கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

ஆஃப்கன் முடிவு: லிண்டன் ஜான்சன், ஜின்பிங், ஜாகிர் ஷாவுடன் ஒரு பேட்டி!

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்
02 Sep 2021, 12:00 am
0

ஆஃப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது இவை தொடர்பான செய்திகளையும் விமர்சனங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மூன்று முக்கியத் தலைவர்களிடம் பேட்டி காண விரும்புகிறேன். அந்த மூவர், அமெரிக்காவின் மறைந்த அதிபர் லிண்டன் ஜான்சன், இப்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆஃப்கானிஸ்தானின் மறைந்த கடைசி மன்னர் முகம்மது ஜாகிர் ஷா.

ஃப்ரீட்மன்: அதிபர் ஜான்சன், ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முற்றாக வெளியேறும் என்று ஜோ பைடன் செய்த அறிவிப்பு தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

ஜான்சன்: அந்தப் பேச்சை முழுவதுமாகக் கேட்டேன். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்றுதான் கூற வேண்டும். இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்கும் திராணி எனக்கு மட்டும் 1965 ஏப்ரல் 7-ல் இருந்திருக்குமேயானால் — அதாவது, வியட்நாமில் அமெரிக்கப் படைகளைக் குவித்து வைத்திருந்த காலத்தில் — முந்தைய ஆட்சியாளர்களின் முடிவால் நான் ஸ்வீகரித்து வைத்திருந்த போரை மேலும் விரிவுபடுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும். அதே சமயம், நான் அப்போது பேசிய பேச்சையும் பைடன் இப்போது பேசியதையும் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுத மாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி தாருங்கள் ஃப்ரீட்மன்.

ஃப்ரீட்மன்: என்னை மன்னித்துவிடுங்கள் அதிபரே. நான் ஏற்கெனவே அதை எழுதியாகிவிட்டது. வியட்நாமுக்கு மேலும் மேலும் அமெரிக்கப் படைகளை அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து நீங்கள் ஆற்றிய உரையின் சில முக்கியப் பகுதிகளை நினைவுகூர்வோம்:

“தெற்கு வியட்நாமில் நாம் (அமெரிக்கத் துருப்புகள்) ஏன் இருக்கிறோம்? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கிறோம். 1954 முதலே ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தெற்கு வியட்நாம் மக்களுக்கு, தொடர்ந்து ஆதரவைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம்… உலக முறைமையைக் காப்பாற்றுவதற்காகவும் அங்கே இருக்கிறோம். உலகைச் சுற்றிலுமுள்ள — பெர்லின் முதல் தாய்லாந்து வரையில் — வாழும் மக்களுடைய நலனானது வியட்நாமிலேயே நாம் தொடர்வதில்தான் இருக்கிறது; தெற்கு வியட்நாம் மக்களை யாராவது தாக்கினால், அவர்கள் தங்களுடைய உதவிக்கு நம்மை நாடலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காக அங்கே படைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். நாம் அங்கே ஏன் இருக்கிறோம் என்றால், நமக்குரிய பெரும் பங்கும் அங்கேயே இருப்பதில்தான்.

“வியட்நாமிலிருந்து அமெரிக்கா பின்வாங்கிவிட்டால் அங்கே பூசல் முடிவுக்கு வந்துவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த மோதல் ஏதாவது ஒரு நாட்டில் அடுத்தடுத்துப் புதுப்பிக்கப்பட்டே வரும். எனவே, நாம் வியட்நாமிலேயே தொடர்வது அவசியம். அது மட்டுமல்ல, எதிராளிகளின் தாக்குதலுக்கு வான் வழியே பதில் தாக்குதல் தொடுக்கவும் நாம் அங்கே இருந்தாக வேண்டும். நாம் அங்கேயே தொடர்வது நம்முடைய நோக்கங்களை மாற்றிக்கொண்டதால் அல்ல; நம்முடைய நோக்கத்துக்கு எது அவசியமோ அது மாறிக்கொண்டே வருகிறது என்பதால்தான்! தெற்கு வியட்நாமின் வீர மக்களுடைய நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே நாம் இதைச் செய்கிறோம். ஏற்கெனவே பல ஆண்டுகளாக அமெரிக்கப் படை வீரர்களைப் பலி கொடுத்து இந்தக் கொடூர யுத்தத்தின் விளைவுகளைச் சந்தித்து வருகிறோம். நாம் தோற்றுப்போக மாட்டோம்; நாம் களைப்படையவும் மாட்டோம்.

ஜான்சன்: ஆமாம், ஃப்ரீட்மன். ஜோ பைடன் இப்போது பேசியதை நானும் அப்போதே பேசியிருக்க வேண்டும் — அவருக்கு முந்தைய அதிபர்களும் எப்போதுமே அப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்: “ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போரில் பங்குகொள்ள இன்னும் எத்தனைத் தலைமுறை அமெரிக்க மகன்களையும் மகள்களையும் நான் அனுப்பிவைக்க வேண்டியிருக்கும் — அந்தப் போரில் ஆஃப்கானிஸ்தான் படைகள் இறங்காமலேயே ஒதுங்கி நிற்கும்போது!”

ஃப்ரீட்மன்: அதிபர் ஜி, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவப் படைகளை முற்றாக விலக்கிக்கொள்வது என்ற முடிவை ஜோ பைடன் அறிவித்திருப்பதால் சீனாதான் வெற்றி பெற்றிருக்கிறது என்று அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் எழுதுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஜி: என்ன சொல்வது, இவர்களைத்தான் நாங்கள் பயனுள்ள முட்டாள்கள் என்று அழைக்கிறோம். இவர்கள் எந்தக் கிரகத்தில் வசிக்கிறார்கள்? பைடன் வருவதற்கு முன்னால் ஆஃப்கானிஸ்தானில் எங்களுக்கு எல்லாமே சாதகமாக இருந்தன. அமெரிக்கா தன்னுடைய துருப்புகளையும் டாலர்களையும் ஆற்றலையும் கவனத்தையும் ஆஃப்கானிஸ்தானில் ஏராளமாகச் செலவழித்துக்கொண்டிருந்தது; இதனால், சீனப் பன்னாட்டு நிறுவனங்களால் நிம்மதியாக அதன் கனிமவளங்களைச் சுரண்ட முடிந்தது.

ஆஃப்கானிஸ்தானின் மெஸ் அய்னக் என்ற இடத்தில் தாமிரச் சுரங்கத்தை வெட்டுவதற்கு, சீன உலோக கார்ப்பரேஷனுக்கும் ஜியாங்ஸி தாமிர நிறுவனத்துக்கும் மிகப் பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. சீன தேசிய பெட்ரோலிய கார்ப்பரேஷனுக்கும் மிகப் பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. இந்த வேலைகளையெல்லாம் தடங்கல் இல்லாமல் நாங்கள் செய்ய, பாதுகாப்புச் செலவுகளை அமெரிக்கா பார்த்துக்கொண்டது. நாங்கள் விரும்பியதும் அதுதான்! காபூல் அரசை ஆண்டவர்களின் ஊகிக்க முடியாத போக்கால் இந்தத் திட்டங்கள் கையெழுத்தாகினவே தவிர, ஒழுங்காகப் பணிகள் தொடங்கப்படவில்லை. எங்களுக்குத் தேவைப்படும் கனிம வளங்கள் ஆஃப்கானிஸ்தானில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அமெரிக்கர்கள் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட பிறகு எங்கள் நாட்டு முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் யார் அளிக்க முடியும்? என்னால் நிச்சயம் முடியாது.

ஃப்ரீட்மன்: தலிபான்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஜி: தலிபான்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? நாங்கள் அவர்களை எப்போதாவது நம்பினோமா என்ன? பாகிஸ்தானில் நாங்கள் செய்துள்ள தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறீர்களா? ஜூலை 28 தொடங்கி ‘தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் வெளியான சில செய்திகளை வாசியுங்கள்:

“இஸ்லாமாபாத், பாகிஸ்தான் – தெற்கில் உள்ள துறைமுக நகரமான கராச்சியில் இரண்டு சீனப் பொறியாளர்களை ஏற்றிச் சென்ற கார் மீது, மர்ம ஆசாமிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். பாகிஸ்தானின் நெருங்கிய சகாவான சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் இது. இந்த மாதத் தொடக்கத்தில், வடக்கு பாகிஸ்தானில் அணைக் கட்டுமானப் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சீனப் பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். கராச்சியில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சீனாவுக்குப் பகுதியளவு சொந்தமான கராச்சி பங்கு பரிவர்த்தனை நிலையம் தாக்கப்பட்டது. கத்தரில் சீனா பொறுப்பேற்றுக் கட்டித்தரும் துறைமுகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.”

ஜி: பாகிஸ்தானால் தன்னுடைய சொந்த நாட்டிலேயே, தங்களுடைய நாட்டைச் சேர்ந்த தலிபான்கள், பலூச் பிரிவினைவாதிகளிடமிருந்தே எங்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில், முழு பாகிஸ்தானும் எங்களுடைய வசம் என்று பேசுகிறீர்கள்! தலிபான்களுக்குக் கிடைக்கும் வெற்றியானது உய்குரில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த மாதிரியான உணர்வை ஊட்டும் என்று கேட்டு என் வாயைக் கிளறாதீர்கள். “ஜோ… ஜோ… எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தீர்கள் ஜோ… உங்களுடைய வெளியுறவுத் துறை நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மேலும் சில காலம் காபூலிலேயே நீங்கள் தங்கியிருந்திருக்கலாம் அல்லவா ஜோ… அமெரிக்கா மீண்டும் தன்னுடைய முதலீடு, ஆற்றல், நேரம் முழுவதையும் தன்னுடைய நாட்டின் தொழில் வளர்ச்சியிலேயே செலவிட்டு, 21-வது நூற்றாண்டின் சர்வதேசச் சந்தையில் எங்களுக்குப் பலத்த போட்டியாளராக வருவதை நாங்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக இந்துகுஷ் மலைக் குகைகளில் தலிபான்களை அது தொடர்ந்து துரத்துவதைத்தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

ஃப்ரீட்மன்: முகம்மது ஜாகிர் ஷா, ஆஃப்கானிஸ்தானை 1933 முதல் 1973 வரையில் — அவருடைய மைத்துனரால் பதவியிலிருந்து இறக்கப்படும் வரையில் — ஆண்ட கடைசி மன்னர். அவருடைய ஆட்சிக்குப் பிறகு நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும் போர்களும் படையெடுப்புகளும்தான் மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆஃப்கானிஸ்தானைத் தொடர்ந்து 226 ஆண்டுகள் ஆண்ட பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த கடைசி மாமன்னர் முகம்மது ஜாகிர் ஷா. அவருடைய பேட்டி:

மேன்மை தங்கிய சக்ரவர்த்தி அவர்களே, ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்த அறிவிப்பு குறித்தும், அரசு நிர்வாகத்தை தலிபான்கள் ஏற்றது குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

ஜாகிர் ஷா: முதலில் என்னுடைய நாட்டைப் பற்றி சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். நாங்கள் பல்வேறு மொழிகள், கலாச்சாரம், இனங்களைக் கொண்ட இஸ்லாமியர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய தேசிய கீதம் 14 இனங்களை அங்கீகரித்துள்ளது — பஷ்டூன்கள், தாஜிக்குகள், ஹஜாராக்கள், உஸ்பெக்குகள், பலூச்சிகள், துருக்கியர்கள், நூரிஸ்தானியர்கள், பாமீரிகள், குஜார்கள் பிராஹூயிக்கள், கிஜில்பாஷியர்கள், ஐமக்குகள், பஷாய். நாங்கள் ஷியா, சன்னி, சூஃபி முஸ்லிம்களாகவும் இருக்கிறோம். என்னுடைய முட்டாள் மைத்துனன் என்னுடைய ஆட்சியைக் கவிழ்க்கும் வரையில், என்னை அனைவரும் தங்களுக்கு வேண்டியவனாகப் பார்த்ததால் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துகொண்டிருந்தோம்.

தலிபான்கள் எங்களில் ஒரேயொரு பிரிவான பஷ்டூன் சன்னி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரதிநிதிகள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கர்களால் பதவியிலிருந்து விரட்டப்பட்டதால், இழந்த நாட்டை எப்படி மீண்டும் கைப்பற்றுவது என்பதைச் சிந்திப்பதிலேயே இத்தனை ஆண்டுகளைச் செலவழித்தார்களே தவிர, இப்போதைய ஆஃப்கானிஸ்தானை எப்படிப் புதிதாக நிர்வகிப்பது என்பது குறித்துச் சிந்திக்கவே இல்லை.

ஆஃப்கானிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 70% பேர் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களே. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தலிபான்கள் யார் என்றோ, முல்லா உமர் எவர் என்றோ தெரியாது. ஈரானை ஆண்ட மாமன்னர் ஷா யார் என்றே தெரியாத இருபது வயதுக்குக் குறைவான இளைஞர்கள் ஈரானிய இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதைய இளைஞர்கள் தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்த ஆஃப்கானிஸ்தானில் அல்ல; சுதந்திரம் அளிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தானில் — அது எப்படிப்பட்ட குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் — வளர்ந்தவர்கள். தங்களுடைய சுதந்திரத்தை அவ்வளவு எளிதில் புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்துவிட மாட்டார்கள்.

இந்தப் பகுதியில் வாழும் பழங்குடிகளின் சித்தாந்தமே அலாதியானது. “பங்காளிகள் சண்டைக்கு வந்தால் நானும் என்னுடைய அண்ணனும் சேர்ந்துகொள்வோம்; பகையாளிச் சண்டைக்கு வந்தால் நானும் அண்ணனும் எங்கள் பங்காளிகளுடன் சேர்ந்துகொள்வோம்.” அமெரிக்கர்கள் வெளியாள்கள். எனவே, தலிபான்களுக்குத் தொடர்ந்து தீவிரமான சகோதரர்களும் அசுவாரஸ்யமான பங்காளிகளும் அவ்வப்போது துணைக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். இனி எதுவாக இருந்தாலும் தங்களுடைய 14 இனக் குழுக்களைச் சேர்ந்த சகோதரர்களுடன்தான் பங்கிட வேண்டும். இது அவ்வளவு எளிதாக இருக்காது. நவீன அரசை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து தலிபான்களுக்கு எதுவும் தெரியாது. வியட்நாமின் தேசியத் தலைவர் ஹோ சி மின் தன்னுடைய தலைமறைவு அரசை பாரீஸ் நகரில் இருந்தபடி நிர்வகித்தார். எனவே, பிரான்ஸின் நிர்வாக ஆட்சி முறையையும் அவர் நேரடியாகத் தெரிந்துகொண்டார். இந்த தலிபான்கள் அதிகபட்சம் பாகிஸ்தானில் உள்ள மதறஸாக்களில்தான் படித்திருக்கிறார்கள். அங்கே மருந்துக்கும் அறிவியல் பாடங்கள் கற்றுத்தரப்படுவதில்லை.

அடுத்தது பண வசதி. ஆஃப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்திருந்தாலும் நிர்வாகத்துக்குப் பணப் பற்றாக்குறையே வந்ததில்லை. சவூதி அரேபியாவுக்கு எண்ணெய் வளம் செல்வத்தைக் கொண்டுவந்து குவித்ததைப் போல அமெரிக்கர்கள் கொட்டிக் கொடுத்ததால் வறட்சியே இல்லாமலிருந்தது. இனி அரசு நிர்வாகத்துக்கான பணத்தை உள்நாட்டிலிருந்தே திரட்டியாக வேண்டும். பணத்துக்கு எங்கே போவார்கள் தலிபான்கள்? ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவுக்குத்தான் கஞ்சா கடத்தி சம்பாதிக்கலாம். உய்குரில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருங்கள் என்று சொல்லி சீனா கொஞ்சம் எலும்புத்துண்டுகளை வீசலாம். ஆனால், நாட்டு நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கு அவை போதுமானவையாக இருக்காது. ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதால் பயன் ஏதும் இல்லை, வீண் செலவுதான் என்று உலகின் வல்லரசுகள் உணர்ந்துவிட்டன.

என்னுடைய ஆருடம் இதுதான்: எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து, தேசிய ஒருமைப்பாட்டு அரசை தலிபான்கள் அமைக்கக்கூடும். அதில் மைய அரசு, நீக்குபோக்குள்ள கட்டுப்பாடுகளுடன் மையப்படுத்தப்பட்ட அரசாக இருக்கும். அமெரிக்கர்கள் இருந்ததால் ஆஃப்கானியர்களால் தங்களுக்கும் சமரசம் செய்துகொண்டு ஒரே குடையின் கீழ் வர முடியாமலும் இருந்திருக்கக்கூடும். என்னுடைய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவரைக்கூட அவர்கள் சமரச ஏற்பாட்டில் அடையாளத் தலைவராக ஒப்புக்கொள்ளக்கூடும். என்னுடைய தலைமையிலான ஆட்சிக் காலம்தான் ஆஃப்கானிஸ்தான் வரலாற்றிலேயே மிகவும் அமைதியான காலம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒருவேளை எல்லா அதிகாரங்களையும் தங்களிடமே வைத்துக்கொண்டு பிற தேசிய இனங்களுக்கு எதையும் தர தலிபான்கள் மறுத்தால், என்ன நடக்கும் என்றும் பார்க்க வேண்டும். நாடு அதை ஏற்க மறுக்கும், தலிபான்கள் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டால் நாடு உள்ளுக்குள் வெடித்து ஆழ்ந்துபோகாது; மாறாக, வெடித்து வெளியே சிதறும். நாடு பல சுயேச்சைப் பகுதிகளாகப் பிரியும். ரத்தக்களரிக்கும் அகதிகளின் பெருக்கத்துக்கும் நிலையில்லாத அரசியல் நிலைக்கும் நாட்டைத் தள்ளிவிடும். அப்படி நடந்தால் அதற்குக் காரணம் பைடனும் அமெரிக்காவும்தான் என்று எல்லோரும் குற்றஞ்சாட்டுவார்கள். அமெரிக்காவும் களத்தில் இருக்காது. அதற்குப் பிறகு, ஆஃப்கானிஸ்தான் அதன் பக்கத்து நாடுகளுக்குப் பெரிய தலைவலியாகிவிடும். குறிப்பாக,  அதன் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரானுக்கு.

ஃப்ரீட்மன்: ஹூம்… பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரானுக்குப் பெரிய தலைவலி? இந்த நாடுகளெல்லாம் மாட்டிக்கொள்ளட்டும் என்பதற்காக பைடன் இந்த முடிவை எடுத்திருப்பாரோ?

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன், அமெரிக்காவின் முக்கியமான பொது அறிவுஜீவிகளில் ஒருவர். 'தி நியுயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் வெளியுறவுத் துறைக் கட்டுரையாளர்.



1





சோஷலிஸ்ட் தலைவர்கின்ஷாசாசுகந்த மஜும்தார்உடல் உறுப்புமக்கள் தீர்ப்பால் அடக்கப்பட்ட ‘தலைவர்’உரத் தடையால் தோல்விஇந்திய வரலாறுதேசிய ஒட்டக ஆய்வு மையம்அநாகரீக நடவடிக்கைராகுலின் பாதைஜோக்அண்ணா பொங்கல் கடிதம்ஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?ஷிழ் சிங் பாடல்உபரி வளர்ச்சிகாது கேளாமை ஏன்?பெருநிறுவனங்கள்சுயமான தனியொதுங்கல்எதிர்காலத்தை எப்படி உருவாக்குகிறோம் ?அருந்ததி ராய் அருஞ்சொல்பிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிகற்பூரி தாக்குர்சிவசங்கர் எஸ்.ஜேமுறைகேடு குற்றச்சாட்டுகாக்காய் வலிப்புசுபாஷ் சந்திர போஸ்மதச்சார்பற்ற கருத்துகள்சீனிவாச ராமாநுஜம்லும்பனிஸம்கருநாடகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!