கட்டுரை 7 நிமிட வாசிப்பு

உபி களத்தில் மாயாவதி எங்கே?

ஆசாத் ரிஸ்வி
28 Dec 2021, 5:00 am
1

த்தர பிரேதச மாநிலத் தேர்தல் சூடுபிடித்து பறக்கிறது. இதில் போட்டியிடும் உற்சாகமே இல்லாததைப் போல இருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி). தலித்துகளையும் முஸ்லிம்களையும் பிராமணர்களையும் ஒன்று சேர்த்து 2007-ல் சமூக நல்லிணக்கக் கூட்டணி அமைத்து, அரசியல் எதிரிகளை வாயடைக்கச் செய்த ஆற்றல் மிக்க மாயாவதி இப்போது 2021- முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், 2022 பொதுத் தேர்தலுக்குத் தயாரானதைப் போலவே தெரியவில்லை.

மாயாவதி கட்சியில் ஓடியாடி வேலைசெய்த தளகர்த்தர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அவரைவிட்டு விலகி சமாஜ்வாதி கட்சிக்கும், காங்கிரஸுக்கும்  சென்றுவிட்டனர். கட்சித் தலைவர் மாயாவதியைப் பொதுக் கூட்டங்களில் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. ட்விட்டரில்தான் அவர் கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

பிராமணர்களை நாடி!

மாநில மக்கள்தொகையில் 11% இருக்கும் பிராமணர்களின் ஆதரவைத் திரட்ட ‘பிரபுத்த சமாஜ் கோஷ்டி’ என்ற பெயரில் அயோத்தியில் முதல் மாநாட்டை நடத்தினார் மாயாவதி. விழிப்புணர்வு பெற்றவர்களின் மாநாடு என்று அதற்குப் பொருள். அந்தக் கூட்டத்தில், வந்தவர்களின் பின்புலத்துக்கு ஏற்ப, ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்கள்கூட ஒலித்தன. ஆனால், மிகப் பெரிய எழுச்சியோ, இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. 

தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் 1984-ல் கான்ஷிராம் தொடங்கிய இந்த இயக்கம் உத்தர பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. அரசியலில் முக்கியமான சக்தியாக உருவெடுத்தது. மாநில மக்களில் 22% இருக்கும் தலித்துகளும் 11% இருக்கும் பிராமணர்களும் இணைந்தாலே மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா. ஆனால் இப்படி பகுஜன் சமாஜ் கூட்டத்தில், 'ஜெய் ஸ்ரீராம்!' முழக்கம் கேட்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச முஸ்லிம்களும் அகிலேஷ் யாதவிடமோ காங்கிரஸின் பிரியங்காவிடமோ சென்றுவிடுவார்கள் என்று கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாம் ரக இந்துத்துவாவால் பெயர்தான் கெடுமே தவிர ஆதரவு பெருகாது என்று அனுபவத்திலிருந்து பேசுகிறார்கள்.

நசிமுதீன் வெளியேற்றம்

பகுஜன் சமாஜ் கட்சியின் முஸ்லிம் முகமாக அறியப்பட்டவர் நசிமுதீன் சித்திக். அவர் 2018 பிப்ரவரியில் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். அவரைக் கட்சியிலிருந்து மாயாவதி நீக்கியதால் அவர் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்தார். நரேந்திர மோடி தேசிய அரசியலுக்கு வந்தவுடன் பிராமணர்கள் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தரத் தொடங்கினர். 11% பிராமணர்களுடைய வாக்குகளுக்காக 20% முஸ்லிம்களுடைய வாக்குகளைத் தியாகம் செய்துவிட்டார் மாயாவதி என்று சரத் பிரதான் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முஸ்லிம்களுடைய ஆதரவு இல்லாமல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாது என்கின்றனர்.

கான் குற்றச்சாட்டு

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் ஊடகத் தொடர்பாளர் எம்.எச். கான், அகிலேஷை முஸ்லிம்களின் பாதுகாவலராக ஏற்க மறுக்கிறார். 2013-ல் அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முசாஃபர் நகரில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டது. ஏராளமான முஸ்லிம்கள் தங்களுடைய உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர். அவர்களை முகாம்களில் தங்கவைத்து உணவளித்து பாதுகாத்தது மாயாவதியின் பகுஜன் சமாஜ் மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டுகிறார் (அந்த மோதல் ஜாட் சமூகத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்தது).

தலித்துகள் ஆதரவு

பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும் உத்தரப் பிரதேச தலித்துகள் வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதில் கட்சி உறுதியாக இருக்கிறது. மாநிலத்திலுள்ள 86 தனித் தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கோடு லக்னௌ நகரில் ஆய்வுக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார் மாயாவதி. வெற்றிக்காக முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் மாயாவதி என்று கட்சியின் இளம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

2007 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் இந்த 86 தொகுதிகளில் 63 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது பகுஜன் சமாஜ். அப்போது பாஜகவுக்கு வெறும் 7 தனித் தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பிராமணர்கள், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றார் மாயாவதி.

2007-ல் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 206-ஐக் கைப்பற்றிய பகுஜன் சமாஜ். பதிவான மொத்த வாக்குகளில் 30%  பெற்றது. அக்கட்சி நிறுத்திய 86 பிராமண வேட்பாளர்களில் 40 பேர் வென்றனர். 61 முஸ்லிம் வேட்பாளர்களில் 29 பேர் வென்றனர்.

நிலைமை தலைகீழ்!

2017-ல் நிலைமை மாறிவிட்டது. 86 தனித் தொகுதிகளில் 67 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சியால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. மாயாவதி பல மூத்த சகாக்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதாலும், மேலும் பலர் அதிருப்தியால் வெளியேறியதாலும் அனுபவம் வாய்ந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள் கட்சியில் அருகிவிட்டனர். இந்தர்ஜீத் சரோஜ், திரிபுவன் தத், மிட்டாய்லால் பாரதி, ஆர்.எஸ்.குஷ்வாஹா, பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த லால்ஜி வர்மா, மாநிலத் தலைவராக இருந்த ராம் அச்சால் ராஜ்பர் போன்றோர் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிக்குச் சென்றுவிட்டனர்.

மூழ்கும் கப்பல் பிஎஸ்பி

மாயாவதிக்கு எதிராகத் திரும்பிய கட்சி எம்எல்ஏ அஸ்லம் ரெய்னி, பகுஜன் சமாஜ் இப்போது மூழ்கும் கப்பல் என்று வர்ணித்தார். கட்சி நிர்வாகத்தை பிராமணரான சதீஷ் சந்திர மிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார், அவர் கட்சியை நாசமாக்கிக்கொண்டிருக்கிறார் என்று கண்டித்தார்.

மாயாவதி இப்போது கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்களைச் சந்திப்பதே கிடையாது. தலைவரையே சந்திக்காமல் நான் எப்படி கட்சிக்காக வேலைசெய்ய முடியும் என்று கேட்கிறார் பிரதீப் சிங். இவரும் அகிலேஷுடன் சேர்ந்துவிட்டார்.

மாயாவதி சுணக்கம் ஏன்?

மாயாவதி ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை மத்தியப் புலனாய்வு அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து விசாரித்து தகவல்களைத் திரட்டிவைத்துள்ளன. இந்தக் காரணத்தால் பாஜகவைக் கடுமையாக விமர்சிக்காமல் தவிர்க்கிறார் மாயாவதி என்கிறார் ராம் தத் திரிபாடி என்கிற மூத்த பத்திரிகையாளர்.

பாஜகவைத் தோற்கடிக்க தலித்துகளுக்கு வேறு வழியில்லை, இந்த முறை அகிலேஷைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தலித்துகள் கருதுகின்றனர். சந்திரசேகர் ஆசாத்தின்  ஆசாத் சமாஜ் கட்சியும் தலித்துகள் மத்தியில் இப்போது செல்வாக்கு பெற்றுவருகிறது.

காங்கிரஸின்  பிரியங்கா இம்முறை உத்தர பிரதேசத்தில் தீவிரமாகச் சுழன்றுப் பணியாற்றுகிறார். கட்சி தனித்தே போட்டியிடும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஹத்ராஸில் தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமையைக் கண்டித்து அரசின் தடைகளையும் மீறி பிரியங்காவும் ராகுலும் அங்கு சென்றதால் தலித்துகள் ஆதரவு காங்கிரஸ் பக்கம் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

எல்லோருக்கும் வளர்ச்சி, எல்லோருக்கும் மகிழ்ச்சி என்ற நோக்கத்தில் பகுஜன் சமாஜ் செயல்படுவதால் எங்களுக்கு ஆதரவு குறையாது, எங்களுடைய வெற்றி அதிகரிக்கும் என்கிறார் சுரீந்திர படோரியா என்ற பகுஜன் சமாஜ் தலைவர். மாயாவதி ஓய்ந்து உட்கார்ந்துவிடவில்லை. போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் இறுதி செய்துகொண்டிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்குவார் என்கிறார். கட்சியிலிருந்து பல தலைவர்கள் போய்விட்டார்களே என்று கேட்டபோது, கட்சிக்கு ஆதரவைத் திரட்டக்கூடிய ஒரே தலைவர் மாயாவதிதான், கட்சி தொண்டர்களைத்தான் நம்பியிருக்கிறது மற்ற தலைவர்களை அல்ல என்று பதில் அளித்தார்.  

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் இதர மூன்றுடன் கூட்டணி அமைக்காமல் பிற மாநிலக் கட்சிகளுடன் கூட்டு வைத்துப்போட்டியிடப் போகின்றன. குறைந்தபட்சம் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்று தோன்றுகிறது.

© தி வயர், www.thewire.in

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   4 years ago

katchi "AA LINGKANAM" sayyap pattu vittadhu

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நெடில்ரயில்விஷமம்இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்மது அருந்துவோர்மக்கள் பணிஅறிஞர்கள் குழு அல்லமுதிர்ச்சிகோர் லோடிங்கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விபெண்களுக்கான பிரதிநிதித்துவம் சமூகநீதியோடு அமைட்டுவகுப்பறைக்குள் வகுப்புவாதம்திமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?மாமியார் மருமகள்தொழிற்சங்கங்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியிடைநீக்கம்மிகை ஈடுபாடுநல்வாழ்வு வாரியப் பதிவுஅருஞ்சொல் பேரறிவாளன் அற்புதம் அம்மாள்ஐஏஎஸ்சாட்சியச் சட்டம்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்தலைமைச் செயல் அதிகாரி மக்கள்நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்சர்வதேச மொழிசுயமரியாதைஉரம்ரிஷா சித்லாங்கியா கட்டுரைஆசிரியர்கள் நியமனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!