தலையங்கம் 4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் சட்டமன்ற மறுவரையறைத் திட்டம் ஆபத்தான விளையாட்டு

ஆசிரியர்
27 Dec 2021, 5:00 am
3

ன்னுடைய யதேச்சதிகாரத்தால் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளின் வழியே காஷ்மீர் மக்களிடம் முற்றுமுதலாக நம்பிக்கையை இழந்துவிடுவோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது இந்திய அரசு. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளைத் திருத்தியமைக்கவும், புதிய தொகுதிகளை உருவாக்கவும் அது முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியைத் தருகின்றன. ஆபத்தான விளையாட்டு இது.

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை 2019ல் பறித்து, அதை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டாகப் பிரித்து, இரு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது மோடி அரசு. இந்திய அரசமைப்புச் சட்டமானது, அந்த மாநிலத்துக்கு அதுவரை அளித்துவந்த சிறப்பு அதிகாரமும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு-காஷ்மீர் எல்லைகள் மறுவரையறை ஆணையமானது, 2020 மார்ச் 6ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளே காஷ்மீரின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளையும், மக்களையும் கொந்தளிப்பில் இப்போது தள்ளியிருக்கின்றன. மாநிலத்தின் அரசியல் மையத்தை காஷ்மீரிடமிருந்து ஜம்முவுக்குக் கை மாற்றும்படியானதாக இந்தப் பரிந்துரை அமைந்திருக்கிறது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பொதுவாக, தொகுதிகளை மறுவரையறுப்பது தேசிய அளவில் இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய ஆட்சிக்குள்பட்ட பிரதேசங்களாக மாற்றிய மோடி அரசின் 2019 நடவடிக்கையும் எதிர்க்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது. இத்தகு சூழலில், தொகுதி மறுவரையறையை ஒரு திணிப்பாகவே காஷ்மீரிகள் பார்க்கின்றனர்.

ஜம்மு பிராந்தியத்துக்கு இப்போதுள்ள 37 தொகுதிகளுடன் மேலும் 6 தொகுதிகளைச் சேர்த்து 43 ஆக உயர்த்தவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போதுள்ள 46 தொகுதிகளுடன் மேலும் ஒன்றைச் சேர்த்து 47 ஆக உயர்த்தவும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. மேலும், பட்டியல் இனத்தவர்களுக்கு 7 தொகுதிகளை ஒதுக்குமாறும் பரிந்துரைத்திருக்கிறது. இந்த 7 தொகுதிகள் சம்பா-கதுவா-ஜம்மு-உதம்பூர் பகுதிகளில் அமையக்கூடும். அதேபோல, பழங்குடிகளுக்கு 9 தொகுதிகளை ஒதுக்குமாறும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. இது ரஜௌரி-பூஞ்ச் பிரதேசத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கும். இங்குள்ள பழங்குடிகள் காஷ்மீரி அல்லாத பிற மொழிகளைப் பேசும் முஸ்லிம்கள். எந்தெந்தப் பகுதிகளிலிருந்து புதிய தொகுதிகள் ஏற்படுத்தப்படுகின்றன, பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு எந்த வழிமுறையில் - எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பதையெல்லாம் ஆணையம் இன்னும் தெரிவிக்கவில்லை. இவையெல்லாமும் கூடி பெரும் சந்தேகத்தை காஷ்மீரிகளிடம் உருவாக்கியிருக்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே இந்த மறுவரையறை மேற்கொள்ளப்படுகிறது என்றால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 68.8 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட காஷ்மீரப் பள்ளத்தாக்குக்கு 51 தொகுதிகளும், 53.5 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஜம்முவுக்கு 39 தொகுதிகளும் மட்டுமே கிடைக்க வேண்டும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை நாடு தழுவிய இயக்கமாக இந்திய அரசு முன்னெடுத்திருக்கும் நிலையில், இப்படி மக்கள்தொகை அடிப்படையிலுமேகூட மறுவரையறை நோக்கிச் செல்வது தொடர்பில் விரிவான விவாதம் தேவைப்படுகிறது. ஏனெனில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை முன்னெடுத்த பிராந்தியங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடும் அது.  

காஷ்மீரிலோ மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டும்கூட தொகுதிகள் மறுவரையறுக்கப்படவில்லை என்று தெரிகிறது. போதுமான தகவல்தொடர்பு வசதிகளைப் பெறாதவை, வெகு தொலைவில் இருப்பதால் பொதுவான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாதவை, சர்வதேச எல்லைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் தாக்குதல் ஆபத்தைச் சந்திப்பவை எனும் அடிப்படைகளில் எல்லாம் புதிய தொகுதிகளை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படியான புதிய தொகுதிகள் உள்ளூர்ச் சமூகங்களின் தேவையாகக்கூட இருக்கலாம். அப்படி ஒரு முடிவையும்கூட காஷ்மீர் மக்களுடைய பிரதிநிதிகளே முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

2019 நடவடிக்கைக்குப் பிறகு, காஷ்மீர் மக்கள் மிகுந்த காயப்பட்டிருக்கின்றனர். முந்தைய சூழலை மீண்டும் கொண்டுவருவதே அமைதி நோக்கித் திரும்புவதற்கான வழிமுறையாக இருக்க முடியும் என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்திய அரசோ தொடர்ந்து நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது. இந்த மூர்க்கப் பயணம் நீடித்த அமைதிக்கு ஒருபோதும் வழிவகுக்காது. 2019 நடவடிக்கைக்குப் பிறகு, லடாக் தனி பிராந்தியம் ஆக்கப்பட்டது லடாக்கியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது; இப்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் வாயிலாக பெரும்பான்மை அதிகாரத்தைப் பெறுபவர்களாக உருவெடுக்கும்போது ஜம்முவியர்களும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், காஷ்மீரிகளைக் காலத்துக்குமான கசப்பில் டெல்லி தள்ளியிருக்கும். திரும்பப் பேசவே முடியாத தொலைவுக்கு டெல்லி நகர்ந்திருக்கும். மிக ஆபத்தான ஆட்டம் இது. யதேச்சதிகாரம் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராது!

 

தொடர்புடைய கட்டுரைகள்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
அது சோழர் செங்கோலே இல்லை
நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு: அண்ணா ஃபார்முலா!
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?
மக்களவையில் தமிழகத்தின் இடங்கள் குறைகிறதா?
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது
தமிழ்நாட்டுக்கு வேண்டும் தனி மக்கள்தொகைக் கொள்கை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

6

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Gunasekaran   2 years ago

ஆணையத்தின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்தவர் க்கு போதுமான அதிகாரம் கிடைக்கும், இதன்மூலம் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கும், இரு குடும்பங்களின் அதிகாரம் முடிவுக்கு வரும்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

இத்தனை காலம் லடாக் மற்றும் ஜம்மு பகுதி மக்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரம் ஏன் மறுக்கப்பட்டது என்பது பற்றியும் கட்டுரை பேசி இருக்கலாம்..

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

ஏதேச்சதிகாரத்தை இந்தியா எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதை ஆளும் சக்தி பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது. முதலில், குஜராத்தை இந்துத்துவா லேபரட்டரி எனச் சொன்னார்கள்.. அது வெற்றிகரமாக மேலெடுக்கப்பட்டு, இன்று மத்திய வட மாநிலங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருகிறது என்பதை நாம் நினைவு கூரலாம்

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொருட்சேதம்ஜேம்ஸ் பால்ட்வின்புனித மரியாள் ஆலயம்மன்னார்குடி புரோட்டா அவரவர் முன்னுரிமைஅறநிலைத் துறைஓம் சகோதர்யம் சர்வத்ரகமல்வகுப்பறைஏழு மண்டேலாக்கள்ஜார்கண்ட்மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்ஒற்றுப் பிழைகாவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழிமுல்லை நில மக்கள்பினரயி விஜயன்aruncholஐஸ்லாந்துபாலிவுட்ராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!தமிழ் இலக்கியம்அபூர்வ ரசவாதம்சித்ரா பாலசுப்பிரமணியன்உள்ளத்தைப் பேசுவோம்மத அமைப்புகள்பணிமனைகள்மக்கள் மொழிஆரிய வர்த்தம்சாதி ஆதிக்கம்ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!