கட்டுரை, சட்டம், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

கே.சந்துரு
07 Aug 2022, 5:00 am
5

ந்து முன்னணி நடத்திய, இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா, சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், இந்து முன்னணியின் கலை, இலக்கியப் பிரிவுச் செயலருமான கனல் கண்ணன், “ஸ்ரீ ரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோயிலின் எதிரே, ‘கடவுளே இல்லை’ என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்றைக்கு உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். வெளிப்படையாக ஒரு சிலை உடைப்புக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேச்சு பலரையும் இது அதிரவைத்தது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, “இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் திமுகவினர், அதைக் கருத்து சுதந்திரம் என்கின்றனர். அதே கருத்து சுதந்திரம் கனல் கண்ணனுக்கும் உண்டு. எதிரே, ஈ.வே.ரா. சிலை இருக்க வேண்டுமா என்று அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், ‘வேண்டாம்’ என்றுதான் சொல்வர். பொது இடங்களில் அவரது சிலையை வைத்துக்கொள்ளட்டும் என்றார். அடுத்து, தன் பங்குக்கு ஹெச்.ராஜாவும் கொளுத்திப் போட்டுள்ளார். 

ஸ்ரீரங்கத்தில் இதற்கு முன்னரும் இதே இடத்தில் வைக்கப்பட்ட பெரியார் சிலை 2006ஆம் வருடம் சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. அப்போது பாஜக இவ்வளவு சத்த பலத்துடன் இல்லை. இருப்பினும், அவர்களது சித்தாந்த சீடர்கள்தான் அந்த வேலையைச் செய்திருப்பார்கள் என்பதில் அன்றைக்கு யாருக்கும் சந்தேகம் இல்லை. 

ஸ்ரீரங்கமும் பெரியாரும்

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டதற்கே நீண்ட வரலாறு உண்டு. பெரும் காத்திருப்புக்குப் பின் அமைக்கப்பட்ட சிலை அது.

தமிழகத்தில் இரண்டாவது முறை திமுக கலைஞர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தவுடனேயே ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைப்பதற்காக திராவிடர் கழகம் முயற்சித்தது. 1973இல் ஸ்ரீரங்கம் நகராட்சியின் தலைவராக வெங்கட்ரமண தீட்சிதர் இருந்தார். பெரியாருக்கு சிலை வைப்பது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரையை அவர் தலைமையிலான ஸ்ரீரங்கம் நகராட்சி தீர்மானமாக நிறைவேற்றி பெரியார் சிலை வைப்பதற்கு நகராட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அரசுக்குத் தெரிவித்தது.

இதை அடுத்து மாவட்ட ஆட்சியரும் தனது பரிந்துரையை வழங்கினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் 144 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியது (அரசாணை எண்.162 தேதி 24.1.1973). 1975இல் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடம் திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் 1.2.1976 அன்று திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதனால் தமிழ்நாட்டில் முழுமையாக நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலைமை விலக்கப்பட்ட பிறகும் அதில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட திமுக எதிர்கட்சியாகவே செயல்பட நேர்ந்தது. இடையில் 1996 முதல் 2001 வரை திமுக பதவிக்கு வந்தாலும்கூட இந்தக் கோரிக்கை கிடப்பிலேயே கிடந்தது.

மீண்டும் 2006இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலகட்டத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைக்கப்படுவதற்கான வேளை வந்தது. 24.12.2006 அன்று சிலை திறப்பு விழாவிற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டவுடன் பெரியார் சிலையும் பீடத்தின் மேல் வைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காக மூடிவைக்கப்பட்டிருந்தது. ஆனால், 7.12.2006 அன்று, சமூக விரோதிகள் சிலரால் சிலை உடைக்கப்பட்டது. பெரியார் தொண்டர்கள் அசரவில்லை. திராவிடக் கழகத் தலைவர் வீரமணி 9.12.2006 அன்று தன்னிடம் இருப்பிலிருந்த புதிய சிலை ஒன்றை அதே பீடத்தில் நிறுவச் சொல்ல திட்டமிட்டபடி சிலை திறப்பு விழாவும் நடந்தேறியது.

பெரியார் சிலைக்கு 1973ஆம் வருடமே அரசாணை இருப்பினும் அதை எதிர்த்து வழக்கொன்றை சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்தார் (6.2.2006). ஆனால், அவர்கள் எதிர்பார்த்த இடைக்கால உத்தரவு கிடைக்கவில்லை. எனவே, இந்தத் தகவலை மறைத்து சட்ட விரோதமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வேறொரு வழக்கின் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி செய்யப்பட்டது. ஏற்கனவே மதுரையில் வழக்கு தொடுத்த அதே நபர் மறுபடியும் சென்னையில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே.சந்துரு தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஆஜரான வழக்கறிஞரிடம், “பொதுநல வழக்கில் தாக்கலாக்கப்பட்ட மனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் எங்கிருந்து பெறப்பட்டன?” என்ற கேள்வியை எழுப்பினர். ஏனெனில், மதுரையில் தாக்கல் செய்த வழக்கிலுள்ள ஆவணங்களை ஒளிநகல் எடுத்து சென்னையிலும் தாக்கல் செய்திருந்ததனால் இக்கேள்வி எழுந்தது.

மனுதாரர்களால் இதற்கு உரிய பதிலை அளிக்க முடியவில்லை. அதனால், அவர்களை உயர் நீதிமன்றம் கண்டித்தது. மேலும் திருச்சி மாவட்டம் மதுரைக் கிளையின் அதிகார வரையறைக்குள் வருவதனால் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. அவ்வழக்கு மதுரைக் கிளையில் ஏற்கெனவே அந்த சிவசேனா கட்சி தாக்கல் செய்திருந்த வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.

மதுரையில் அப்போது மூத்த நீதிபதியாக இருந்த தர்மாராவ் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்விரு வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், “பெரியார் சிலையின் பீடத்தில், ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என்ற வாசகத்தினால் இறை நம்பிக்கையாளர்களுக்கு மனது புண்படுகின்றது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; வேண்டுமெனில் அப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் தனியாக வழக்கு தொடர வேண்டுமே ஒழிய பெரியார் சிலை வைப்பதைத் தடுக்க முடியாது” என்று கூறிவிட்டது (19.2.2007).

பன்முகத்தன்மையை ஏற்க வேண்டும்

உயர் நீதிமன்றத்தின் சென்னை அமர்விலும் மதுரை அமர்விலும் அப்போது ஒரே கட்சிக்கு இரு வேறு வழக்குகளைப் போட்டு வாதாடிய வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் (இப்போது அவர் மதுரைக் கிளையில் நீதிபதியாக இருக்கிறார்). 

இதற்கிடையில் பெரியார் சிலை நிறுவப்பட்டதற்கு எதிராக இந்து மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்தையும், மூட நம்பிக்கை ஒழிப்புப் போராட்டம் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் கழகத்தின் போராட்டத்தையும் தடைசெய்யும்படி கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல்செய்தார். அவ்வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெரியார் சிலை இருப்பதனால் மனது புண்படுகிறது என்று தற்பொழுது சொல்லிவரும் அண்ணாமலைகளும், ஹெச்.ராஜாக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தாலும், 15 ஆண்டுகளுக்கு முன்னால் மனதைப் புண்படுத்தும் என்று நம்புபவர்கள் தனியாக வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியும், மறுபடியும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று வன்முறைப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிடுவது எவ்விதத்தில் நியாயம்? அவர்களுக்கு நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கையில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. 

இந்த நேரத்தில் வேறொரு தகவலையும் இங்கே பதிவுசெய்வது அவசியம். கோயில் கோபுரத்துக்கு அருகே உள்ள உணவு விடுதியொன்றில், ‘ஸ்ரீ கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே’ என்று போடப்பட்டிருப்பதை எதிர்த்து பெரியார் திராவிடக் கழகம் நடத்திய போராட்டத்தில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில் மதுரை நகரத்தில், ‘கோனார் மெஸ்’, ‘முதலியார் இட்லி கடை’ என்று இருப்பதைச் சுட்டிக் காட்டியதுடன், தான் மாணவர் பருவத்தில் ‘ரெட்டியார் மெஸ்’ஸில் உணவு அருந்தியதாகவும் பதிவுசெய்தார்.

இப்படி சுவாமிநாதனே கூறிய பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதுதான் அண்ணாமலைகளுக்கு அழகு என்பதைக் கூறவும் வேண்டுமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


4

3

1




பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Tholkappiyan Vembian   2 years ago

'பிராமணாள் கபே' என்று எழுதி வைப்பது ஒரு தெருவில் ஒரு வீட்டுக்காரன் அவ்வீட்டுக் கதவில் 'இது பத்தினியின் வீடு' என்று எழுதி வைப்பதைப் போன்றதாகும் என்று பெரியார் சொல்லியுள்ளார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Tholkappiyan Vembian   2 years ago

'பிராமணாள் கபே'வும் 'கோனார் மெஸ் / முதலியார் இட்லி கடை / ரெட்டியார் மெஸ்' என்பனவும் ஒன்றா? பிராமணாள் என்பது சாதிப் பெயரன்று. அது வருணப் பெயர். சத்திரியன் மெஸ் / வைசியன் இட்லி கடை / சூத்திரன் மெஸ்... என்று இல்லையே. வழக்கில் இதைப் பெரியார் திராவிடர்க் கழகம் சொல்லி வாதாடியதா என்று தெரியவில்லை. ஆனால் நாம் போற்றும் சந்துரு போன்ற நீதிபதியே இதில் தெளிவாக இல்லாமல் இதை எடுத்துக்காட்டிப் பன்முகத்தன்மைக்கு ஆதரவு தேடுவது வருந்தற்குரியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தமிழ்வேள்   2 years ago

நீதிமன்றம் , நீதிபதிகளை ராம்சாமி ஸ்டைலில் திட்டி, நீதிமன்றங்கள் முன்பு சிலை ஒன்றை , கல்வெட்டு ஒன்றை வைத்தால், இந்த முன்னாள் நீதி [!!??] அரசர் ஒப்புக்கொள்வாரா? ராம்சாமி சிலைகளின் வாசகம் ஹிந்து விரோதமான ஒன்று...ராமசாமி சிலைகள் இருக்கும் வரை , இந்த கேவலமான வாசங்கங்களும் இருக்கும் என்பதால் , அவனது சிலையை அகற்ற கோருகிறார்கள்...ராம்சாமி , அவனுடைய பால் ஒழுக்கம், சமூக ஒழுக்கம் அற்ற கும்பலுக்கு வேண்டுமானால் தலைவனாக வணங்கத்தக்கவனாக இருக்கலாம்..ஆனால், பண்பாடுடைய பொது மக்களூக்கு ஹிந்து மக்களுக்கு அல்ல.........அப்படி ராமசாமி சிலைகள் வேண்டும் என்றால், அவற்றை திராவிஷ் இயக்கங்களின் கட்சி கட்டிடம், அவர்க்ளின் வீடுகளுக்குள் வைத்துக்கொள்ளட்டும் ..பொது இடங்களில் அல்ல.....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

Dear Sir, A very informative article! Congrats! But in today's scenario, the statues are becoming irrelevant as one can get thousands of visuals, news-clips, documentaries, photos etc on any political personality anytime anywhere in seconds! So it is high time we come out of this statue- culture! Instead of erecting sky-high statues or "Almighty pen", the concerned parties can erect bus-shelters, libraries, reading rooms, mini-clinics etc to commemorate the memories of beloved leaders! Also political parties need not have to protect anybody if he or she had made some inappropriate remarks inadvertently or ignorantly!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

This reminds me the famous words of Thanthai Periyar that by the time that deprived people come to power, the Courts would be in their hands (Brahmans). This is what is happening today in higher courts.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.ஏ.எஸ்.ஜனநாயக நெருக்கடிபெரியாரின் இறுதியுரைஇலங்கை தேசியம்டர்பன் முருகன்கார்கேபிட்ரோடாபிரதமர்ராஜ்ய சபாகுடியரசுத் தலைவர் தேர்தல்சமஸ் - குமுதம்சமூக தேசியவாத பேரவைமோர்பிவடகிழக்குசமஸ் கி.ரா.பள்ளுஇந்திய தேசியவாதிஃபிளாஸ்ஸிங்வி.ரமணியூரியாஅசாதுதீன் ஒவைசிஇடர்கள்கள்ளக்குறிச்சிபன்னாட்டுத் தேர்வு முறைகள்ஜெயமோகன் அருஞ்சொல் சமஸ்பூக்கள் குலுங்கும் கனவுதமிழ் சைவ மன்னன்குழந்தை பிறப்புசியாமா சாஸ்திரிகள்ஆல்பாஃபோல்ட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!