உத்தர பிரதேச மாநிலம் அரசியல் – பொருளாதாரரீதியாக நல்ல வளர்ச்சி பெற்ற வெற்றிகரமான மாநிலமாவதற்கான அனைத்துத் தன்மைகளும் நிரம்பியது. மிகப் பரந்த நிலப்பரப்பு (2,43,286 சதுர கிலோ மீட்டர்), அதிகமான மக்கள்தொகை (20.4 கோடி) - இன்னும் வளர்கிறது, வற்றாத ஜீவ நதிகள் (கங்கை, யமுனை), மிகக் கடுமையாக உழைக்கக் கூடிய மக்கள்.
ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய பிரதமர்கள் அனைவருமே உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இருந்தும் பல ஆண்டுகளாக உத்தர பிரதேசம் வளர்ச்சி பெறாமல் தோல்வியுற்ற மாநிலமாகவே திகழ்கிறது.
தோல்வியுற்ற மாநிலம் என்றால் என்னவென்று விளக்கியாக வேண்டும். வளர்ச்சியை அடையாளம் காண உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்படும் மனிதவளக் குறியீடுகளை முதலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிஎஸ்டிபி), நபர்வாரி வருவாய், மாநிலத்தின் கடன் சுமை ஆகியவற்றைக் கூட்டவும். சுகாதாரம் – கல்வி தொடர்பாக அரசே எடுத்த புள்ளிவிவர ஆய்வறிக்கை எண்களை இத்துடன் சேர்க்கவும்; குற்றச் செயல்களின் எண்ணிக்கை, வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை, வேலைக்காக மாநிலத்தைவிட்டுச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இவற்றுடன் இணைக்கவும். இந்தக் கூட்டல் தொகைக்குப் பிறகு உங்களுக்கு மனக்கசப்பு அதிகமானால், அந்த மாநிலம் தோல்வியுற்ற மாநிலம் ஆகும்.
தள்ளாடும் பொருளாதாரம்
உத்தர பிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆளுங்கட்சியாக கடைசியாக இருந்தது 1980 – 1989 காலத்தில். கடந்த 32 ஆண்டுகளாக மாநிலத்தை பாரதிய ஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள்தான் ஆண்டுவருகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவைதான் பொறுப்பேற்க வேண்டும். ஆதித்யநாத் (பாஜக) மாநில முதல்வராக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பதவி வகிக்கிறார்.
ஒரு ஆட்சி நல்லாட்சியா என்பதற்கு நான் கூறும் மூன்று அம்ச சோதனைகள் - வேலை, நல்வாழ்வு, செல்வம் ஆகியவையே. உத்தர பிரதேசத்துக்கு இந்த சோதனையைப் பேரியியல் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து ஆராய்வோம். அனைத்திந்தியப் போக்குடன் ஒப்பிடுகையில் ஆதித்யநாத் ஆட்சியில், மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்துகொண்டேவருகிறது. அது 2016-17 ஆண்டில் 11.4%ஆக இருந்தது, 2017-18 ஆண்டில் 4.6%, 2018-19 ஆண்டில் 6.3%, 2019-20 ஆண்டில் 3.8% ஆக இருந்து, 2020-21-ல் -6.4% ஆகச் சரிந்தது.
உத்தர பிரதேசத்தின் நபர்வாரி வருவாய் தேசிய சராசரியில் பாதிக்கும் குறைவு. 2017-18 முதல் 2020-21 வரையில் நபர்வாரி வருவாய் 1.9% சுருங்கியது. அந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை மேலும் 40% கூடியது. மார்ச் 2021 வரையிலான காலத்தில் மாநிலத்தின் மொத்த கடன் தொகை பிரம்மாண்டமாக உருவெடுத்து ரூ.6,62,891 கோடியாக இருக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் இது 34.2%. நிதி ஆயோக்கின் பல்வடிவ வறுமை குறியீட்டெண் 2021 அறிக்கைப்படி, மாநில மக்களில் 37.9% பேர் ஏழைகள். 12 மாவட்டங்களில் வறியவர்கள் மொத்த மக்கள்தொகையில் 50%-க்கும் அதிகம், மூன்று மாவட்டங்களில் அவர்களே 70%. இதிலிருந்து பெறப்படும் முடிவு முகத்தில் அறைந்தார்போல் இருக்கிறது: உத்தர பிரதேசம் ஏழ்மையான மாநிலம், மக்கள் ஏழைகள்; ஆதித்யநாத் அரசில் அவர்கள் மேலும் ஏழைகளாகிவிட்டனர்.
நிர்வாகமில்லாத அரசு
இந்த ஆட்சியில் இளைஞர்களின் நிலைமைதான் படுமோசம். வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் அதிகம். ஏப்ரல் 2018 முதல், 15 முதல் 29 வயதினரில் வேலை கிடைக்காதவர்கள் இடையே வேலையில்லா திண்டாட்டம் இரட்டை இலக்கிலும் – அதே வயதினருக்கான அனைத்திந்திய சராசரியைவிட அதிகமாகவும் இருக்கிறது. 15 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களிடையே 2020 ஜூலை – செப்டம்பர் காலத்தில் இது 40.8%. நகர்ப்புறங்களில் நான்கில் ஒரு இளைஞர் வேலையில்லாதவர் என்று 2018 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான காலத்திய தொழிலாளர் விகிதாச்சாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இதன் விளைவு வேலை, வருமானம் தேடி மாநிலத்தைவிட்டு குடிபெயர்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில்தான் 1.23 கோடியாக இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 16 பேருக்கு ஒருவர் வேலைக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார். கரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020 மார்ச் 25 அன்று ஒன்றிய அரசு அறிவித்த பொதுமுடக்கத்துக்குப் பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியாலும் தாகத்தாலும் வாடியபடி போக்குவரத்துக்கு வாகனங்கள்கூட இல்லாமல் நடந்தே சென்ற பரிதாபக் காட்சிகளையெல்லாம் – உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும்தான் அதிகம் பார்த்தோம்.
அதிகமான வறியவர்களைக் கொண்ட மாநிலம், மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் என்பதால் சமூகநல நடவடிக்கைகள் மிக மிகக் குறைவு. கல்விக்காக நாட்டிலேயே நபர்வாரி செலவு உத்தர பிரதேசத்தில்தான் மிக மிகக் குறைவு. அதிக மாணவர்கள் – குறைந்த ஆசிரியர்கள் என்று அந்த விகிதம் நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் அதிகம். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றால் இன்னும் 2,77,000 ஆசிரியர்கள் தேவை. 2021 ‘அசர்’ (ASER) அறிக்கையின்படி பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்களில் 38.7% தனிப் பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்து (டியூஷன்) படிக்கின்றனர். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் தரம் போதவில்லை என்பதையே இது காட்டுகிறது. எட்டாவது வகுப்புக்கு வந்ததும், எட்டு மாணவர்களில் ஒருவர் படிப்பை மேற்கொண்டு தொடராமல் நிறுத்திவிடுகிறார். மேல்நிலைப் பள்ளி வகுப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 46.88% ஆகவும் கல்லூரி – பல்கலைக்கழகங்களில் சேருவோர் எண்ணிக்கை 25.3% ஆகவும் இருக்கிறது. இடைநிற்றலும், மேல் படிப்பில் சேர முடியாமல் விலகுவோரும் அதிகம்.
மாநிலத்தின் சுகாதார வசதிகள் நிலைமையும் இதே போலத்தான் மோசமாக இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் குழந்தை பிறந்த நான்கு வாரங்களுக்குள் இறப்பது ஆயிரத்துக்கு 35.7 ஆகவும், சிசு மரணம் 50.4 ஆகவும் இருக்கிறது. ஐந்து வயதுக்குள் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்துக்கு 59.8 ஆக இருக்கிறது. இது தேசிய சராசரியைவிட அதிகம். ஆயிரம் பேருக்கு 0.64 மருத்துவர்களும் 0.43 செவிலியர்களும், 1.38 இதர மருத்துவப் பணியாளர்களும் இருக்கின்றனர். இவையும் தேசிய சராசரியைவிடக் குறைவே. ஒரு லட்சம் பேருக்கு 13 படுக்கைகளே மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ளன. நிதி ஆயோக் சுகாதார குறியீட்டெண்படி, நான்கு சுற்றுகளுக்குப் பிறகு 2019-20-ல் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு, என்ன?
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாக முறை ஆழ்ந்த குறைபாடுகள் உடையது. அவர் உரத்துப் பேசுகிறார், கையில் பெரிய தடி வைத்திருக்கிறார். சர்வாதிகாரம், சாதி ஆணவம், மத அடிப்படையிலான வெறுப்பு, காவல் துறை அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு ஆகியவை அவரது ஆட்சிக்கு அடையாளங்கள். ‘என்கவுன்டர்’, ‘புல்டோசர்’, ‘80 எதிர் 20’ என்ற சொல்லாட்சிகளைக் கொண்டது அவருடைய அரசியல் அகராதி. ‘மதம் என்பது மக்களுக்கு போதையூட்டும் அபினிபோல - எல்லா வலிகளையும் தோல்விகளையும் மறக்க வைப்பது’ என்ற கருத்து உண்மைதான் என்று நிரூபிக்க பாஜக ஆட்சி முயல்கிறது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பாரதிய ஜனதாவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் மட்டும் இடையிலான போட்டி என்பதைப் போலச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். அமித் ஷா – மாயாவதி இடையில் சமீபத்தில் நடந்த கனிவான வார்த்தைப் பரிமாற்றங்கள் மறைந்துகிடக்கும் (அவர்களின்) திட்டத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறது. மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி துணிச்சலாக 403 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது. மாற்றத்தை விரும்பி வாக்களிப்பவர்கள்கூட, அவர்கள் விரும்பும் கட்சிகள் வெற்றி பெற்றாலும், தேர்தலுக்குப் பிறகும் எந்த மாற்றமும் இல்லாமல் மாநிலம் இப்படியே பின்தங்குவதையே பார்ப்பார்கள். ஐயகோ, 2022-ல்கூட நாம் தலைப்பில் கேட்ட கேள்விக்கு விடையைக் காண முடியாமலேயே இருப்போம்!
தமிழில்:
வ.ரங்காசாரி

3

1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.