கட்டுரை, சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

சமஸ் | Samas
24 Dec 2017, 5:00 am
3

ஓவியம்: மருது

டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ... இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’

பிரிவினைக் கலவரங்களின் ரத்தச் சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் கேள்விக்கான பதிலையும் சொல்கிறார் பிரதமர் நேரு. “காந்தியைச் சுட்டுவிட்டார்கள், காந்தியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து!” 

இப்படிச் சொன்னால் முடிந்ததா? கலவரங்களைத் தடுக்கும் விதமாக நாடு முழுக்க மக்களிடம் செல்வாக்குள்ள தலைவர்கள் பேசுகிறார்கள். பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது. கோட்ஸே மட்டும் இல்லை, கூடவே குற்றஞ்சாட்டப்பட்ட ஆப்தே, கர்கரே; இவர்களின் தத்துவ வழிகாட்டியான சாவர்க்கர் எல்லோருமே பிராமணர்கள்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்திலுள்ள சன்னாநல்லூரில் திராவிடர் கழகக் கூட்டம்.

வழக்கம்போல பிராமணியத்தை வெளுத்து வாங்கும் ஒரு இளம் பேச்சாளர் காந்தி படுகொலைச் சம்பவத்தை நோக்கி நகர்கிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதைச் சொல்லும் அவர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தோடு கோட்ஸேவின் மேலாதிக்கக் குணத்தைப் பொருத்த முற்படுகிறார். மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார் தன் கையிலுள்ள தடியைத் தட்டுகிறார். பெரியார் இப்படி தடியைத் தட்டினால், அது ஒரு சமிக்ஞை. அதற்கான அர்த்தம் திராவிடர் கழகத்தினருக்குத் தெரியும்: இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!

இளைஞர் பேச்சை முடித்துக்கொள்கிறார். கூட்டம் முடிகிறது. இளைஞரின் முகம் வாடியிருக்கிறது. பிராமணியம், வைதீகத்தின் அபாயத்தை மக்களிடம் உணர்த்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதை ஏன் பெரியார் தடுக்கிறார் என்பது இளைஞரின் முறைப்பாடு. பெரியார் சொல்கிறார், “நமக்கு பார்ப்பனியத்தோடதான் சண்டை. தனிப்பட்ட பார்ப்பனர்களோட இல்லை. நாடு இப்போ இருக்கிற சூழல்ல இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்புல இருக்கிறப்போ அதைத் தூண்டிவிடுற மாதிரி பேசுறது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துறதா நம்ம நோக்கம்?”

என்னிடம் நிறைய இளைஞர்கள் கேட்பதுண்டு. “ஒரு காந்தியர் எப்படி பெரியாரை ஏற்க முடியும்? காந்தியைக் கடுமையாக விமர்சித்தவர் பெரியார். காந்தியும் பெரியாரும் எந்தப் புள்ளியில் சந்திக்க முடியும்?”

இன்னும் ஒருபடி மேலேபோய் “பெரியார் ஓர் இனவெறியர்;  பெரியாரை எப்படி ஒரு காந்தியர் தூக்கிப்பிடிக்க முடியும்?” என்று கேட்பவர்களும் உண்டு.

இரண்டு பதில்களைச் சொல்வேன். “இருவருமே சமத்துவத்துக்காகப் போராடியவர்கள். பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்று. இருவருமே வெளிப்படுத்தல் முறைமையில் ஒரு நாட்டுப்புறத்தன்மையைக் கொண்டவர்கள். இருவரையுமே நவீனப் பார்வையில் வார்த்தைகள் வழிகொண்டு மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எதிர்வினைகளாக அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு அவர்களை உள்வாங்க முடியாது. பெரியார் இன்னும் கூடுதல் சிக்கலானவர்.”

பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவர், பல நூறு கூட்டங்களைப் பேசியவர் காந்தி. ஏன் ‘‘என்னுடைய வாழ்க்கையே நான் விட்டுச்செல்லும் செய்தி’’ என்று அவர் சொன்னார்? ஏன் தன்னுடைய எழுத்துகளையோ, உரைகளையோ தன்னுடைய செய்தி என்று அவர் குறிப்பிடவில்லை? எல்லோரையும் நேசிப்பது, எல்லாத் தரப்புகளையும் புரிந்துகொள்வது, மனிதர்களை அவர்களுடைய வார்த்தைகளைத் தாண்டி அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் வழியாகப் புரிந்துகொள்ள முற்படுவதே சரியான வழி என்பதே காந்தியைக் கற்பவர்கள் கற்கும் அடிப்படைப் பாடம்.

ஒரு சந்தர்ப்பத்தில், “அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது” என்று பாதுகாப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளச் சொல்லிக்கூடப் பேசியிருக்கிறார் பெரியார். இந்த வார்த்தைகளின் வழி மட்டும் பார்க்கும் ஒருவரால், காலமெல்லாம் பெரியார் நடத்திய இயக்கமும் வாழ்க்கையும் எப்படி வன்முறைக்கு நேரெதிராக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்?

நக்ஸல்பாரி இயக்கத் தாக்கத்தின் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கலாமா என்ற குரல் அமைப்புக்குள் வந்தபோது, “வன்முறை நோக்கம் கடுகளவு மனதில் இருந்தாலும், அவர்கள் எவருக்கும் கழகத்தில் இடம் இல்லை” என்று அப்படிப் பேசியவர்களை உடனே ஏறக்கட்டியவர் பெரியார். மரபைக் கடுமையாகச் சாடியவர் பெரியார். ஆனால், பெரியார் மொழியைப் புரிந்துகொள்ள சித்தர் மரபுதான் நமக்கு நெருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பிராமணியத்தையும் பிராமணர்களையும் பெரியார் எப்படிப் பகுத்தார் என்பதற்கும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது, கருத்து முரண்பாட்டைத் தனிமனிதர்களிடத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி என்பதற்கும் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் பெரியார் முன்னெடுத்த செயல்பாடுகளை ஒரு உதாரணமாகச் சொல்ல முடியும். காந்தி இறந்தவுடனேயே பெரியாரிடமிருந்து வந்த அறிக்கையிலேயே ‘இங்கு எந்த வன்செயலும் நடந்துவிடக் கூடாது’ என்கிற அக்கறையும் பதற்றமும் வெளிப்படலாயிற்று.

1948 ஜனவரி 31 ‘விடுதலை’ ஏடு சொல்கிறது, “காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறியிருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து... இப்பெரியாரின் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் - மதயியல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.”

அடுத்து, 7.2.1948 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதுகிறார், “காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்து சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டு திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்.”

இதனூடாகவே சென்னை மாகாணத்தின் அன்றைய ஆட்சியாளரான ஓமந்தூராருடனான கலந்தாலோசனையின்படி, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, 22.2.1948 நாளைய ‘விடுதலை’யில் விரிவாகவே இந்த விஷயத்தை அணுகுகிறார்.

“பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது. நான் கூறுகிறேன்: சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத்துப்பாக்கி. அதற்காகப் பார்ப்பான் மீது கோபித்துக்கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும்; அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும்.

காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும். அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான்.

மதத்தின் பேரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளும் சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்க வேண்டும். அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்காலிக சாந்தியாகத்தான் இருக்க முடியும்.

இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது. இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒரு சாதியையோ அப்படியே அழித்துவிடுவதால் இக்கொடுமை மறைந்துபோகாது…

காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சித்தானந்தரைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அல்ல, முஸ்லிமோ தனியாகத் தோன்றி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டதாக நாம் கூறிவிட முடியாது. இம்மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்பதற்குச் சரித்திர ஆதாரங்களே இன்றும் இருந்துவருகின்றன. மதுரை மாநகரில் 8,000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காகக் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன். முஸ்லிமும் அல்லன். பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான். ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது; அவன் தழுவியிருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற்றும்படி அவனைத் தூண்டியது. நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்...

திராவிடர் கழகம் கலகத்திற்கோ கொள்ளைக்கோ பலாத்காரத்திற்கோ இருந்துவரவில்லை. அதுவும் திராவிடர் கழகம் எனது கைக்கு வந்தது முதற்கொண்டு, அதில் நான் சேர்ந்து தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் அதை எந்தவிதமான பலாத்காரத்திற்கோ பழிவாங்குவதற்கோ உபயோகப்படுத்தியவன் அல்லன். அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்தவனுமல்லன். திராவிடர் கழகத்தில் பலாத்காரத்திற்கு இடமில்லை. பலாத்கார உணர்ச்சி வேண்டுமென்று கருதிய சிலரையும்கூட திராவிடர் கழகத்தைவிட்டு நீக்கித் தண்டித்திருக்கிறோம். பலாத்காரத்திற்கு மட்டுமல்ல, நடத்தைக் குறைவுக்காகவும், ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக் கழகத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறோம். கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு நான் அதை நடத்திவருகிறேன்... எங்கள் கழகம் யாரையும் விரோதிகள் என்று நினைப்பதில்லை. காரணம், இன்று நமக்கு எதிர்ப்பாயுள்ளவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதை நாங்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறோம்!”

அடுத்து, 11.03.1948 நாளைய ‘விடுதலை’ ஏட்டில் எழுதுகிறார், “காந்தியார் மறைவுக்கு நான் துக்கப்பட்டது, பெரும்பாலானோருக்கு முதலைக் கண்ணீராகவே தோன்றியது. தோன்றினால் தோன்றட்டும். அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு வேண்டுமானால் அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சிகூட அடைந்தது. ஆனால், அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. தலைவலி வந்துவிட்டது. என்ன செய்கிறேன் என்பதுகூடப் புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தேன். காரணம் என்னவென்றால், அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவைகளே. அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்ராய பேதம் பலமாக இருந்தது உண்டு. ஆனால், அவரது முக்கியக் கொள்கையில் அதாவது சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவைகளில் அபிப்ராய பேதம் இல்லையே!”

இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்றும், ‘காந்தி சகாப்தம்’ என்ற பெயரில் நமக்கென ஒரு ஆண்டு முறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரியவர் பெரியார். காந்தி சிலைகளைத் தெருவில் போட்டு உடைக்க வேண்டும் என்று பேசியவரும் பெரியார். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? சிக்கல்தான்!

ல்வேறு தருணங்களில் பிராமணர்களுடனான உறவையும் பிணக்கையும் பற்றிப் பெரியார் பேசியிருக்கிறார் என்றாலும், ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய உரையையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையையும் இங்கே  குறிப்பிடலாம். சென்னை ராயப்பேட்டை ‘யுவர் சங்க’த்தில் 5.1.1953 அன்று ஒரு நிகழ்ச்சியில் பேச பெரியாரை அழைக்கிறார்கள். பிராமணர்கள் பெரும்பான்மையாக இருந்து நடத்தும் சங்கம் அது. அமைப்பிலுள்ள பெரியாரைப் பேச அழைத்ததை ஆட்சேபிக்கின்றனர். இருநூறு பேர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்த்திருந்த அந்தக் கூட்டத்தைக் கேட்க அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கூடியிருக்கின்றனர். தன்னுடைய உரையில் பிராமணர்களுடனான தன்னுடைய உறவு குறித்து பெரியார் பேசியது 8.1.1953 அன்று ‘விடுதலை’யில் வெளியாகியிருக்கிறது.

“யாரோ சில பிராமணர்கள், ‘பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறிவருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்’ என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்கவழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்துவிட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில், நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.

நம் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்துவருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின்சந்ததிகளும், பிராமணர்களின் பின்சந்ததிகளும் இந்தப்படியே நடந்துகொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரணமானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளங்கியிருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இருதரப்பினரும் கவனிக்க வேண்டியது.”

அடுத்து, 1962 ‘விடுதலை’யில் பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை ‘பார்ப்பனத் தோழர்களுக்கு!’ என்ற தலைப்பிட்ட அறிக்கை:

‘‘பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும்கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையைவிட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்!”

பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரியாரின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருதரப்புமே அவருடைய வார்த்தைகளைத் தாண்டி அவருக்குள் நுழைய வேண்டும். பெரியாரின் வலியை உணர்தல் வழியாகவே அது சாத்தியம். வெறுப்பூட்டும் வார்த்தைகள் பெரியாரிடமிருந்து வெளிப்பட்டன என்பதை நான் மறுக்க மாட்டேன்; வருந்தத்தக்கவை என்றாலும், அது எதிர்வினை; ஒரு பெரும் சமூகம் எதிர்கொண்ட ஆழமான ஒடுக்குமுறையிலிருந்தும், அவமானத்திலிருந்தும், வலியிலிருந்தும் வெளிப்பட்ட எதிர்வினை அது. சொல்லில் இல்லை, செயலில் நிற்கிறார் பெரியார்.

காந்தி - பெரியார் இருவரையும் இணைக்கும் புள்ளி சுயவதை. தான் கனவு கண்ட சமத்துவ சமூகத்தில் எல்லாத் தரப்புகளையும் உள்ளடக்குவதையும், அதற்கான வழிமுறையாக வன்முறையை வெளித்தள்ளிய மாற்றுத்தரப்புடனான தொடர் உரையாடலையும் தார்மிக நெறியாக்கியவர் காந்தி. பெரியாரின் தார்மிகமும் அதுவென்றே நினைக்கிறேன்.

- டிசம்பர், 2018, ‘தி இந்து’ தமிழ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

5





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Mohanavasanthan   2 years ago

தந்தை பெரியாரின் பிறந்த நாளில் இப்படி ஒரு பழைய, பழமைவாதக் கட்டுரையை வெளியிடுவதன் நோக்கம்? பெரியாரைப் புரிந்துகொள்ளவா? அதைவிடக் கூடுதலாகத் தங்களின் காந்தியைப் புரிந்துகொள்ளவா? அதுவும் இவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மேலோங்குவதாய் தெரிகிறது... பெரியார் ஒன்றும் பார்ப்பனர்களுக்கு எதிரியில்லை. பார்ப்பனியத்திற்கு தான் எதிரி... இது யாவருக்கும் தெரியும். பிறகு ஏன் அந்தப் பொருண்மையிலேயே தங்களின் காந்தியையும் இணைத்து இப்படி ஒரு கட்டுரை? "காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து!" என்று நேரு சொல்வதற்கான தேவை எங்கிருந்து வருகிறது? "பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது" - என்கிற இந்தக் கூற்று மூலம் தாங்கள் என்ன கருத்தை முன்வைக்க வருகிறீர்கள்? இங்கு அப்படிப் பார்ப்பனர்களுக்கு எதிராக அரசியல் செய்யப்பட்டதா? பார்ப்பனியத்திற்கு எதிராகச் செய்யப்பட்டதா? எல்லோருக்குமே கவலையா? அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டும் கவலையா? அல்லது உங்களுக்கு கவலையா? தாங்கள் பெரியார் குறித்து என்ன பிம்பத்தைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்? பின்னர் ஓரிடத்தில் பெரியாரே பிறர் அப்படிப் பேசுவதைத் தடுத்தார் என்று சான்று கொடுக்கிறீர்கள்? ஆனால் முன்னர் அந்தக் கவலை எல்லாருக்கும் என்கிறீர்கள்? இதனால் தாங்கள் கட்டமைக்க விரும்புவது? "இன்னும் ஒருபடி மேலேபோய் பெரியார் ஓர் இனவெறியர்; பெரியாரை எப்படி ஒரு காந்தியர் தூக்கிப்பிடிக்க முடியும்? என்று கேட்பவர்களும் உண்டு" என்று யார் கேட்டது? தங்களுக்குள் அப்படி ஓர் எண்ணம் இருக்கிறதோ? காந்தியாரின் வருணாசிரமப் பார்வையைக் கடந்துபோகும் தாங்கள், வலுக்கட்டாயமாக காந்தியையும் பெரியாரையும் ஒப்பீடு செய்யும் இந்தக் கட்டுரைக்கான நோக்கம் என்ன? காந்தியார் புகழ்பாடி அவருக்கான அனுதாபத்தைத் தேடி... பெரியார் குறித்த விசமத்தனமான கேள்வியை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுவதா?.. அதென்ன சார்... இருவரும் "நாட்டுப்புறத்தன்மையில்" ஆனவர்கள் என்கிறீர்கள்.. அப்படி என்றால்? நாட்டுப்புறம் என்பது குறித்தான அல்லது நாட்டுப்புறத்தன்மை என்பது குறித்தான அல்லது நாட்டுப்புறவியல் குறித்தான தங்களின் மதிப்பீடு என்ன? "பெரியார் மொழியைப் புரிந்துகொள்ள சித்தர் மரபுதான் நமக்கு நெருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்ன சார் சித்தர் மரபு? அது ஒரு அகம் பிரம்மாஸ்மி கோட்பாடு தானே...போகிற போக்கில் பொதுப்புத்தியிலிருந்து எடுத்துவிடலாமா? சித்தர் மரபில் பிற்போக்குத்தனங்களே இல்லையா? அந்த மரபில் பெரியார் என்பதன் மூலம் தாங்கள் என்ன கூற விழைகிறீர்கள்? எல்லாமே அவருக்கு மரபிலிருந்து கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறீர்களோ? வெளியில் தெரியும் நான்கு பாடல்களை மட்டும் மனதில் கொண்டு இந்த முடிவுக்கு வரும் செயமோகன் அரசியல் போலத் தெரிகிறதே... "இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்றும், ‘காந்தி சகாப்தம்’ என்ற பெயரில் நமக்கென ஒரு ஆண்டு முறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரியவர் பெரியார். காந்தி சிலைகளைத் தெருவில் போட்டு உடைக்க வேண்டும் என்று பேசியவரும் பெரியார். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? சிக்கல்தான்!" - தங்களுக்கு சிக்கல் தான் சார்.. வலிந்து வலிந்து காந்தியாரை விதந்தோத பெரியாரைத் துணைக்குக் கூப்பிடும் தங்களுக்கு சிக்கல் தான் சார். "பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரியாரின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருதரப்புமே அவருடைய வார்த்தைகளைத் தாண்டி அவருக்குள் நுழைய வேண்டும்." - அப்படி என்றால் என்ன சார்?... அதென்ன சார்... இருதரப்பாரும்... வார்த்தைகளை முழுவதும் படித்து புரிந்துகொள்வதைவிட.... தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?... "வெறுப்பூட்டும் வார்த்தைகள் பெரியாரிடமிருந்து வெளிப்பட்டன என்பதை நான் மறுக்க மாட்டேன்;" - வெறுப்பூட்டிய வார்த்தைகள் என்ன? அவை ஏன் தங்களுக்கு வெறுப்பூட்டின என்று வெளிப்படையாகப் பேசுங்கள் சார்... பொதுபுத்தியிலேயே பேசாதீர்கள் சார். "அவை வருந்தத்தக்கவை என்றாலும், அது எதிர்வினை; ஒரு பெரும் சமூகம் எதிர்கொண்ட ஆழமான ஒடுக்குமுறையிலிருந்தும், அவமானத்திலிருந்தும், வலியிலிருந்தும் வெளிப்பட்ட எதிர்வினை" - அப்றம் ஏன் சார் இதற்கு முந்தைய கருத்து தங்களிடமிருந்து வெளிப்படுகிறது. தற்போது தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு மோசமான போக்கு நிலவுகிறது. அதே போக்குதான் தங்களிடமும் வெளிப்படுகிறது. தாங்கள் விரும்பும் ஒருவரை நாயகன் பாவத்தில் மனதில் வைத்துக்கொண்டு அவரை பெரியாரோடு ஒப்பிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல விசமத்தைப் பரப்புவது. ஜானகிராமனும் பெரியாரும் (காலச்சுவடில் ராமன் எழுதிய கட்டுரை), மகாத்மாவும் பெரியாரும் (காந்தி வ.உ.சிக்கு செய்ததும், பெரியார் வ.வே.சு.க்கு செய்ததும் ஒன்றே - தினமணி: 14 செப்டம்பர், 2022), நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரை, செயமோகன் இலக்கிய கம்பெனி செய்யும் வேலைகளைப் போலவே தெரிகின்றன.

Reply 5 2

Login / Create an account to add a comment / reply.

ராஜன் குறை கிருஷ்ணன்   2 years ago

காந்தியின் தார்மீகம்தான் பெரியாரின் தார்மீகம் என்பதில் எந்த ஒரு ஐயத்திற்கும் இடமில்லை. பெரியார் அரசியலில் ஈடுபட காந்தியின் மீதான ஈர்ப்பே காரணம் என்பதை அவரே கூறியுள்ளார். வன்முறை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை அரசியல் செயல்பாட்டின் அடிப்படையாகக் கொண்டவர்தான் பெரியார். தேசத்தின் இறையாண்மை என்பது மட்டுமே அரசியல் இலக்கல்ல என்பதையும் காந்தியுடன் பகிர்ந்துகொண்டவர். பெரியாரின் சொற்களை புரிந்துகொள்வது கடினம் போல தோன்றுவதற்குக் காரணம் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்வதுதான். என்னுடைய தாயார் சிறுவயதில் தினமும் என்ன நாசமாகப் போகிறவனே என்று திட்டுவார். என்னை காப்பதிலும் வளர்ப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் நான் நாசமாக வேண்டும் என்றா நினைப்பார்? சொற்களுக்கு நேரடிப் பொருளை கொள்ளாதபோது பேசுவது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை, கோபத்தை, தார்மீக ஆவேசத்தை, நிகழ்த்திக்காட்டத்தான். அந்த நிகழ்கலைத்தன்மை பாமர மக்களிடையே பேசும்போது அவர்களிடம் உறைந்து போயிருக்கும் முன்முடிவுகளை தகர்ப்பதற்கு தேவைப்படுகிறது. இதை மனதில் கொண்டால் பெரியார் வெறுப்பை விதைக்கவில்லை, சிந்தனை நெருப்பையே விதைத்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

பார்ப்பனியத்தை பெரும்பான்மையான மக்களுக்கு எதிரி என்றுதான் கூறியுள்ளார். அதனால்தான் தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியுள்ளார். நாம், நம் கூட்டம், நம் இனம், நம் நாடு என்ற குறுகிய நோக்கத்தில் சிந்திப்பவர்களால் என்றுமே பெரியாரை ஏற்றுக்கொள்ளமுடியாது. மற்றவர்கள் நலனும் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு பெரியார் ஒரு பிரச்சினையே இல்லை. நம்பிக்கை ஒரு வாக்கெடுப்பு நடத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

உழைக்கும் வயதினர்கர்நாடகம்எங்கே இருக்கிறார் பிராபகரன்?ஹரியாணாஸ்மிருதி இராணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅரசியல் கட்சிகளுக்கு வருமான வரி உண்டா?ஆரோக்கியம்மண்டல் கிராமம்மணிரத்னத்தின் சறுக்கல்புரோட்டீன்இயர் மஃப்தொழில்நுட்பக் கல்விமுற்போக்கானது: உண்மையா?வகுப்புவாதம்இந்தியத் தொலைக்காட்சிகள்அம்பேத்கர் எனும் குலச்சாமிமுடங்கிய 3 என்ஜின்கள்உள்கட்சிப் பூசல்தமிழ் வாசகர்கள்அரசு தேசியம்இப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்இறப்புதனித் தெலங்கானாதொடர் கொலைகள்அதிநாயக பிம்பமான நாயகன்ராயல்டிமாநிலம்ஃபுளோரைடுகுடும்ப நுகர்வுச் செலவு ஆய்வறிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!