கட்டுரை, கல்வி 6 நிமிட வாசிப்பு

பள்ளிக்கல்வித் துறைக்கு விடியல் எப்போது?

வெங்கட் எம் லக்ஷ்மி
20 Oct 2021, 5:00 am
4

மிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் மிக மோசமாக நிர்வகிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது கல்வித் துறை. நேற்று ஒரு முடிவு, இன்று ஒரு முடிவு; அமைச்சர் ஓர் அறிவிப்பு, அதிகாரிகள் இன்னோர் அறிவிப்பு என்று பல்வேறு குழப்பங்கள். இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றமே என்று நம்பின ஆசிரியர் சமூகமும், பொதுச் சமூகமும். பெரிய மாற்றங்களை இத்துறை எதிர்பார்க்கிறது. துரதிருஷ்டவசமாக ஆட்சி மாற்றத்துக்குப் பின் நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பெரிய காட்சி மாற்றங்கள் கல்வித் துறைக்குள் ஆரம்பிக்கவில்லை.

அதிமுகவின் செயல்பாடு 

அதிமுக ஆட்சியில் கல்வித் துறை சம்பந்தமான எந்த அறிவிப்பு வந்தாலும் முதல்வர் பழனிசாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் கடும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் ஆளானார்கள். அவர்களது செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. தேசியக் கல்விக்கொள்கையில் சொல்லப்பட்ட பல விஷயங்களை அவர்கள் அரசாணையாகப் பிறப்பித்ததுடன், அப்படியே செயல்படுத்தவும் முனைந்தனர்.

பள்ளி வளாக இணைப்பு, ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டம், சத்துணவு வழங்கும் பணியைத் தன்னார்வர்களிடம் ஒப்படைக்கும் முனைப்பு, 3, 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுக்கான ஆணை பிறப்பிப்பு என்று பல குளறுபடியான அறிவிப்புகள். இவற்றில் பல, கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் திரும்பப் பெறப்பட்டன என்பது வேறு விஷயம். எப்படியும் குழப்படிக்குள்ளேயே இருந்தது கல்வித் துறை.

திமுக ஆட்சியில் நடப்பது என்ன?

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அறநிலையத் துறையில் ஆரம்பித்து காவல் துறை வரை பல மாற்றங்கள் நடப்பதைக் காண முடிகிறது. கல்வித் துறையிலும் இத்தகைய மாற்றங்களுக்கான முனைப்பை அரசிடமிருந்தும், அமைச்சரிடமிருந்தும் அவர்களுடைய பேச்சின் வழியே பார்க்க முடிகிறது. ஆயினும், பள்ளிகளின் செயல்பாட்டைப் பொருத்த அளவில் எந்தப் பெரிய மாற்றங்களும் இன்னும் கண்ணுக்குத் தென்படவில்லை.

அரசுப் பள்ளிகளின் பெரும் பிரச்சினை 

முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்களிலேயே முதன்மையானது, அரசுப் பள்ளிகளின் பெரும் பிரச்சினையான ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது ஆகும். ஆசிரியர் - மாணவர் விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் நெடுநாள் கோரிக்கை. கல்வித்துறை அரசாணை எண்:  250/29.02.1964-ன்படி 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் வீதம் முன்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அது காமராஜர் ஆட்சிக் காலம். பிறகு அரசாணை எண்: 525/27.12.1997-ன்படி, 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இது கலைஞர் ஆட்சிக் காலம். 

இப்போது, மேல்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற சூழல் இருக்கிறது. குறைவான மாணவர் சேர்க்கை உள்ள சில அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார் என்றாலும், கூடுதல் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்கிற சிந்தனையே நம்மிடம்  இல்லை. 

இதன் விளைவு என்ன? இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல் வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் அவலம் நடக்கிறது. இப்படிப் படித்துவரும் மாணவர்களைத்தான் ‘நீட் தேர்வைத் தாண்டி வா’ என்று நாம் நுழைவுத் தேர்வுக்கு அனுப்புகிறோம். இப்படியான தேர்வை எதிர்ப்பது வேறு விஷயம்; இவ்வளவு மோசமான நிலையில் படிக்கும் மாணவர்களால் உள்ளூர் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலேயே இடம் பிடிக்க முடியாதே, அந்த அவலநிலையை நாம் போக்க வேண்டாமா?

கரோனா காலத்தில் வேலையிழப்பு, ஊதிய இழப்பு காரணமாக தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்திருக்கிறார்கள். இதை ஒரு பெருமையாகவும் ஆட்சியாளர்கள் பேசிக்கொள்கிறார்கள். 

புதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் நியமனம், பள்ளித் தளவாடப் பொருட்கள், கட்டுமானம், அடிப்படை வசதிகள் இவையெல்லாம் விஸ்தரிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?  இதுகுறித்து இதுவரை அதற்கான எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. 

களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கும், அரசு காட்டிவரும் அக்கறைகளுக்கும் இடையிலான இடைவெளியைச் சுட்டுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே மேற்கண்ட பிரச்சினை. 

ஆசிரியர்களிடம் பேசட்டும் அரசு 

தேசியக் கல்விக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்த திமுக, “தமிழ்நாட்டிற்கென தனிக் கல்விக்கொள்கையை உருவாக்குவோம்” என்று வாக்குறுதி கொடுத்துத்தான் அரியணை ஏறியது. இது சாதாரண அறிவிப்பு இல்லை. இதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, தேசியக் கல்விக் கொள்கையின் பாதையிலேயே இந்த அரசும் பயணிப்பதாகவே நடக்கும் போக்குகள் வெளிப்படுத்துகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நிர்வாக மாற்றம் என்ற பெயரில், பள்ளிக்கல்வித் துறையின் உயர்ந்த பதவியான இயக்குநர் பதவி ரத்துசெய்யப்பட்டு, அனைத்துப் பொறுப்புகளும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டதை நாம் அறிவோம். 

இயக்குநருக்கு மேல் ஆணையர் என்றொருவரை அதிமுக அரசு நியமித்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அடுத்து வந்த திமுக அரசு ஆணையர் பதவியை ஒழித்திருந்தால் வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால், அதிமுக அரசு அடுத்து எதைச் செய்ய நினைத்ததோ அதையே இதன் மூலம் முழுமையாகச் செய்து முடித்தது திமுக அரசு. இப்படிக் கல்வித்துறைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றும் முனைப்புகளில் ஒன்றே ஆகும்.

முழுப் பொறுப்பும் வந்த பிறகு, ஆணையரிடமிருந்து சரமாரியாக அரசாணைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ‘மாணவர்களின் கற்றல் இடைவெளியை நீக்குகிறோம்’ என்ற பெயரில், ஆசிரியர்களுக்கே தெரியாமல் தன்னார்வலர்களைப் பள்ளியில் நுழைக்கலானது அவற்றில் ஒன்று. ‘முறையான கல்வியைச் சிதைத்து முறைசாராக் கல்வியைப் புகுத்துவதில் முனைப்பு காட்டுகிறார் ஆணையர்; இதுவும் கல்வியைத் தனியார்மயமாக்கும் தேசியக் கல்விக்கொள்கையின் விருப்ப விழைவுதான்’  என்ற குரல்கள் இப்போது ஆசிரியர்களிடத்திலிருந்து கிளம்பியிருக்கின்றன.

அரசு, ‘நவம்பர் முதல் 1-8 மாணவர்களுக்குப் பள்ளி திறக்கப்படும்’ என்று அறிவித்தது யாவருக்கும் தெரியும். ‘3, 5, 8, 10 மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு நடத்தப்படும்’ என்று அரசாணை வெளியிட்டிருப்பது பலருக்குத் தெரியாது. எட்டாம் வகுப்பு வரையிலான பிள்ளைகள் பள்ளிக்கூட வாயிலை மிதித்தே ஒன்றரையாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களது கற்றலைச் சோதிக்கவும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் ஆணை வந்திருப்பது வேடிக்கை இல்லையா?

கரோனாவுக்குப் பிறகு, கல்வித் துறை உள்ளபடி நசுங்கிப்போய் இருக்கிறது. வீட்டிலேயே இருந்தவர்கள் மாணவர்கள் மட்டும் இல்லை; ஆசிரியர்களும்தான். ஒரு புத்துயிர்ப்பு எல்லாத் தரப்பினருக்குமே தேவைப்படுகிறது. போதிய அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவதும், நெடுநாட்களுக்குப் பிறகு பள்ளிக்கூடம் நோக்கிவரும் மாணவர்களுக்கு, முந்தைய வகுப்புப் பாடங்களோடு தொடர்பை உண்டாக்கி அடுத்த வகுப்பு நோக்கி நகர்த்துவதும் மாநிலம் தழுவியதாக முன்னெடுக்கப்பட வேண்டிய பெரிய காரியம். இதுகுறித்து ஆசிரிய சமூகத்துடன் அரசு பேச வேண்டும். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே தேசியக் கல்விக்கொள்கைக்கு சவால் விடும் ஒரு தனிக் கொள்கையைத் தமிழக அரசு முன்னெடுக்க முடியும். 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1




1


பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 years ago

கடந்த அதிமுக ஆட்சியில் அதிகம் கேலிக்கூத்தானது பள்ளிக்கல்வித் துறைதான். துக்ளக் முடிவுகள் - திரும்பப் பெறல்கள் அந்தத் துறையின் முத்திரையாகவே இருந்தது. பள்ளிக்கல்வி ஆணையர் என்ற புதிய பதவி அதற்கான எந்த நியாயமும் உருவாகாத நிலையில் ஏற்படுத்தப் பட்டது. எழுந்த எதிர்ப்புகளின் தகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. அதற்கு ஒருபடி மேலே போய், திமுக அரசு பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி தேவையில்லை என்று முடிவு செய்தது. இதனால் ஒரு இணக்கமான interface முடிவுக்கு கொண்டுவர பட்டது. ஆணையர் கணினி வழி.ஆணைகள் நூற்றுக் கணக்கில் பிறப்பிப்பதின் வழியாகவும், பணியிட மாறுதலில் புரட்சிகர மாற்றங்களை செய்வதின் மூலமும் தனியார் பள்ளிகளுக்கு மாற்றாக அரசுப் பள்ளிகளை முன்னிறுத்த முயல்வதாக தெரிகிறது. இது நிச்சயம் முடியாது. அரசுப் பள்ளிகளின் சீர்கேடு எண்பதுகளில் நடந்தது. தனியார் பள்ளிகளை நூற்றுக் கணக்கில் திறந்துகொள்ள எப்பொழுது அரசு ஆணையிட்டதோ அப்பொழுதே அழிவு நிச்சயமானது. அதற்கு முன்னரும் தனியார் பள்ளிகள் இருந்தன; மிகச் சொற்ப அளவில். அதுவும் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டும் தங்களின் குழந்தைகளை அனுப்பும் அளவில் அவை இருந்தன. மற்றவையெல்லாம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான். இந்தக் காரணத்தினால், ஒரு சமச்சீர் சமூகம் இருந்தது. After all, school is a miniature society. நீதிபதி பையனும், வாத்தியார் பொண்ணும், தினக்கூலி செய்பவரின் குழந்தைகளும் ஒரே பெஞ்சில் அமர்ந்து பயின்றனர். என்னுடன் எனது ஆசிரியரின் பையனும் படித்தான். எங்கள் ஊர் இன்ஸ்பெக்டர் மகள் எங்களுடன் படித்தாள். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தப்படாத காலம் அது. எண்பதுகளின் துவக்க வருடங்கள் வரை அப்படித்தான் இருந்தது. அரசுப் பள்ளிகள் / உதவி பெறும் பள்ளிகளில் இருந்துதான் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கொத்தனார்கள், அரசியல்வாதிகள் என்று அனைவரும் உருவாகி சமூகத்திற்குள் நுழைந்தார்கள். அனைத்து சாதியினரும் தங்கள் மகன் மகள்களை இந்தப் பள்ளிகளுக்குதான் அனுப்ப முடியும். என்னுடைய பெஞ்ச் தோழன் கிருஷ்ணமூர்த்தி. ஐயர் பையன். கிரிக்கட் பற்றி முதன்முதலில் என்னுடன் பேசியவன். என்னை அழைத்துப் போய் அவனுடைய வீட்டில் உட்கார வைத்து கிரிக்கட் கமெண்டரி கேட்க வைத்தான். பள்ளியின் லாபம் இதுதான். நீட் தேர்வை பாஸ் செய்வதுதான் கல்வியின் லாபம் என்ற இடத்திற்கு அரசும் ஆணையரும் வந்து விட்டது காலத்தின் சித்து விளையாட்டு. வலுக்கட்டாயமான பணியிட மாறுதல், கல்வி மேலாண்மை தரவிலிருந்து நூற்றுக்கணக்கில் உருவாக்கப்படும் புள்ளியியல் பகுப்பாய்வுகள், ஆணைகள், தினந்தோறுமான தேர்வுகள் போன்றவை அரசுப்பள்ளிகளின் தரத்தை இன்னும் கீழே இழுத்துச் செல்லும். எங்கேயோ எப்போதோ யாரோ நடத்திக் காட்டிய சில மேஜிக் சாதனை பொதுத் தரத்தை கொண்டுவராது. தேவையில்லை. தத்துவத்தை தவறவிட்டதால் இந்த பரிதாபம் நடந்து விட்டது. சரி செய்ய தற்போது வேண்டுவது political will மட்டுமே. கோவில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசுப் பள்ளிகளில் அனைத்துப் பிரிவு (சாதி - பொருளாதார) மக்களின் குழந்தைகளும் படிப்பது. எந்த அரசு அதை மீட்டுக் கொண்டு வருகிறதோ, அதுதான் பள்ளிக் கல்வி மீது கரிசனம் காட்டும் அரசு. அப்படியான அரசு ஒன்று காலத்தின் நினைவில் எப்போதும் தங்கியிருக்கும். என் நினைவில் எப்போதும் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி போல.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Thiyagarajan P   2 years ago

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை விட்டு விட்டு, அரசாங்கம் ஆசிரியர் இடமாறுதல் என்ற பணியை கையில் எடுத்ததுள்ளது. இது ஆசிரியகளிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கல்வி ஆண்டு தொடக்கத்தில் இடமாறுதல் கலந்தாய்வுகளை செய்யாமல், நவம்பர் மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வுகளை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

sivakumar   2 years ago

தேசிய கல்விக்கொள்கையின்அமலாக்கத்தில் ஒன்றுதான் 3,5,8 வகுப்புகளுக்கான திறனறி தேர்வு என்பது பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாதா

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   2 years ago

பள்ளிக்கல்வித்துறை செயலிலக்கத் தொடங்கியது கொரோனாவுக்கும் முன்பு, ஆனால் கொரோனா அதன் செயல்பாடுகளை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது.ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது இலமே.பள்ளிக்கல்வித்துறை தான் ஒவ்வொரு ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட துறையாக இருக்கிறது.சி.பிஎஸ்.சி எனும் உயர்தர பள்ளிகள் தாம் கல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாகியிருக்கின்றன.போட்டித் தேர்வுகள்,நுழைவுத் தேர்வுகள்,ஏன் ஆசிரியர்கள் பணிக்குச் சேர விரும்பும் பள்ளிக்கூடங்களும் அவையே.இப்போதைக்கு நீங்கள் கூறிய படி சென்ற ஆட்சியில் விட்டுச் சென்ற குளறுபடிகளை சரி செய்தாயிற்று, வருங்கால தலைமுறையினர் கல்வித திறன் குறித்து மேம்பட்ட கல்விக் கொள்கைகள் கொண்ட கொரியா,பின்லாந்து,ஜப்பான் ஒத்த நம்மிடம் அப்படி ஓர் கொள்கை சாத்தியமாகும் பட்சத்தில், அதற்கான் விவாதத்தை எப்போது தொடங்குவது?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆண்களை இப்படி அலையவிடலாமா?பா.வெங்கடேசன் - சமஸ்கருத்துரிமை தினம்!மகள் திருமணம்தனிச் சட்டம்சமத்துவச் சமூகம்கோசம்பியின் மேதைமைமுள்ளும் மலரும்எஸ்.என்.நாகராஜன்காங்கிரஸின் வீழ்ச்சிமேலாண்மைபாரச்சூட் தேங்காய் எண்ணெய்மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறுசிக்கனமான நுகர்வுகச்சேரிகள்ராஜன் குறை சமஸ்மாட்டிறைச்சிP.Chidambaram article in tamilதாங்கினிக்காகுழந்தையின் செயல்பாடுகளும்மிகைல் கொர்பசெவ்நான்காவது படலம்அரசியல் சந்தைகுறைந்த வருவாய் மாநிலங்கள்புவி வெப்பமடைதல்அ அ அ: ஜெயமோகன் பேட்டிதிருக்குறள் மொழிபெயர்ப்புபிடிஆர் முழுப் பேட்டிமேற்கத்திய ஞானம்பாமயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!