கட்டுரை, வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

ஆஸ்துமா அவதிகள்!

கு.கணேசன்
27 Nov 2021, 4:00 am
0

லர்ஜியால் ஏற்படுகிற பாதிப்புகளில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடம் உண்டு. மழை, குளிர், பனி போன்ற பருவங்களில்தான் ஆஸ்துமா வரும் என்பது இல்லை. அலர்ஜி இருப்பவர்களுக்குக் கோடை உட்பட எல்லாப் பருவத்திலும் வரலாம். வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 20 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15% பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இன்றைய வாழ்வியல் மாற்றங்களால் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத்தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்பநிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல்  போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.   

இவை தவிர, கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச்சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. அதிலும் முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’  (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

என்ன சிகிச்சை?

‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை. மார்பை எக்ஸ்-ரே, சிடி படம் எடுத்தல், ரத்தப் பரிசோதனை மற்றும் தோல் பரிசோதனை மூலம் அலர்ஜிக்குக் காரணம் தெரிந்து அவற்றைத் தவிர்ப்பதும், தடுப்பு மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இந்த நோயைத் தடுத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்.

இன்றைய நவீன மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, அலர்ஜியைத் தடுக்கத் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்வது, நோய்த்தொற்றைக் குணப்படுத்துவது எனப் பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக, ‘இன்ஹேலர்’ மற்றும் ‘நெபுலைசர்’ சிகிச்சைகள் இப்போது பிரபலம்.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடைந்த பின்புதான் பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனடியாக கட்டுப்படும்.

தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்த நல்ல வழிகள் உள்ளன.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்…. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். தூசு, குப்பை மற்றும் அழுகிய உணவுப் பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கிவைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கப்போடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும் அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

இவர்கள் கம்பிளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகமாகலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை எடுத்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால் முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் துண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக்கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு தருபவை.

பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும், வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.             

உணவில் கவனம்!

எந்த உணவினால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது. ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவுகள் இவை: பால், தயிர், முட்டை மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர் பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள். இன்னும் முக்கியமாகச் சொன்னால், ஆஸ்துமா உள்ளவர்கள் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அவசியம் குறைத்துக்கொள்ள வேண்டும்.

எதையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. எளிதாக செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

புகை – பெரிய பகை!

ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவைத் தூண்டுகிற காரணி.

மூச்சுப்பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.

(தொடர்வோம்)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மகிழ் ஆதன்ப்ரிமேசனரிகாந்தி செய்த மாயம் என்ன?இந்துசீனிவாச ராமாநுஜம் கட்டுரை‘இலவசங்கள்’ நல்ல பொருளாதாரக் கொள்கைகளா?புலம்பெயர்வின் சவால்கள்வைக்கம் நூற்றாண்டுஆறு காரணங்கள்வங்கி ஊழியர்கள்நாடாளுமன்றத் தேர்தல் 2024kelvi neengal pathil samasகாதல் - செக்ஸ்‘லட்சிய’ப் பார்ப்பனர்பி.எஸ்.கிருஷ்ணன்மிஸோரம்: தேசம் பேச வேண்டிய விவகாரம்வீடு கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ.அண்ணா ஹசாரேஜெயமோகன் உரையாடு உலகாளு பேட்டிடெல்லி முதல்வர்திரைசெய்தியாசிரியர்உரத் தடையால் தோல்விஜெய் ஷாகாடுகள்லால்தெங்காபாதிப்புதாய்லாந்துஉமர் அப்துல்லா ஸ்டாலின்விவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!