மக்களுடைய வாழ்வனுபவத்தின் பகுதியாக ஒரு கோயில் பார்க்கப்படுவதன் ஊடாகவே அது தெய்வீகத்தன்மை கொண்டதாக ஆகிறது. பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டும், அன்றாடம் பல ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றும் தெய்வீகத்தன்மையை அடையாத கோயில்கள் ஏராளம் உண்டு. அயோத்தி ராமர் கோயில் அந்தப் பட்டியலில்தான் சேரப்போகிறது.
திருப்பதி கோயில், பழநி கோயில் போன்றவற்றை ஓர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். அவை மக்களுடைய வேண்டுதல்களோடு பிணைந்துள்ளன.
தொழிலதிபர் பிர்லா குடும்பத்தினர் 1930களில் ஆரம்பித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ‘பிர்லா மந்திர்’ எனப்படும் கோயில்களைக் கட்டினர். டெல்லி, வாராணசி, கான்பூர், கர்னூல், கொல்கத்தா, ஹைதராபாத் என்று தொடர்ந்து அவை கட்டப்பட்டுவருகின்றன. பிரம்மாண்டமான இந்தக் கோயில்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வந்து பார்த்தும் செல்கின்றனர். ஆனால், இன்றுவரை சுற்றுலா தலமாகவே அவை தொடர்கின்றன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பிர்லா மந்திர்களில் பூசைகள், சடங்குகள் செய்யப்படுகின்றன என்றாலும்கூட, அங்குள்ள தெய்வங்கள் மக்களுடைய கற்பனை, சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற முடியவில்லை. திருப்பதியில், பழனியில் தலைமுடியைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று வேண்டிக்கொள்வது போன்று பிர்லா மந்திரில் உள்ள தெய்வத்திடம் மக்கள் வேண்டிக்கொள்வதில்லை.
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
11 Jan 2024
ஊரில் வயல் காட்டில் எங்கோ ஒரு மரத்தின் கீழ் வருடம் எல்லாம் வெயிலிலும், மழையிலும் காய்ந்துகொண்டிருக்கும் குல தெய்வம். வாழ்வில் எந்த நல்லது – கெட்டது என்றாலும், மக்கள் அதை நோக்கி ஓடி வருகிறார்கள். ஆனால், இந்த மரியாதை பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட பிர்லா கோயில்களுக்கு கிடைப்பதில்லை.
ஏன்? ஒரு கோயில் கட்டிடம் கோயிலாக அதனை வெளிப்படுத்திக்கொள்வதால் மட்டுமே அது தெய்வீகத்தன்மை எதையும் அடைவதில்லை. அந்தக் கோயில் பின்னால் இருக்கும் கதைதான் ஒரு கோயிலைத் தெய்வீகத்தன்மை கொண்ட ஒன்றாக்குகிறது. மக்கள் அந்தத் தெய்வதோடு நடத்தும் உரையாடல்கள்தான், கொள்ளும் உறவுதான் ஒரு கோயிலில் உள்ள தெய்வத்திற்கு உயிர்கொடுக்கிறது. மக்களோடான உறவின் ஊடாகவே தெய்வம் தெய்வீகத்தன்மை பெறுகிறது.
இப்படிப் பார்த்தோம் என்றால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குப் பின்னால் எதிர்காலத்தில் சொல்லப்படும் கதையாக என்ன இருக்கும்? இந்த ராமரோடு மக்களுக்கான உறவு எப்படி இருக்கும்?
ராமர் பிறந்த இடம் அயோத்தி என்பது மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. அதிகபட்சம் அது ஒரு தகவல் மட்டுமே. டி.ஆர்.நாகராஜ் சொல்வதுபோல், இந்திய நிலப்பரப்பில் ராமர் குறித்த நாட்டார் கதைகளை கணக்கில் கொள்வோம் என்றால், ஒரே சமயத்தில் ஓரே ராமரை பல இடங்களில் பல நம்மால் பார்க்க முடியும். அயோத்தி ராமர் உயிர் பெற வேண்டும் என்றால், அதற்கென்று தனித்துவமான கதை அவர் கொண்டிருக்க வேண்டும். ராமாயணப் பின்புலம் மட்டுமோ, ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது மட்டுமோ போதுமானதில்லை.
அயோத்தி ராமர் கோயிலைப் பொறுத்த அளவில், சமகால வரலாறுகளால் அதை நிலைநிறுத்திவிட முடியும் என்று சங்க பரிவாரங்கள் நம்புவது போன்று தெரிகிறது. என்றைக்கும் ஒரு தெய்வத்திற்குப் பின்னால் உள்ள கதைகளைப் போல் வரலாறுகள் மக்களிடம் அந்நோன்னியமான உறவு கொண்டிருக்க முடியாது.
கதைகளில் தங்களுடைய அனுபவத்தை, ஒரு தெய்வதோடு ஒருவருக்கு ஏற்பட்ட உறவை இணைத்துப்பார்க்கிறார்கள் மக்கள். ஆனால் வரலாறு இந்த சாத்தியப்பாட்டை மறுதலிக்கிறது. வரலாற்றுரீதியாக முன்வைக்கப்படும் தெய்வம் மக்களுடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் ஒன்றாகிறது. அப்படியான தெய்வதோடு உணர்வுப்பூர்வமாக உறவு கொள்ள முடியாது. அப்படியான ஒரு தெய்வத்தை நம்முடைய வாழ்வனுபவத்தின் பகுதியாக்க முடியாது.
திருப்பதி வெங்கடாசலபதியைச் சுற்றியிருக்கும் கதையை நாம் இந்து தேசியத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மிக பணக்கார தெய்வமாக இருந்தாலும், அவருடைய கதைப்படி திருமணத்திற்காக வாங்கிய கடனை இன்னும் அவரால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. ஆகையால், ஒரு கடனாளியை நாம் தேசியத்தின் குறியீடாக மாற்ற முடியாது. பழனி முருகன் கதையும் நாம் அறிந்ததுதான். அந்தக் கதையை நாம் எப்படி தேசியத்தின் குறியீடாக மாற்ற முடியும்?
ராமாயணத்தின் காவிய நாயகனான ராமரையும் அப்படி நேரடியாக தேசியத்தின் குறியீடாக மாற்ற முடியாது. ஏனெனில், பல நாட்டாரியல் ராமர்கள் தேசிய கதையாடலை மறுதலிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான், வரலாற்று நாயகராக இன்று ராமரை உருமாற்ற முற்படுகிறார்கள்.
அயோத்தி ராமர் கொண்டிருக்கக் கூடிய வரலாறு, அதாவது பாபர், கோயில் இடிப்பு, மசூதி இடிப்பு, இந்து-இந்திய தேசியத்தின் குறியீடு எதுவும் மக்களுடைய வேண்டுதலோடு, வாழ்க்கையோடு தொடர்புடையவையாக இருக்க முடியாது. இவை எதுவும் மக்கள் அந்தத் தெய்வத்திடம் வேண்டிக்கொள்வதற்கான, காணிக்கை கொடுப்பதற்கான சாத்தியத்தை உருவாக்கி கொடுக்கப்போவதில்லை.
ஆகையால், இந்து என்ற கருத்தமைவின் குறியீடாக பிர்லா மந்திர்கள் இருப்பது போன்று, இந்து தேசியத்தின் குறியீடாக மட்டுமே அயோத்தி ராமர் கோயில் இருக்க முடியும். அது, திருப்பதி, பழனி கோயில்கள் போல் உயிருள்ள கோயிலாக மாற முடியாது; உயிரற்ற பிரம்மாண்ட கட்டிடமாக, இந்து தேசிய அகங்காரத்தின் திரளூருவாக மட்டுமே அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்!
தொடர்புடைய கட்டுரைகள்
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
டிசம்பர் 6 சொல்லும் செய்தி என்ன?

5



1



பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Srividya 1 year ago
Migavum arivu poorvamana .. murpokana karuthukkal . Ungaludaya samanokku parvai nan paratukigren.. Nam hindu mathathil ethu pol uyartha manithargaluku panjame illai athuvum nam tamilnattil…ungaluku pakthi vara villai enral pogathirgal iya angu .
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Jerald 1 year ago
நச்சென்ற கருத்துக்கள். பெருந்தலைவர்களுக்காக பெரிய பெரிய சிலைகளை எழுப்புவதைக் காட்டிலும், அவர்களுடைய legacy-ஐ இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுதான் சாலச் சிறந்ததாயிருக்கும்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.