சரியான பாதை @ திமுகவின் பலம் நாடாளுமன்றத்தைத் தாண்டியும் அதிகரிக்கட்டும்!
ஆமாம், இப்பொழுது திமுகவிற்கு சரியான தருணம் என்றே சொல்லலாம். மாநிலத் தலைமையில் இருந்து தேசியத் தலைமை நோக்கி செல்ல இத்தருணம் ஆரம்பமாக அமையட்டும்!
- முத்து பிரசாத், தேனி.
திமுக இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும். நிச்சயம் உங்கள் தலையங்கம் அதைச் செய்யும்!
- எம்.மோகனசுந்தரம்
இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் கவனம் வேண்டும் @ என் மனச்சுமையெல்லாம் வடிந்துபோயிற்று!
வணக்கம். ‘அருஞ்சொல்’ ஊடகம் மக்களுக்கான பயணத்தைத் துவங்கியுள்ளதற்கு வாழ்த்துகள். ‘அருஞ்சொல்’ இன்றைய காலத்தின் தேவை; சரியான மற்றும் நடுநிலையான ஊடகமே ஜனநாயகம் நிலைபெற அவசியமானது. ஐயா, நாங்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வு எழுதிவருகிறோம். தமிழ்நாடு அரசு தற்போது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30% என்பதிலிருந்து, 40% ஆக அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்க அம்சம். ஆயினும் இதை அமல்படுத்துவதில் சரியான முறை தேவை. இல்லையென்றால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதுகுறித்து நீங்கள் எழுத வேண்டும்!
- எஸ். மகேஸ்வரன்
காந்தியின் உன்னதமான தோல்விகள் @ மகாதேவ் தேசாய்: மாபெரும் காந்தியர்
அருமையும் பெருமையும் மிக்க மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வாழ்ந்து இருந்த இடம் தெரியாமல் சென்றிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் மகாத்மியத்துக்குப் பின்னால் இருந்த மனிதர்களின் வரலாறு சரிவர ஆவணப்படுத்தப் படவில்லை. எஸ்.எஸ்.கில் எழுதியுள்ள ‘காந்தி: சப்லைம் ஃபெயிலியர்’ நூலில் காந்தியார் தனது ஆளுமையின் பல பரிமாணங்களில் தோற்றவர் என்றாலும், அவரது தோல்விகள் மிக மேன்மையானவை என்றும், வரலாற்றுப் பிரக்ஞையுடன் எதிர்காலம் குறித்து அவர் கண்ட உதோப்பியன் (Utopian) கனவுகள் நிராசையாகப் போனதால் விளைந்தவை என்றும் குறிப்பிடுகிறார். காந்தியாரின் அந்தக் கனவுகளைப் பகிர்ந்துகொண்டவராக மகாதேவ் தேசாய் இருந்திருக்கிறார். ஒரு மாபெரும் கனவைப் பகிர்ந்து கொண்டவர்களாக கஸ்தூரிபா அன்னை, மீரா பென், காஃபர் கான் உள்ளிட்டோர் இருந்தனர். அந்தக் கூட்டுக் கனவின் பங்காளிகள் அனைவரைப் பற்றியும் முழுமையான சரித்திரங்கள் எழுதப்பட வேண்டும். குஹாவின் கட்டுரை மன எழுச்சியையும் நெகிழ்வையும் தரக் கூடியது.
- பிரபு
நெஞ்சில் நிற்கும் கடல் அனுபவங்கள் @ விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!
எங்கள் ஊர் இடையகோட்டை யில் (திண்டுக்கல் மாவட்டம்) இருந்து கிழக்கே திருச்சி மாவட்டத்தைக் கடந்து தஞ்சாவூர் மாவட்டம் சென்றால்தான் கடலை நெருங்க முடியும். கேரளாவில் விழிஞம், சென்னை மெரினா, பாண்டிச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் கடற்கரைகளுக்கு நேரில் சென்றது உண்டு. அப்போதெல்லாம் கடற்கரையின் அழகையும் கடல் அலைகளின் ஆரவாராத்தையும் தூரத்தில் தெரியும் படகுகளையும் பார்த்து ரசித்து உள்ளேன். ஆனால், சமஸ் எழுதிய ‘கடல்’ புத்தகத்தைப் படித்த பிறகுதான் கடல் என்பது வெறும் காட்சிப் பொருளல்ல, கடல் என்பது ஒரு உகலம், கடல் என்பது ஒரு வாழ்வியல், கடல் என்பது ஒரு பண்பாடு எனக் கடலின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்தேன். கடலை உள்ளபடி காட்டும் ஒரு அற்புதக் கண்ணாடியாக அந்தப் புத்தகம் இருந்தது. கடலோடிகளின் வாழ்க்கை, அவர்களைச் சார்ந்துள்ள மக்களின் கலாச்சாரம், கடலை வைத்து நடக்கக்கூடிய அரசியல், கனிம வளத் திருட்டு என ஒரு மிகச்சிறந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார் சமஸ். நாளிதழில் தொடராக வந்தபோது முழுமையாக வாசிக்க முடியவில்லை என்பதால் புத்தகமாக வெளியானவுடன் பெற்றுக்கொண்டேன் மற்றும் கற்றுக்கொண்டேன் கடல் வாழ்வியலை!
- ஹமீத் இம்ரான் எஸ்.
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.