கட்டுரை, வாழ்வியல், இலக்கியம், புத்தகங்கள் 2 நிமிட வாசிப்பு
தமிழ் எழுத்தாளர் வரலாறு மாறுமா?
நீங்கள் ஒரு கடையில் நின்று தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் பக்கத்தில் ஷாருக் கான் அல்லது ரஜினி காந்த் நின்று தேநீர் அருந்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நான் ஒரு எழுத்தாளன் என்று சொன்னவுடன் அடுத்த கணம் ஒவ்வொரு ஜப்பானியரும் அப்படித்தான் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். ஓர் எழுத்தாளன் எப்படி இம்மாதிரி ஓர் இடத்தில் சர்வ சாதாரணமாக நின்றுகொண்டிருக்க முடியும்? சாரு நிவேதிதா என்ற தமிழ் எழுத்தாளனை அவர்களுக்குத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளன் எப்படி இதுபோல் மக்களோடு மக்களாக உலவ முடியும்?
அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம், அங்கே ஓர் எழுத்தாளரின் நாவல் முதல் பதிப்பு 20 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன. ஆக, அவருக்கு ராயல்டியாக முதல் பதிப்பிலேயே 20 கோடி ரூபாய் கிடைக்கிறது. தொடர்ந்து அவர் பல புத்தகங்கள் எழுதுகிறார். பல பதிப்புகள் வெளியாகின்றன. அதனால் அங்கே ஓர் எழுத்தாளர் என்றால் இங்கே உள்ள ‘சூப்பர் ஸ்டார்’ மாதிரி வாழ்கிறார். அதனால்தான் நான் எழுத்தாளர் என்று சொன்னவுடனே ஜப்பானியர் எல்லோரும் மிரண்டுபோனார்கள்.
ஜப்பான் மக்கள்தொகை 10 கோடி. தமிழ்நாடு 9 கோடி. தமிழில் என் புத்தகம் 200 பிரதிகள் விற்கின்றன. அதில் எனக்குக் கிடைக்கும் ராயல்டி 4,000 ரூபாய். யார் இன்றைக்கு நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்? உதாரணம் சொன்னால் இந்த வயதிலும் சாரு ஆபாசமாகப் பேசுகிறார் என்பீர்கள்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
என்எஃப்டி முறை
ஆங்கிலத்தில் ‘லிமிடட் எடிசன்’ (Limited edition) என்பார்கள். பேனா, வைன், புத்தகம் போன்றவற்றில் இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு உண்டு. நூறு அல்லது ஐநூறு என்ற குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அந்தப் பண்டம் தயாரிக்கப்படும். அவ்வளவுதான் விற்பனை. ஒவ்வொன்றிலும் அதற்கான வரிசை எண் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறாக என் சமீபத்திய நாவலான ‘பெட்டியோ’வை என்எஃப்டி (Non-Fungible Token) என்ற முறையில் வெளியிட்டேன்.
நூறு பிரதிகள் மட்டுமே விற்பனையில் இருக்கும். ஒருவர் இதை வாங்கிப் படித்துவிட்டு இன்னொருவரிடம் அதே விலைக்கோ அதைவிட அதிக விலைக்கோ விற்றுவிடலாம். புத்தகம் என்பது பண மதிப்புக்கு உரிய ஒரு பொருளாக ஆகிவிடுகிறது. ‘பெட்டியோ’ நாவல் இலங்கையில் நடந்த போரையும் அதற்குப் பிறகான வாழ்வையும் பற்றியது.
முதல் பிரதி 2 லட்சம் ரூபாய், 2வது பிரதியிலிருந்து 9வது பிரதி வரை 10,000 ரூபாய். பத்தாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய். 11லிருந்து 24வது பிரதி வரை 10,000 ரூபாய். 25வது பிரதி ஒரு லட்சம் ரூபாய், 26லிருந்து 49வது வரை 10000 ரூபாய். 50வது பிரதி ஒரு லட்சம் ரூபாய், 51லிருந்து 74 வரை 10,000 ரூபாய். 75வது பிரதி ஒரு லட்சம் ரூபாய், 76லிருந்து 90 வரை 10,000 ரூபாய். 91 முதல் 99 வரை ஒரு லட்சம் ரூபாய். 100வது பிரதி 5,00,000 ரூபாய் என்று விலை வைத்திருக்கிறேன்.
இந்த என்எஃப்டி முறையில் புத்தகம் வெளியிடப்படுவது இந்தியாவிலேயே இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு அராத்து இப்படி வெளியிட்டிருக்கிறார்!
இது பண விவகாரம் மட்டும் அல்ல
கண்மணி கமலாவுக்கு என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா? புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. ஒவ்வொரு கடிதத்திலும் ஒரு மன்னிப்பைக் கோருகிறார் புதுமைப்பித்தன். “கண்மணி, தாமதமாக பதில் எழுதுவதற்காகக் கோபிக்காதே. நீ எனக்கு பதில் எழுதுவதற்குத் தேவையான ஸ்டாம்பையும் உனக்கு அனுப்ப வேண்டும் அல்லவா? அந்த ஸ்டாம்ப் வாங்கக் காசு இல்லை. அவ்வளவு ஏன், சாப்பிட்டே இரண்டு நாட்கள் ஆகின்றன.”
அதற்குக் கமலா அம்மையார், “நானும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகின்றன” என்று பதில் எழுதுகிறார்.
கடைசியில், தனக்கு வந்த காசநோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் பண உதவி செய்யும்படி கேட்டு, தன் சக எழுத்தாளர்களுக்கும் சமூகத்துக்கும் ஓர் இறுதி வேண்டுகோள் விடுக்கிறார் புதுமைப்பித்தன். வேண்டுகோள் விடுத்த மறுநாளே இறந்தும் போகிறார். அப்போது அவருக்கு 42 வயது.
இப்படித்தான் இருந்திருக்கிறது தமிழ் எழுத்தாளரின் வரலாறு; அதை மாற்றியமைக்க முயல்கிறேன்!
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.