கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
27 Apr 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தலின் இரண்டாவது கட்டத்தில் பாஜக விசித்திரமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. இனியொரு முறை எட்ட முடியாத அளவுக்கு, கடந்த பொதுத் தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் வென்றுவிட்டது; எனவே அதைத் தக்கவைக்கவே கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இரண்டாவது கட்டத்தில், வாக்குப்பதிவைச் சந்திக்கும் 87 தொகுதிகளில் 62 இடங்களை 2019 பொதுத் தேர்தலில் அது கைப்பற்றியது.

இப்போது ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அந்தத் தேர்தலில் 24 இடங்கள்தான் கிடைத்தன. இருப்பினும் ஆளும் கூட்டணி எளிதில் ஏமாந்துவிடக்கூடிய - சாதகம் போன்ற சில அம்சங்களும் களத்தில் தெரிகின்றன.

இதில் 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வெவ்வேறு சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிற கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றிகளைக் கணக்கிட்டால், பாஜகவுக்கு பழைய ஆதரவு இல்லை. 2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், பாஜக கூட்டணிக்கு 44 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 43 இடங்களும் கிடைக்கும்.

பாஜக முன்னர் வென்ற தொகுதிகளில் சிலவற்றில் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது; இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளோ கைமாறுவதற்கு வாய்ப்புகளே இல்லை. எனவே, இந்தக் கட்டத்தில், பாஜக தொகுதிகளை இழக்கத்தான் வாய்ப்புகள் மிகுதி. இரண்டாவது கட்டத்திலும் வாக்குப்பதிவு சதவீதம், முதல் கட்டத்தில் குறைந்ததைப் போல குறைந்தால், பாஜக கூட்டணிக்குத்தான் அது அதிக இழப்புகளை ஏற்படுத்தும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கேரளம் ஒண்ணாங்கிளாஸ்!

‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகம் அதிகம் என்று கூறுவதற்கு முதல் காரணம், இந்த கட்டத்தில்தான் கேரளத்தின் 20 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இதில் ஒன்றில்கூட பாஜக வெல்வதற்கு வாய்ப்புகளே கிடையாது. பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை நிச்சயம் அதற்கு அதிகரிக்கும், ஆனால் அது தேர்தல் வெற்றியாக மாறாது. 2019இல் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மட்டும்தான் பாஜக இரண்டாம் இடத்துக்கு வந்தது.

வேறு இரு தொகுதிகளில் 25% வாக்குகளைப் பெற்றது, ஆனால் பிற கட்சிகளைவிட 10% வாக்குகள் வித்தியாசத்தில்தான், அதாவது பெரிய வாக்கு வித்தியாசங்களில்தான் தோற்றது. ஒருவேளை பாஜக ஒரேயொரு தொகுதியில் வென்றால் அதற்கு அது பெரிய வெற்றிக் களிப்பைத் தரும். அதற்கும் மேல் அதற்குப் பெரிய தேர்தல் ஆதாயம் கிடைத்துவிடாது.

ஆனால், கேரளத்தைப் பொருத்தவரை இன்னொரு அம்சம் முக்கியமானது. மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எவ்வளவு இடங்களைக் கைப்பற்றும் என்பது கவனிக்கப்படும். 2019 மக்களவை பொதுத் தேர்தலில் 2 தொகுதிகளைத் தவிர ஏனைய தொகுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது, வாக்குகள் வித்தியாசம் 12% ஆக இருந்தது.

ஆனால், பிறகு நடந்த கேரள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதுடன் 6% வாக்குகள் அதிகமாகப் பெற்றது. அதாவது, மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 14இல் இடதுசாரி முன்னணி வென்றது. கேரளத்தைப் பொருத்தவரை சட்டப்பேரவைக்கு விழும் வாக்குகளே மக்களவைக்கும் விழும் என்றும் கூறிவிட முடியாது.

கேரளீயர்கள் அரசியல் தெரிந்தவர்கள். நாட்டை ஆளும் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் நாட்டு நலனுக்கு மட்டுமல்லாது கேரள நலனுக்கும் ஏற்ற கூட்டணியைத்தான் தேர்வுசெய்வார்கள். அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் என்றாலே பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். எனவே, காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து கூடுதலாக 2 அல்லது 3 தொகுதிகளைக் கைப்பற்றினாலே இடதுசாரி கூட்டணிக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடும்.

கர்நாடகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு உண்டா – இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். கடந்த முறை அதிகம் வென்ற இந்த மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, கடும் எதிர்ப்பை பாஜக கூட்டணி சந்தித்துக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸின் கர்நாடகம்

கர்நாடகத்தில் முதல் கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கும் 14 தொகுதிகளும் பழைய மைசூரு, குடகு, கடலோர மாவட்டங்களில் உள்ளன. கடலோர மாவட்டங்களில் பாஜகவுக்குச் செல்வாக்கு உண்டு, ஆனால் பழைய மைசூரு பிரதேசத்தில் காங்கிரஸுக்கே ஆதரவு, மதச்சார்பற்ற ஜனதா தளம்கூட இரண்டு தொகுதிகளில் வென்ற பகுதி இது. உத்தர பிரதேசத்தின் மேற்கில் ஜாட் சமூகத்துக்குச் செல்வாக்கு எப்படியோ அப்படியே ஒக்கலிகர்களுக்கு இங்கு - அதிலும் கிராமப்புறங்களில் – செல்வாக்கு அதிகம்.

ஒக்கலிகர்களின் கட்சி என்று அழைக்கப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக வைத்துள்ள கூட்டணி அதற்குச் சாதகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்படி பார்த்தால் இந்த 14 தொகுதிகளில் 9 நிச்சயம் காங்கிரஸுக்குக் கிடைக்கும். பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குப் பேரவைத் தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் அதே எண்ணிக்கையில் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால் காங்கிரஸுக்கு 14இல் 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

அதாவது, பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்களுடைய வாக்குகளைப் பரஸ்பரம் அப்படியே பரிமாறிக்கொண்டால்தான் இந்த வெற்றி; ஆனால் களத்தில் அப்படி நடக்காது என்றே தெரிகிறது. சித்தராமய்யா ஆட்சியின் சாதனைகளும் மக்களுக்கு அந்தக் கட்சி அளித்துள்ள 5 உத்தரவாதங்களும் நிச்சயம் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறவே உதவும். காங்கிரஸின் உத்தரவாதங்கள் நன்றாகச் செயல்படுத்தப்படுவதால் பாஜக – மதச்சார்பற்ற கூட்டணி 14 தொகுதிகளில், 3 முதல் 5 தொகுதிகளை இழப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். எனவே, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் பாஜக கூட்டணி இழக்கப்போகும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது நிச்சயம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

இழுக்கிறது ராஜஸ்தான்

ராஜஸ்தானிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கு அதிக ஆதாயம் கிடைக்கும், ஆனால் முதல் கட்டத்தில் கிடைத்த அளவுக்குப் பெரிதாக இருக்காது. இரண்டாவது கட்டத்தில் மார்வார், மேவார், ஹரோட்டி பிரதேசங்களில் 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் வென்ற பாஜக, 2023 சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் நல்ல வெற்றியைப் பெற்றது.

பேரவைத் தேர்தல் வாக்குகள் அதே எண்ணிக்கையில் விழுந்தால் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் 4இல் வெற்றிபெறும். ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்டி), பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி) ஆகியவற்றுடன் காங்கிரஸ் வைத்துள்ள புதிய கூட்டணியால் மேலும் 3 மக்களவைத் தொகுதிகளிலும் நிச்சயம் அது வெற்றிபெறும். பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் இளம் வேட்பாளரால் பாஜகவுக்குத்தான் பின்னடைவு ஏற்படும். எனவே, ராஜஸ்தானில் 3 முதல் 5 தொகுதிகள் வரை இந்தக் கட்டத்தில் பாஜக இழப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மருள வைக்கும் மராட்டியம்

மஹாராஷ்டிரத்தில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), சிவசேனை ஆகிய இரண்டு கட்சிகளையும் உடைத்து பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி வைத்துள்ளன.

அதிகாரப்பூர்வமாக அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையும் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தை ஆள்கின்றன. ஆனால், கட்சித் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் உத்தவ் தாக்கரே, சரத்சந்திர பவார் தலைமையிலான சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில்தான் இருக்கின்றனர்.

இவ்விரண்டு கட்சிகளுக்கும் விழுந்த வாக்குகள், சரிபாதியாக சிதறினால் பாஜக கூட்டணி இந்த மாநிலத்தில் 3 முதல் 8 தொகுதிகள் வரையில் அதிகபட்சம் தோல்வியைச் சந்திக்கும். அதேசமயம் அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான ‘வனசித் பகுஜன் அகாடி’ (விபிஏ) தனித்து களம் காண்பது, காங்கிரஸ் கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்குகளைத்தான் குறைக்கும்.

அவர் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். பிரகாஷ் அம்பேத்கரே அகோலா தொகுதியில் போட்டி போடுகிறார். 2019இல் இருந்ததைவிட வனசித் பகுஜன் அகாடி ஆதரவு குறைந்து வலுவற்று இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்குகளைத்தான் அது ஈர்க்கும்.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

பிற மாநிலங்களின் நிலை

பிற மாநிலங்களிலும் பாஜக ஓரிரு தொகுதிகளை இழக்கவே வாய்ப்புகள் உள்ளன.  

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம். காங்கிரஸ் கட்சியின் இரண்டு பெரிய தலைவர்கள், முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், முன்னாள் உள்துறை அமைச்சர் தாமரை துவஜ சாகு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.  

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் வடக்கில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த முறை பாஜக வென்றது. ஆனால், அதன் பிறகு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 2 தொகுதிகளின் கீழ் வரும் அனைத்து பேரவைத் தொகுதிகளையும் திரிணமூல்தான் கைப்பற்றியது.

பிஹார்: பிஹாரின் சீமாஞ்சல், பகல்பூர் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு முஸ்லிம் வாக்காளர்கள்தான் அதிகம். மகா கட்பந்தன் அணிக்குப் பெரிய போட்டி யாரால் என்றால், அதன் கூட்டணிக்குள் நிலவும் பூசல்களால்தான்; பாஜக - நிதீஷ்குமார் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகம் இல்லை. அதேசமயம், பூர்ணியா தொகுதியில் மகா கட்பந்தன் கட்சிகளே ஒன்றையொன்று எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதும், கிஷன்கஞ்ச் தொகுதியில் சலாவூதீன் ஒவைசி கட்சி, தனது வேட்பாளரைக் களத்தில் இறக்கியிருப்பதும் மகா கட்பந்தனுக்குப் பின்னடைவாக அமையக்கூடும். பிற மாநிலங்களில் வாக்காளர்கள் தங்களுடைய ஆதரவை பெருமளவு மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி

26 Apr 2024

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தின் மேற்கில் உள்ள 8 தொகுதிகளில் பாஜக – ஆர்எல்டி அணிக்கு, சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியைவிட ஆதரவு அதிகம். என்றாலும், இரண்டு அம்சங்கள் பாஜக கூட்டணிக்கு எதிராகத் திரும்பக்கூடும். முதலாவது, மேற்கு உத்தர பிரதேசத்தைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார். இது ஆர்எல்டி கட்சி வலியுறுத்திய கோரிக்கை ஆகும். எனவே, அக்கட்சி ஆதரவாளர்கள்கூட மாயாவதியின் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம், வேட்பாளர் தேர்வில் தங்கள் சமூகத்துக்குக் குறைந்த தொகுதிகளையே பாஜக ஒதுக்கியிருக்கிறது என்ற கோபம் ராஜபுத்திரர்களிடையே பரவிவிட்டது. இது பாஜக கூட்டணிக்குப் பெருத்த பின்னடைவு.

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பேடுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்துவிட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளில் இரண்டாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்ற பேரவைத் தொகுதிகள்தான் அதிகம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

25 Apr 2024

வாக்குப்பதிவு குறைந்தால்…

மேலும், 2019 மக்களவை பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதிகளில் சராசரியாக 70% வாக்குகள் பதிவாயின. முதல் கட்டத்தைப் போலவே இந்தக் கட்டத்திலும் வாக்குப்பதிவு குறைந்தால் அது பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. இந்தி பேசும் மாநிலங்களில் வாக்காளர்கள் ஆர்வமின்றி இருப்பது பாஜகவுக்குத்தான் கவலையை அதிகப்படுத்தும். 2019இல் பாஜக வென்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிவு 5.1% ஆகவும் இந்தியா அணி கட்சிகள் வென்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிவு 2.4% ஆகவும் இருந்தது.

அதாவது, பாஜகவை ஆதரித்த வாக்காளர்களிடையே இப்போது வாக்களிக்கும் ஆர்வம்கூட குறைந்துவிட்டது. பாஜக சந்திக்க வேண்டிய மிகப் பெரிய சவால்களில் இந்த வாக்குப்பதிவு சதவீத சரிவைத் தடுத்து நிறுத்துவதும் ஒன்றாகிவிட்டது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி
வெற்றியைத் தர முடியாவிட்டால் மோடியை ஆர்.எஸ்.எஸ். நீடிக்க விடாது
ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜி.குப்புசாமி கட்டுரைசமஸ் வி.பி. சிங்மறுவினைநிரந்தர வேலைவாய்ப்புஅப்பாவின் சைக்கிள்நான்காவது படலம்மகாராஜா ஹரி சிங்சமஸ் ஃபேஸ்புக் குறிப்புதமிழ் நாள்காட்டிகொலீஜியம்தியாகராஜ சுவாமிகள்ஹேக்கர்ஜனநாயக மையவாதம்தமிழக பட்ஜெட்புதுக்கோட்டை சுவாமிநாதன்கீழடிநுழைவுத் தேர்வுகள்ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்யூட்யூப் சேனல்கள் ஹேக்கிங் ஏன் நிகழ்கிறது?பிரான்ஸ்விதிகளே இல்லாத போர்கள்!பெரும்பான்மை சமூகம்பரவசம்மீன் குழம்புகே.ஆர்.விக்னேஷ் கார்த்திக் கட்டுரைபிரியங்காவின் இலக்குவாக்காளர்இடஒதுக்கீட்டுமூன்று தரப்புகள்வெளிநாடுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!