கட்டுரை, வாழ்வியல், இரு உலகங்கள் 9 நிமிட வாசிப்பு

பெண்களுக்கான மெகா காம்போ இல்லை ஆண்கள்

அராத்து
27 Nov 2021, 5:00 am
16

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். 

 

காதல், திருமணம், லிவ் இன் ரிலேஷன்ஷிப், செக்ஸ் பட்டீஸ், ஒன் நைட் ஸ்டேண்ட்... உலக அளவில் அனைவருக்கும் பரிச்சயமான சில உறவுமுறைகள் இவை. தவிர நிறைய உறவுமுறைகளும், அவற்றுக்கான நடைமுறைகளும் இருக்கின்றன.

மேலே சொன்ன ஏதேனும் ஓர் உறவுமுறைக்குள் நுழையும் ஒவ்வொரு ஜோடியும் அவர்களுக்குள் தனித்துவமான சமன்பாடுகளைக் கொண்டுள்ளனர். அப்படிப் பார்த்தால் உலக அளவில் கோடிக்கணக்கான ஆண் - பெண் உறவு வரையறைகள் இருக்கக்கூடும். ஆனால் ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் முன்வைக்கும் பொதுவான புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் தொகுத்துப்பாருங்கள். எல்லாம் ஒரே மாதிரியான குரல்களாக இருக்கும்!

என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை

“என்னப் புரிஞ்சி நடந்துக்க மாட்டேங்கிறான்!”

“எனக்குன்னு ஒரு மனசு இருக்கு!”

“நான் எப்டி ஓப்பனா சொல்வேன், அவன்தான் புரிஞ்சி நடந்துக்கணும்!”

ஆண்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? “என்னால முடியலைடா!”

சரிதானே!

பெண்ணையும் பெண் மனதையுமாவது ஆண்கள் புரிந்துகொள்ள முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்கள் தரப்பில் அப்படியான மயிரிழை அளவுக்கான முயற்சிகள்கூட நடந்ததாக இந்தப் புகார்களைக் கேட்கும் எனக்குத் தோன்றியதில்லை.

அவன் எப்படி உண்மை பேசுவான்?

ஆணையும் ஒரு சக உயிராக மதித்து, அவனுக்கு என்ன பிடிக்கும், அவன் எந்த மாதிரியான சூழ்நிலையை விரும்புகிறான், அவனுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் சிறு ஆர்வமும் பெண்களிடையே இல்லை. எப்போதேனும் அவனைத் தூண்டிவிட்டு, பேசவைத்து, அவனும் ஏமாந்துபோய் லேசாக சொல்லும் ஓரிரு விஷயங்களையும் சேமித்து வைத்துக்கொண்டு, தருணம் பார்த்து அவன் சொன்னவற்றையே அவனுக்கு எதிராகப் பயன்படுத்தி அவனை நிலைகுலையவைக்கும் போக்கைச் சொல்லிக் குமையாத நண்பர்கள் இல்லை.

இப்படி ஆரம்பத்திலேயே அவன் மனதைக் காட்டடி அடித்து மூடிவிட்டால், அவன் எப்படி அதன் பிறகு மனம் திறந்து பேசுவான்?

“எங்களப் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க” என்று பெண்கள் தரப்பில் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது, பெண்கள் தங்களை கஸ்டமர்களாகவும், ஆண்களை கஸ்டமர் கேர் எக்சிக்யூட்டிவ்களாகவும் பெண்கள் எண்ணிக்கொள்வதாகவே தோன்றுகிறது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், தங்களை முதலாளியாக நினைத்துக்கொண்டு, முதலாளியின் மனம் கோணாமல் நடந்துகொள்ளும் வேலைக்காரனாகவே ஆண்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது அவர்களுக்கே வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அவர்களின் ஆழ்மன ஆசை இதுவாகத்தான் இருக்குமோ என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

இணை கிடைப்பது ஆண்களுக்கு சிரமமான ஒன்றாக மாறியிருக்கும் காலத்தில், ஆண் முதலில் பிச்சைக்காரன்போல மண்டியிட்டுக் கெஞ்சுகிறான். பிறகு அவளைக் கொஞ்சுகிறான். அவள் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுகிறான். அவன் தன்னுடைய இணையைக் கவரும் முனைப்பில் இருக்கையில், தன்னையே இழந்து அடிமைபோல நடந்துகொள்வதை ரசித்து அனுபவிக்கும் பெண்கள், பின்னாளில் அது தொடராமல் போகும்போது கொலை வெறி ஆகிறார்கள். 

ஆண் நண்பர்கள் குழாம் அரட்டைக் கச்சேரியில் திருட்டுத்தனமாக நுழைந்து பார்த்தால் கிடைக்கும் ஒரு ஆண் பிம்பத்தைப் பார்த்து பெண் அதிர்ச்சி ஆகலாம். அது முழுமையான – உண்மையான ஆண் பிம்பம் இல்லை என்றாலும், அந்தப் பக்கத்தையும் ஒரு பெண் தெரிந்துகொள்வது அவசியம் என்றே நினைக்கிறேன். தன் இணையைக் கவர்வதற்காக ஓர் ஆண் போடும் வேடம், கவர்ந்து முடித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஒழுகுவதுதான் நிதர்சனமான வாழ்க்கையாக இருக்கிறது.

ஒரு பெண்ணிடம் தன்னைப் பற்றியோ, தன் விருப்பங்களைப் பற்றியோ, தன் மனம் இயங்கும் விதத்தைப் பற்றியோ ஆண் வெளிப்படையாகப் பேசவே மாட்டான். ஏற்கனவே கெட்டப்பெயர் சம்பாதித்து இருக்கும் அவன் இன்னும் தன் பெயர் நாசமாவதை விரும்ப மாட்டான். வெளிப்படையாகப் பெண்ணிடம் பேசிப் பின் காலம் முழுக்க நரகத்தில் உழல்வதை எந்த ஆண்தான் விரும்புவான்?

பெண்களின் சின்ன உலகம்

இப்போதென்று இல்லை! இந்த உலகம் அழியும் காலம் வரை ஆண் தன் விருப்பங்களை, தான் விரும்பும் வாழ்க்கைமுறைகளைப் பெண்களிடம் பகிர்ந்துகொள்ளவே மாட்டான் என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதாகவே தோன்றுகிறது. ஆனால், அவன் தன் நண்பர்கள் குழாமுடன் இருக்கும்போது 90% - 100% வெளிப்படையாகப் பேசுவான்.  

ஏதோ பெண்களுக்கு ஆண்களின் மத்தியில் – அதுவும் தன்னுடைய இணையரின் மத்தியில்தான் இப்படி நடப்பதாக நான் நினைக்கவில்லை. பெண்கள் தங்களுடைய பெண் நட்பு வட்டத்திலேயுமேகூட அவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை என்பதை என் நண்பிகள் வழியாக அறிந்திருக்கிறேன். “உங்கிட்ட பேசுற மாதிரி யார்கிட்டேயும் பேசினது இல்லை” என்பார்கள். இங்கே, ‘உங்கிட்ட’ என்பது பிரத்யேகமாக அராத்துவைக் குறிப்பது. எல்லா ஆண்களையும் இல்லை. இதையும் அவர்கள்தான் சொல்வார்கள்!

ஒரே வீட்டில் இருந்தாலும், ஒரே விதமான வாய்ப்புகள் கிடைத்தாலும், ஓர் ஆணுக்கு எவ்வளவு நட்புகள் இருக்கின்றன; பெண்ணுக்கு எவ்வளவு நட்புகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பாருங்கள்!

ஆண்களின் உலகம் எவ்வளவு பரந்து விரிந்திருக்கிறது என்பது புரியவரும். பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள், அலுவலகத் தோழர்கள், அறிவுத்தள நண்பர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், உறவுகளுக்குள்ளான நண்பர்கள் இவ்வளவு பேருக்கும் மத்தியில்தான் பெண் உலகத்தையும் அவன் சேர்த்துக்கொள்கிறான். பெண்களுக்கு ஏன் சாத்தியமாகவில்லை?

ஆண் – பெண் சமூக ஏற்றத்தாழ்வைக் காரணமாகத் தூக்கிக்கொண்டு வர வேண்டாம். ‘ஒரே மாதிரியான சாத்தியங்களைக் கொண்ட இருவர்’ என்றுதான் கூறுகிறேன்.

பெண்கள் தங்களுடைய உலகத்தைச் சுருக்கிக்கொள்வதோடு மட்டும் அல்லாது, ‘குடும்பம்’ என்ற பெயரில் ஆண்களின் உலகத்தையும் சுருக்கி, சின்ன சிறைக்குள் அடைக்க முற்படும்போதுதான் ஆண் – பெண் உறவில் உச்சமான சிக்கல் எழுகிறது. “எனக்கு ஃப்ரண்ட், லவ்வர், ஹஸ்பண்ட், பிரதர், அப்பா எல்லாமே நீதான்” எனப் பல பெண்கள் பேசுவதை ரொமாண்டிக்காக பலர் நினைக்கலாம். அவர்கள் பேசுவது வெறும் ரொமான்ஸ் இல்லை. அதுதான் உண்மை என்றே எனக்குத் தோன்றும்.

ஆண் மெகா காம்போ அல்ல

தனக்கான ஆணை ஒரு மெகா காம்போவாகப் பெண் பார்க்கிறாள். அவனிடமே அனைத்து ரோல்களையும் செய்யச் சொல்கிறாள். நம்மாளுக்கு ஒரு ரோலையே உருப்படியாகச் செய்யத் தெரியாது என்பது வேறு விஷயம். இவன் துடிதுடித்துப்போகிறான். “ஏம்மா, கொஞ்சம் லவ்வும் கொஞ்சம் செக்ஸும் வேணும்னு வந்தேன். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா!” என்பதுதான் ஆண்களின் மைண்ட் வாய்ஸ்.

தனக்குத் தோழமைகள் இல்லை என்பதால் தன் இணைக்கும் தோழமை இருக்கக் கூடாது. தனக்கு ஒரு சமூக வட்டம் இல்லையென்பதால் தன்னுடைய காதலன் / கணவனுக்கும் சமூக வட்டம் இருக்கக் கூடாது என்றே பெரும்பாலான பெண்கள் ஆத்மார்த்தமாக நினைக்கிறார்கள். இதுதான் பிரச்சினையின் மூலாதாரம்.

காதல், ரொமான்ஸ், தாம்பத்தியம், இதிலெல்லாம் இருவருக்கும் பங்கிருக்கிறது அல்லவா? ஆனால், பெரும்பாலான பெண்கள் எப்போதும் பெற்றுக்கொள்பவர்களாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள். இதில் அனைத்திலும் அவர்கள் நுகர்வோர்களாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறார்கள்.

பெண்கள்தான் அழகு, இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆண்களும் பெண்களின் அழகை சலிக்க சலிக்கப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அப்படியும் பெண்களுக்கு திருப்தி வராமல் போக, ‘கொங்கைமலை’ என்றெல்லாம் மாய யதார்த்தவாதமாக சங்க காலத்திலேயே முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆண்களின் முயற்சி ஜெயித்ததா என்பது கிடக்கட்டும். பெண்கள் முயற்சிக்கவாவது செய்திருக்கிறார்களா?  

சங்க காலம் முதல் நவீன காலம் வரை ஆண்களை ரசனையுடன் வர்ணித்து எழுதப்பட்ட கவிதைகள், படைப்புகள் எத்தனை இருக்கும்? ஆண் அழகென்று பாராட்ட வேண்டாம். கம்பீரம், பொறுப்பு கொண்டவன், நெஞ்சுரம் மிக்கவன், புத்திக் கூர்மை கொண்டவன் என்று பாராட்டாமல்கூட இருந்து தொலையட்டும்... திட்டுவது, எப்போதும் குறை சொல்வது, அவமானப்படுத்துவது இதையெல்லாமாவது தவிர்க்கலாம் இல்லையா என்று என்னிடம் புலம்பாத நண்பர்கள் குறைவு.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர், ஆய்வாளர், விளையாட்டு வீரர் என எவரை எடுத்துக்கொண்டாலும், அவருடைய மனைவியிடம் கேட்டுப்பாருங்கள். கேலியும் கிண்டலும், புகார்ப் பட்டியலும்தான் நீளும். வெளியே மீடியாவுக்காக புகழ்ந்து பேசுவார்கள். ஆனால், உள்ளே உளமார மதிப்பு கொண்டவர்கள் குறைவு.

உலகில் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும், ஓர் ஆணின் மதிப்பு தெரியாமல், தாங்கள் தங்களுக்குள் வைத்திருக்கும் அபத்தமான அளவுகோல்களைக் கொண்டே அவனை மதிப்பிடுவதே பெண்களின் வழக்கமாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் அளவுகோல் அனைத்து ஆண்களையும் மட்டமாகவே காட்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கும் அளவுக்கு - கொண்டாடும் அளவுக்கு - பெண்களுக்கு ஆண்களை ரசிக்கத் தெரியவில்லை; கொண்டாடத் தெரியவில்லை. இது இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கும் ரசனைக் குறைபாடாகக்கூட இருக்கலாம் என்று யூகிக்கிறேன். காலம் முழுக்க ஒருவன் தன்னை மட்டுமே புகழ்ந்துகொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மோசமான மனநிலை என்பதுகூட இவர்களுக்குத் தெரியவில்லையே என்று பல முறை சிந்தித்திருக்கிறேன்.

தனித்துவத்தை நொறுக்காதீர்கள்

பெண்களிடம் இன்னொரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் ஒருவனிடம் பிடித்துதானே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். உறவு உறுதியானதும், எந்த விஷயத்துக்காக அவனை காதலித்தார்களோ, அந்த விஷயத்தையே அவனை மாற்றிக்கொள்ளச் சொல்வார்கள். அது அவனுடைய அடிப்படை குணாதிசயமாக இருக்கலாம் அல்லது அவனுடைய தனித்தன்மையாக இருக்கலாம். அவனுடைய திறமையாகக்கூட இருக்கலாம். அடி மடியிலேயே கை வைத்து, அவனுடைய தனித்தன்மையை கொன்று, அவனை இவர்கள் விருப்பத்திற்குரிய வகையில், ‘ஸ்டேண்டடைஸ்டு ப்ராடக்ட்’ ஆக மாற்றத் தலைப்படுவார்கள். விவாகரத்துக்குப் போகும் வரை இந்த முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஆணும் விவகாரத்து எனும் நிலையை நோக்கி நகரும்போதுதான், தான் எவ்வளவு அபத்தமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதே பல பெண்களுக்குத் தெரியவரும்!

இதுவரை நான் சொல்லி வந்தவைகள் அனைத்தும் அடிப்படையான பிரச்சினைகள். தியரட்டிக்கல் என்றுகூட சொல்லலாம். ஊதிப் பெரிதாக்கிச் சொல்கிறேன் என்றும் சொல்லக்கூடும். “எல்லா பெண்களையும் எப்படிப் பொதுவாக இப்படிச் சொல்லப்போச்சு!” என்றும் கேட்கலாம்.

இன்னும் பேசலாம்...

இதையெல்லாம் என் அனுபவங்களை மட்டும் வைத்து எழுதவில்லை. எனக்கு நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது. ஒரு நண்பன் விடாமல் அனைவரும் எப்படி ஒரே மாதியான போலியான புகார்களைச் சொல்ல முடியும்? முடியாதல்லவா? நான் பல வருடங்களாகப் பல ஆண்களிடமும் பேசியதை வைத்தே எழுதுகிறேன். சொல்லிவைத்தாற்போல ஒரே புலம்பல்கள்! அந்தப் பக்கம் பெண்களிடமும் சொல்லிவைத்தாற்போல ஒரே புகார்கள்! ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இரு தரப்பினரும் முதலில் காது கொடுக்க வேண்டும்!

இந்த உலகில் இருவரும் சேர்ந்து வாழ்கையில் சந்திக்கும் பிராக்டிக்கலான பிரச்சினைகளை, ஆண்கள் பார்வையில் மேலும் பார்க்கலாம்!

அடுத்தடுத்த வாரங்களில்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1

2

2


1


பின்னூட்டம் (16)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   3 years ago

ஆகா! ஆகா!! ஆகா!!! உண்மை அராத்து, உண்மை! நீங்கள் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை. அண்மைக் காலமாக ஆண்-பெண் சிக்கல்கள் அனைத்திலும் பெண்கள் பக்கமே அதிகம் தவறுகள் இருப்பதை நானும் காண்கிறேன். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக. காரணம் என் தம்பிக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு வரை தீவிரப் பெண்ணியவாதியாக இருந்தவன்தான் நான். "உலகப் பந்தை இதுவரை கரைவேட்டிகள் ஆண்டது போதும்! பெண்ணே, இது நீ வெடித்துக் கிளம்ப வேண்டிய நேரம்" எனவெல்லாம் கவிதை கிறுக்கியவன் நான். ஆனால் ஒரு பெண் திருமணம் எனும் பெயரால் ஓர் ஆண் வாழ்வில் நுழைந்து அவனுடைய வாழ்க்கை, குடும்பம், உறவுகள், பொருளாதாரம், உணவு, உடல்நிலை, மனநிலை என அனைத்தையும் எப்படியெல்லாம் குலைத்துப் போடுகிறாள் என்பதை நான் என் தம்பிக்குத் திருமணமான இரண்டாம் ஆண்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதக்குலம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரையில் கணக்கெடுத்தால் தங்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க மனமுவந்து ஒப்புக் கொள்ளும் ஆண் தலைமுறை இன்றைய தலைமுறைதான். ஆனால் பெண்களோ அப்படிப்பட்ட ஆண்களைப் பார்த்து "நீ என்ன எனக்கு உரிமை வழங்குவது?" எனக் கேட்பவர்களாக இருக்கிறார்கள். கல்வி கற்க, பணிக்குச் செல்ல, ஊதியத்தை விருப்பப்படி செலவிட, திருமணத்துக்குப் பின்னும் மற்ற ஆண்களுடன் பழக, வெளியே போக வர என முந்தைய தலைமுறைகளில் பெண்களுக்கு எந்த உரிமைகளெல்லாம் மறுக்கப்படனவோ அல்லது எதற்கெல்லாம் ஆண்களின் ஒப்புதலுக்குப் பெண்கள் காத்து நின்றார்களோ அவை அனைத்தும் இன்றைய பெண்களுக்கு இயல்பாகவே கிடைக்கின்றன. ஆனால் பெண்களோ தங்களுடைய உரிமைகளை நுகர்வதை விட்டுவிட்டு ஆண்களின் உரிமைகளை நசுக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். பெண்களுக்கு யாருடனும் சேர்ந்து வாழத் தெரியவில்லை என்பதே இந்த எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். தொண்ணூறுகளின் பெண்கள் கட்டிக் கொள்ளப் போகும் ஆணுக்கு உடன்பிறந்தோர் இருக்கக்கூடாது என்றார்கள். இரண்டாயிரத்தின் பெண்களோ அவனுக்குப் பெற்றோரே இருக்கக்கூடாது என்றார்கள். இரண்டாயிரத்து இருபதின் பெண்களோ திருமணமான ஓரிரு ஆண்டுகளில் கணவனே வேண்டா என்கிறார்கள்; மணவிலக்குக் கேட்கிறார்கள். அட, இதற்காக நாம் இப்படி முப்பது நாற்பது ஆண்டுகளின் வரலாற்றைப் புரட்ட வேண்டிய தேவை கூட இல்லை. இன்றும் நம் அக்கம் பக்க வீடுகளில் நடப்பது என்ன? ஒரு பெண் திருமணமாகி ஓராண்டு கழித்துக் கணவனுடனான தன் சண்டைகளைத் தொடங்குகிறாள். முதலில் அதற்குக் காரணம் என அவள் கைக்காட்டுவது கணவனின் உடன்பிறந்தவர்களை. சரியென்று அந்த ஆண் தன் உடன்பிறந்தவர்களை விட்டு விலகி வந்தால் அடுத்து அவள் கைக்காட்டுவது மாமியார்-மாமனாரை. வேறு வழியின்றிப் பெற்றோரையும் விட்டு அவன் அவளைத் தனிக்குடித்தனம் அழைத்துப் போனால் சில நாட்களில் அவனுடனும் அவர்கள் சண்டைதான் போடுகிறார்கள். கணவன்-மனைவி இடையே வரும் சில்லறைச் சண்டைகள் அல்ல இவை. அவர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்து வாழ முடியாத அளவுக்குப் பெரிய சண்டைகள். பின்னர் ஒரு குழந்தை பிறந்ததும் "நீயும் வேண்டா, உன் உறவும் வேண்டா" எனக் கணவனை அம்போவென விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் பெண்கள். அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, அம்மா-அப்பா என ஒரு கூட்டு வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திருந்த ஒருவனை அனைவரிடமிருந்தும் பிரிந்தால்தான் தன்னுடன் சேர்ந்து வாழ முடியும் எனச் சொல்லிப் பிரித்துக் கூட்டி வந்து பின்னர் தானும் அவனை விட்டுப் பிரிந்து, அவனுக்குப் பிறந்த பிள்ளையையும் அவனிடமிருந்து பிரித்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டுப் போகும் பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி விட்டது. இது மிக மிகக் கொடூரமானது! இதை ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. அப்படிச் செய்தால் சட்டமோ சமுகமோ அவனை எளிதில் விட்டுவிடாது. ஆனால் இன்று பெண்கள் ஏராளமானோர் இதைப் போகிற போக்கில் செய்வதைப் பார்க்கவும் முடிகிறது, கேள்விப்படவும் முடிகிறது. அண்மைக் காலமாகக் குடும்ப உறவுகளில் அதிகரித்து வரும் இத்தகைய பெண்ணாதிக்கப் போக்கும் இதற்குப் பெண்ணியம் எனும் பெயரில் இதழாளர்கள், உளவியலாளர்கள், எழுத்தாளர்கள் என மொத்த அறிவுலகமும் தரும் கண்மூடித்தனமான ஆதரவும் ஆண்களை மிகப் பெரிய இக்கட்டில் தள்ளியிருக்கின்றன. நேரிலும் இணைய ஊடகங்களிலும் ஆண்களில் புலம்பல்கள் அதிகமாகி விட்டன. திருமணமான எல்லா... ஆண்களுமே இளைய ஆண்களிடம் சொல்லும் ஒரே அறிவுரை "திருமணம் செய்து கொள்ளாதே" என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் அறிவுலகமோ இன்னும் முரட்டுத்தனமாகப் பெண்களையே ஆதரித்து வருகிறது; ஆண்களையே குறை சொல்கிறது. இது எங்கே போய் முடியப் போகிறது என்றால்... இதோ இப்பொழுது இந்தியா போன்ற பல நாடுகள் ஓரினத் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கத் தொடங்கி விட்டன. ஆங்காங்கே ஓரினச் சேர்க்கை விருப்பமுள்ளவர்களைப் பார்க்க முடிகிறது. பெண்கள் இப்படியே ஆண்களைக் கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இதே அருஞ்சொல்லில் ஒரு புள்ளி விவரம் வரும். அதில் ஆண்-பெண் இணையர்கள், பெண்-பெண் இணையர்கள் ஆகியோரை விட ஆண்-ஆண் இணையர்களின் திருமண வாழ்க்கை நீடித்த தன்மை கொண்டதாய் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதிலும் மற்ற இருவகை இணையர்களை விடப் பெண்-பெண் இணையர்கள் மிக மிகக் குறுகிய காலமே சேர்ந்து வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுது இந்த உலகத்துக்குத் தெரிய வரும், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களுக்குக் காரணம் ஆண்களா பெண்களா என்பது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Balaganesh Janakiraman   3 years ago

ஆண் – பெண் சமூக ஏற்றத்தாழ்வைக் காரணமாகத் தூக்கிக்கொண்டு வர வேண்டாம். Author knows that the entire argument and the line of thought (sic) that aims to talk as a voice of men falls flat on the face with this one line comment. And hence discourages the readers to think about Patriarchy. Women aren't willing to reduce their life into a world that comprises their spouse. They are forced to and is the 'best behaviour' expected of them. It would hardly be anyone's guess here, how many males would be comfortable if their wives continue to hangout with their old male friends/colleagues. Without asking these questions about societal expectations and cultural conditioning, gendered expectations, this series would hardly make any difference. It is just futile and a waste of everyone's time.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   3 years ago

அராத்து அவர்கள், "Men are from Mars, Women are from Venus" என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

Harish   3 years ago

உங்க கட்டுரை சூப்பர் சார் ! செக்ஸ் haters பற்றி ரொம்ப யோசிக்காதீங்க. பெரும்பான்மையான குடும்பங்களுக்கு உங்கள் கருத்து சரியாதான் பொருந்தி இருக்கு, பெண்கள் உலகம் சிறிது , ஆண்கள் உலகம் பெரிது. பெண்கள் "introverts ", ஆண்கள் "extroverts" - அனால் இந்த "பொதுமைப்படுத்தல்", இன்றைய மேல் தட்டு "feminist", பெண்கள் அடங்கிய குடும்பத்துக்கு பொருந்துமா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. Pala குடும்பங்களில் நீங்கள் எழுதியதற்கு எதிர் மாறான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றைய பெண்கள், குழந்தைபேருக்கு பிறகு தங்கள் career, social life இல் முழு மூச்சாக செயல்படுகின்றனர். குழந்தை வளர்ப்பு, சமையல் வேலை போன்ற வழக்கமான வேலைகளை அம்மா விடமோ மாமியாரிடமோ outsource செய்து விடுகின்றனர். நேர நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் Physical intimacy போதுமான நேரம் இல்லை. "Emotional intimacy" பற்றி பெரும்பான்மையான ஆண்கள் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தாலும், அது தேவைப் படும் ஆண்களுக்கும், இன்றய "modern" பெண்களிடம் அதுவும் கிடைப்பது இல்லை ஆண்களுக்கு. பெண்கள் தங்கள் சகோதரி, நண்பிகளிடம் புலம்பி தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் பொலம்புவதெல்லாம் ஆண்களை பற்றி தான் ! மாறாக இன்றைய ஆண்களுக்கு இதை போல் பொண்டாட்டியை திட்டி தீர்ப்பதற்கு நல்ல ஒரு நட்பு/உறவு வட்டாரம் இருப்பது கிடையாது. ஆக மொத்தத்தில், introverted ஆண்களுக்கு இன்றைய "modern", "feminist", "ambitious " பொண்டாட்டி ய சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான். அடுத்து வரும் கட்டுறைகளில் எல்லா சமூக பிரிவினரையும் கருத்தில் எடுத்து கொண்டால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

பெண்கள் தங்கள் உலகத்தை மிகவும் சுருக்கி கொள்கிறார்கள் என்பது முற்றிலும் சரியே. அது மட்டும் அல்லாமல் தங்கள் துணைவரும் அப்படியே இருக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து பெரும்பாலும் வெற்றி பெறுபவர்களும் பெண்கள்தான். என்னதான் இன்டர்நெட் சமூகமாக இருந்தாலும் இன்று பெரும்பாலான கல்யாணம் ஆனவர்கள் வெறும் கூண்டுக் கிளிகள் தான். மிக மிக குறுகிய வட்டம், எதிலும் ஆழமாக சிந்திக்க இயலாத அளவு மேம்போக்கான அலசல், அநாவசிய இணைய சண்டைகள், அரட்டைகள், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் மற்றும் நெருக்கடி, எதிர்க்காலத்தை பற்றிய பதட்டம், செட்டில் ஆவது இவ்வளவுதான் பெரும்பாலோரின் வாழ்க்கையாக உள்ளது. ஒருவரின் வாழ்வு முழுமை அடைவதே தனக்கான Passion என்ன என்று கண்டு கொண்டு அதன் வழியில் போவதே. ஆனால் Passion என்பதே இன்று கேலிக்குரிய ஒன்றாக ஆகி விட்டது. இதற்கு ஆக பெரிய காரணம் குடும்பம் என்ற கட்டுக்குள் சிக்கி கொள்வதே. மேலும் அதை தவிர எதுவுமே முக்கியம் அல்ல என்ற அளவிற்கு மூளைச்சலவை எங்கு இருந்து ஆரம்பிக்கிறது என்று பார்த்தால் அராத்துவின் அலசல் சரிதான் என்று தோன்றுகிறது!

Reply 7 0

Tamilnadan   3 years ago

<< இதற்கு ஆக பெரிய காரணம் குடும்பம் என்ற கட்டுக்குள் சிக்கி கொள்வதே>> அது சரி; உங்களையெல்லாம் இடுப்பில துணி ஒண்ணும் இல்லாமல் ஆப்பிரிக்கக் காட்டில் கொண்டு போய் தனியா அலைய விடணும்! அப்பத்தான் குடும்பம் என்றால் என்ன என்று புரியும். Family & marriage are institutes human beings 'invented' after several thousand years as a sign of civilization. There may be shortcomings, drawbacks and failures in these institutes; that doesn't mean there are better alternatives. It is quite funny that 'stray dogs of Karthikai' pretending to be post-modernists talk ill of these institutes.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

SASIREKHA.S   3 years ago

சாருவும் அராத்துவும் ஏதோ வேற்று உலக விஷயங்களை பேசிவிடவில்லை, எழுதி விடவும் இல்லை. செக்ஸ் என்பது கார்த்திகை மாதத்து நாய்களுக்கு மட்டுமே சொந்தம் என புரிந்துகொண்டவர்கள்.

Reply 0 0

Tamilnadan   3 years ago

ஏன், கக்கூஸில் என்ன செய்கிறார்கள் என்று சாநியும் அராத்து அடிபொடியும் விலாவாரியாக எழுதித் தொலைக்க வெண்டியது தானே? கக்கூஸில் தினமும் நடப்பதும் வேற்று உலகத்து விஷயம் இல்லையே! கருமம்-டா சாமீ....!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

SASIREKHA.S   3 years ago

நிதரிசனம் , திருமணம் ஆகிவிட்டால் தனக்கு சேவகம் செய்பவனாக ஆண்கள் மாறிவிட நினைக்கும் பெண்கள் பெருகி இருப்பது உண்மை. பெண்ணை கவர்வதற்காக வண்டி வண்டியா பொய் பேசும் ஆண்களும் பெருகியிருக்கிறார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

நாய்களுக்கு கூட கார்த்திகை மாசம்தான்; மானுட குலத்திற்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள், ஆண் பெண் உறவு நிலை, ஒருபால் ஈர்ப்பினர் தொடர்பான சிக்கல்கள் காலம் காலமாகத் தொடர்ந்து நவீன காலத்திற்கேற்ப அனுதினமும் மாறிக்கொண்டே வருகின்றன. அதற்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சொடுக்கினால் ஆயிரக்கணக்கில் ஆபாசத் தளங்கள் வந்து கொட்டும் ஒரு யுகத்தில் சாரு நிவேதிதாவும் அராத்துவும் 'பெயர் வாங்க' காமத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என நினைப்பது மடமை. இந்த சமூகத்தோடு தொடர்ந்து இடையீடு செய்வதுதான் ஒரு சிந்தனையாளனின் பணி எனக் கொண்டால், திரைப்படத்தை முன்வைத்து ஒரு எழுத்தாளன் சண்டையிடுவதும் பொதுத்தளத்தில் காமத்தை எழுதுவதும் வேறு வேறு அல்ல.

Reply 5 1

Tamilnadan   3 years ago

<< இந்த சமூகத்தோடு தொடர்ந்து இடையீடு செய்வதுதான் ஒரு சிந்தனையாளனின் பணி எனக் கொண்டால்>> அந்த இரண்டு எழுத்து வியாபாரிகளையும் 'சிந்தனையாளன்' என்று சொல்லும் அளவுக்கு நாம் தரம் இழந்துவிட்டோமா? 'சுனா' 'புனா' 'சுயமைதுனம்' இல்லாமல் ஒரு பக்கம் எழுதத் தெரியாத, செக்ஸ் வக்கிரம் படைத்த, 'இயலாத' ஆசாமிகள் சா.நி.யும் அவரது அடிபொடிகளும்.

Reply 0 3

Tamilnadan   3 years ago

<< சொடுக்கினால் ஆயிரக்கணக்கில் ஆபாசத் தளங்கள் வந்து கொட்டும் ஒரு யுகத்தில் சாரு நிவேதிதாவும் அராத்துவும் 'பெயர் வாங்க' காமத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என நினைப்பது மடமை>> அப்படியல்ல. 'காமம்' என்று நேரிடையாகப் பெயரிடத் துணிவின்றி தாங்கள் எழுதும் வக்கிரத்துக்கு post-modernism, auto-fiction, லொட்டு லொசுக்கு என்று சிட்டுக்குருவி லேகியம் தடவி மார்க்கெட்டில் விற்க முயலும் வெத்து வேட்டுகள், சாநியும், அவரது அடிபொடிகளும். இதுகளுக்கு 'சரோஜாதேவி' 'விருந்து' இதெல்லாம் எவ்வளவோ தேவலை.

Reply 0 2

Login / Create an account to add a comment / reply.

Tamilnadan   3 years ago

தமிழில் 'அசிங்கமாக, அருவருப்பாக எழுதியே பேர் வாங்கலாம்' என்று ஒரு பிச்சைக்காரக் கூட்டம் அலைகிறது. சா.நி, அராத்து..... இதுகள் ஓட ஓட விரட்டப்பட வெண்டும். அந்த மூன்றெழுத்தைத் தவிர வேறெந்த சிந்தனையும் எந்நேரமும் இல்லாத கார்த்திகை மாதத்து நாய்கள்.

Reply 6 17

Login / Create an account to add a comment / reply.

Kabilan    3 years ago

அருஞ்சொல்லில் எழுதுவதற்க்கு ஒரு தகுதி இருக்கும் என்று நினைத்தேன்.....அராத்து எல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா.....சமஸ் சார் பிலிப்பிலிப் சேனல் அண்ணாத்த படத்தை ஆபாசமா விமர்சனம் பண்ணாங்களே...அதுக்கு விதை போட்டதே அராத்து எழுதிய ஆபாசமான முகநூல் அண்ணாத்த விமர்சனம் தான்.அது மட்டுமல்ல பொதுவெளியில் அப்படி ஒரு விமர்சனத்தை வைத்து விட்டு,ரசிகர்களுக்கு நிகராக ஆபாசமாக பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.இப்படிபட்டவர் எல்லாமா அருஞ்சொல்லில் கட்டுரை எழுதுகிறர்கள்.....

Reply 30 8

Raja   3 years ago

ஒருவர் சொன்ன வேறு ஒன்றை வைத்து கொண்டு அவரின் அத்தனை மாற்று கருத்துக்களையும் நிராகரிப்பது சரியா? ஒரு திரைப்படத்தை பற்றிய அவரின் விமர்சனத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லையே. இதில் அவர் தன்னளவில் தெளிவாகத்தானே எழுதுகிறார், தரக்குறைவாக ஒன்றும் சொல்ல வில்லையே. ஒரு ட்விட்டையோ ஒரு பதிவையோ வைத்து இன்றைய இன்டர்நெட் சமூகத்தில் ஒருவரை எடைபோட முடியாது. "அண்ணாத்தே" பற்றி என்ன சொன்னார் என்பது இங்கு அவசியம் அல்ல, "அருஞ்சொல்லில்" என்ன எழுதி இருக்கிறார் என்பதுதான் விஷயம். 

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

sivakumaran ramalingam   3 years ago

ஒரு சில முறை, தனிப்பட்ட நணபர்களுடனான சந்திப்புகளுக்கு, இல்லாளிடம் சொல்லிச் சென்றதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலன்களால், அந்தச் சில முறைக்குப் பிறகு மறந்தும் தனிப்பட்ட நண்பர் கூட்ட/கொண்டாட்டங்களுக்கு உண்மையை சொன்னதேயில்லை. உண்மையை சொன்னால், அதை விட முக்கியம் எனத் தோன்றுமளவிற்கு, ஏதோவொரு வேலையையோ சிக்கலையோ உருவாக்குவதில் ஜித்திகள். நண்பர் சந்திப்பு/இலக்கிய சந்திப்பு போன்றவைகளுக்கு முன் கூட்டியே திட்டமிட்டு, அலுவலக சந்திப்பை உருவாக்க வேண்டும். அவங்க கூட உக்காந்து சீரியல் பாக்கலாம், ஆனா கிண்டில்ல கூட புத்தகம் படிக்கக் கூடாது. அலுவலகத்தில் எப்படி மேனேஜ்மெண்ட சமாளிக்க யோசிக்க வேண்டியிருக்கோ, அவ்ளோ புத்தி உழைப்பை, இல்லாள சமாளிக்கவும் செலுத்த வேண்டியிருக்கு.

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

எழுத்துத் தேர்வுசிவராஜ் சிங் சௌகான்இசை மேதைகள்ராஸ லீலாசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்நவீனக் கல்விவெள்ளை அறிக்கைவிளிம்புநிலைசமூக நீதிபசி மயக்கம்உரிமைகள்தேர்வுச் சீர்திருத்தம்இரு தலைவர்கள் மரபுநீதிதற்குறிகள்காலி இடங்கள்இயக்குநர் சத்யஜித் ரேஜொமெட்டோமும்மொழிக் கொள்கைவாதம்கர்நாடக தேர்தல்டி.கே.சிங் கட்டுரைவிலங்குகள் மீதான கரிசனம்98வது தலைவர்தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்சிபிஐ என்ற அமைப்பே சட்ட விரோதம்உடற்பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?பஞ்சாப் தேர்தல்அஜயன் பாலா கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!