாமனிதன் என்று அழைக்கப்படுவதில்லை. அவனுடைய குணங்கள் அன்றையச் சமூகத் தேவைகளுக்குப் பாடுபட அவனுக்கு உதவிசெய்கின்றன என்பதற்காகவே அவ்வாறு அழைக்கப்படுகிறான்.”

கார்லைல் தன் புத்தகத்தில் இவர்களை ‘துவக்குவிப்பவர்கள்’ என்று அழைக்கிறார். மாமனிதன் மற்றவர்கள் பார்ப்பதைவிடத் தீர்க்கமாகப் பார்ப்பதால் அவர்கள் சாதிக்க ஆசைப்படுவதைவிட வலுவாக அவன் சாதிக்க ஆசைப்படுவதாலேயே சமூகத்தின் துவக்குவிப்பவனாக இருக்கிறான். அவன் நாயகன். அவ்வாறு அழைக்கப்படுவது (வரலாற்றின், சமூகத்தின்) இயற்கையான இயல்புகளை மாற்றவோ தடுக்கவோ வலுக்கொண்டிருப்பவன் என்பதற்காக அல்ல. அவை எந்தத் திசையில் செல்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுகிறான் என்பதனால்! 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

(A great man is great not because his personal qualities give individual features to great historical events, but because he possesses qualities which make him most capable of serving the great social needs of his t. Carlyle, in his well-known book on heroes and hero-worship, calls great men beginners... A great man is precisely a beginner because he sees further than others, and desires things more strongly than others…. He is a hero. But he is not a hero in the sense that he can stop, or change, the natural course of things, but in the sense that his activities are the conscious and free expression of this inevitable and unconscious course. ) 

ன்றைய ஆட்சியாளர்கள் இப்படித்தான் சாவர்க்கரைத் தூக்கிப் பிடித்து நிற்கிறார்கள். சாவர்க்கரை ஒரு ‘துவக்குவிப்பவ’ராகவே அவர்கள் கருதுகிறார்கள். சாவர்க்கர் வாழ்க்கை வரலாறுகளும் அதையே செய்திருக்கின்றன. அந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பதையே நான் எழுதியிருக்கிறேன்.

எனக்கு சாவர்க்கர் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவரைப் பற்றி முழுமையாகப் படித்து தெரிந்துகொண்டால்தான் அவரை விமர்சிக்க முடியும் என்று எண்ணுகிறேன். சாவர்க்கரைக் கொள்கைரீதியாக எதிர்ப்பவர்கள், அவரை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இப்படி அவருடைய வாழ்க்கையை முழுமையாகப் படித்தால்தான் ஏன் அவர் புறக்கணிப்பட வேண்டியவர் என்பதை விரிவாக ஆதாரங்களோடு சொல்ல முடியும் என்று நம்புகிறேன். சாவர்க்கருக்கு மட்டும் இல்லை; எவருக்கும் இது பொருந்தும். இதுதான் அறிவுலகின் அணுகுமுறை. 

என்னுடைய சாவர்க்கர் தொடரும் இதைத்தான் செய்திருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் அது தொங்கிப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. மாறாக அவருடைய கருத்துகளை விரிவாகவும், ஆழமாகவும் விமர்சிக்கிறது. காந்தி கொலையில் அவருக்கு இருந்த பங்கைச் சொல்கிறது. அதேசமயத்தில் அவர் வாழ்க்கையின் முன்பகுதி  தருணங்கள் அவருக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் போராளிகளிடம் பெரும் மரியாதையை வாங்கித் தந்திருக்கின்றன. அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் அவர் வாழ்க்கையை நேர்மையாக அணுகுபவன் சொல்லத்தான் செய்வான். நானும் அதையே செய்திருக்கிறேன். இதைச் சொல்லக் கூடாது என்று சொல்வது அடிப்படையில் பாசிஸம்.

தேசியம் என்பது ஒதுக்கப்பட வேண்டியது என்று ராஜன் குறை சொல்வது மிகவும் குறுகிய ஒற்றைப் பரிமாணமான பார்வை. உலக வரலாற்றில் முதலாளித்துவம் தலைதூக்கிய பிறகு தேசியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பல தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேசியம் பேசிய ஸ்டாலினும் ‘அன்னை ருஷ்யா’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது.

இந்திய விடுதலைப் போரின் ஒருகட்டமாக இந்திய தேசியத்தைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று இந்தியா என்பது ஒரு வரலாற்று உண்மை. உலகில் பல நாடுகள் இறையாண்மையோடு இருக்கின்றன என்பதும் உண்மை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு காற்றில் கருத்துச் சொல்லக் கூடாது.

பரந்துபட்ட சமூகநீதியானது, சமத்துவம், சுயாட்சி-கூட்டாட்சி போன்றவற்றிற்கும் இந்திய தேசியத்திற்கும் எந்தப் பகைமுரணும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். மாறாக, சாதி, மத, இன அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் குறுங்குழுவாதம்தான் அழிவுக்குப் பாதை போடும். 

தேசியம் என்பது குறுகிய வட்டம். அந்த வட்டம் உலகத்தை வளைக்கும் வட்டமான சர்வதேசியமாக விரிவடைய வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. ஆனால், இன்று அது நடைமுறைச் சாத்தியம் இல்லை. உலகில் இருக்கும் நாடுகள் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் வரை இந்தியாவும் தன் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் இருக்கும். பாஜகவுக்கு தேசியத்தை நாம் எழுதிக்கொடுத்துவிட முடியாது. நேரு சொன்ன தேசியம் இன்றும் நமக்கு வேண்டும்.

சாவர்க்கர் சொல்கிறார், “என்னுடைய கனவு இந்தியா, எதிர்கால இந்தியா உலகக் காமன்வெல்தில் (பொதுநல அமைப்பு) முழு நம்பிக்கை கொண்டிருக்கும். நம் எல்லோருக்கும் தாய்நாடு உலகம்தான்.” கூடவே இதையும் சொல்கிறார்: “ஆனால் இந்தியா என்ற அடையாளம் மாறாமல் இருக்கும். அமைதியை விரும்பும் வலுவான மத்திய அரசைக் கொண்ட அந்நாடு உலக அமைதிக்கும் வளத்திற்கும் வலுச் சேர்க்கும்.”   

வலுவான இந்தியாவிற்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள் மிக்க உதவியாக இருக்கும் என்ற புரிதல் சாவர்க்கருக்கு இல்லை. இன்றைய பாஜக அரசிற்கும் இல்லை. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவரும் இத்தகுப் போக்கை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும் என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், மீண்டும் சொல்கிறேன், அப்படி சாவர்க்கரை எதிர்ப்பதற்கும் சாவர்க்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் படிக்க வேண்டும்.

முரட்டுத்தனமாக எவர் ஒருவரையும், முற்றிலும் புறமொதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லி வாசிக்க மாட்டேன் என்று புறந்தள்ளுவது அறிவார்ந்த செயலாகாது!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








இந்திய இடதுசாரிகள்ஈரான் - ஈராக்எலக்ட்ரிக் ஸ்கூட்டர்2023 தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்அடிப்படைவியம்மார்க்ஸ் ஜிகாத்சி.என்.அண்ணாதுரைபாரத் ஜோடோ யாத்திரைஎழுபத்தைந்தாவது ஆண்டுபுறக்கணிப்பு4ஜி சேவைபுவியியல்இந்திய வரலாறுசமஸ் அருஞ்சொல் ஜெயமோகன்கம்யூனிஸ்ட்கள்ஏபிபி - சி வோட்டர்இது சுற்றுலா தலம்பக்கிரி பிள்ளைமனித உணர்வுகள்மாநகராட்சிப் பள்ளிகள்உத்தர பிரதேச மாதிரிஆசான்நோங்தோம்பம் பிரேன் சிங்கீதைமேற்கத்திய மருந்துகள்மோடிக்கு சரியான போட்டி கார்கேபாரம்பரிய விவசாயம்லவ் டுடே: செல்பேசி அந்தரங்கம் - ஆபாசம் - அநாகரீகம்சாஸ்திரங்கள்அடக்கமான மனிதரின் மிதமான கணிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!