கட்டுரை, கலாச்சாரம், வரலாறு 5 நிமிட வாசிப்பு
ஆரிய வர்த்தம்: உத்தர பிரதேசத்தின் பெயர் வரலாறு
இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு மாநிலம் என்ற நிலையை உத்தர பிரதேசம் இன்றைக்கு அடைந்திருக்கிறது. இந்தியாவின் பிரதமரையும், அரசியல் போக்கையும் தீர்மானிக்க வல்ல மாநிலம்; இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தைவிடவும் அரசியல் செல்வாக்கும், அதிகாரமும் அதிகம் பெற்றிருக்கும் மாநிலம் என்ற இடத்தில் எப்போதுமே உத்தர பிரதேசம் இருந்தாலும், இப்போது இதுகுறித்து விழிப்புணர்வும் ஆர்வமும் எல்லா மாநில மக்களிடமும் அதிகமாகி இருக்கிறது.
சமகால உத்தர பிரதேச அரசியலைப் புரிந்துகொள்ள அங்குள்ள சூழலை அறிந்துகொள்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு அதன் வரலாற்றைப் புரிந்துகொள்வதும் அவசியம். உத்தர பிரதேசத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதற்கே ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றை அறிந்துகொண்டால், உத்தர பிரதேசத்தின் குணாம்சத்தையும் புரிந்துகொள்ளலாம்!
உத்தர் என்றால் வடக்கு. எனவே வடக்கிலிருக்கும் பிரதேசம் என்று இதற்கு இந்தப் பெயரைச் சூட்டினார்கள் எனக் கருதுவோர் உண்டு. நந்தனார் திரைப்படத்தில் ‘தில்லையம்பலம் என்றொரு தலமும் இருக்கிறதாம் அங்கு சென்ற பேர்க்கு ஜனன மரணப் பிணியை அறுக்குதாம்’ என்ற பாட்டில், ‘போய் வர உத்தாரம் தாருமே’ என்று ஆண்டையிடம் நந்தன் கேட்பதைத் திரைப்படப் பாடல் காட்சிகளில் பார்த்திருப்போம். ஆக, ‘உத்தர்’ என்றால் பதில் என்றொரு பொருளும் உண்டு.
பிரிட்டிஷார் இந்த பிராந்தியத்துக்கு ‘ஐக்கிய மாகாணம்’ (யுனைட்டெட் பிராவின்ஸ்) எனப் பெயரிட்டார்கள். முன்னதாக, 1902 முதல், ‘ஆக்ரா - அயோத்தி ஆகியவற்றின் ஐக்கிய மாகாணம்’ என்ற பெயரிலேயே பிரிட்டிஷார் அழைத்தனர். 1937 வாக்கில் ‘ஆக்ரா - அயோத்தி’ சொற்களை நீக்கிவிட்டு சுருக்கமாக ‘ஐக்கிய மாகாணம்’ என்று அழைக்கலாயினர். அதுவே நாடு சுதந்திரம் அடையும் வரை நீடித்தது.
புதிய பெயர் தேடல்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மாநிலத்துக்குப் புதிய பெயரைச் சூட்ட இந்திய அரசு விரும்பியது. அந்தப் பகுதியின் வரலாறு, கலாச்சாரம், மொழி அல்லது புராண அடையாளம் என்று எதையாவது சுட்டும் வகையில் பெயர் இருந்தால் நல்லது என்று நினைத்தனர். 1947 தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குத் தீவிரமான விவாதம் நடந்தது, இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன; கடைசியாக உள்ளூர்க்காரர்களின் பரிசீலனைப் பட்டியலிலேயே இல்லாத பெயரே டில்லியால் சூட்டப்பட்டது.
புதிய சூழலுக்கு ஏற்ப பொருத்தமான பெயரை நம்முடைய மாநிலத்துக்குச் சூட்ட வேண்டும் என்று முதலில் அறைகூவல் விடுத்தவர் காங்கிரஸ் உறுப்பினர் சந்திர பால். அவர் முன்மொழிந்து சட்டமன்றத்தில் 1947 செப்டம்பர் 11இல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. புதிய பெயரை வைக்க வேண்டும் என்பதை அவையில் அனைவருமே ஏற்றுக்கொண்டாலும், எந்தப் பெயரை வைக்க வேண்டும் என்பதில் கருத்து மாறுபட்டனர். ‘புதிய மாநிலத்துக்கு அயோத்தி என்றே பெயரிடலாம் என்றார் சந்திர பால். ‘அந்தப் பெயர் பிராஜ், காசிவாசிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது’ என்றார் அன்றைய கல்வி அமைச்சர் சம்பூர்ணானந்த். அப்படியென்றால், இந்தப் பெயர்களை யோசிக்கலாம் என்று சந்திர பால் முன்மொழிந்த மூன்று பெயர்கள் பலரது மனதையும் தொட்டன. அந்தப் பெயர்கள்: ஆரிய வர்த்தம், இந்துஸ்தான், ஹிந்த்!
காலனி ஆதிக்கப் பெயரா இது?
காங்கிரஸ் உறுப்பினர் ராமசந்திர குப்தா ‘ஐக்கிய மாகாணம் என்ற பெயரைக் கேட்கவே சகிக்கவில்லை’ என்றார். ‘இது காலனி ஆட்சியின் அடையாளம் இதைத் தூக்கி எறிய வேண்டும்’ என்று பல உறுப்பினர்கள் அடுத்தடுத்துப் பேசினர். பிறகு ‘ஆரிய வர்த்தம்’ என்ற பெயருக்கு ஆதரவு பெருகியது. ‘ஆரியர்கள் இங்கே வந்தபோது இந்த பிரதேசத்தை ஆரிய வர்த்தம் என்றே அவர்கள் அழைத்தனர். இதுதான் அசலான பெயர். ஆரியர்கள் இங்கு வந்து குடியேறி இங்கேயே வாழ்ந்தனர். வேதங்களையும் சத்திய தரிசனங்களையும் அவர்கள் இங்குதான் இயற்றினர், மெய்யியலின் வளர்ச்சியும் இங்குதான் நடந்திருக்கிறது’ என்றார் உறுப்பினர் பண்ட்ரி தத் பாண்டே.
உறுப்பினர் ஷேக் மசூத்-உல்-ஸமான், ‘ஆரிய வர்த்தம் எனும் பெயரைச் சிறுபான்மையினரால் ஏற்கவே முடியாது!’ என்றார். ‘இந்தப் பகுதிக்கு ஆரிய வர்த்தம் எனப் பெயரிட்டால் நாம் அனைவரும் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களாகிவிடுவோமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது கருத்தையும் பலர் பிரதிபலித்தனர்.
முஸ்லிம் லீக் உறுப்பினர் அப்துல் ஹமீத், ‘ஐக்கிய மாகாணம் எனும் பெயரே அழகாக இருக்கிறது, பெயரிலேயே ஐக்கியம் வெளிப்படுகிறது!’ என்றார். ‘ஆரிய வர்த்தம் எனும் பெயர்தான் சரி!’ என ராதே ராம், ராம் நாராயண் கர்க் என்பவர்கள் அவருக்குப் பதில் அளித்தனர். ‘இந்தப் பிரதேசத்தை இந்துஸ்தான் என்று அழைப்பது தவறானது. தேசத்துக்கே அந்தப் பெயர் இருக்கும்போது அதன் ஒருபகுதியையும் அப்படி அழைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்!’ என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஹஃபீஸ் முகம்மது இப்ராஹிம் குறுக்கிட்டார்.
நேரம் செல்லச் செல்ல வார்த்தைகள் தடித்தன.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆரிய வர்த்தம் என்பதையே ஆதரித்தாலும், அவையின் சிறுபான்மை உறுப்பினர்கள் அதை எதிர்ப்பதால் நிதி அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ண தத் பலிவால் எழுந்து, ‘உடனடியாகப் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி பெயரை வைப்பது அவசரப்பட்டு எடுத்த முடிவாகிவிடும், கோவிந்த வல்லப பந்த் தலைமையிலான மாநில அமைச்சரவை இதற்குத் தீர்வு காணட்டும்!’ என்றார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று அவையில் பதற்றத்தைத் தணிக்க முற்பட்டனர். உடனடியாக இதை முடிவு செய்ய வேண்டாம், மேலும் ஆலோசிப்போம் எனப் பலரும் கூறினர். ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும், ஒரு மாதத்துக்குள் பெயரை அது பரிந்துரைக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அனைவரும் வந்தனர். ஆனாலும், விஷயம் முடிந்த பாடில்லை.
அரசமைப்புச் சட்டச் சூழல் உருவாக்கிய அவசரம்
இந்த விவாதம் பொதுவெளியை எட்டியதும் ஆங்காங்கே இதுபற்றி ரசமான உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் பெருகின. அப்போது அதிகம் பரிசீலிக்கப்பட்ட பெயர்களும் இப்படித்தான் இருந்தன: ஆரிய வர்த்தம், ஆரிய வர்த்த பிரதேசம், அயோத்தி, பரத கண்டம், பிரிஜ் கௌசல், பிரிஜ் கோசல், பிரம்ம வர்த்தம், பிராந்த் பாகீரத் பிரதேஷ், நைமிசாரண்ய பிரதேஷ், நவ ஹிந்து, ராம கிருஷ்ண பிராந்த், ராம கிருஷ்ண பிரதேஷ், இமாலயப் பிரதேஷ், உத்தராகண்ட் எனப் பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டப்பேரவை புது தில்லியில் இறுதி வரைவு வாசகங்களை இறுதி செய்யத் தொடங்கிவிட்டதால் புதிய மாநிலங்களுக்கான பெயர்களையும் முடிவுசெய்ய வேண்டிய அவசரம் ஏற்பட்டது. அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெற்றிருந்த உத்தர பிரதேச உறுப்பினர்கள் அங்கே இந்த விவாதத்தை மீண்டும் தொடங்கினர்.
இந்த விவாதத்தை இங்கே தொடர முடியாது, இது அரசைப்புச் சட்டத்தை இறுதி செய்யும் பணியை மேலும் தாமதப்படுத்திவிடும் என்று அந்தப் பேரவையின் தலைவராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் அனுமதி மறுத்தார். அந்தந்த மாநிலங்களின் பெயர்களை அந்தந்த மாநிலங்களுக்குரிய சட்டமன்றங்கள் தீர்மானித்து இறுதி செய்யட்டும், நாம் அவற்றை ஏற்று அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வோம் என்று அவர் யோசனை தெரிவித்தார். அது ஏற்கப்பட்டது.
இதையடுத்து விவாதம் மீண்டும் ஐக்கிய மாகாண சட்ட மன்றத்துக்கே திரும்பியது. கல்வி அமைச்சர் சம்பூர்ணானந்த் யோசனையின்பேரில் மாநில அமைச்சரவை 1949 நவம்பர் முதல் தேதி இதை ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டது. அமைச்சரவையிலேயே பெரும்பாலானவர்கள் ‘ஆரிய வர்த்தம்’ என்ற பெயரையே ஆதரித்தனர். மாநில பிரதேச காங்கிரஸ் கமிட்டியும் இதில் கருத்து தெரிவித்த பிறகு முடிவெடுக்கலாம் என அமைச்சரவை முடிவைத் தள்ளி வைத்தது. காசி மாநகரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விவாதம் நடந்தது.
விவாதத்தில் பங்கேற்ற 106 பேரில் பெரும்பாலானவர்கள் ஆரிய வர்த்தம் என்ற பெயரையே ஆதரித்தனர். மார்க்கண்டேய சிங் என்பவர் ‘ஹிந்த்’ எனப் பெயர் சூட்டலாம் என்றார். அதை 22 பேர் ஆதரித்தனர். இந்த முடிவுகளை பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் 1949 நவம்பர் 15இல் தெரிவித்தார். ஆனால், அந்தப் பெயரைச் சூட்டும் முடிவு அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. காங்கிரஸின் மத்திய தலைமை உடனே தலையிட்டு புதிய பெயர் யோசனையைக் கைவிட்டது. ஆரிய வர்த்தம் எனும் பெயருக்கு மாநில அரசிலும் உத்தர பிரதேச காங்கிரஸிலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர் எனும் கருத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை புறக்கணித்தது. நேருதான் தடுத்து நிறுத்தியிருப்பார் என்பதை விவரிக்கவும் வேண்டுமா!
ஐக்கிய மாகாணத்துக்கு ஆரிய வர்த்தம் எனப் பெயர் சூட்டுவது ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது என்று பேரார் பிரதேச பிரதிநிதி ஆர்.கே.சித்வா, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் கண்டித்தார். அதேபோல, ‘ஹிந்துஸ்தானம்’ என்றால் அது நாடு முழுவதையும் குறிக்கும். இருந்தாலும் நாங்கள்தான் ஹிந்துஸ்தானம் என்கிற கர்வத்தில் ஐக்கிய மாகாணத்தார் இந்தப் பெயரைச் சூட்டிக்கொள்ள விரும்புகின்றனர் என்றும் அவர் சாடினார்.
இந்தச் சூழலில், ‘மாநில அரசுகள் தங்களுக்கென்று புதிய பெயர்களைப் பரிந்துரைத்தாலும் கவர்னர் ஜெனரலுக்கு அவற்றை மாற்ற உரிமை உண்டு!’ என்கிற தீர்மானத்தை அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் சட்ட அமைச்சர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் கொண்டுவந்தார். அது நிறைவேற்றப்பட்டது. ஆரியவர்த்தம், ஹிந்துஸ்தானம் என்ற பெயர்களை மீண்டும் பரிந்துரைக்க மாட்டோம்; நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர் இந்தப் பெயரை ஏற்கவில்லை என்பதால் ஆரியவர்த்தம் என்ற பெயர் கைவிடப்படுவதாக ஐக்கிய மாகாண முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த் 1949 நவம்பர் 17இல் அறிவித்தார்.
சமரசப் பெயர்
இதற்குப் பிறகு அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த உத்தர பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் தனியாகக் கூடினர். சமரச ஏற்பாடாக, உத்தர பிரதேசம் என்ற பெயர் ஏற்கப்பட்டது.
இதற்கு உத்தர பிரதேச வரலாற்றாய்வாளர் ஞானேஷ் குடைஸ்யா ஒரு விளக்கம் தருகிறார், ‘காலங்காலமாக மக்களால் கேட்கப்படும் விரக்தியான கேள்விகளுக்கு ‘பதில்’ அளிக்கும் வல்லமையுள்ள மாநிலம் என்பதால் இந்தப் பெயர் சமரசப் பெயராக ஏற்கப்பட்டது!’ என்பதே அது. உத்தர பிரதேசத்தினரால், ஒன்று தங்களை ஒட்டுமொத்த இந்தியாவாகவும் கருத முடியும் அல்லது மதம் சார்ந்த அடையாளத்தோடு பொருத்திக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஓர் உதாரண என்கிறார் ஆய்வாளர் பிரேர்ணா சிங். சரிதான், பெயர் தேர்வு என்பது வெறும் பெயரை மட்டும் குறிப்பதில்லையே!

4

1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.