கோணங்கள், இன்னொரு குரல் 8 நிமிட வாசிப்பு

சாவர்க்கர் குறுந்தொடர்: ராஜன் குறையின் எதிர்வினை

ராஜன் குறை கிருஷ்ணன்
05 Nov 2021, 5:00 am
8

தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘அருஞ்சொல்’ வெளியிட்ட சாவர்க்கர் தொடருக்கு எதிர்வினையாக இந்தக் குறிப்பை எழுதியிருக்கிறார் ராஜன் குறை கிருஷ்ணன். பி.ஏ.கிருஷ்ணன், சமஸ் இருவரையுமே விமர்சித்திருக்கிறார். ‘அருஞ்சொல்’ தொடர்பில் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் ஆளுமைகளின் குறிப்புகள், விமர்சனங்கள் எதுவாயினும் ‘இன்னொரு குரல்’ பகுதியில் அதை வெளியிடுகிறோம். அதன் ஒரு பகுதியாக இதையும் வெளியிடுகிறோம். 

அன்புள்ள சமஸ், 

சாவர்க்கர் குறித்த ஒரு மினி கட்டுரைத் தொடரை உங்கள் ‘அருஞ்சொ’ தளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். நான் என்னுடைய கண்டனத்தை உங்கள் தளத்தில்தான் எழுத வேண்டும். ஆனால், நீங்கள் நான் பிறந்த என் சமூகத்தை 'பார்ப்பனர்கள்' என்று அழைக்கும் உரிமையை எனக்குத் தர மாட்டீர்கள். ‘பிராமணர்கள்’ என்று இந்து தர்மப்படி மாற்றித்தான் வெளியிடுவீர்கள் என்பதால் என்னுடைய முகநூல் திரியிலேயே பதிகிறேன். 

இந்தக் கட்டுரைத் தொடரை வெளியிடுவதில் உங்கள் நோக்கம் என்ன, உள்நோக்கம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் சந்தேகிப்பதில்லை. உங்களை காந்தியர் என்று சொல்வதை நான் ஏற்கிறேன், நம்புகிறேன். ஒரு நல்ல ஆரோக்கியமான ஊடகவியலாளர் என்றும் உறுதிபட எண்ணுவேன். ஆனால், நீங்கள் இந்தத் தொடரை வெளியிட்டது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. அதற்கான காரணங்களைச் சுருக்கமாக கூறுகிறேன். 

1. இந்தத் தொடரின் மூலம் எந்தப் புதிய வெளிச்சமும் சாவர்க்கரின் மீது பாய்ச்சப்படவில்லை. சாவர்க்கர் இந்தியா இந்துக்களின் நாடென்று நினைத்தார். இந்த மண்ணில் தோன்றிய மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்றார். முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தார். முஸ்லீம்கள் மீது இன்றும் தொடரும் வன்முறைக்கு சித்தாந்த அடிப்படைகளை அளித்தார். காந்தியின் மீது, அஹிம்சை என்ற காந்தியின் உன்னதக் கோட்பாட்டின் மீதும் கடும் வெறுப்பை விதைத்தார். உங்கள் கட்டுரையாளர் தெளிவாகச் சொல்லும்படி நிச்சயம் தார்மீகரீதியாக காந்தி கொலைக்குக் காரணமானவர்; அவரது சிந்தனையே கோட்சேவின் கைகளில் துப்பாக்கியை இருத்தியது. சட்டத்தின் பார்வையில் அவர் கொலைக்கு உடந்தையா என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால், அந்த நிகழ்விற்கு அவர் சித்தாந்தமே அடிப்படை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்வது. உங்கள் ‘அருஞ்சொல்’ மினி தொடரும் ஏற்கிறது. இதைத்தவிர சாவர்க்கர் குறித்து வரலாற்றுரீதியாக அறிய அல்லது இந்த உண்மையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தத் தொடரில் என்ன இருக்கிறது? சாவர்க்கரின் இறுதியான, உறுதியான வரலாற்றுப் பங்களிப்பு என்பது இதுதான் என்று தெரியும்போது அவரைக் குறித்த இன்னபிற தகவல்களால் என்ன கூடுதல் புரிதல் வரப்போகிறது? 

2. உங்கள் மினி கட்டுரைத் தொடர் என்ன செய்கிறது என்றால், ‘அரசியல் சித்தாந்தி’ என்ற அளவில் நியாயமாக காந்தியர்களாலும், உங்கள் கட்டுரையாளருக்கு நீங்கள் கொடுத்த அடைமொழியின்படி நேருவியர்களாலும் முற்றிலும் புறம் ஒதுக்கப்பட வேண்டிய, ஆபத்தான, அருவருக்கத்தக்க ஒரு அரசியலாளரின் மேல் அனுதாபத்தையும், மரியாதையையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவர் முதலில் நல்லவர்தான்; பின்னாளில்தான் கெட்டுப்போனார். அவரை எல்லாத் தலைவர்களும் மிகவும் மதித்தார்கள். அவர் மீன் சாப்பிடுவார். ஜாதி வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பல தகவல்களை சொல்கிறது. இது சாவர்க்கர் என்ற தனி நபரைப் பற்றிய வர்ணனை. வரலாற்றில் எல்லாக் கொடுங்கோலர்களும், பாசிஸ்டுகளும் பல்வேறு கோணங்களில் நாம் அனுதாபம் கொள்ளத்தக்க வாழ்க்கையைத்தான் கொண்டிருப்பார்கள். தியாகங்கள் பல புரிந்திருப்பார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியவர்கள் முதலில் மேற்குலகின் சிந்தனையாளர்கள், அரசியலாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள், புகழப்பட்டவர்கள்தான். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை, அவர்கள் தேசியத் தலைவர்களாகவே கருதப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த யூத இனப் படுகொலையும், பாசிஸ ஒடுக்குமுறைகளும் அவர்களை மிக மோசமான அரசியல் முன்மாதிரிகளாக மாற்றியது. 

3. யாருடைய அரசியல் இயக்கமும் இறுதியில் எவ்விதமான வரலாற்றுத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை வைத்துத்தான் மதிப்பிடுகிறோமே தவிர, அவர் பள்ளியில் படிக்கும்போது தன் கையில் இருந்த மிட்டாயைக் காக்காய்க் கடி கடித்து சக மாணவருக்கு தந்தாரா, எந்த நேரத்தில் யார் ஏற்படுத்திய பாதிப்பினால் அவர் வன்முறையாளராக ஆனார் என்பது போன்ற அம்சங்களை அறிந்துகொள்வதால் வரலாற்றிற்கு பயன் எதுவும் கிடையாது. அது அந்தத் தனி மனிதரை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு உதவலாம். ஆனால், மிக மோசமான வன்முறையைத் தூண்டிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வின் சிறப்பம்சங்களை எழுதுவது என்பதெல்லாம் பொதுவெளியில் நடுநிலை வரலாறு என்று மீட்டெடுப்பது அவர்களை கெளரவப்படுத்துவதற்கான முயற்சிதான். ‘மூடுபனி’ படத்தின் இறுதியில் ஓர் 'ஃபீரிஷ் ஷாட்' வரும். அப்போது பின்னணியில் ஒரு குரல் “சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளால்தான் கதாநாயகன் சீரியல் கொலைகாரன் ஆனான்” என்று விளக்கும். அந்தப் புரிதல் சமூக இயக்கத்தை, தனி மனிதர்களை உருவாக்குவதில் சமூகத்தின் பங்கினை புரிந்துகொள்ள உதவலாம். ஆனால், உங்கள் கட்டுரைத் தொடரில் அந்தமான் சிறையில் இருந்த பதான் வார்டர்கள் அவரைக் கொடுமைப்படுத்தியது, அவரது முஸ்லீம் வெறுப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகம் நகைப்பிற்குரியது மட்டுமல்ல; மிக மோசமான திசைதிருப்பலும்கூட. மிகத் தெளிவாக சித்தாந்தரீதியாக இந்துத்துவத்தை வடித்தெடுத்த ஒருவரை ‘மூடுபனி’ பிரதாப் போத்தன் ரேஞ்சிற்கு மாற்றுவது வரலாற்றிற்கு செய்யும் நியாயமல்ல. மோசமான திசைத் திருப்பல். 

4. இந்தக் கட்டுரையை எழுதுவதில் உங்கள் நேருவீய கட்டுரையாளருக்கு உள்ள ஆர்வத்தை ஒரு முக்கியமான வரி சுட்டிக் காட்டுகிறது. அது என்னவென்றால் சாவர்க்கர் தமிழ்நாடு வந்த கதை. உங்கள் கட்டுரையாளர் சொல்கிறார். 

“சாவர்க்கர் 1940-ல் தமிழகம் வந்தார். மதுரையில் பேசினார். இந்துக்கள் ஒரு தனி இனம் என்றார். கவனிக்க: இனம். பெரியார் திராவிடர்கள் தனி இனம் என்று சொன்னதுபோல!”

நேருவியர் என்று நீங்கள் நற்சான்றிதழ் வழங்கும் உங்கள் நவ-பார்ப்பனீய கட்டுரையாளர் காந்தியின் அஹிம்சா தர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த பெரியாரை நாஜி என்று அழைப்பது உங்களுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை. அவருடைய நோக்கம் சாவர்க்கர் பாசிஸ்ட், நாஜி மனோநிலை கொண்டவர் என்றால் பெரியாரும் அப்படித்தான் என்று சொல்வது. இந்த அபத்தமான ஒப்பீடு உங்கள் கண்களில் படாமல்தான் நீங்கள் பிரசுரித்தீர்கள் என நான் நம்பவில்லை.  கருத்துக்களுக்கு கட்டுரையாளரே பொறுப்பு, ஆசிரியரல்ல என்று நீங்கள் கூற முடியும்தான். ஆனாலும், இந்த ஒப்பீடு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆரிய இனம், திராவிட இனம் ஆகிய கருத்தாக்கங்களை முன்மொழிந்தவர்கள் பட்டியல் மிக நீண்டது. மொழியியலாளர்கள், தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள், மத ஆய்வாளர்கள் என மிக மிக நீண்ட பட்டியல் ஆரிய இனம், திராவிட இனம் ஆகியவை வேறுபட்ட இனவியல் மூலங்களைக் கொண்டவை என கூறியுள்ளது. பெரியார் ஆரிய, திராவிட இனங்கள் கலந்துவிட்டன என்பதையும் தூய இன அடிப்படையிலான பிரிவினை சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டவர், ஏற்றுக்கொண்டவர். ஆனால் அவர் திராவிட பண்பாடென்பது ஆரிய பண்பாட்டிலிருந்து வேறுபட்டது, குறிப்பாக திராவிட பண்பாடு பார்ப்பனீய, ஜாதீய சிந்தனையை ஏற்காதது என்பதையே முன்மொழிந்தார். சாவர்க்கர் இந்துவை வரையறுத்தது அப்படியல்ல. அவர் இந்திய தேசத்தின் எல்லைக்குள் தோன்றாத மதங்களைச் சார்ந்தவர்கள் இந்தியர்கள் அல்ல என்ற அடிப்படையிலேயே இந்துத்துவத்தை கட்டமைத்தார். 

5. உங்கள் நேருவிய கட்டுரையாளர் காந்தியுடனும் சாவர்க்கரை சமன்செய்து காண்கிறார். “காந்தியும் தன்னளவில் இந்துக்களை ஒன்றுதிரட்டினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” அப்படியென்றால் என்ன பொருள் என்று புரியவில்லை. காந்தி எங்கே இந்துக்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என்று அமைப்பாக்கம் செய்தார்? எப்போது செய்தார்? அவர் ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்றெல்லவா பாடினார்? காந்தியரான நீங்கள்தான் இந்தக் கூற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டும். 

6. இதுபோன்ற சாவர்க்கர் மீள்வாசிப்புகளில், அவர் பார்ப்பனர் என்று கூறப்பட்டாலும் ஏன் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களை மராத்திய பார்ப்பனர்கள் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து ஆய்வதில்லை. சாவர்க்கர், கோட்ஸே, ஹெட்கவார், கோல்வால்கர் அனைவரும் மராத்திய பார்ப்பனர்களாக அமைந்தது தற்செயலா? அதே பகுதியில் ஏன் புலேவும், அம்பேத்கரும் தோன்றுகிறார்கள்? பேஷ்வாக்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் வீழ்த்திய பீமா கோரேகான் போரில், மஹர்கள் பங்கேற்றதைக் கொண்டாட வேண்டும் என ஏன் அம்பேத்கர் முடிவுசெய்தார்? அந்த பீமா கோரேகான் நிகழ்வையொட்டி 'எல்கர் பரிஷத்' என்ற கருத்தரங்கை உருவாக்கியதற்காக ஏன் பல மனித உரிமையாளர்களும், சிந்தனையாளர்களும் பொய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாழுகிறார்கள்? ஸ்டேன் சாமி மரணமடைகிறார்? இந்திய சமூக வரலாற்றில் பேஷ்வாக்களின் ஆட்சியின் முக்கியத்துவம் என்ன? இந்துத்துவம் என்பது சாரம்சத்தில் பார்ப்பன மேலாதிக்கம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமா என்ன? பார்ப்பனீயத்தையும், சமஸ்கிருதத்தையும் தவிர்த்தால் இந்து என்ற கட்டமைப்பு சாத்தியமா? இதை விவாதிக்காமல் சாவர்க்கர் நாத்திகர், அவர் தீண்டாமையை எதிர்த்தார் என்று சொல்வதில் பொருள் என்ன? இதுபோன்ற கேள்விகளை கேட்டதால்தானே, பெரியார் உங்கள் கட்டுரையாளரால் வெறுக்கப்படுகிறார்? 

7. சாவர்க்கார் என்பவரது வரலாற்றுப் பங்களிப்பு ஒன்றே ஒன்றுதான். அது காந்தியின் அஹிம்சை, மத நல்லிணக்கத்தையும், நேருவின் சோஷலிஸம், மதச்சார்பின்மையையும் குழி தோண்டிப் புதைப்பது. இதை அனைவருக்கும் புரியவைப்பது இந்தியாவில் மக்களாட்சியைக் காப்பாற்ற இன்றியமையாதது. காந்தியரான நீங்களும், நேருவியரான உங்கள் கட்டுரையாளரும் செய்வது அதுவல்ல. சாவர்க்காரின் கருத்தியலை முக்கியத்துவப்படுத்தாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விவாதித்து அதைவைத்து வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் முயற்சியை செய்கிறீர்கள். அது சாவர்க்காருக்கு வாசகர்களிடையே நன்மதிப்பை ஈட்டித்தரும் செயலாகவே முடியும். பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைதான். 

எப்படியோ இந்த விவாதம் உங்கள் 'அருஞ்சொல்' தளத்திற்கு, வாசகர்களின் எண்ணிக்கையை கூட்டித் தந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். அதற்காக அடுத்து கோட்ஸேவின் வாழ்க்கையை நடுநிலைக் கண்ணோடு ஆராய்ந்து அவரது தேசபக்தியை நிறுவ முற்பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.  

அன்புடன், 

ராஜன் குறை

பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘சாவர்க்கர்’ குறுந்தொடருக்கான இணைப்பு: 

சார்வர்க்கர்: ஐந்து அத்தியாயங்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.








பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   4 years ago

பின்னூட்டங்கள் முடிந்த பிறகு இறுதியில் ஆசிரியர் சமஸ் அவர்களிடமிருந்து ஒரு கட்டுரை அல்லது தொகுப்புப் பின்னூட்டம் எதிர்பார்க்கலாமா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

A Ahamed Jalal   4 years ago

//அந்தமான் சிறையில் இருந்த பதான் வார்டர்கள் அவரைக் கொடுமைப்படுத்தியது, அவரது முஸ்லீம் வெறுப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகம் நகைப்பிற்குரியது// ராஜன் குறை அவர்களின் இந்த குறிப்பு ஏற்புடையது. இந்த பதான் வார்டர்கள் தங்களது முதலாளித்துவ ஆங்கிலேயர்களை திருப்திபடுத்தும் ஊழியத்தை மதத்தோடு ஒப்பிட்டு புனைவது ஏற்புடையதல்ல. அந்தமான் சிறைகளில் அடைக்கப்பட்ட தேசபக்த முஸ்லிம்கள் என்ன அதீத சுகத்தை கண்டார்களா என்ன?

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

SUNDARAN M   4 years ago

கோட்சேவின் குருமார்களில் ஒருவரான சவர்க்கார் பற்றி (அவர்களின் சித்தாந்தத்தின் மீது வெளிப்படையாக தங்கள் நம்பிக்கையைக் காட்டிக்கொள்ளாத) பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்களின் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் "அருஞ்சொல்" தாங்கள் "நடுநிலையானவர்கள்" , எல்லோர் கருத்துக்கும் மதிப்பளிப்பார்கள் எனச் சொல்வதற்குப் பயன்படலாம். ஆனால், இதுவரை காந்தியர்கள் சவர்கர் பால் கொண்டுள்ள கருத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி சவர்கரையும் உள்வாங்கி ஏற்றுக்கொண்ட காந்தியர்களாக தங்களை மாற்றிக் கொள்ளவைக்கவா இக்கட்டுரைத் தொடர்? RSS -ன் பத்திரிக்கையில் வெளியிடுவதற்கான ஒரு கட்டுரையாக அல்லவா இது இருக்கும்.? அடுத்து "கோட்சேவின் நற்பண்புகளைப்" பற்றிய ஒரு கட்டுரையையும் ஒரு நல்ல காந்தியரால் ஆரம்பிக்கப்பட "அருஞ்சொல்லில்" எதிர்நோக்கலாமா?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   4 years ago

ராஜன் குறையின் பதிவில் அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் பின்னூட்டம் இட முடியும் என்பதால், இங்கு அதற்கான எதிர்வினையை இடுகிறேன் : 1.சாவர்கர் மீது எந்த புதிய வெளிச்சத்தையும் இந்தத் தொடரில் பாய்ச்சப்படவில்லை என்று எதை அடிப்படையாக கொண்டு சொல்கிறார் ? ஏராளமான புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. 2. // ஹிட்லர், முசோலினி ஆகியவர்கள் முதலில் மேற்குலகின் சிந்தனையாளர்கள், அரசியலாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள், புகழப்பட்டவர்கள்தான். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை, அவர்கள் தேசியத் தலைவர்களாகவே கருதப்பட்டார்கள். // என்று எழுதும் ராஜனுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தெளிவாகிறது. (இது போன அறியாமைகளை போக்கவே இத்தகைய தொடர்கள் மிகத் தேவை). இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக ஹிட்லர், முசோலினியை எந்த மேற்குல சிந்தனையாளர்கள், அரசியலாளர்கள் மதித்து, புகழ்ந்தனர் ? பாசிசத்தை முன்மொழிந்த ஒரு சில அரசியலாளர்கள், ’சிந்தனையாளர்கள்’ மட்டுமே புகழ்ந்தனர். ராஜனின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான, மிக முக்கிய சிந்தனையாளரான ஆன்டனியோ கிராம்சியை முசோலனி 1926இல் கைது செய்து, கொடும் சித்தரவதை செய்து, 1937இல் சிறையில் மரணமடையச் செய்தவன். இரண்டாம் உலகப் போர் 1939இல் தான் தொடங்கியது. கிராம்சி எழுதிய சிறை குறிப்புகள் உலகப் புகழ் பெற்றவை. ஹிட்லர், முசோலனி இருவரும் ஆட்சிக்கு வந்த உடனே கம்யூனிஸ்டுகள், லிபரல்கள், ஜனனாயகவாதிகளை வேட்டையாடி, சிறையில் அடைத்தனர். கிராம்சி அவர்களில் மிக முக்கியமானவர். அன்று எந்த சிந்தனையாளர் இவர்களை புகழ்ந்து ஆதரித்தார் ? ஹைடெக்கர் ஒருவரை தவிர ? Sweeping generalisations. 3.ஒரு மனிதனை தீவிர வெற்றுப்பரசியலை நோக்கிய திருப்ப காரணமான சம்பவங்களை, வரலாற்றை ஆராய்ந்து ஒரு கருத்தை தெரிவிப்பது பெரும் குற்றமோ அல்லது திசை திருப்பலோ, unscientific method அல்ல. 4.//பெரியார் ஆரிய, திராவிட இனங்கள் கலந்துவிட்டன என்பதையும் தூய இன அடிப்படையிலான பிரிவினை சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டவர், ஏற்றுக்கொண்டவர். /// இல்லை. பார்ப்பனர்கள் அனைவரும் தூய்மையான ஆரியர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள் யாவரும் தூய்மையான திராவிடர்கள் என்று தான் பெரியார் கருதினார். இந்த ’கலந்துவிட்ட’ விவகாரம் எல்லாம் சமீபத்திய வருடங்களில், DNA evidences எல்லாம் வெளியான பிறகு ஏற்றுக்கொள்ளப்படும் உண்மைகள். பெரியார் காலத்தில் கருப்பு வெள்ளையாக தான் பார்த்தார்கள். பெரியார் பார்ப்பனிய பண்பாட்டை, பார்ப்பனியத்தை மட்டும் எதிர்க்கவில்லை, பார்ப்பனர்களையும் எதிர்த்தார். அவர்கள் தனி இனம் என்றும், ’வேறு’ என்றும் வகைபடுத்தி, வெறுப்பரசியலை வளர்த்தெடுத்தார். அது இன்றும் தொடர்கிறது.

Reply 4 6

Login / Create an account to add a comment / reply.

ராஜ கைலாசம்   4 years ago

ராஜன் குறை ஒரு ஆய்வாளர். இப்படி அவர் எழுதுவது சரியில்லை. பி.ஏ.கிருஷ்ணன் சரியாகவே இந்தத் தொடரை எழுதியுள்ளார். நான் பாஜகவை வெறுக்கிறேன். தொடரைப் படித்தபோது எனக்கு சாவர்க்கர் மீது உள்ள அபிப்ராயம் ஏதும் மாறவில்லை. சாவர்க்கரைப் பற்றிப் பேச ஏதுவாக மேலும் சில தகவல்களை அறிந்துகொண்ட உணர்வே ஏற்படுகிறது. ஆங்கிலப் பத்திரிகைகள் இது மாதிரியான ஆழமான கட்டுரைகளை வெளியிடுகின்றன. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் நாளிதழில், வலதுசாரி ஒருவர், இடதுசாரி ஒருவர் என்றுகூட சாவர்க்கரைப் பற்றி எழுதியிருந்ததை நான் படித்தேன். தமிழில் இப்படியெல்லாம் வாராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான் மாமணிபோல வந்திருக்கிறது அருஞ்சொல் பத்திரிகை. அப்படிப்பட்ட பத்திரிகை மீது ராஜன் குறை அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்பதாகவே இதைச் சொல்ல வேண்டியுள்ளது. சாவர்க்கரைப் பற்றியெல்லாம் எழுதவே கூடாது என்று அவர் சொல்வது, என்ன இந்த நாட்டில் பேராசிரியர்கள் எல்லாம் இப்படி ஆகிவிட்டார்கள் என்ற எண்ணத்தையே உருவாக்குகிறது. பாஜக போல எல்லோருமே பாசிஸ்ட்டுகளாக ஆகிவிடுவார்களோ என்ற பயத்தையும் உருவாக்குகிறது. இந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தி சமஸ் அவர்கள் அருஞ்சொல்லில் வெளியிட்டிருப்பது அவருடைய நேர்மைக்கும், ஜனநாயகத்துக்கும் சான்று. இதுபோல கட்டுரைகளை அவர் துணிந்து வெளியிட வேண்டும்.

Reply 3 2

K.R.Athiyaman   4 years ago

மிகச் சரியான கருத்து. முழுவதும் உடன்படுகிறேன்.

Reply 2 0

NAGALINGAM G   4 years ago

தமிழில் இப்படியெல்லாம் வாராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான் மாமணிபோல வந்திருக்கிறது அருஞ்சொல் பத்திரிகை என்ற உங்களின் எதிர்பார்ப்பும் வரவேற்ப்பும் நியாயமானதே. ஆனால் சாவர்க்கர் பற்றிய செய்தியை கட்டுரையை கதைகளை வெளியிட BJP RSS உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளிடம் ஏராளமான தமிழ் நாளிதழ்களும் வார மாத இதழ்களும் உள்ளன. அதற்கு பஞ்சமில்லை. எல்லா மொழியிலும் கூட அவர்களால் பரப்புரை செய்ய முடியும். (வாங்கி படிக்கத்தான் ஆள் வேண்டும்) . எதையும் வெளியிடும் ஜனநாயக உரிமை தேவை என்ற போதிலும், அக்கட்டுரை அருஞ்சொல்லில் வெளியானதே அருஞ்சொல் யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganesan Natarajan   4 years ago

எனக்கும் இதை போன்று ஒரு சந்தேகம் வந்தது , ஹிந்துதுத்வா அரசியலினால் நிகழ் காலத்தில் பாடத்தை கற்று கொண்டு இருக்கிறோம் .இந்த சூழலில் கிருஷ்னன் அவர்களை வைத்து , அதுவும் ஹிந்துத்துவ அரசியலின் பிதா மகன் சாவர்க்கர் பற்றிய கட்டுரை முரணாக பட்டது . ராஜன் குறை என் மனதில் உள்ளதை அப்படியே கொட்டி இருக்கிறார் . சாவர்க்கர் பற்றிய கட்டுரை ஒரு பரபரப்புக்காக எழுதப்பட்டதாக நாம் நினைக்கிறோம் . பி ஏ கிருட்டிணன் பற்றி தமிழ் உலகிற்கு நன்றாக தெரியும் , அவரின் நோக்கம் வெற்றி பெறாது . ஒரு தாழ்மையான யோசனை கோட்ஸேயை பற்றி , நம்ம ஹச் .ராஜா எழுத இடமளியுங்கள் [பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது ].

Reply 9 1

Login / Create an account to add a comment / reply.

Prabhu   4 years ago

ராஜன் குறை அவர்கள் இங்கு தெரிவித்திருக்கும் கருத்துகள் பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடைய தொடரை படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்குத் தோன்றியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் அரசியல் சித்தாந்தத்திற்கு அவர்களின் இளம் பிராய நிகழ்வுகளிலிருந்து அல்லது அந்தரங்க வாழ்க்கையிலிருந்து மூலத்தைக் கண்டறியும் செயல் எந்த வகையிலும் நியாயமாகாது. அந்தமான் ஜெயில் பதான் வார்டர்கள்தான் சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்பிற்கு காரணம் என்று சொல்வது அவரின் அரசியல் புரிதலுக்கு அவமானமான ஒன்றாகும். தன்னுடைய வெறுப்பு அரசியலை ஹிந்து சனாதன, சாதிய மேட்டிமை உணர்விலிருந்தே சாவர்க்கர் பெற்றிருக்க வேண்டும். மேலும் ராஜன் குறை சொல்வது போல, இந்தக் கட்டுரைத் தொடர் சாவர்க்கர் மற்றும் அவரது அரசியலின் மீது எந்த ஒரு புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடும் முன், அதன் முழுமையையும் படித்து ஒரு informed evaluation செய்ய வேண்டியது இதழாசிரியரின் கடமை. ஒரு சாதாரண, நம்பகத்தன்மை குறைந்த, பரபரப்பை மட்டும் சார்ந்திருக்க கூடிய வாரமிருமுறை புலனாய்வு இதழில் வெளிவந்திருக்கக் கூடிய தொடரை அருஞ்சொல் வெளியிட்டது பெரிய வியப்புத்தான். இப்படியான செயலில் அரசியல் ஏதும் இல்லை என்று நம்புவோம்.

Reply 27 0

Login / Create an account to add a comment / reply.

நவீன தொழில்நுட்பம்ஏழு கடமைகள்பக்கவாதம் வந்த பிறகு என்ன செய்வது?செயல்பட விடுவார்களா?மனித குலம்Minimum Support priceவிடுதலைப் போராட்டம்நாடெங்கும் பரவட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்புதொழில்நுட்பக் கல்விஅடக்கமான சேவைசமஸ் - எஸ்.என்.நாகராஜன்அருஞ்சொல் ஸ்ரீதர் சுப்ரமணியம்தமிழ் அன்னைகொடூர அச்சுறுத்தல்விநாயக் தாமோதர் சதுர்வேதிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்சங்க இலக்கியம்பெரியாரும் வட இந்தியாவும்நியூட்ரினோஅருஞ்சொல் பொங்கல் கட்டுரை மதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?சுரேந்திர அஜ்நாத்பிசிசிஐஇங்கிலீஷ் ஆட்சிஹெர்னியாபாப் ஸ்மியர்முதல் தியாகி நடராசன்எல்லைப் பிரச்சினைமல்லிகார்ஜுன் கார்கேஎண்ணிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!