பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக உருவெடுக்க விரும்புகிறது திரிணமூல் காங்கிரஸ். அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துவரும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பல்வேறு மாநிலங்களிலும் கட்சியை விஸ்தரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். மம்தாவை காங்கிரஸ் விமர்சிப்பதும், பதிலுக்கு ராகுலை திரிணமூல் காங்கிரஸ் விமர்சிப்பதுமாகக் காட்சிகள் விரிகின்றன. இந்த விவகாரத்தை எப்படிப் பார்ப்பது? சென்ற வாரங்களில் வெவ்வேறு இடங்களில் வெளியான ஐந்து பேருடைய கருத்துகள் இந்த விவாதத்துக்கு மேலும் வண்ணம் சேர்க்கிறது. தமிழ் வாசகர்களுக்காக ‘அருஞ்சொல்’ அவற்றை தொகுத்துத் தருகிறது. வாசகர்கள் இந்த கருத்துகளை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பலாம். ‘இன்னொரு குரல்’ பகுதியில் அது இடம்பெறும்.
பிரசாந்த் கிஷோர், வியூக வகுப்பாளர்:
எதிர்க்கட்சிகளின் தலைமை ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்படட்டும்!
ஆனந்த் சர்மா, காங்கிரஸ் தலைவர்:
இப்போதைய முன்னுரிமை தெளிவானவது, அது பாஜகவை எப்படி வீழ்த்துவது என்பதே ஆகும். பாஜக அல்லாத அரசு அமைவதற்கு காங்கிரஸ் மைய சக்தியாக இருக்கும். பாஜகவை வீழ்த்த காங்கிரஸால் மட்டுமே முடியும் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதேபோல காங்கிரஸ் இல்லாமல் இதைச் செய்ய முடியும் என்றும் எவரும் சொல்ல முடியாது. காங்கிரஸ் இரு பெரும் தேர்தலைகளை அடுத்தடுத்து பறிகொடுத்துவிட்டது என்பது சரிதான். ஆனால், இன்னமும் நாடு தழுவி 20% ஓட்டு வங்கியை அது வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
ரந்தீப் சுரஜ்வாலா, காங்கிரஸ் இளந்தலைவர்:
மம்தா பலமுறை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சென்று வந்திருக்கிறார். அது மட்டுமின்றி, தனது இயல்பான கூட்டாளி என்றும் அவர்களைப் புகழ்ந்திருக்கிறார்; காங்கிரஸுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக மோதியுமிருக்கிறார். மம்தாவின் அரசியல் முடிவுகள் அரசியல் தேவைகளிலிருந்தும், சந்தர்ப்பவியத்திலிருந்தும் எழுலாம். காங்கிரஸ் அப்படி அல்ல. எங்களைப் பொறுத்தவரை, வெறுப்பையும் பிரிவினையையும் பரப்பும் ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்ப்பதானது எதிர்த்துப் போராடுவது நம்பிக்கையின்பாற்பட்ட விஷயம். இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். நீங்கள் மோடியை எதிர்த்துப் போராட விரும்புகிறீர்கள் என்றால், அதன் மைய சக்தியாக காங்கிரஸே இருக்க முடியும்.
அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் இளந்தலைவர்:
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அதன் தடத்தை விரிவுபடுத்தும். திரிணமூல் காங்கிரஸ் ஏழு ஆண்டுகளாக தன்னுடைய வங்க எல்லைக்குள்தான் அமைதியாக அரசியல் செய்துகொண்டிருந்தது. இப்போது ஏன் வெளியேறுகிறோம்? எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் பொறுப்பை செயல்படாத ஒரு சக்தியிடம் இனியும் விட்டுக்கொடுக்க முடியாது. நாங்கள் இப்படி ஏனைய மாநிலங்களுக்குக் கட்சியை விஸ்தரிக்கும்போது, ‘காங்கிரஸை சூறையாடுகிறோம்’ என்று குற்றஞ்சாட்டுவோரை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறேன். வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்த மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்ததே காங்கிரஸ், அப்போது யாராவது அதை நோக்கி இப்படிக் கேட்டீர்களா? பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் வளைத்துக்கொண்டதே அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை யாரேனும் வலியுறுத்தினீர்களா? காங்கிரஸ் எங்கே செயல்படுகிறது? திரிபுராவை எடுத்துக்கொள்ளுங்கள்; அங்கு 5% வாக்குகளைக்கூட அது பெறவில்லை. அங்கு சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய ஓட்டுகள் 1% ஆகக் குறைந்திருக்கிறது. திரிபுராவில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் கட்சியை முடுக்கிவிட்டோம்; 24% வாக்குகளோடு முதன்மை எதிர்க்கட்சியாகி இருக்கிறோம். திரிபுரா, கோவா, மேகாலயாவை அடுத்து, ஹரியானா, உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களை நோக்கி திரிணமூல் காங்கிரஸ் நகரும். மம்தா வங்கத்தின் முதல்வர்; வங்கத்தைத் தாண்டி எடுபட மாட்டார் என்ற பேச்செல்லாம் அபத்தம். 2014 மக்களவைத் தேர்தலில் வெல்வதற்கு முன்புவரை மோடி குஜராத் முதல்வராகவும் தலைவராகவுமே இருந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது. பாஜகவை எதிர்கொள்ள உறுதியாக ஒரு பெண்மணி இருக்கிறார், அவர் முக்கியம் என்றே மம்தாவை மக்கள் பார்க்கிறார்கள். காஷ்மீரா அல்லது கன்னியாகுமரியா, எதைச் சேர்ந்தவர் அவர் என்ற கவலை மக்களுக்கு இல்லை.
சஞ்சய் ராவத், சிவசேனா தலைவர்:
காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி முன்னணி சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சி முன்னணியின் முகமாக முன்னிறுத்தப்படப்போவது யாருடைய முகம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு முன்னணி மட்டுமே இருக்க வேண்டும். இதில் விவாதத்துக்கு இடமே இல்லை.
நவாப் மாலி, தேசியவாத காங்கிரஸ் தலைவர்:
பாஜகவுக்கு எதிரான முன்னணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும்; அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகளும் உள்ளணைக்கப்பட வேண்டும்; ஒதுக்கப்படடக் கூடாது. உண்மையில் நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைவிட இந்தக் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம். இதை மறந்துவிடக் கூடாது.
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.