கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!

ப.சிதம்பரம்
19 Feb 2024, 5:00 am
0

சில வேளைகளில் எதிராளியை அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியில் தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்வதும் நடந்துவிடுவது உண்டு; பொதுத் தேர்தலுக்கு முன்னால், தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதிப்பகுதியில் தன்னுடைய கடைசி நிதிநிலை அறிக்கையை இடைக்கால வரவு - செலவு அறிக்கையாக அளிப்பதுடன், அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்துக்கு அரசின் செலவுக்குத் தேவைப்படும் நிதியைப் பெற ‘செலவு அனுமதி கோரிக்கையாகவும்’ தாக்கல் செய்வது மரபு.

அப்போது படிக்கப்படும் நிதி அமைச்சரின் உரை, அந்த அரசின் ஐந்தாண்டுக் கால சாதனைகளையும், எதிர்காலத்துக்கான திட்டங்களையும் கொண்டிருப்பதால் முக்கியமானதாகவே கருதப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டையுமே செய்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ‘கறுப்பு’ அறிக்கையாலும், அரசு பிப்ரவரி 8இல் வெளியிட்ட ‘வெள்ளை’ அறிக்கையாலும் அவருடைய முயற்சிகள் கெட்டுவிட்டன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) பத்தாண்டு ஆட்சியின் முடிவில் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதன் பத்தாண்டுக் கால சாதனைகளைப் பட்டியலிடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக – வியப்பளிக்கும் வகையில் - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) அரசின் 2004-2014 பத்தாண்டு ஆட்சிக்கால சறுக்கல்கள் பற்றியதாக அமைந்தது. அந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமே ஐமுகூ அரசின் சாதனைகள் ‘தோல்வி மட்டுமே’ என்று கறுப்பு மை பூசிக் காட்டுவதாக இருந்தது, ஆனால் அந்த ஆட்சியின் ‘சாதனைக’ளையும் அது வெளிப்படுத்திவிட்டது.

எனவே வேறு வழியில்லாமல், காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசின் செயல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. அப்படி ஒப்பிட்டபோது, பாஜக கூட்டணி அரசைவிட காங்கிரஸ் கூட்டணி அரசு நன்றாகவே செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவேதான் சொன்னேன், எதிராளியை அம்பலப்படுத்த நினைத்த முயற்சியில் தானே அம்பலப்பட நேரிடும் என்று, ஆனாலும் வார்த்தைகளைத் திரிக்கும் மாய்மால சித்தர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சுய தம்பட்டப் பொருளாதாரம்!

ப.சிதம்பரம் 12 Feb 2024

மிகப் பெரிய வேறுபாடு

மிகவும் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம், ‘நிலையான விலை’ அடிப்படையிலான ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீத (ஜிடிபி) சராசரியாகும். ஐமுகூ இதில் சாதனை படைத்திருக்கிறது. 2004-05 அடிப்படை ஆண்டாகக் கொண்ட கணக்குப்படி, ஐமுகூ அரசின் பத்தாண்டுக்கால ஜிடிபி சராசரி 7.5%. 2015இல் பாஜக அரசு, ஐமுகூ அரசின் இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், ‘அடிப்படை ஆண்டை’ 2011-12க்கு மாற்றியது. அப்படியும்கூட ஐமுகூ அரசின் சராசரி வளர்ச்சி வீதம் 6.7%. ஒப்பிட்டுப் பார்த்தால் பாஜக தலைமையிலான தேஜகூ அரசுக் காலத்தில் வளர்ச்சி வீதம் 5.9%. இந்த வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆண்டுதோறும் 1.6% வேறுபாடு (அல்லது 0.8%) என்றாலும் பத்தாண்டுகளில் அது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும், தனிநபர் சராசரி வருமானம் (நபர்வாரி வருமானம்), ஓராண்டில் உற்பத்தியாகும் மொத்த பொருள்கள் – அளிக்கப்படும் சேவைகளின் மதிப்பு, ஏற்றுமதியாகும் பொருள்களின் அளவு / விலை மதிப்பு, அரசின் பொது நிதிக் கணக்கிலும் வருவாய்க் கணக்கிலும் ஏற்படும் பற்றாக்குறை, இன்னும் இவை போன்ற அளவீடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்றைப் பார்க்கும்போது அது இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும், ஒப்பிட்டுப் பார்க்கும் செயல்பாடு தொடங்கிவிடும். அட்டவணை காட்டும் உண்மை:

  ஐமுகூ தேஜகூ
ஜிடிபி வளர்ச்சி

7.46% (பழையது)
6.7% (புதியது)

5.9%
பொது நிதிப் பற்றாக்குறை (முடிவுறும் ஆண்டில்) 4.5% 5.8%
தேசியக் கடன் (முடிவுறும் ஆண்டில்) ரூ.58.6 லட்சம் கோடி ரூ.173.3 லட்சம் கோடி
கடன் - ஜிடிபி வீதம் 52% 58%
குடும்பங்களின் சேமிப்பு (%ஜிடிபி) 23% 19%
விவசாய ஊதிய அதிகரிப்பு 4.1% 1.3%
வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.8 லட்சம் கோடி 
(2004-05 2013-14)
ரூ.55.5 லட்சம் கோடி 
(2014-15 2022-23)
தள்ளுபடியான வங்கிக் கடன் ரூ.2.2 லட்சம் கோடி ரூ.14.56 லட்சம் கோடி

ஆட்சிக் கால முடிவில் மொத்தச் செலவுகளில் இத்துறைகளுக்கு,

சுகாதாரம் 1.7% 1.7%
கல்வி 4.6% 2.9%

இப்படிப் பல அளவீடுகளில் தேஜகூ ஆட்சி மிகவும் மோசமாக செயல்பட்டிருக்கிறது. நாட்டின் மொத்தக் கடன் மதிப்புதான், இந்த அரசின் கொள்கைகளும் நிதி நிர்வாகமும் மிகவும் மோசம் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது; அத்துடன் குடும்பங்கள் சேமிக்க முடிவதும் குறைந்துவருகிறது; ஒன்றிய அரசில் வேலைசெய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையும் சரிந்துவருகிறது; சில அளவீடுகளில் மட்டும் தேஜகூ அரசு பரவாயில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்

முகுந்த் பி. உன்னி 08 Feb 2024

வெள்ளைப் பொய்கள்

பாஜக அரசு வெளியிட்டுள்ள ‘வெள்ளை அறிக்கை’ உண்மையிலேயே ‘வெளுத்துப்போன’ ஒன்று. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல சாதனைகளை ‘இருட்டடிப்பு’ செய்திருப்பதுடன் தன்னுடைய அரசின் மாபெரும் தோல்விகளை வெளிக்காட்டாமல் ‘வெள்ளை’ அடித்திருக்கிறது! (உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து வளர்ச்சியைத் தடுத்தது – சிறு-குறு தொழில் பிரிவுகள் அழியக் காரணமானது போன்றவை).

இந்த வெள்ளை அறிக்கையை ‘வெள்ளையடிக்கப்பட்ட பொய்’ என்றே அழைக்கின்றனர். ‘ஜன் தன்’ வங்கிக் கணக்கு, ‘ஆதார்’ எண், ‘மொபைல் எண்‘ ஆகியவற்றை இணைத்த ‘ஜாம்’ (JAM) என்ற உத்திக்கு மூலக் காரணமே முந்தைய அரசு தொடங்கி வைத்த முயற்சிகள் என்பதை வெள்ளை அறிக்கை குறிப்பிடத் தவறியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார நிர்வாகத்தைச் சரியாக மேற்கொள்ளாத காலம் என்று கூறுவது 2008-2012 வரையில். 2008 செப்டம்பர் மாத மத்தியில், ‘நிதித் துறை பேரழிவு அலை’ என்று சொல்லத்தக்க நெருக்கடி, சர்வதேசச் சந்தையில் தோன்றி எல்லா நாட்டையும் பதம்பார்த்துவிட்டது. அனைத்துப் பெரிய நாடுகளுமே பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாக அதிகத் தொகைகளைக் கடனாக வாங்கியதால் பணவீக்க விகிதம் கடுமையாக உயர்ந்தது.

நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி 2009 ஜனவரி முதல் 2012 ஜூலை வரை பதவி வகித்தார் – அப்போதுதான் பணவீக்க விகிதமும் பொது நிதிப் பற்றாக்குறையும் உச்சத்துக்குச் சென்றன. அன்றைய காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைப் பராமரிக்கவும் வேலைவாய்ப்பை அளிக்கவும் அதை அவர் செய்ய நேர்ந்தது என்பேன். அதனால் அரசின் நிதி நிர்வாகத்தில் வரவைவிட செலவு அதிகமானது, விலைவாசியும் உயர்ந்தது.

விவாதம்தான் அரசியல்

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கறுப்பு அறிக்கையையும் ஒருதலைப்பட்சமானது என்று கூறலாம். வேளாண் துறையில் ஏற்பட்ட தொடர் பிரச்சினைகள், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, அதற்கும் முன்னால் இருந்திராத வகையில் உயர்ந்துவிட்ட வேலையில்லாத் திண்டாட்டம், வேண்டப்பட்ட பெருந்தொழிலதிபர்களுக்கு அரசு ஒப்பந்தங்களையும் கடன்களையும் வரி விலக்குகளையும் இதர சலுகைகளையும் வாரி வழங்கும் சலுகைசார் முதலாளியம் ஆகியவை பாஜக கூட்டணி அரசின் பத்தாண்டுக் கால ஆட்சியில் அதிகமாகிவிட்டன.

வருமான வரித் துறை (ஐடி), மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் (இடி) ஆகியவற்றை அரசியல் எதிரிகள் மீது ஏவுவது, அரசு அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் பணிய வைப்பது, இந்திய எல்லைக்குள் சீனர்கள் ஊடுருவியதை அனுமதித்தது, மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க முடியாமல் தொடரவிடுவது என்று இந்த ஆட்சியின் அவலங்கள் பல. தலைப்புக்கேற்ற வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கறுப்பு பக்கங்களைக் கொண்டதுதான் கறுப்பு அறிக்கை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

ப.சிதம்பரம் 22 Jan 2024

இரண்டு கட்சிகளும் வெளியிட்ட அறிக்கைகளின் நோக்கம் பொருளாதாரம் அல்ல – அரசியல்தான் என்றாலும் பொருளாதாரம் தொடர்பான உண்மைகளும் வெளிப்பட்டுள்ளன. இரு அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ள விவகாரங்கள்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க விரும்பாததால் அவை இடம்பெறவில்லை.

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற (மக்களவை) பொதுத் தேர்தலில் விவாதிப்பதற்கான களத்தை அறிக்கைகள் ஏற்படுத்தித் தந்துள்ளன. அவை பற்றி விவாதங்கள் நடைபெறுமா அல்லது பணம், மதம், வெறுப்புப் பேச்சு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தேர்தல் முடிவைத் தீர்மானிக்குமா என்பதைக் காலம்தான் அறியும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சுய தம்பட்டப் பொருளாதாரம்!
பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்?
மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்
காங்கிரஸ், பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறு
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!
சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இந்திய அரசியல் வரலாறுவல்லரசு நாடுஇயங்குதளம்ஆர்ச்சி பிரௌன் கட்டுரைவயிற்றுவலிசெல்வாக்கான தொகுதிகள்கணக்கெடுப்புசேகர் பாபுசேவை நோக்கம்இமயமலை யோகிநிதி நெருக்கடிவிரக்திஆருஷாஆம்பர் கோட்டைராஜுபொதுத்துறை பங்கு விற்பனைஜாட்டுகள்ஃபுளோரைடுபேராசிரியர் கல்யாணிகையூட்டுக்குப் பல வழிகள்நகரங்களும்சட்ட நிர்ணய சபைஒரே இந்துத்துவம்தான்விஞ்ஞானிதொழிலாளர் கட்சிசின்ன மருத்துவமனைகளைச் சிந்திக்கலாம்வீழ்ச்சியும் காரணங்களும்tamilnadu nowகருப்பு எம்ஜிஆர்மதிப்பீட்டு முறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!