எனக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ‘அன்பென்று கொட்டு முரசே’ என்கிறான் பாரதி. இந்த அன்பையும் அஹிம்சையையும் ஒரு கருத்தாக்கமாகக் கொண்டு மிகச் சிறந்த இதழியல் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார் சமஸ். ‘அருஞ்சொல்’ தளத்தின் வடிவமைப்பும், உள்ளடக்கமாக வெளியாகும் படைப்புகளின் தரமும் வெகுசிறப்பு. நான் எப்படி வாசிக்கிறேன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். தினமும் வெளியாகும் கட்டுரைகளை ‘பிரின்ட்அவுட்’ எடுத்துக்கொள்கிறேன். காலையில் வெளியான வேகத்தில் இணையத்தில் வாசித்துவிடுவதோடு, இரவு மெல்லமாக இன்னொரு இந்த ‘பிரின்ட்அவுட்’ வழியாக வாசிக்கிறேன். மேலும், இதை ஒரு புத்தகம்போல ஒன்றோடு ஒன்றுசேர்த்து சேகரித்தும் வைக்கிறேன். அந்தந்த மாத இறுதியில் தொகுத்துவிட எண்ணம்.
உயர் ரத்த அழுத்தம் பற்றி மருத்துவர் கு.கணேசனுடைய அருஞ்சொற்கள் மிகமிக எளிமையாக ஒரு நல்ல ஆசிரியர் வகுப்பெடுப்பதுபோல சொல்லித்தருகிறார். ‘உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்’ கட்டுரையானது பாதுகாக்கப்பட வேண்டிய சொற்சித்திரம். அருஞ்சொற்சித்திரம். எந்தவொரு விஷயத்தையும் படித்துக்கொண்டிருக்கிறபோது மெல்ல மனம் விசாலமடைந்து ஒரு காட்சியை உருவகப்படுத்திக்கொண்டே படிக்கும். கணேசனின் கட்டுரையைப் படித்து முடித்த பிறகு வேறொரு காட்சியும் பிம்பமும் மனதுக்கு வந்தன. உயர் ரத்த அழுத்தம் நம்மை விட்டுப் போனதுபோல, உயர் ரத்த அழுத்தம் வராமல் நம்மைத் தற்காத்துக்கொண்டதுபோல உணர்வைத் தந்தார்.
அன்பு என்பதை அறம் என்று புரிந்துகொள்ளலாம், அன்பு என்பதை அஹிம்சை என்று புரிந்துகொள்ளலாம், அன்பு என்பதை அறிவியல் என்று சொல்லுகிற பாலசுப்ரமணியம் முத்துசாமியின் ‘காலவெளியில் காந்தி’ கட்டுரை மிகமிக ஆழமாக யோசிக்க வைக்கிறது. காலவெளி எங்கும் நீடித்திருக்கும் காந்தியர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதாக அவர் சொல்லுகிறபோது, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதை நினைவுக்கு வருகிறது. காலவெளியில் காந்தியை நிறுத்துவதால் ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. இதைத்தானே தலையங்கம் வலியுறுத்துகிறது. ஒரு வாசிப்பு நல்ல வாழ்க்கையை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதுதானே வாசிப்பின் பலனாக இருக்க வேண்டும்; அது தருகிற நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று சமஸ் சொல்வதை இந்தக் கட்டுரை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது.
காந்தியிலிருந்து ஆஃப்கானிஸ்தான் தொடர்பான பேட்டி, தலையங்கம் இரண்டையும் படித்தேன். ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல இருந்தாலும் இரண்டுக்கும் தொடர்புடைய விஷயங்களும் இருந்தன. ஒன்று, ஆஃப்கானிஸ்தானுக்கு உள்ளே இருந்து ஒலிக்கும் குரல். இன்னொன்று, வெளியேயிருந்து ஒலிக்கும் குரல். முதல் குரலில் ஒருவிதத் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும், அங்கேயுள்ள கள நிலவரத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. தலையங்கமோ ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை நோக்கியதாக அந்த விவகாரத்தை விரித்துப் பேசுகிறது.
அடுத்து, பாரதியை முன்வைத்து பா.வெங்கடேசனை த.ராஜன் எடுத்திருக்கும் ‘பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான்’ என்ற பேட்டி. மிகச் சிறந்த நேர்காணல். ஒரு தமிழ் மாணவரோ அல்லது வாசகரோ மாய யதார்த்தம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஒரு நேர்காணல் போதும். ‘பாரதியிடமிருந்து நீங்கள் பெற்ற தாக்கம் என்ன?’ என்பதற்கான பதிலும், ‘அது எப்படி இப்படியொரு சாதாரணம் அவரிடம் உச்சமாக வெளிப்படுகிறது?’ என்பதற்கான பதிலும் கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த வரிகளாகக் குறித்துக்கொள்கிறேன். பாரதியை மீண்டும் வாசிக்க இந்த நேர்காணல் தூண்டுகிறது. என்ன மனிதர் இந்த வெங்கடேசன் என்று வியக்கிறேன்.
கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் இதுதான் உண்மை: ‘அருஞ்சொல்’லை வாசித்த பிறகு என்னுடைய மனச்சுமையெல்லாம் வடிந்துபோயிற்று. இதே உத்வேகத்தோடும் உள்ளடக்கத்தோடும் நீண்ட தூரம் ‘அருஞ்சொல்’ பயணிக்க வாழ்த்துகிறேன்.
- கே.துளசிதாசன், கல்வியாளர், எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர், திருச்சி.
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அதிகாரிகள் - அரசியலர்கள் என்று கொள்கைகளை வகுப்பதில் பங்கு வகிக்கும் பலதுறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’ இதழை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளை aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் அல்லது கட்டுரைகளின் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள்.
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
MAHESHWARAN S 3 years ago
வணக்கம், அருஞ்சொல் ஊடகம்,தனது இனிய மற்றும் மக்களுக்கான பயணத்தை துவங்கியுள்ளது வாழ்த்துக்கள். அருஞ்சொல் இன்றைய காலத்தின் தேவை ,சரியான மற்றும் நடுநிலையான ஊடகமே ஜனநாயகம் நிலைபெற அவசியமானது. ஐயா,நாங்கள் தமிழ்நாடு அரசு தேர்வுஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வு எழுதி வருகிறோம். தமிழ்நாடு அரசு தற்போது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது இவை வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும் அதை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.கடந்த ஐந்தாண்டுகளாக 30 சதவீத இட ஒதுக்கீட்டை தவறாக அமல் படுத்தியதால் பணி வாய்ப்பில் ஆண்களை விட பெண்களின் சதவீதம் மிகவும் கூடிவிட்டது மேலும் தற்போது 40 சதவீதமாக தவறான முறையில் அமல் படுத்தினாள் ஆண் தேர்வர்கள் மேலும் பாதிக்கப்படுவர் எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு (2007,ராஜேஸ்குமார் தாரியா vs ராஜஸ்தான் அரசு ) வழங்கியுள்ள படி சிறப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை வைத்து சில வாரங்களாக ஆண் தேர்வர்கள் அரசின் கவனம் பெற ட்விட்டர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிப்பது முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் அவர்களால் அரசின் கவனம் போதுமானதாக பெற இயலவில்லை எனவே இதுகுறித்து தங்கள் தளத்தில் விரிவான செய்திகள் மற்றும் கட்டுரை வெளியிட்டு மக்கள் மத்தியில் சரியான புரிதல் ஏற்படுத்திட வேண்டுகிறோம். இணைப்பு: தீர்ப்பு நகல் மற்றும் நீயுஸ் 18 செய்திகளுடைய லிங்க் https://youtu.be/N3a8SFl2Snk
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.