கட்டுரை 10 நிமிட வாசிப்பு

இந்திய அடிமைப் பணியாகிவிடுமா இந்திய ஆட்சிப் பணி?

ப.சிதம்பரம்
31 Jan 2022, 5:00 am
0

இந்திய ஆட்சிப் பணியைக் குறிக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ என்ற  சுருக்குமான மூன்றெழுத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் காந்தம் போன்றதொரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. சமூக அந்தஸ்து, அதிகாரம், பணி நியமனம் தொடங்கி தொடர்ந்து 32 முதல் 35 ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட உயர் வருமானம், ஆயுள் காலம் முழுவதற்கும் உயர் ஓய்வூதியம், இதரச் சலுகைகள், உரிமைகள், படிகள், மருத்துவக் கவனிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக – எல்லோருக்கும் இல்லையென்றாலும் – பணி செய்த திருப்தி இதில் கிடைக்கின்றன.

இந்தப் பணியைவிட ஓரிரு படிகள் அடுத்த நிலையில் இருப்பது, இந்தியக் காவல் பணியான – ஐ.பி.எஸ். ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இவ்விரு பணிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் 400 பதவியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் படித்த இளைஞர்களும் யுவதிகளும் போட்டி போடுகின்றனர். பூர்வாங்க எழுத்துத் தேர்வு, பிறகு பிரதான எழுத்துத் தேர்வு அதற்குப் பிறகு நேர்காணல் என்று மூன்று கட்டங்களைக் கொண்டது தேர்வு நடைமுறை. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒட்டுமொத்தமாக 49.5%-க்கு மிகாமல்) ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறை காரணமாக, ஆண்டாண்டு காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களின் நெஞ்சில் ‘நாமும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வரவேண்டும்’ என்ற லட்சியம் கனல்விட்டுப் பறக்கிறது.

எஃகு சட்டகம் போன்ற அமைப்பு

பிரிட்டிஷார் ஆண்டபோது எஃகுச் சட்டகம் என்று பெயரெடுத்த ‘ஐ.சி.எஸ்’. ‘ஐ.பி.’ என்ற இரு உயர் பதவிகளின் வாரிசுகளாக வார்க்கப்பட்டவைதான் ‘ஐ.ஏ.எஸ்’., ‘ஐ.பி.எஸ்.’ பதவிகள். இவ்விரு பணிப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் வானத்து நட்சத்திரங்களைப் போல அரசு நிர்வாகத்தில் மின்னி தங்களுடைய திறமை, அர்ப்பணிப்பால் ஒளி வீசுகின்றனர். ஆனால், இப்போது இந்தப் பணிப் பிரிவுகளிலும் பலவிதத் தீமைகள் நுழையத் தொடங்கிவிட்டன என்ற கருத்தும் நிலவுகிறது. அவற்றில் ஒன்று, இந்தப் பணிப் பிரிவில் சேரும் அதிகாரிகளில் சிலர் - அரசியல் அரவணைப்புக்கு ஏங்குகிறவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும், அரசியல் வர்க்கமும் சுய நலனுக்காக அதை வரவேற்கும் நிலையிலேயே இருக்கிறது என்பதும்தான் சமீபகாலத் தீமைகளில் பெரிதாக இருக்கிறது.

எஃகு சட்டகமானது முன்பிருந்ததைப் போல உறுதியாகவும் தூய்மையாகவும் மக்கள் விரும்பும் வகையில் இல்லாமல், இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுப்பது போலவும் சில நேரங்களில் தோற்றம் தருகிறது.

களிப்புடனே மீறப்படும் விதிகள்

இது ஒருபுறமிருக்க, இவ்விரு அனைத்திந்திய சேவைப் பணிகளைக் கட்டுப்படுத்தும் விதிகள் கடைப்பிடிக்கப்படுவதைவிட - மீறப்படுவது அதிகரித்துவருகிறது. மத்திய அரசு ஒருபுறமும் மாநில அரசுகள் எதிர்ப்புறமும் நின்று வாதிடும், சமீபத்திய பணிப் பிரிவு விதிகளில் செய்ய நினைக்கும் உத்தேச மாறுதல் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். ஐ.ஏ.எஸ். பணிப்பிரிவு விதிகளும் ஐ.பி.எஸ். பணிப்பிரிவு விதிகளும்
1954-ல் வகுக்கப்பட்டவை, ஒரே மாதிரியானவை, எப்போதும் நடைமுறையில் மீறப்படாதவை.

விதி எண் ஐந்து, தேர்வுக்குப் பிறகு தேர்வாளர்களை வெவ்வேறு மாநில, மத்திய பணிப்பிரிவுகளுக்கு ஒதுக்குவது தொடர்பானவை. பல ஆண்டுகளாக இது தொடர்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் வெளிப்படையானவை, மாற்ற முடிந்தவை அல்ல. இந்த வழிமுறைகள் காலப்போக்கில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களுக்கு உள்ளாகிவருகின்றன. இந்த மாற்றங்களின் நோக்கம் குறித்து கேள்விகளும் ஐயங்களும் எழும்பினாலும், தேர்வாளர்கள் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிந்தது இல்லை.

விதி ஏழு, ஒரு பணிக்கு நியமிக்கப்படும் அதிகாரி குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து அந்தப் பதவியிலேயே நீடிப்பார் என்ற உறுதிமொழியை அளிக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வரும் ஆளுங்கட்சிகளும் அரசுகளும் இதை அப்படியே கடைப்பிடிக்காமல் அதிகாரிகளை வேறு துறைக்கோ, அதே துறையில் வேறு ஊர்களுக்கோ மாற்றுகின்றன. இந்த மாறுதல்கள் திடீரென்றும், அடிக்கடியும், விளங்கிக்கொள்ள முடியாத வகையிலும் இருப்பது இப்போது வழக்கமாகிவிட்டது.

விதி எட்டு, ஒன்பது ஆகியவை இவ்விரு சேவைகளிலும் பணியணியைச் சேர்ந்த பதவிகளுக்கும் முன்னர் பணியணியைச் சேர்ந்தவையாக இருந்தவற்றுக்கும் வேறு யாரையாவது அதிகாரியாக நியமிப்பது தாற்காலிகமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றன. இந்த விதிகள் இப்போது தொடர்ந்து மீறப்படுகின்றன – அதாவது கிட்டத்தட்ட இந்த விதிகள் நடைமுறையில் ரத்தாகிவிட்ட நிலையிலேயே உள்ளன. இதில் மோசமான விதி மீறல் எதுவென்றால், பணியணி சார்ந்த பதவிகளின் எண்ணிக்கைக்கு இணையாக, பணியணியைச் சேராத பதவிகளும் உருவாக்கப்பட்டு, தங்களுக்கு ஒத்துவராத அதிகாரிகள் என்று கருதுவோரைப் பணியணியைச் சேராத பதவிகளுக்கு நியமித்துவிடும் போக்கு நிலவுகிறது. (உதாரணத்துக்கு - தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் நியமனங்கள்).

தன்னையே சொஸ்தமாக்கிக்கொள்ளும் வைத்தியர்

எஃகுச் சட்டகம் உடைந்துவிட்டது. இன்னும் மோசமான மாற்றங்கள் காத்திருக்கின்றன. ஒன்றிய அரசு சமீபத்தில் உத்தேசித்துள்ள திருத்தங்கள் அமலுக்கு வருமானால் எஃகு சட்டகமே முழுதாக நொறுக்கப்பட்டுவிடலாம். இந்த உத்தேச மாற்றங்களுக்கு பல (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முதல் திருத்தமானது, மத்திய அரசின் பணிப் பிரிவுக்கு அயல்பணி மாறுதல் அடிப்படையில் குறைந்தபட்சம் 40% இடங்களுக்கு அதிகாரிகளை மாநிலங்களின் பணியணியிலிருந்து பெறுவது தொடர்பானது.

கடந்த ஏழு ஆண்டுகளில் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்குச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை 28% என்பதிலிருந்து 12% என்பதாகக் குறைந்துவந்திருக்கிறது. இது உண்மையாகவே ஒரு பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், இதற்கான காரணங்கள் ஆழமானவை. ஒன்றிய அரசின் பணிக்கு அயல்பணி மாறுதல் மூலம் செல்ல மாநிலப் பணிப் பிரிவு அதிகாரிகளிடையே ஒருகாலத்தில் கடும் போட்டி நிலவியது. இப்போதோ அதிகாரிகள் அப்படி அனுப்பப்படுவதை ஏற்கத் தயங்குகின்றனர்; ஏன்?

முதலாவதாக, மோடி அரசின் நிர்வாகக் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட நஞ்சு.

இரண்டாவதாக, பணிச் சூழல், அதிலும் குறிப்பாக தில்லியில் ஓரளவுக்கு வசதியாகக் குடியிருப்பதற்குக்கூட வீடு ஒதுக்கப்படாமல், நீண்ட காலத்துக்குக் காத்திருக்க விடுவது போன்ற மோசமான சூழல்.

மூன்றாவதாக, எல்லா அதிகாரங்களும் பிரதமருடைய அலுவலகத்திலேயே குவிக்கப்பட்டுவிட்டதால் ஒன்றிய அரசின் பல துறைகளும் அமைச்சகங்களும் அதற்கு சார்பு அலுவலகங்களைப் போல, அதன் வழிகாட்டலுக்காகவும் உத்தரவுகளுக்காகவும் அன்றாடம் காத்திருக்கும் போக்கு. ஒன்றிய  நிதியமைச்சகத்தின் வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கான பெரும்பாலான பத்திகளையே பிரதமருடைய அலுவலகம்தான் எழுதுகிறது.

நான்காவதாக, அதிகாரிகள் நியமனத்தில் நிலவும் யதேச்சாதிகாரமான நடைமுறைகள் (2014-ல் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் ஒன்றிய அரசில் பல அதிகாரிகள் அவமானகரமாகப் பந்தாடப்பட்டதை அனைவருமே நினைவில் வைத்துள்ளனர்.)

ஐந்தாவதாக, பதவி உயர்வு, பணிநிலை உயர்வு போன்றவற்றுக்கான தேர்வுக் குழுக்களில் பெயர்களைச் சேர்க்கவும் பதவி உயர்வு வழங்கவும் அரசு எடுத்துக்கொள்ளும் நீண்ட கால அவகாசம்.

ஒன்றிய அரசுப் பணிக்கு அதிக அதிகாரிகள் தாங்களாகவே முன்வர வேண்டும் என்றால், பிரதமர் முதலில் இந்தக் குறைகளையெல்லாம் நீக்க வேண்டும்.

வன்மம் மிக்க உள்நோக்கங்கள்

உத்தேச திருத்தங்களில் முதலாவது திருத்தம், அதிகாரிகள் தேவை என்பதற்காகத்தான் என்று கருதினாலும், இரண்டாவது திருத்தத்துக்கு வன்மம் நிறைந்த உள்நோக்கம் இருப்பது பார்த்தாலே புரிகிறது. ‘குறிப்பிட்ட சூழ்நிலைகளில்’ ஒன்றிய அரசுக்கு இந்த உத்தேச திருத்தம், அதிகாரிகளை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமலேயே எடுத்துக்கொள்ள வகை செய்கிறது. ‘குறிப்பிட்ட சூழ்நிலைகள்’ எதுவாக இருக்கும் என்று நமக்குப் புரிகிறது.

பிரதமரை விமான நிலையத்துக்கு வந்து வரவேற்காத மேற்கு வங்க மாநில தலைமைச் செயலர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக தில்லிக்கு மாற்றப்பட்டதும், பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா  வங்கம் சென்றபோது அவருக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக காவல் துறை அதிகாரிகள் பந்தாடப்பட்டதும் அத்தகைய ‘குறிப்பிட்ட சூழல்கள்’ என்னவாக இருக்க முடியும் என்பதை நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

மாற்று யோசனைகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிப் பிரிவுகளை மோடி அரசு கையாளும் போக்கு தொடர்பான எதிர்மறையான கண்ணோட்டங்களைச் சரி செய்துகொள்வதும், மாற்று வழிகளில் பணியிடங்களுக்கான அதிகாரிகளைப் பெறுவதும் அவசியம். ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப தேர்வாணையம் அதிகரிக்கலாம். மாநிலப் பணிகளின் தேவைகளுக்கும் மிஞ்சிய அதிகாரிகள் இருக்கும்போது, மாநில அரசுகளால் அவர்களைத் தர முடியாது என்று மறுக்க முடியாது.

நேர்காணல் அல்லது பயிற்சிகளின்போதே மத்திய அரசில் சேர்ந்து பணிபுரிய விருப்பமாக உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை நேரடியாகவே ஒன்றிய அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் பிரச்சினையைத் தீர்க்கும். (ஐ.பி.எஸ். பணிப்பிரிவில் இது இப்போதும் நடைமுறையில் இருக்கிறது).

நரேந்திர மோடி தலைமையிலான அரசில் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி முறை’ என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. ‘மோதல் கூட்டாட்சி முறை’ எனும் கட்டத்தில் நாம் நுழைந்துவிட்டோம். மோடி அரசு, தான் விரும்பியதையே சாதிக்கும் நிலை தொடர்ந்தால் ஐ.ஏ.எஸ். (IAS) ‘இந்திய ஆட்சிப் பணி’ என்ற நிலையிலிருந்து ஐ.பி.எஸ். (IBS) ‘இந்திய அடிமைப் பணி’ என்பதாக மாறிவிடும். இப்போதுள்ள மாநிலங்கள், மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாகாணங்களாகிவிடும். ‘அரசுப் பணி’ என்பது ‘அரசு அடிமைப் பணி’ ஆகிவிடும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

1




1

அரசு வேலை பெற அலைமோதும் சீன இளைஞர்கள்எதிர்காலம்நாம் தமிழர்சமஸ் - சேதுராமன்அடுத்த தலைமுறைச் சீர்திருத்தம்இந்தியப் பிரதமர்கள்உயிரியல் பூங்காஓபிசிமதமும் மத வெறியும்சமஸ் - ஜெயமோகன்மலையாளம்இயற்கை வேளாண்மை உழவர்கள் அமைப்புதேசியப் பங்குச் சந்தைஇந்திய ஆட்சிப்பணிரத்தக்குழாய் அடைப்புபற்கள் நிறம் மாறுவது ஏன்?அசல் மாமன்னன் கதைசி.பி.கிருஷ்ணன்ஆட்சி மன்றங்கள் அச்சுறுத்துகின்றனவா?வரும் முன் காக்கஎன்னதான்மா உங்க பிரச்சினை?அரசமைப்புச் சட்டரமண் சிங்200வது பிரிவுமதவியம்ஜெயமோகன் பேச்சு: எது விவாதப் பொருள்?உரம்நாடாளுமன்ற பொதுத் தேர்தல்சந்தாஜொமெட்டோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!