கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

குதிகால் வலியைக் குறைப்பது எப்படி?

கு.கணேசன்
03 Jul 2022, 5:00 am
0

ரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும்; ஓர் அங்குலம்கூட காலை எட்டிவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு நவீன மருத்துவம் ‘குதிநாண் உறையழற்சி’ (Plantar Fasciitis) என்று பெயர் சூட்டியிருக்கிறது.

என்ன காரணம்?

குதிகால் எலும்பிலிருந்து ‘குதிநாண் தட்டைச்சதை’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ஒரு ‘திரவப் பை’ (Bursa) உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல் ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம். 

சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.

யாருக்கு வருகிறது?

முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வருகிறது. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு சற்று அதிகமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால் அவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படுவதுண்டு.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம் அப்’ பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சர்வர்’ வேலை செய்வதுபோல நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் (ஹவாய் செருப்புகள்) இதற்கு உதவும். 

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக் கொத்து மிகவும் விரிந்த நிலையிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குதிகால் வலி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீத சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

என்ன சிகிச்சை?

குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், யூரிக் அமிலம் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பநிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். அதேவேளையில் நீங்களாக கடைகளில் இந்த மாதிரி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றில் பல பக்க விளைவுகள் உண்டு; ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.

வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். இது மட்டும் போதவில்லை என்றால், இப்படிச் செய்யலாம். காலையில் எழுந்திருக்கும்போது உடனே கால்களைத் தரையில் வைத்துவிடக் கூடாது. கால் விரல்களை சிறிது நேரம் நன்றாக உள்மடக்கி பிறகு விரியுங்கள்.  கெண்டைக்கால் தசைகளையும் இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்கு புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு இந்த எளிய பயற்சியிலேயே வலி மறைந்துவிடும்.

அடுத்து இப்படியும் செய்யலாம். காலையில் எழுந்ததும், வெது வெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரண தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறி மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாக கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கின்ற பொருள்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும். இதை பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.

பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ‘இஎஸ்டபிள்யுடி’ (ESWT) எனும் ஒலி அலை சிகிச்சையும் ‘ஐஎஃப்டி’ (IFT) எனும் வலி குறுக்கீட்டுச் சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.

இதுபோன்ற எளிய சிகிச்சைமுறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydrocortisone) என்ற மருந்தை ’லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும். என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக் கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன என்பதால் இந்த எச்சரிக்கை. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.

தடுக்க என்ன வழி?

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக் கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.

குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டும் பயிற்சி குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. காரணம், முன்பாதத்தில் அழுத்தம் கொடுத்து பெடல் செய்வதால், மொத்த பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வலி குறையும்.

உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.

குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக் கூடாது. தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும்தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும். ‘எம்சிஆர்’ (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடு முரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக் கூடாது. நீரிழிவு நோய், ‘கவுட் (Gout) போன்ற நோய்கள் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம்.  அழுத்தமான ஷூக்களையும் அணியக் கூடாது. லூசான ஷூக்களையும் அணியக் கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசைநாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலியை ஏற்படுத்த இவை துணை போகும்.

புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுகிற மாதிரிதான். எனவேதான் இந்த எச்சரிக்கை!

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கூடுதல் சலுகைபெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிதமிழ்ப் புத்தாண்டு அண்ணாலத்தீன் அமெரிக்க இலக்கியம்அரசியல் பழகுபுதியன விரும்புபவுத்த அய்யனார்பொருளாதாரப் பரிமாணம்பழைய விழுமியங்கள்நபர்வாரி வருமானம்நைரோபி1232 கி.மீ. அருஞ்சொல்சிந்தனை வளம்நர்வாசித்தராமய்யாரிஷப் ஷெட்டிஇரண்டு செய்திகள்வாசகர் கேள்விஎஸ்.பாலசுப்ரமணியன்இறப்பு - வறுமை - வரி வருவாய் கணக்கிடுவது எப்படி?கச்சா பானிThe Quadஅருண் மைராவிலங்குகள் மீதான கரிசனம்தேர்வுகள்the wireத.செ.ஞானவேல் பிரத்யேகப் பேட்டிஅரசுகளுக்கிடையிலான கவுன்சில்இஸ்லாமிய அமைப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!