கட்டுரை, கல்வி 2 நிமிட வாசிப்பு

அக்கறையுடனேயே அடியெடுத்து வைத்திருக்கிறது பள்ளிக்கல்வித் துறை

என்.மாதவன்
22 Oct 2021, 5:00 am
3

வெங்கட் எம் லட்சுமி அவர்கள் எழுதிய ‘பள்ளிக்கல்வித் துறைக்கு விடியல் எப்போது?’ எனும் அருமையான கட்டுரையை ‘அருஞ்சொல்’ இதழில் வாசித்தேன். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் சீரமைப்பு, அதிகாரப் பரவலாக்கம், தமிழ்நாட்டிற்கு என்று தனியான கல்விக் கொள்கை போன்ற இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பான அவரது நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், இவையெல்லாம் மிக நீண்ட காலமாக, தமிழகக் கல்வித் துறை எதிர்கொண்டுவரும் சிக்கல்களின் தொடர்ச்சி; புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓர் அரசு இந்த இடம் நோக்கி வர ஒரு பெரும் அவகாசம் தேவைப்படும் என்பதை நாம் அனைவருமே புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அக்கறை இருக்கிறதா, இல்லையா? 

ரு புதிய அரசிடம் ஒரு கல்வியாளனாக நான் முதலில் கவனிக்க விரும்புவது, அது ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையோடு இருக்கிறதா, இல்லையா; புதிய விஷயங்களைச் செய்ய ஆர்வத்துடன் இருக்கிறதா, இல்லையா?

இப்படிப் பார்க்கும்போது இந்த அரசு ஒட்டுமொத்தமாக மட்டும் அல்லாது, பள்ளிக்கல்வித் துறையும் அத்தகைய ஆர்வத்துடனேயே இருப்பதை வெளிப்படையாகவே காண்கிறேன்.

கரோனா கால கற்றல் இடைவெளியைக் குறைக்க, ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற பெயரில் தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டமே இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று சொல்ல முடியும்.

முற்போக்கான திட்டம் இது

ந்தத் திட்டம் இந்தியாவில் எந்த மாநில அரசும் இதுவரை யோசிக்காத ஒரு செயல்வடிவமாகவே எனக்குத் தோன்றுகிறது. கல்வியில் அக்கறை கொண்ட பல அமைப்புகளையும், அறிவுஜீவிகளையும் கலந்தாலோசித்தே திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடனும் அடுத்து  கலந்தாலோசிக்க உள்ளனர்.

கரோனா பொது முடக்கத்தினால், பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்  இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டம் இது. இதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில் 6 மாதக் காலத்திற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் சுமார் 1.30 மணி நேரம் (மாலை 5 முதல் 7 மணிக்குள்) தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த இருக்கிறார்கள்.

எந்த ஒரு அமைப்பும் கூடுதல் பலத்துடன் இயங்க சமூகப் பங்கேற்பு இன்றியமையாதது. இந்தத் திட்டத்தின் வழி கல்வித் துறை நோக்கி வரும் தன்னார்வலர்கள், மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதோடு சென்றுவிடப்போவதில்லை. அவர்களுடைய அனுபவத்தின் வழி பல விஷயங்களை நமக்கும், சமூகத்துக்கும் பகிர்வார்கள் இல்லையா? கற்பித்தல் - கற்றலைத் தாண்டி சமூகத்தைக் கல்வித் துறையுடன் இணைக்கும் பாலமாகவும் இது அமையும் என்று நினைக்கிறேன்; கடந்த காலத்தில் ‘அறிவொளி இயக்கம்’ அமைந்ததுபோல; பெரிய மாற்றங்களுக்கு இது வித்திடலாம்!

'ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு கிராமமே தேவையாக இருக்கிறது' என்ற பொன்மொழியின் தேவை முன் எப்போதையும்விட இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. கட்டுரையாளர் வெங்கட் எம் லட்சுமி சொல்லும் மாற்றங்கள் இங்கே நடைபெற ஒரு சமூக இயக்கமே நடந்தாக வேண்டும். அதற்கான ஆரம்பாகவும் மேற்கண்ட திட்டம் அமையலாம். அரசின் அக்கறைக்கு ஓர் உதாரணமாகவே இந்தத் திட்டத்தைக் குறிப்பிடுகிறேன்.

ந்த அரசுத் திட்டமும் மக்களின் வரிப்பணத்திலிருந்தே உருவாக்கப்படுவதால் அதனை விமர்சனம் செய்வது நம் கடமை. அதேசமயம், அந்த விமர்சனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேலும் செயலூக்கம் தருவதாக அமைந்தால் மேலும் நன்றாக இருக்கும். தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இந்த அரசின் காலகட்டத்தில் பெரும் மாற்றங்களுக்கு உழைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த மாற்றங்களுக்காக ஆர்வத்துடன் உழைக்க முற்படுவதாகவே இப்போதைய நிர்வாகம் தென்படுகிறது. மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கான வழிமுறைகளை வலியுறுத்தும்படியாகவும் கட்டுரை அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
என்.மாதவன்

என்.மாதவன், கல்வியாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.








பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

நிறைய தன்னார்வலர்கள் இருக்கிறார்களா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Anna.Ravi   3 years ago

வீட்டில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏற்ற சூழல்வாய்க்கப்பெறாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வித்திட்டம் ஒரு வரப்பிரசாதம் எனலாம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

ஒருவேளை இந்த தன்னார்வலர்கள் பங்களிப்பு கல்வி அடைவுகளை மிகவும் சிறப்பாகவே வழங்கிவிட்டால், இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல் படித்து பிறகு அரசு வேலைக்கு வந்து ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் இதுவரை செய்ததுதான் என்ன? "இல்லம் தேடி கல்வி" என்பது அரசுப் பள்ளி மாணவனுக்கு. Byju's பணம் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு. அமர்த்தியா சென் கூறும் capability approach இதில் இங்கே இருக்கிறது? தரமான பன்மைத் திறன்களை வளர்க்கும் கல்விக்கான உரிமை (entitlement) அரசுப்பள்ளி மாணவனுக்கு (ஏழை மாணவனுக்கு) கிடையாதா? எங்கே equity இருக்கிறது? இந்தத் தன்னார்வலர்களின் மூலம் தளராத வளர்ச்சியை (sustainable development) எப்படி ஏற்படுத்துவீர்கள்? பொதுக்கல்வியின் தரம் தனியாரின் தரத்திற்கு (பள்ளிக் கல்வியைப் பொறுத்த வரையில்) எப்போது வருவது? அது ஒரு பக்கம் இருக்கட்டும். வர்க்கம், இனம், சாதி, பால்நிலை அனைத்தும் கடந்து எல்லாத் தரப்பு மாணவர்களும் ஒரு miniature சமூகமாக ஒரே இடத்தில் கல்வி பெறும் நாள் திரும்ப வருமா? தொழிற் படிப்புகளின் சேர்க்கை மட்டுமே கல்வியின் தரத்தை அடையாளப்படுத்துமா? கல்வியின் அடைவுகளில் "அறம், மனிதரின் தனித்துவம், நீதி, நியாயம், சமத்துவம், உடன்பாடுகளை மதித்தல், மனிதம்" என்பவையெல்லாம் இல்லையா? மதிப்பெண்களைப் பெறுதல், பொருளாதாரத்தில் உயர்வு என்பன மட்டும்தான் கல்வி அடைவுகளில் உள்ளனவா? Entitlement to quality education என்பது இங்கே அனைவருக்கும் உறுதியாக்கப்பட்டு விட்டதா? சமூகத்தை - கல்வியை இரண்டு செங்குத்து பிளவாகப் பிளந்து நாற்பது வருஷமாகிறது. Equity அழிக்கப்பட்டுவிட்டது. புதுப்புது தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளில் (jargon) நமது collective shame-ஐ மறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

Reply 12 0

Login / Create an account to add a comment / reply.

புலம்பெயர் தொழிலாளர்கள்குற்றவியல் நீதி வழங்கல்பருவநிலை இடர்கள்கார்ட்டூன்ராஜவிசுவாசம்என்.கோபாலசுவாமிஅண்ணன் பெயர்இந்திய மக்கள்தொகைமூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள்ஆம்ஆத்மி கட்சிஉள்ளூர்த்தன்மைகுடிமைப் பணித் தேர்வு சரியானதே!மாணிக்கம் தாகூர்பணிப் பாதுகாப்புவர்ணங்கள்7.5% ஜிடிபி வளர்ச்சி முடியுமாஇந்துவாக இறக்க மாட்டேன்மூளைத் தூண்டல்க்ளூட்டென்பொய் நினைவுகளின் வரலாறுட்ராட்ஸ்கி மருதுவர்ணமற்றவர்களும்பெரியார் காந்திபற்கள் ஆட்டம்ராசாகிலின்பாரத் ஜோடோ நியாய யாத்திரைபடுகொலைசமத்துவம்அன்பாகப் பழகுதல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!