கட்டுரை, இன்னொரு குரல், கல்வி 5 நிமிட வாசிப்பு
சமஸ் என்ற பெயர் சமஸாகவே ஓங்கி ஒலிக்கட்டும்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகளை விமர்சித்து ஆசிரியர் சமஸ் ‘அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு’ என்று ஒரு குறிப்பை சமீபத்தில் எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்புகளில் ஒன்றான ‘ஐபெட்டோ’வின் அகில இந்தியச் செயலர் வா.அண்ணாமலை ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களையும் முன்வைத்து விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ‘அருஞ்சொல்’ ஆசிரியர்களின் தரப்புப் பிரச்சினைகளைப் பேசும் அந்த அறிக்கையை இங்கே தன் வாசகர்களுக்காகப் பிரசுரிக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் பெரும் மதிப்பைக் கொண்டிருக்கும் ‘அருஞ்சொல்’ இந்த விவகாரத்தைக் குழந்தைகள் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்காலம் தொடர்பான அக்கறையினூடாகவே அணுகுகிறது. இதை ஓர் ஆக்கபூர்வமான உரையாடலாகவே அது முன்னெடுக்க விரும்புகிறது.
பொதுவாக சமஸ் அவர்களைப் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுநோக்கர்கள் மத்தியில் உள்ள கருத்து: ‘நடுநிலையுடன், சமூக அக்கறையுடன் கூர்மையான கருத்துகளை அனைவருடைய இதயங்களையும் தொடக்கூடிய வகையில் கருத்துப் பதிவுசெய்து வெளியிடுகின்ற மிகச் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர்’ என்பது ஆகும். ‘தினமணி’, ‘இந்து தமிழ் திசை’யில் பணியாற்றியபோது அவர் கட்டுரைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து இதயத்தில் பதிவுசெய்துகொள்வார்கள்.
தேசிய அடைவுத் தேர்வு மதிப்பெண் தரவரிசையில் தமிழ்நாடு வீழ்ச்சியினை சந்தித்திருக்கிறது என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில் "அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு" என்ற தலைப்பில் சமஸ் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அவற்றை இந்த அறிக்கை வழியாகத் தருகிறோம்.
தமிழ்நாட்டில் 80% பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் அறவே இல்லாமல் இருக்கிறது. இன்னமும் கட்டமைப்பு வசதிகளும், கழிப்பிட வசதிகளும் பள்ளிகளுக்கு தேவையாகத்தான் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு அவர்கள் இணையதளத்தித்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களை பாடம் நடத்த விடுவதற்கு கொடுப்பதில்லை. ‘எமிஸ்’ போன்ற இணையதள செயல்பாடுகளினால் பள்ளிக்கல்வித் துறையானது, புள்ளிவிவரத் துறையாக மாறி இருக்கிறது. ஒரு கல்வி ஆண்டில் ஐந்து பாடப் புத்தகங்களை நடத்த வேண்டிய ஆசிரியர் 23 பாடப் புத்தகங்களை நடத்திவருகிறார்.
ஆசிரியர் நியமனங்களே இல்லாமல் எப்படி தரமான கல்வியினை மாணவர்களுக்கு அளிக்க முடியும்? இன்னும் ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த ஆண்டு முழுவதும் ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்புகளுக்கும் 23 பாடப் புத்தகங்களை நடத்த வேண்டும்.
மாணவர்களைத் தண்டிக்கின்ற அதிகாரம் தேவை இல்லை. கடிந்து பேசுகிற நிலைமையினைக்கூட இன்று ஆசிரியர்கள் இழந்து நிற்கிறார்கள். இந்த நிலைமையிலும் மாணவர்களின் கல்வி நலனில் அர்ப்பணிப்புணர்வுடன் பாடுபடுகின்ற பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மை என்ற எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சமஸ் போன்றவர்கள் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள், ஐந்தாசிரியர் பள்ளிகள் பணியாற்றும் பள்ளிகளுக்குச் சென்று அங்கு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியாற்றுகிறபோது அவர்கள் படும் சிரமங்களை நேரில் பார்த்தால் அவர்கள் பதிவுசெய்ததை அவர்களையும் அறியாமல் மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்வார்கள். ஏதோ ஒரு ஆசிரியர் சங்க நிர்வாகி சொன்னார் என்பது உங்கள் இருவருக்குள் உள்ள தனிப்பட்ட கருதாக இருக்கலாம். அதனையே ஒட்டுமொத்த பொதுப் பார்வைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஆசிரியர்களாகிய எங்களைப் பொருத்தவரையில் கடமையினை சரிவரச் செய்து உரிமையினைக் கேட்டுப் பெறக்கூடியவர்கள். எங்களின் உறுதிமொழியே மாணவர்களின் கல்வி நலனை நான் கண்ணெணப் பேணுவேன்; அனைவருக்கும் கல்வி அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தல் பணியாற்றுவேன்; பள்ளிச் சூழலைப் பசுஞ்சோலை ஆக்குவேன்; எனது ஆசிரியர் பணியால் பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமையினைச் சேர்ப்பேன்; தாய்மொழிவழிக் கல்விப் பணியில் என்றும் உறுதியுடன் இருப்பேன் என்பதுதான்.
நீங்கள் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர் சங்க நிர்வாகியைப் பற்றியோ அல்லது உங்களின் நண்பரைப் பற்றியோ எங்களுக்குத் தெரியாது. ஆனால், ங்கள் தேசியக் கல்விக் கொள்கை பற்றி அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்தி தாய்மொழிவழிக் கல்வி பற்றி விவாதம் செய்துவருகிறோம். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியிலேயே வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்பதையும் அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துதான்வருகிறோம்.
தன்னுடைய பதிவில், “சீரமைப்புப் பணிகளில் அசைந்து கொடுக்கக் கூடாது” என்று எழுதி இருக்கிறார் சமஸ். என்ன அசைவு என்று எங்களுக்கும் தெரியவில்லை? என்ன நோக்கத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை? கல்வித் துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பொதுநோக்கமான செயல்பாடு ஆகும். அதில் நாங்கள் தலையிடுவதும் இல்லை.
¶
ஜாக்டோ ஜியோ மாநாட்டினைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடைய புலனப் பதிவுகளை எல்லாம் பார்த்த அதிகாரிகள் ஒரு வார காலம் ‘சவுக்கு’ சங்கருக்கு ஆசிரியர்களைக் கடுமையான விமர்சனம் செய்யும் பொறுப்பினை ஒப்படைத்து இருந்தார்கள். ஒரு வார காலம் ஆசிரியர்களை சமூக விரோதிகள்போலவே சித்தரித்து செய்திகள் வெளியிட்டுவந்திருந்தார் அவர். குரு நிந்தனை இத்தகையோரை சும்மா விடாது. ‘நீங்கள் சவுக்கு சங்கராக இருங்கள். சரக்கு சங்கராக இருக்க வேண்டாம்!’ என்று அப்போது நாம் எச்சரிக்கையுடன் புலனப் பதிவை வெளியிட்டு இருந்தோம். அடுத்த ஒரு வாரக் காலத்திற்குள் வேறு ஒரு வழக்கில் நீதியரசர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு போட்டு இப்போது சிறைச்சாலையில் இருக்கிறார் சங்கர். சமஸ் அவர்களை நாங்கள் அப்படி எல்லாம் பார்க்கவில்லை.
சவுக்கு சங்கரைப் போன்றவர்கள் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானலும் தரக்குறைவாகப் பேசலாம். வேலை பார்க்க முடியாவிட்டால் வேலையை விட்டுச் செல்லுங்கள் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால், சமஸ் நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மதிக்கக் கூடியவர். ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுதியவர்.
உங்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியிலே படித்தவர். கிராம சூழலைக் கொண்ட சின்னஞ்சிறிய நகரமான மன்னார்குடி அரசுக் கல்லூரியில் பயின்றவர். இன்றளவும் உங்களுக்கு வழிகாட்டிய அரசுக் கல்லூரி பேராசிரியர்களைப் போற்றக்கூடியவர். ‘இந்து தமிழ் திசை’யின் ஆசிரியராக இருந்தபொழுது ஊர்தோறும் அரசுப் பள்ளிகளுடைய பெருமையினை ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிலே எழுதி வெளியிட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து தங்களது குழந்தைகளை அரசு மாநகராட்சி பள்ளியிலே படிக்க வைத்துக்கொண்டிருப்பவர் என்பதை எல்லாம் நாங்கள் அறிவோம். இப்படிப்பட்ட சமஸிடமிருந்து “இவ்வளவு கஷ்டம் தரும் வேலையை கட்டிக்கொண்டு ஏன் மாரடிக்கிறீர்கள்?” என்ற வார்த்தைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
சமஸ் குறிப்பிடுகிறார், “இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் 10இல் 7 பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்கிறது யுனெஸ்கோ ஆய்வு. உலகளாவியப் போக்கு என்றாலும், நம்முடைய நிலை மேலும் மோசமான இடத்தில் இருப்பதற்கு அரசுப் பள்ளிகளின் செயல்பாடே காரணம்!” இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டைக் கூறுகிறீர்களே, தனியார் பள்ளிகள் அதிகரிக்க நாங்களா காரணம்? மத்திய, மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கை ஆதரவும், கல்வியினை வணிகமாக்குபவர்களின் பேராசையும்தான் காரணம் என்பது தங்களுக்குத் தெரியாதா?
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
பள்ளிக்கல்வித் துறையின் அதீதத் தலையீடுகள் ஆபத்து
21 Aug 2022
அதிகாரிகள் அலுவலகப் பணியினைவிட ஆசிரியர்களை ஆய்வுசெய்யும் சுற்றுப்பயணத் திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறார்கள். கல்வி வளர்ச்சியில் காட்டுகின்ற அக்கறையினை காட்டிலும் கற்பித்தல் அல்லாத தொண்டு நிறுவனங்கள் மீது அக்கறை காட்டிவருகிறார்கள். நினைத்தால் நெஞ்சம் பொறுப்பதில்லையே?
ஒன்றிரண்டு ஆசிரியர்களின் செயல்பாடுகளை எடுத்துக்கொண்டு பொத்தாம் பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறை கூறுவதை விடுத்து, நாங்கள் சொல்வதைப் போல ஒரு பகுதி பள்ளிகளுக்கு நேரில் சென்று கற்பித்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்கள் அடையும் சிரமங்களை நேரில் பார்த்து உணருமாறு உரிமை உறவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தாய்மொழிவழிக் கல்வியினைக் கரம்கோர்த்து பாதுகாப்போம்!
தொடர்புடைய கட்டுரைகள்
பள்ளிக்கல்வித் துறையின் அதீதத் தலையீடுகள் ஆபத்து
அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு
4
1
1
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Abi 1 year ago
எனது ஆசிரியர் வேலை செய்யும் மேல்நிலைப்பள்ளியில் 17 ஆசிரியர் பணி vacant... ஆனால் எனது ஆசிரியர்(சர்க்கரை வியாதியினால் பாதிக்க பட்டும் ) தனது கடமையை செவ்வனே செய்து கொண்டு உள்ளார். Kallakurichi district, thirupalapandal village
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
விஷ்வ துளசி.சி.வி 1 year ago
அரசுக்கு ஆசிரியர்கள் மீதுள்ள பெரும் நம்பிக்கையிலேயே முன் தேதியிட்டு 2023 ஆண்டுக்கான 10 11 12 பொது தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
விஷ்வ துளசி.சி.வி 1 year ago
1.மாணவர்களைத் ஒழுக்கத்திற்காக கண்டிக்கின்ற கடிந்து பேசுகிற நிலைமையினைக்கூட இன்று ஆசிரியர்கள் இழந்து கையறு நிலையில் நிற்கிறார்கள் .2.இந்த நிலைமையிலும் மாணவர்களின் கல்வி நலனில் அர்ப்பணிப்புணர்வுடன் பாடுபடுகின்ற புனிதமான பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மை என்ற எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொத்தாம் பொதுவாக புழுதிவாரி தூற்றக்கூடாது.
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 1 year ago
யாரும் இங்கு குரு நிந்தனை செய்யவில்லை! நீங்கள் கூறுவதுபோல் 80% பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாகவே இருக்கட்டும். அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையையும் சொல்லலாமே! அவையும் ஒற்ற இலக்கம் என்று சொல்ல முடியவில்லையே ஏன்? எல்லா துறையிலும் தனிமனித பேராசை, வணிக நோக்கம் உள்ளது! கல்வித்துறை ஒன்றும் விதிவிலக்கல்ல! அரசுப்பள்ளி ஆசிரியர்களும் விமர்சனத்துக்கு உரியவர்களே! முழுச்சுமையையும் அவர்கள்மீது ஏற்றவில்லை! கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் உண்டு! ஆனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது! அதை யாரும் மறத்தல் வேண்டாம்!!
Reply 5 1
Login / Create an account to add a comment / reply.