கலாச்சாரம், இன்னொரு குரல், கல்வி 5 நிமிட வாசிப்பு

ஆசிரியர்களும் குற்றவாளிகள்

வாசகர்
10 Jun 2022, 5:00 am
7

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

சமீபத்தில் வெளியான குடிமைப் பணித் தேர்வு முடிவுகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் சரிந்துள்ளது என்பது பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து ‘அருஞ்சொல்’ தளத்தில் மு.ராமநாதன் எழுதிய ‘ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?’ என்ற கட்டுரை வெளியானது. பரவலாக வாசிக்கப்பட்ட அந்தக் கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.

இந்திய ஆட்சிப் பணி குறித்து 2022 ஜூன் 08 அன்று அருஞ்சொல் தளத்தில் கட்டுரையாளர் மு.இராமநாதன் எழுதிய ‘ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?’ கட்டுரை வாசித்தேன். அது மிகவும் வேதனையாக இருந்தது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே பள்ளிக்கல்வியில் நீர்த்த போக்கு இருக்கிறது. அதாவது, மொழிப்பாடங்கள் சரியாக கற்றுக்கொடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். 

ஏனென்றால், பாட நூல்களில் உள்ள கருத்துகளை மட்டும் மதிப்பெண்கள் சார்ந்தும் தேர்வுமுறைகள் சார்ந்தும் விரைவாக கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் ஒருபுறம். மொழிப்பாட ஆசிரியர்கள் எந்த வகையிலும் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளுக்கு அணுக்கமாகப் பழக்கப்படுத்தாதது மறுபுறம். 

பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் செய்தித்தாள்கள் வாங்குவதில்லை. அரசு அதற்காக நிதி ஒதுக்கினாலும் ஆசிரியர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. மிக மிகச் சொற்பமான எண்ணிக்கையில் உள்ள குழந்தைகள் மட்டுமே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆசிரியர் மட்டுமே என்று கூறலாம். 

பொதுவாக அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை பெற்றோர்கள் கவனிப்பைவிட பள்ளிகளின் கவனிப்புதான் அதிகமாக இருக்கிறது. அப்படியான சூழலில் பள்ளிகள்தான், இதை முக்கிய பொறுப்பு எனக் கருதி கையிலெடுக்க வேண்டும்.

எப்போது எதைக் கூறினாலும் ஆசிரியர்கள் எந்த நூலையும் வாசிப்பதில்லை, செய்தித்தாளையும் வாசிப்பதில்லை. தற்காலத்தில் வாட்ஸப் பார்ப்பதே அவர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. பள்ளிகளில் ஆழமான வாசிப்பும் அது சார்ந்த உரையாடல்களும் விவாதங்களும் கிடையாது என்பதை ஓர் ஆசிரியையாக மிக வேதனையோடு பதிவுசெய்கிறேன். ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் முதலில் செய்தித்தாள்கள் வாசிக்கப் பழக வேண்டும்.

ஆனால், வருடாவருடம் பள்ளிகளுக்கு நூலக நிதியில் புத்தகங்கள் வாங்குவதாக கணக்கு காட்டுகின்றனர். அதைப் பயன்படுத்துவதில் 2% கூட தமிழ்நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இல்லை என்பதே யதார்த்தம்.

இதை நாம் கேள்விக்கு உட்படுத்தினாலோ ஆசிரியர்களைக் கேட்டாலோ எங்களிடம் வரக்கூடிய குழந்தைகள் சரி இல்லை, அவர்களது பெற்றோர்கள் சரியில்லை, கல்வித் துறை அதிகமான வேலை கொடுக்கிறார்கள், அதனால், இதையெல்லாம் செய்ய முடியவில்லை எனப் பல்வேறு காரணங்களை அடுக்குவார்கள். இது நியாயமே அற்றது.

குறைந்தபட்சம் அறம் நமக்கு வேண்டும். எல்லா வேலைகளையும் பதிவேடுகளாக ஆவணப்படுத்தும் நம்முடைய அமைப்பானது  பள்ளிக்கல்வியை 10 ஆண்டு காலம் அல்லது 12 ஆண்டு காலம் முடித்துச் செல்லக்கூடிய ஒரு குழந்தைக்கு மொழித் திறனை எந்த அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதில் கல்வித் துறையும் ஆசிரியர்களும் குற்றவாளிகளே. அதிலும் முக்கியமாக அரசுப் பள்ளிகள். ஏனென்றால், தனியார் பள்ளிகளின் போக்கே வேறு விதமானது. அவர்கள் முழுக்க முழுக்க மதிப்பெண்கள் சார்ந்தும் பயிற்சி சார்ந்தும் (கோச்சிங்) மட்டும்தான் இயங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கும் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்புள்ளது. அங்கு உருவாக்கப்படும் குழந்தைகளுக்கும் இதே பிரச்சினைதான். 

மிக முக்கியமாக அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு நாம் பலவற்றையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பாலான வகுப்பறைகளில் வேலைவாய்ப்பு, உலக விஷயங்களைக் குறித்து அறிமுகம் செய்வதே இல்லை. 

மொழிப்பாடம் இங்கு சரியாக கற்றுக்கொடுக்கப்படாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒவ்வோர் ஆசிரியருக்கும்  பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.   

- சு.உமா மகேஸ்வரி, ஆசிரியர்  

தொடர்புடைய கட்டுரை: ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

6


1




பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

Dr. S. Ezhilan   1 year ago

இன்றைய செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகள் மாணவர்கள் படிக்கும் வகையில் உள்ளனவா? மலிவான அரசியலை மையப்படுத்தும் பத்திரிக்கைகளை மாணவர்கள் வாசிப்பதால் ஏற்படும் விளைவுகள் கலலையளிப்பவை. மூன்றாந்தர ரசியல் மற்றும் சமூகச் செய்திகளுக்கு முன்னுரிமை தரும் இதழ்களே அதிகம். மாற்றாக மாணவர்களைக் கொண்டே மாணவர்கள் இதழ்களை வெளியிட முயலலாம். கையெழுத்துப்பிரதியாகவோ கணிப்பொறி தட்டச்சு செய்தோ வெளியிடலாம். E-paper படித்து வரச்செய்து அதுகுறித்து விவாதிக்கச் செய்யலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Dhanaselvan    2 years ago

நஇதர்நிதர்சனமான உண்மை... அரசு பள்ளி படு மோசம் சமூக அக்கறை அற்ற ஆசிரியர்கள் தான் முதல் காரணம்.. மொழி பாடம் சார்ந்த அறிதல் இல்லாததும் ஒரு காரணம் ...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

B   2 years ago

பொத்தாம் பொதுவாக ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பாக்குகிறார் கட்டுரை "ஆசிரியர்". இதில் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் செலவிடும் நேரம், பெற்றோர்களுக்கு இதனை கவனிக்கும் நேரமின்மை என பல சமூக காரணிகளைக் கொண்டிருக்கின்றன. எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அருகிலிருக்கும் "பொது" நூலகங்களுக்கு அழைத்து சென்றிருப்பர்? ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கொடுக்கும் பணிகளையும் வகைப்படுத்த வேண்டும். இது தொடர்பான விவாதங்களையும் அதிகரிக்க வேண்டும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Purusothaman.R   2 years ago

நான் ஒரு முதல் தலைமுறை பாட்டதாரி தற்போது போட்டி தேர்வுக்கு தாயாரகிக் கொண்டு இருக்கிறேன். அருஞ்சொல் இணைய இதழ் தினமும் படித்து வருகிறேன்.ஆசிரியர்களும் குற்றவாளிகள் என்ற காட்டுரை படித்தேன் அதை பற்றி என்னுடைய கருத்து இங்கே பதிவு செய்கிறேன். ஒரு ஆசிரியர் கூட ஒரு பாத்திரிக்கையோ அல்லது ஒரு புத்தகத்தேயோ பாடப் புத்தகத்திற்கு அப்பற்ப்பட்டு எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நான் 11ஆம் வகுப்பில் வணகாவியல் பாடத்தை எடுத்து பயின்றேன் 11 இல் ஆரம்பித்து MBA படித்து முடிக்கரவரை எனக்கு ஒரு ஆசிரியர் கூட பட்ஜெட் முன்னாடி 'Economy Survey' வெளியிடப்படும் அந்த வார்தையே நான் கேள்விபடவே இல்லை அந்த அளவுக்கு நம்முடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இப்படி ஒரு கேள்வி முன் வைக்கலாம் நீ இருக்கறதே ஒழுங்கா படிக்க மாட்ட இதுல இதே படிச்சு கிழித்து விடுவயா! என்று கேட்கலாம் அதற்கு என்னுடைய பதில் எனக்கு இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்தால்தான் நான் அந்த வழியை சென்றடைய முடியும் நான் அந்த புத்தகத்தை படிக்கிறேன் அல்லது படிக்கவில்லை என்பது வேற விஷயம் ஆனால் எனக்கு இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்பது எனக்கு தெரிந்து இருக்க வேண்டும் அது ஆசிரியர்களின் கடமை.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

"""இதில் கல்வித் துறையும் ஆசிரியர்களும் குற்றவாளிகளே. அதிலும் முக்கியமாக அரசுப் பள்ளிகள்"""" எவ்வளவு தடித்த வார்த்தைகள். வன்மையாகவும், வலியுடனும் இவ்வாக்கியங்களுக்கு எனது எதிர்ப்பினை பதிவு செய்கிறேன். ஒரு அறிவியல் பாடப்பிரிவில், மேல்நிலை பள்ளி இறுதி தேர்வுகளில் மொழிப்பாடங்களிலேயே அதிக பாட சராசரி மதிப்பெண்கள் பதிவாகின்றன. வழிபாட்டுக்கூட்டங்களில் செய்திகள் மாணவர்களால் வாசிக்கப்படுவது அனைத்துப் பள்ளிகளிலும் அன்றாட நிகழ்வு. தமிழக அரசால் "புத்தகப்பூங்கொத்து" என்றப் பெயரில் தலைசிறந்த புத்தகங்கள் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு புத்தகங்கள் நாளது வரை வழங்கப்படுகின்றன. நூலகங்கள் உள்ளன. நூலக பாடவேளையும் உண்டு. துறை சரியாகவே செயல்படுகிறது. ஆசிரியர்களாகிய எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் என்ன செய்திகள் கூறி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டினரோ அதே செய்திகள் மாணவர்களுக்கு வகுப்பறையில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவன் வாசிப்பை நோக்கி செல்லாததற்கு "வலை" தளங்களில் அவன் சிக்கிக்கொண்டிருப்பதும் ஒருக்காரணம். அவன் துறை சார்ந்த செய்திகளை youtube இல் தேடுகிறான். நாமோ நூலகங்களுக்கு சென்று நூல்களில் தேடினோம். இணைய தளங்கள் போதுமானத் தகவல்களை குறுகிய நேரத்தில் வழங்கிவிட்டது. தனிப்பட்ட ஆர்வம் என்பது அவனுக்குள்ளான தனிப்பட்டத் தேடலின் வெளிப்பாடு. இரண்டு சதவீதம் மாணவர்களேனும் புத்தகங்களை நோக்கி தங்கள் வாழ்நாளில் சிலகாலம் பயணிக்கத்தான் செய்கின்றனர். வாழ்வாதாரம் மொழி ஆளுமையில் உள்ளது என்பதை உணர்ந்த பெற்றோர் எடுக்கும் தவறான முடிவு ஆங்கில வழி பள்ளிகளின் எழுச்சிக்கு காரணமானது. இறுதியாக எனது கருத்து: அரசு பள்ளி மாணவர்களுக்கும் நூல்களும், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஆசிரியர்களின் அனுபவ பகிர்வுகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. அவனது அன்றைய மிக அவசியமானத் தேவைகளே அவனது செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. இன்னும் சற்று மேல்மட்ட மாணவர்களின் சுயம்வரக்கூடாரத்தில் reels, shorts, videos, tiktok, emoji, share chat என்று ஆயிரம் இணையதள இளவரசர்கள் காத்துக் கொண்டிருக்க இவர்களைத்தாண்டி வெல்லத் துணியும் ஆகச்சிறந்த நூலாசிரியரின் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ....

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

பாட புத்தகங்களை வீட்டிலேயே படிக்கமுடியும். ஆனால் நன்னெறி வகுப்புகள் , விளையாட்டு, குறுக்கெழுத்துப் பாட்டி, Sudoku, Rubik's cube, புதிர்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அறிவு தானாக வளரும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Dhanasekar R   2 years ago

பொதுவாக ஆசிரியர்களை, குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறை சொல்லுதல், குற்றம் சாட்டுவது உலகெங்கும் உள்ள ஒரு நிகழ்வு. இங்கு அது மிக அதிகம். ஒரு வீதி, ஒரு ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் தூட்மைக் காவலர் சிறப்பாக சேவை செய்தால் மட்டும் போதாது. பொது மக்கள், ஆட்சி யாளர், அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் தேவை. அதே போல் தான் மொழித் திறனும். அதுவும் தற்போது உள்ள , மொழிப் பாடங்களில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும், அது மேற்படிப்புக்கு சேர்க்கை செய்யும் போது, கொஞ்சமும் கவனத்தில் கொள்ளப் படாது. எல்லாவற்றையும் விட பெருங் கொடுமை, முழு முதல் காரணம் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை, அனைத்து குழந்தைகளுமே All pass என்பது தான். குறிப்பிட்ட கல்வித் திறன் அடையாத குழந்தைகளை மேல் வகுப்புக்களுக்கு தொடர்ந்து அனுப்புவது என்பது சிறுவர் வன்முறைக் கொடுமை அன்றி வேறில்லை. தவழ முடியாத குழந்தை நடக்க வேண்டும், ஓட வேண்டும், மலையேற வேண்டும், குண்டம் மிதிக்க வேண்டும் என்பது போலத்தான் இதுவும். ?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொதுப் பட்டியல்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்பன்மைக் கலாச்சாரம்பிரபாகரன் மீதான மையல்அரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம்தாய்லாந்துஅசல் அரசமைப்புச் சட்டம்சமூகங்களை அறிவோம்370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்புகா.ராஜன்ஆளுங்கட்சிஅதிமுகவின் அதிகார மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்பிரிட்டன் ராணிசெரிமானமின்மைநம் காலம்கொல்வது மழை அல்ல!மக்கள் மொழிசுதந்திரத்தின் குறியீடு மயிர்மருத்துவர் ஜீவா ஜெயபாரதிசூரியன்மாபெரும் தமிழ்க் கனவு சமஸ்ஆர்.எஸ்.நீலகண்டன்புகலிடமாகிய நுழைவுத் தேர்வுஆசுதோஷ் பரத்வாஜ்அப்துல் மஜீத்: ஆயிரத்தில் ஒருவர்தேர்ந்த அரசியலர்உன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: உறக்கம்மாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிவாக்குச் சீட்டு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!