கட்டுரை, பேட்டி, ஆளுமைகள் 45 நிமிட வாசிப்பு

பாசிஸம்: அருந்ததி ராய் முழுப் பேட்டி

கரண் தாப்பர்
25 Mar 2022, 3:40 pm
1

நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் பேச்சு – எழுத்துகளுக்குப் பெயர் பெற்றவர்களில் ஒருவரான அருந்ததி ராயினுடைய சமீபத்திய பேட்டி. ‘தி வயர்’ இதழுக்காக கரண் தாப்பருக்கு அருந்ததி ராய் அளித்த விரிவான இந்தப் பேட்டியை மூன்று அத்தியாயங்களாக ‘அருஞ்சொல்’ வெளியிட்டது. தற்போது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் முழு வடிவத்தையும் இங்கே தருகிறது.

இந்திய அரசியலில் தற்போது காணப்படும் குழப்பங்களுக்கும் அலங்கோலங்களுக்கும் வெறுப்புச் சூழலுக்கும் நடுவில் ஒரு கேள்வி மட்டும் அதிகம் எழுப்பப்படாமலேயே இருந்துவருகிறது. அப்படியே எழுப்பப்பட்டாலும் அரிதினும் அரிதாகவே நேர்மையான பதில் கிடைக்கிறது: ‘எந்த மாதிரியான நாடாக நாம் உருவாகிக்கொண்டிருக்கிறோம்?’ நாம் இன்று அலசப்போகும் முக்கியமான வாதப்பொருள் இதுதான். அருந்ததி ராய் அவர்களே, நீங்கள் 2009இல் எழுதிய ஒரு கட்டுரையில் எழுப்பியிருந்த ஒரு கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இக்கேள்வி இன்று மேலும் அதிகப் பொருத்தப்பாடுடையதாக மாறியிருக்கிறது. “ஜனநாயகத்துக்கு நாம் இழைத்திருப்பது என்ன? அதனை எதுவாக நாம் மாற்றியிருக்கிறோம்? ஜனநாயகத்தைப் பொள்ளலாக்கிவிட்டு, அதன் நோக்கங்களை அர்த்தமிழக்கச் செய்துவிடும்போது என்ன நிகழும்? அதன் நிறுவனங்கள் எல்லாவற்றையும் உருமாற்றி அபாயகரமானவொன்றாக மாற்றிவிடுகையில் என்ன நடக்கும்? இன்றைய மோடியின் இந்தியாவை வைத்து உங்களுடைய இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமா?

2009 என்பது 13 வருடங்களுக்கு முந்தைய காலம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதைப் பற்றி நம்மில் சிலர் கவலைப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். இப்போதைய நிலையைப் பற்றி என்ன சொல்வது? ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. மோடியின் அபிமான தொழிலதிபர் அவருடைய இரண்டாவது அபிமான தொழிலதிபரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார். அதானியின் சொத்து மதிப்பு $ 88 பில்லியன். அம்பானியின் சொத்து மதிப்பு $ 87 பில்லியன்.

அதானியின் 88 பில்லியன் டாலர்களில், 51 பில்லியன் இந்தியாவில் பெரும்பாலோர் வறுமையிலும், பசியிலும், வேலையிழப்பிலும் அவதியுற்றிருந்த கடந்த ஒரு வருடத்தில் ஈட்டப்பட்டது. எனவே, உங்களுடைய கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் அளிக்க வேண்டி இருக்கிறது. இன்று பல்வேறு கிளைகளாகக் கிளைத்துச் சென்றுகொண்டிருக்கும் இந்த இருப்புப் பாதைகளுக்கு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தடம் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கட்டுரையை நான் எழுதிய காலகட்டத்தில், வெறும் 100 பேரிடம் ‘மொத்த தேசிய உற்பத்தி’யில் (GDP) 25% இருந்தது. மோடி வந்ததும் ராட்சத வர்த்தகத்துக்கு ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார். அந்த காலத்தில் - 2009இல் - குஜராத் படுகொலைகளை, குஜராத் வீதிகளில் முஸ்லீம்கள் நரவேட்டையாடப்பட்டதைப் பார்த்த பிறகும், ரத்தன் டாட்டாவும் அம்பானியும் நரேந்திர மோடியை வருங்காலப் பிரதமராக வருவதற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது என்ன நடந்திருக்கிறதென்றால் – 2021ஆம் வருட ஆக்ஸ்ஃபாம் அறிக்கைதான் வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறதே – ஏற்றத்தாழ்வு சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறது (இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தில் 57.3 லட்சம் கோடி ரூபாய்கள் 100 பேரிடம் மட்டும் குவிந்திருக்கிறது. அதே நேரத்தில் மக்கட்தொகையில் 50% சதவீதத்தினரின் பங்கு வெறும் 6% மட்டும்தான்). உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர் மிகச் சரியாக வர்ணித்தார்: “இந்த நாட்டை நான்கே பேர்தான் நடத்திவருகிறார்கள். இரண்டு பேர் அதை விற்கிறார்கள், இரண்டு பேர் அதை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நான்கு பேருமே குஜராத்திகள்.”

துறைமுகங்கள், சுரங்கங்கள், பெட்ரோகெமிகல்ஸ், ஊடகங்கள், இணையம் எல்லாமே இவர்கள் வசம்தான் இருக்கிறது. இதைப் போன்ற ஏகபோகத் தனியுடமையை முதலாளித்துவ நாடுகளில்கூட காண முடியாது. சமீபத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில், ‘அமீர் ஹிந்துஸ்தான், கரீப் ஹிந்துஸ்தான்’ (‘பணக்கார இந்தியா, ஏழை இந்தியா’) பற்றிப் பேசியதைக் கேட்டோம். அஸாசுதீன் ஓவைஸி, ‘மொஹப்பத் கி ஹிந்துஸ்தான், நஃப்ரத் கி ஹிந்துஸ்தான்’ (அன்பார்ந்த இந்தியா, வெறுப்பு மண்டிய இந்தியா) பற்றிப் பேசினார். இத்தகைய பகையுணர்வு சமீபத்தில்தான் தலையெடுத்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. நெடுங்காலமாகவே ஊறிவந்திருப்பவைதான். ஏனென்றால், விலைபோகாத சரக்காக இருந்த இந்து தேசியத்தை ஆதரித்து சுவீகரித்துக்கொண்டிருப்பதே கார்ப்பரேட் வர்க்கம்தான். அவர்களுக்கான வங்கி உத்தரவாதம் அது.

ஐமுகூ ஆட்சியில் இருந்தபோதும் ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன, கார்ப்பரேட்களின் பெரும் முதலீடுகள் பல இடங்களில் உள்ளே புகுந்து அரித்திருக்கின்றன. ‘பணம் இருந்தால் எதையும் வாங்க முடியும் என்பதே மிகச்சிறந்த ஜனநாயக அமைப்பு’ அல்லது ‘வாங்கும் சக்தி கொண்டவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் என்பது கட்டுப்படியாகும்’ என்ற நிலைமையை நோக்கி அப்போது சென்றுகொண்டிருந்தோம்.

ஆனால், இப்போது இந்த ஜனநாயக அமைப்புகள் எல்லாவற்றிலும், ஊடகங்களிலும் நீதிமன்றங்களிலும் உளவுத் துறையிலும் மட்டுமல்ல, பெரிதும் கவலையளிக்கும்படியாக ராணுவத்திலும், கல்வி நிலையங்களிலும் கூட இந்த இந்து தேசியம் ஊடுருவியிருக்கிறது அல்லது அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தை ‘மங்க்கி பாத்’ நிகழ்ச்சிபோல ஆக்கியிருக்கிறார்கள் – மேற்கண்ட வாக்கியத்தை நான் இந்தியில் சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்! அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் என லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் இச்சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது மீறியதா என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமர் தனது அலுவலகத்தின் மாண்பையே குலைக்கிறார். திடீரெனத் தோன்றி, நாணய மதிப்பிழப்பை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்குகிறார்; வெறும் நான்கு மணி நேரம் அவகாசமளித்து நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது (வேளாண் சட்டங்களைப் பிரகடனம் செய்ததற்கு இணையான அவமதிப்பு அதைத் திரும்பப் பெற்றதிலும் இருந்தது), இவையெல்லாமே ஜனநாயகம் என்ற தத்துவத்தையே கேலிசெய்யும் போக்கு அல்லாமல் வேறென்ன?

இறுதியாக, என்ன நடந்திருக்கிறது என்றால், பாஜகவும் அதன் தலைவரும் தேசம் என்பதும் அரசு என்பதும் என்னவென்று புரிந்துகொள்ளாமல் அவை இரண்டையும் தம்மோடு சேர்த்து குழப்பிக்கொள்ளத் தொடங்கியிருப்பதுதான்; பாஜக செல்வச்செழிப்போடு இருக்கிறதென்றால் இந்தியாவும் செல்வச்செழிப்போடு இருக்கிறது; பாஜகவை நீங்கள் விமர்சித்தால் நீங்கள் தேச விரோதி. மிகவும் அபாயகரமான போக்கு இது.

ஜனநாயகம் என்பதே அழிந்துவிட்டதாகச் சொல்கிறீர்களா, அல்லது வலுவிழந்துவிட்டதாகச் சொல்கிறீர்களா, அல்லது அரித்து சிதைவுற்றிருப்பதாகச் சொல்கிறீர்களா? இம்மூன்றில் எது?

ஜனநாயகம் மிக மோசமாக அரிக்கப்பட்டு, அதன் அமைப்புகள் எல்லாமே அதனதன் இடங்களில் வெற்றுக்கூடுகளாக நின்றுகொண்டிருக்கின்றன என்கிறேன். ‘ஜனநாயகத்தின் கண்காட்சிப் பலகணி’யாக நாம் மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறோம்.

நாம்தான் உலகத்திலேயே மாபெரும் ஜனநாயகம் என்ற இந்தியாவின் நம்பிக்கை கேள்விக்குரியது என்கிறீர்களா? 

நிச்சயமாக.

இன்று உருமாற்றமடைந்திருக்கும் நமது நாட்டின் சில அம்சங்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன். டிசம்பர் மாதம் ஹரித்வாரில் இன சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்று ரத்தத்தை உறையவைக்கும் வெறிக்கூச்சல் எழுந்தது. முஸ்லீம்களை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். இந்திய அரசிடமிருந்து எந்தவோர் எதிர்வினையும் எழவில்லை. காதைச் செவிடாக்கும் மௌனம். நாட்டின் பிரதம மந்திரியோ, ஒரேயொரு அமைச்சரோ, பாஜகவைச் சேர்ந்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரோகூட இதைக் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. மதச்சார்பின்மை என்ற நமது அரசமைப்புக் கடப்பாட்டிலிருந்து நாம் விலகி, ஒரு பெரும்பான்மை இந்து நாடாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாக இதைப் பார்க்கிறீர்களா?

இந்த ‘தர்ம ஸன்ஸத்’துகள் ஏராளமாக இருக்கிறார்கள். வெளிப்படையாக இனப்படுகொலைக்குத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும் என்கிறார்கள். கிறித்துவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஏசுநாதரின் சிலைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. வெறுப்புப் பிரச்சாரகர்களில் முக்கியமானவரும், தாக்குதல்களை முன் நின்று நடத்தியவருமான யதி நரசிங்கானந்தை நீதிமன்றம் பிணையில் விடுவிக்கிறது.

ஆகவே, அரசாங்கம் மட்டுமல்ல, நீதிமன்றங்களும், அரசு இயந்திரமும் இதற்குத் துணை நிற்கின்றன. பேராசிரியர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஜெயில்; இனப் படுகொலைக்கு அறைகூவல் விடுப்பவருக்கு பெயில்.

வேறு சில நிகழ்வுகளையும் பார்க்கிறோம்- கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையைப் போல. இங்கும் நீதிமன்றம் இந்து பெரும்பான்மைவாதத்துக்கு ஆதரவாக நிற்கிறது. ஒருவேளை இது தற்காலிக நிலைப்பாடாகவே இருக்கக்கூடும். இந்து பெரும்பான்மைவாதம் என்ற பதம் சிக்கலானது. அதற்கு பின்னால் வருவோம். ஆனால், முஸ்லீம் பெண்கள் வகுப்பறைகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவது சரியல்ல என்றால், பிரதமரும், உத்தர பிரதேச முதல்வரும் காவியுடை அணிந்துகொண்டு காட்சி தருவது நியாயமா?

நமது நாட்டின் சட்டத் துறைக் கோட்பாடுகளும், சட்டங்களும் மிகவும் நுட்பங்களும் சிக்கல் சிடுக்குகளும் நிறைந்தவை. ஆனால், இச்சட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது உங்களுடைய சாதி, உங்களுடைய மதம், உங்களுடைய பாலினம், உங்களுடைய இனம் ஆகியவற்றைப் பொறுத்தது. இது விஸ்தாரமாக கிளை விரித்துப் பரந்திருக்கும் மாபெரும் மரம் ஒரு மணற்பரப்பின் மீது நிற்க வைக்கப்பட்டிருப்பதற்கு ஒப்பானது.

பெரும்பான்மைவாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறோமா என்றால், அதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் இலக்கு என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறதே! இந்தியா ஓர் இந்து நாடுதான் என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்றார் மோகன் பகாவத்.  நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ்ஸின் உறுப்பினர். அந்தத் திசையை நோக்கித்தான் நம்மை செலுத்திக்கொண்டு செல்கிறார்.

எனவே நாம் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகிவிட்டோம், என்கிறீர்களா?

இல்லை. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த இந்துப் பெரும்பான்மைவாதம் கிளர்ந்துகொண்டிருக்கிறது. அரசியல்ரீதியாக இந்த இந்து பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. முதலில் ‘ஜாட்-பாத் தோடக் மண்டல்’ (சாதிய வேறுபாடுகளைக் களையும் கழகம்) உண்டானது, பிறகு ஆர்எஸ்எஸ் வந்தது.

இந்துக்கள் பல்வேறு வகைப்பட்ட சமூகமாக இருப்பவர்கள். இச்சமூகத்தில் அடங்கியுள்ள ஜாதிகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று விரோதம் பாராட்டி சச்சரவிட்டுக்கொண்டிருப்பவை. இப்படிப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மைத்துவத்தை உருவாக்க முயல்வது வன்முறைகளில்தான் முடியும், தோல்வியடையும். தோல்வியடையத்தான் வேண்டும்.

நீங்கள் என் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. நாம் ஒரு இந்து பெரும்பான்மைவாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறோமா?

ஆம்.

நம்மிடம் மதச்சார்பின்மை அழிந்துவிட்டிருக்கிறதா?

இந்த அரசு அந்த திசையை நோக்கித்தான் நம்மை நடத்திச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவதுதான் அதன் நோக்கம்.

இந்த அரசு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லை; இந்து நாடாக மாற்றத்தான் விரும்புகிறது, என்கிறீர்களா?

வேறென்ன, இதுவொன்றும் ரகசியம் அல்ல. அவர்களே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்களுடைய ஜொனாதன் ஷெல் நினைவு உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்: “நாம் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்துவருவதாக பாவனை செய்துவருவதுதான் – அது எவ்வளவுதான் பாசாங்காக இருந்தாலும் – இந்தியாவை ஒருங்கிணைத்திருக்கும் ஒரே பிணைப்பாக இருக்கிறது. எங்களிடம் உள்ள மிகச்சிறந்த பண்பு இந்தப் பாசாங்குதான். இது இல்லாவிட்டால் இந்தியா முடிந்துவிடும்.” நீங்கள் “இந்தியா முடிந்துவிடும்” என்று சொல்வதன் பொருள் என்ன?  

யூகோஸ்லாவியா முடிந்ததைப் போல; சோவியத் யூனியன் எப்படி முடிவுக்கு வந்ததோ அதைப்போல.

அதாவது, உடைந்துவிடும் என்கிறீர்களா?

ஆம், இந்தியா என்பதே பல்வேறு மதங்கள், ஜாதிகள், இனக் குழுக்களுக்கு இடையிலான ஒரு சமூக ஒப்பந்தம்தான். இந்த நிலப்பரப்பில் 780 மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள். இது ஒரு சமூக ஒப்பந்தம். அவ்வாறிருக்க, இந்து தேசமாக மாற்றுவோம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேசம் என்று சமுத்திரத்தை ஒரு ‘பிஸ்லெரி’ பாட்டிலில் அடைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். பெரும் குலைவுகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி இது.

நரேந்திர மோடியும் அவருடைய ஆட்களும் இப்போது செய்துகொண்டிருப்பது நாடெங்கிலும் டைனமைட்களைப் புதைத்து வைத்துவிட்டு அவற்றின் திரிகளைப் பிடித்துக்கொண்டிருப்பதுதான். இந்த அழுத்தம் மேலும் அதிகரித்தால் எல்லாமே வெடித்துச் சிதறிவிடும். இந்த தேசத்தின் அழகான அம்சங்கள் எல்லாவற்றின்மீதும் அமிலத்தைக் கொட்டி பொசுக்கிவிடுவற்கான முயற்சி இவர்களுடையது.

தெளிவுபடுத்திக்கொள்வதற்காகக் கேட்கிறேன். பல்வேறுபட்ட மக்கள், கலாச்சாரங்கள், மதங்கள், இனங்கள் கொண்ட ஒரு பெருங்கடலை பிஸ்லெரி பாட்டிலுக்குள் அடைக்க முயல்வதால் இந்த நாடு உடைந்துவிடும் என்கிறீர்கள், அப்படித்தானே?

ஆம், காலப்போக்கில் அதுதான் நடக்கும்.

இந்தியாவில் உண்மையிலேயே ‘பால்கனைசேஷன்’ (பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு இனவாரியாக தனித்தனி சுதந்திர நாடுகளாகப் பிரிந்துவிடுவது) நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

பால்கன் பிரிவினைகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த நாடுகள் சிதறுவதற்கு முன் நடந்த வன்முறைகளின் சாயல்கள் இங்கே தென்படுவதைப் பார்க்கும்போது உடல் நடுங்குகிறது. ஏராளமான வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கியிருக்கும் விஸ்தாரமான ஒன்றை அழுத்திச் சுருக்கி, கெட்டியாக்கி தண்ணீருக்குள் அழுத்துகிறீர்கள். அது நிச்சயம் வெடித்துச் சிதறிவிடும்.

எவ்வளவு சீக்கிரத்தில் அது நடக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? காலவரம்பு எதேனும் உள்ளதா?   

தெரியவில்லை. யோகி ஆதித்யநாத் பேசியதைக் கேட்டீர்கள்தானே? “உத்தர பிரதேசம் கேரளாவாக, வங்காளமாக, கஷ்மீராக மாறிவிடும்” என்கிறார். அதாவது ‘உங்களை மருத்துவ வசதிகள் இல்லாத, செல்வச் செழிப்பு இல்லாத, வேலைவாய்ப்புகள் இல்லாத இந்தக் குப்பைமேட்டிலேயே இருக்கவைத்திருப்போம். சில ரொட்டித் துண்டுகளை வீசியெறிவோம். ஆனால் கேரளாவைப் போல ஆகிவிடாதீர்கள்!” ஏனென்றால், அங்கே மருத்துவமனைகள் இருக்கின்றன, கல்வி நிலையங்கள் இருக்கின்றன, அங்கு படிப்பறிவு இருக்கிறது. இவையெல்லாம் மிகவும் அபாயகரமான விஷயங்கள். 

முஸ்லீம்களையும் தலித்துகளையும் இங்கு மாறிவரும் சூழலில் நாம் நடத்தும் விதத்தைப் பற்றியும் பேச வேண்டும். ஆர்தர் மில்லரின் அமைப்பான ‘எழுதுவதற்கான சுதந்திரம்’ உரையில் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்: “கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா கொலைகார நாடு என்ற பெயரை சம்பாதித்திருக்கிறது. முஸ்லீம்களும் தலித்துகளும் பொதுஇடங்களில் சவுக்கடிபட்டிருக்கிறார்கள், பட்டப்பகலில் இந்து கண்காணிப்புக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ‘கொலை வீடியோக்கள்’ பிறகு பெருமையோடு யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.” அப்படியென்றால், நாம் மிருகத்தனமான நாடாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? அல்லது இன்னும் சரியாகக் கேட்கவேண்டுமென்றால், நம்முடைய அரசாங்கம் நம்மை மிருகத்தனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறதா? 

நாம் எப்போதுமே மிருகத்தனமான நாடாகத்தான் இருந்துவருகிறோம். இப்போது புதிதாக ‘ஆகிக்கொண்டிருக்கவில்லை’. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய ராணுவம் அதன் சொந்த மக்களுக்கு எதிராக, வடகிழக்குப் பகுதியிலோ, கஷ்மீரிலோ, ஹைதராபாத்திலோ நிறுத்தப்பட்டிருக்காத ஒருநாள்கூட இருந்ததில்லை. மேலும், இங்கு இருப்பதைப் போல சாதிக் கொடுமைகள் நடக்கும் எந்த நாடும் மிருகத்தனமான நாடாகத்தான் இருக்க முடியும். ஜாதியின் அடிப்படையில் இங்கு நிலவுவது ஒரு மிருகத்தனமான படிநிலை அமைப்பு. இது இருந்தால்தான் கீழ்ச்சாதியினரின் போராட்டங்களையும், அவர்கள் அவ்வப்போது காட்டும் எதிர்ப்புகளையும் சமூகரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது ஹத்ராஸில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம், கயர்லாஞ்சியில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம். தினம் தினம், ஒவ்வொரு நாளும்.

அரசியல் கட்சிகள் தலித் வாக்குகளை தம் பக்கம் இழுப்பதற்காக முயன்றுகொண்டிருக்கும்போதே நடக்கின்ற இந்த வன்முறைகளை சமுதாய வன்முறை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முஸ்லீம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் நிகழ்த்தப்படுபவை பலாத்காரங்களும், கும்பல்கொலைகளும் (lynching) கூட்டுக்கொலைகளும், படுகொலைகளும். இந்தக் காரியங்களைச் செய்தால் அவர்கள் பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு மாலையிடப்படும், அமைச்சராக்கப்படுவார்கள். ஒருநாள் பிரதமராகவோ, உள்துறை அமைச்சராகவோகூட ஆகிவிடலாம், கடவுள்தான் அறிவார்.

இந்த வகுப்புவாத அணிதிரட்டலுக்கு உள்ளே இருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தை கவனிக்க வேண்டும்.  “கடந்த 100 வருடங்களாக நாம் மொகலாயர்களை எதிர்த்துப் போராடிவருகிறோம்,” என்கிறார் அமித் ஷா. அதாவது முஸ்லிம்கள் என்பதற்கு இடக்கரடக்கலாக முகலாயர்கள் என்கிறார். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களின் நேரடி வாரிசுகள்; கிறிஸ்தவர்கள் மேலை நாட்டவர்களின் ஏஜென்ட்டுகள்.

உண்மை என்னவென்றால், ஜாதி என்பது இதற்குள் பொதிந்திருக்கிறது. ஜாதி கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே லட்சக்கணக்கான இந்தியர்கள் இஸ்லாத்துக்கும், கிறித்துவத்துக்கும், சீக்கியத்துக்கும் மாறியிருக்கிறார்கள். இந்து ஜாதியமைப்பின் கொடுமைகளில் பாதிக்கப்பட்ட இவர்கள்தான் இப்போது மொகலாயர்களின், ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இதனால் நீங்கள் சொல்லவருவது?

நான் சொல்லவருவது, இந்த மிருகத்தனமும், வகுப்புவாத அணிதிரட்டலும் இந்த நாட்டின் சமூக அமைப்புக்குள்ளேயே பொதிந்திருக்கின்றன என்பதுதான். வெறும் அரசாங்கம் மட்டும் இந்நிலைமையை உருவாக்கிக்கொண்டிருக்கவில்லை. இச்சமூகமே மிருகத்தனமாகத்தான் நடந்துவருகிறது.

நம்முடைய பாரம்பரிய குணாம்சத்தில் இருக்கும் மிருகத்தன்மையை அரசாங்கம் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறதா?

ஆம், அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. வெறும் ஊக்கப்படுத்தல் மட்டுமல்ல, அது தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது, சுரண்டிக்கொண்டிருக்கிறது, பலவீனமான இடங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் நம்மை மிருகத்தனமாக்கிக்கொண்டிருக்கிறதா?

ஆம், நிச்சயமாக. இதில் சந்தேகமே இல்லை.

சரி, இந்தப் பின்னணியில், நான் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். இந்தியா ஒரு பாசிஸ நாடாகிவிட்டதா? உங்களுடைய சமீபத்திய நூலான ‘ஆசாதி’யின் முன்னுரையில் நீங்கள் எழுதியிருப்பது: “பாசிஸத்தின் கட்டமைப்பு நம் முகத்துக்கெதிரே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது, ஆனால், அதை இன்னமும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு தயங்கிக்கொண்டிருக்கிறோம்.” நான் என்ன கேட்க வருகிறேன் என்றால், நம்மைச் சூழ்ந்திருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளாக எவற்றைப் பார்க்கிறீர்கள்? நம் முகத்துக்கெதிரே முறைத்துக்கொண்டிருக்கும் எந்த அறிகுறிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல், அவற்றை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறோம்? 

பாசிஸம் பற்றிய கேள்வி வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தியாவில் மட்டுமல்ல, பொதுவாகவே எல்லா இடங்களிலும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளை ஒரு பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அவற்றை இப்போது உரக்க வாசிக்கிறேன், நீங்களும், வாசகர்களும் இந்த அறிகுறிகளை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் ‘பாசிஸம்’ என்பது ஒரு சகஜமான, சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல்லாகிவிட்டிருக்கிறது. அதனால் இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்து இந்த அறிகுறிகள் பட்டியலைத் தயாரித்தேன்:

ஒன்று: ‘ஒரு கடுமையான சமூக நெருக்கடியை நடைமுறையில் இருக்கும் சமூகப் படிநிலைக்கு அச்சுறுத்தலாகக் காண்பது.’ அதுதான் ஆரம்பம். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிடுமோவென்ற அச்சம் தலையெடுக்கிறது. உடனே புதிய ஜாதி கட்சிகள் முளைக்கத் தொடங்குகின்றன: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், முலாயம் யாதவின் சமாஜ்வாடி கட்சி.

இரண்டு: மிகவும் பரிசுத்தமான உயர்குடி சூப்பர்மேன் பிம்பம் ஒன்றை கற்பனையில் உருவாக்கி, அதன் வழியே தேசிய எழுச்சியை வீரியமாக்குவதற்காக புராண காலத்திய தொன்மங்களை மீட்டெடுப்பது. என்னவென்று புரிகிறதா? பிராமணர்கள் என்போர் பூதேவர்கள் – பூமியில் வாழும் தெய்வங்கள் – என்று நம்பும் ஒரு மேலாண்மைச் சமூகம் ஒரு பக்கத்திலிருந்து ஒன்னொன்றுக்கு பக்கவாட்டில் இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.  

மூன்று: ‘தேசிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினரின் ஆதரவோடு மாபெரும் கூட்டு இயக்கம் ஒன்றை நடத்துவது.’ பாபர் மசூதியை இடித்துத் தள்ளும் குறிக்கோளோடு அத்வானியின் ரத யாத்திரை நடக்கிறது; அதே நேரத்தில் இந்தியச் சந்தைகள் திறந்து தனியார்மயம் அதீதமாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக இடஒதுக்கீட்டு தத்துவமே நீர்த்துப்போகிறது. இது உத்தர பிரதேச தேர்தலில் முக்கியப் பங்காற்றப் போகிறது.

நான்கு: ‘மேலாதிக்கப் போக்கு கொண்ட அராஜக கட்சி ஒன்றின் எழுச்சி.’

ஐந்து: ‘நாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக புனைச்சுருட்டுகளைக் கட்டமைப்பது.’ இவை பெரும்பாலும் வகுப்பு, மதம், இனம் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆறு: ‘முதலாளி வர்க்கத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் கிளர்ச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கி நசுக்கும் அராஜக அரசாங்கம்.’

ஏழு: ‘சுதந்திரமான ஜனநாயகச் சிந்தனை வெளிப்பாடுகளுக்குத் தடை விதிப்பது.’

எட்டு: ‘எதிர்தரப்பினரைப் பொது இடங்களில் வைத்துத் தாக்குவது, ஆயுதங்களோடு வந்து மிரட்டுவது, சில நேரங்களில் கொல்வது.’ உ-ம்: ஆர்எஸ்எஸ் படையினர், பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத்.

ஒன்பது: ‘ஆணாதிக்க மிரட்டல்கள், பெண்ணிய எதிர்ப்பு, ஜாதி வெறித் தாக்குதல்கள் (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை நிறவெறித் தாக்குதல்கள்) அந்நியர் வெறுப்பு.’

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’ உ-ம்: பெகாஸஸ்.

உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒரு சிலராவது, இது எல்லாமே சுத்த அபத்தம், என்பார்கள். ‘உலகத்தில் பல நாடுகள் அவர்களுடைய பழம் பெருமைகளை, கடந்த கால பொற்காலத்தை பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரிட்டன் அதைத்தான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறது. பல நாடுகளில் ஒரேயொரு வலுவான கட்சிதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது, எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக, உதிரிக் கட்சிகளாக இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை பல நாடுகளில் இதுதான் நிலைமை’ என்பார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, இதுதான் பாசிஸம் என்கிறீர்கள். இது சரியா?   

இதோ பாருங்கள், நான் ஒன்றும் இவர்கள் மகத்தான கடந்த காலத்தைப் பேசுகிறார்கள் என்று சொல்லவில்லை. இவர்கள் பேசுவது மகத்தான புராண காலத்தை, தொன்மக் கதைகளை என்கிறேன். ஜெர்மன் நாசிகள் தம்மை ஆரிய வம்சம் என்று அழைத்துக்கொண்டதைப்போல இவர்கள் தம்மை மனிதர்களில் உயர்ந்த ஜாதி என்று பிரகடனப்படுத்திக்கொள்வதைப் பற்றிச் சொல்கிறேன். பிரிட்டனில் பஜ்ரங் தள்ளும், ஆர்எஸ்எஸ் ஆயுத அணியும் இருக்கிறதா? அவர்கள் மக்களை நடுத்தெருவில் கொன்றுகொண்டிருக்கிறார்களா? அவர்கள் முஸாஃபர் நகர், குஜராத்போல கலவரங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்களா?

நாம் ஒரு பாசிஸ நாடாகிவிட்டோம் என்பதை ஏன் நம்ப முடியவில்லை என்று சொல்கிறேன்: விவசாயிகள் போராட்டத்துக்கு அரசு பணிகிறது; அரசின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பும் ஊடகங்கள் சிலவாவது இருக்கின்றன; தேர்தல்களில் அரசுகள் தோற்கடிக்கப்படுகின்றன; மோடி தேசிய அளவில் தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் மாநில அளவில் தோற்கடிக்கப்படுகிறார்; அரசை அவ்வப்போது கண்டிக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இங்கு உண்டு; பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை ஓர் உதாரணம். இதெல்லாம் உண்மையில் பாசிஸமா?

நம்மை ஆள்வது ஒரு பாசிஸ அரசு என்று நான் சொல்லவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் அடிப்படையில் பாசிஸ்ட்டுகளாக இருப்பவர்கள்தான் என்றும், நம்மை அந்தத் திசை நோக்கித்தான் வழிநடத்திச் செல்கிறார்கள் என்றும் சொல்கிறேன்.

நரேந்திர மோடி அடிப்படையில் ஒரு பாசிஸ்ட் என்கிறீர்களா?

ஆம், அவருடைய ஆர்எஸ்எஸ்ஸும் பாசிஸ அமைப்புதான்.

பாஜக என்பதே முற்றிலுமாக பாசிஸ கட்சிதானா?

ஆம். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை வகுப்பாளர்கள் வெளிப்படையாகவே முசோலினியை, ஹிட்லரைப் பாராட்டியவர்கள். முஸ்லீம்களை ஜெர்மனியின் யூதர்களோடு ஒப்பிட்டவர்கள். இவையெல்லாமே நாம் அறிந்ததுதான். இவர்கள் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனம் செய்ய முடிவெடுத்ததையும் நாம் அறிவோம். இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் ‘யூஜெனிக்ஸ்’ பரிசோதனைகள் பற்றியும் நமக்குத் தெரியும். இந்த முயற்சிகளிலெல்லாம் அவர்களுடைய பிடி தளர்ந்து வருவதாகத்தான் நினைக்கிறேன். அவர்களால் வெற்றிபெறமுடியுமென்று தோன்றவில்லை. ஆனால் இந்த இருட்குகையை நாம் கடந்துசென்றாகத்தான் வேண்டும். இறுதியில் இந்நாட்டின் மக்கள் இவர்களுடைய முயற்சிகளை நிச்சயமாகத் தோற்கடித்துவிடுவார்கள், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாசகர்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன்: நாம் ஒரு பாசிஸ நாடாக இன்னும் ஆகிவிடவில்லை என்கிறீர்கள். ஆனால் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறீர்கள், அப்படித்தானே?

அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலைமையே வேறாக இருந்தது. இவர்களுடைய பரிசோதனைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் அபாயம் மிகவும் நெருங்கியிருந்தது. இப்போது எவ்வளவோ பரவாயில்லை.

எது மாற்றியிருக்கிறது?

மிகப் பெரிய போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டம். இப்போது உத்தர பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

எனவே இந்தியா எதிர்த்துப் போராடுகிறது என்கிறீர்கள்? மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்களா?

ஆம், மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள், அரசியல் கட்சிகள் அல்ல.

நீங்கள் சொல்வதில் இரண்டு விஷயங்கள் ஒன்றுக்கொன்று சற்றே முரண்படுகின்றன: ஒரு பாசிஸ நாடாக மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்; இரண்டு வருடங்களுக்கு முன் அந்த அபாயம் இப்போதைவிட அதிகமாக இருந்ததாகச் சொல்கிறீர்கள். இன்று நிலைமை மாறியிருப்பதற்குக் காரணம், மக்கள் – குறிப்பாக விவசாயிகள் எதிர்த்துப் போராடத் தொடங்கியிருப்பது என்கிறீர்கள், இல்லையா?

தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை (NRC) எதிர்த்தும் மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பு…

ஆனால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது அதற்கு முன்பு; அந்தப் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு.

சரி, இன்று நிலைமை எப்படி உள்ளது? இந்தியா பாசிஸ வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறதா?

பாசிஸக் கொள்கைகள் இப்போது சற்று வலுவிழந்திருப்பதாகத்தான் சொல்வேன்.

அப்படியென்றால்?

உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடப்பவற்றையும், விவசாயிகள் போராட்டங்களையும் பார்க்கும்போது, மக்களுக்கு இவ்வளவு காலமாக தாம் ஏய்க்கப்பட்டு வந்திருப்பது புரிந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.

அதாவது, பாசிஸ நாடாகிவிடும் அபாயம் வெகுவாகக் குறைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆகவே நிலைமை சீரடைந்துவருகிறது எனலாமா?

ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.

எனவே நீங்கள் ஜொனாதன் ஷெல் உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போன்ற நிலைமை ஒன்றரை வருடங்களுக்கு முன் அதை நீங்கள் எழுதும்போது இருந்தது, இப்போது மாறியிருக்கிறது.

அதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது மக்களும், எழுத்தாளர்களும், போராட்டக்காரர்களும், களப்போராளிகளும், ஊடகர்களும்-

எதிர்வினையாற்றியிருக்கிறார்களா?

அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள், அதைபற்றிப் பேசியிருக்கிறார்கள். மக்கள் அவற்றுக்கு செவிமடுத்திருக்கிறார்கள், என்ன நடந்திருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.

நாம் இன்று எதிர்நோக்கும் அபாயத்தின் தன்மை என்னவென்று சொல்வீர்கள்? நாம் பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயம் இன்னமும் இருக்கிறதா?

முக்கியமான அபாயம் நமது தேர்தல் அமைப்பு துல்லியத்தன்மையை இழந்திருப்பதுதான். எதிர்க்கட்சிகள் மிகவும் சிதறியும், தமக்குள் ஒற்றுமையின்றியும் இருக்கின்றன. ஒருவிதத்தில் இது கூட்டாட்சி வளர்வதற்கு உதவும் என்று நினைக்கிறேன்.

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. நாம் பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயம் இன்னமும் இருக்கிறதா?

இருங்கள், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. ‘இந்துத்துவ’ பிரச்சாரம் முழு மூச்சில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தச் சூழலில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பாஜக தேர்தலில் தோற்றுவிட்டால் அது மிகப் பெரிய அபாயத்துக்கு வழிவகுக்கும் என்று சொல்லலாம்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி பாசிஸத்துக்குப் புத்துயிரூட்டிவிடும் என்றா நினைக்கிறீர்கள்?

இல்லை, உ.பி. யில் பாஜக தோற்றுவிட்டால், அது பழையபடியே மதரீதியான வன்முறைகளைத் தூண்டிவிட முயலும் என்கிறேன். இதனை உறுதியாகத் தடுத்து நிறுத்தும்படியான அரசு அங்கு அமையுமென்றால்…

கொஞ்சம் பொறுங்கள், பாஜக ராஜஸ்தானில் தோற்றிருக்கிறது, அங்கு வன்முறைகளில் ஈடுபடவில்லை; மத்திய பிரதேசத்தில் தோற்றிருக்கிறது, அங்கு எதுவும் நடக்கவில்லை; சட்டீஸ்கரில் தோற்றிருக்கிறார்கள், அங்கு எந்தக் கலவரமும் செய்யவில்லை. மோடி வந்தபிறகு பல மாநிலங்களில் அவர்கள் தோற்றிருக்கிறார்கள்.

ஆனால், உத்தர பிரதேசம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஆகவே, பாஜக தோற்றுவிடுவது அது வெற்றி பெற்றுவிடுவதைவிட அதிகக் கவலையளிப்பது என்கிறீர்கள்.

இல்லை, பாஜக தோற்றுவிட்டால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் மதரீதியிலான அணிதிரட்டல் நிகழாமல் மிகவும் எச்சரிக்கையோடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறேன்.

ஆனால், நாம் ஒரு பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறோமா என்று உங்களிடம் கேட்டதற்கு கிடைத்த பதிலின் குழப்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இந்த அபாயம் அதிக அளவில் இருந்ததாகச் சொல்கிறீர்கள். அதன் பிறகு மக்கள் எதிர்த்துப் போராடத் தொடங்கிய பின் அபாயம் குறைந்திருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இப்போது பாஜக தோல்வியடைந்தால் இந்த அபாயம் மறைந்துவிடும் என்று பெரும்பாலான மக்கள் கருதும்போது, நீங்கள் அது புத்துயிரூட்டப்படும் என்கிறீர்கள்.

அது புத்துயிரூட்டாது, ஆனால் அந்த அபாயத்துக்கு புத்துயிரூட்டுவதற்கான தீவிரமான முயற்சிகள் நடக்கும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ட்ரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜில் நீங்கள் நிகழ்த்திய ‘கிளார்க் உரை’யில் பாசிஸம் குறித்து இரண்டு முக்கிய கவலைகளை எழுப்புகிறீர்கள். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். “இந்தியா வரித்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ தேசியம் என்ற பெரும்பான்மைவாதக் கொள்கை, பாசிஸம் என்ற அரசியல் பதத்தின் மென்வடிவம்தான். பல தாராளர்களும், சில கம்யூனிஸ்ட்டுகளும்கூட பாசிஸம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூசிக்கொண்டிருகிறார்கள்” என்று அதில் குறிப்பிடுகிறீர்கள். அப்படியென்றால், தாராளர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் மரபுரீதியாகவும் கொள்கைரீதியாகவும் இவற்றை எதிர்த்து நின்று போராட வேண்டும்; ஆனால், அவர்கள் அப்படிச் செயல்பட மறுக்கிறார்கள் என்கிறீர்களா?

ஆம், நிச்சயமாக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து நின்று போராடத்தான் வேண்டும். தாராளர்கள் எப்போதுமே பல விஷயங்களில் வழவழா கொழகொழா ஆசாமிகள்தான். ஆனால் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் ‘மறுப்பு’ என்பது மிகவும் மென்மையான சொல்.  

சரி, பொருத்தமான சொல் என்ன?

நான் இதை பாசிஸத்துக்கு ஆதரவான ‘ஒத்துழைப்பு’ அல்லது ‘கூட்டுச் சதி’ என்று சொல்வேன். அறிவார்ந்த, நல்ல தாராளர்கள் பலரும், நாட்டில் எவ்வளவு மோசமான சம்பவங்கள் நடந்தாலும் - உதாரணத்துக்கு, குஜராத்தில் நடந்த அட்டூழியங்கள்- பட்டப்பகல் படுகொலைகள், அரசு இயந்திர துஷ்பிரயோகங்கள், நரேந்திர மோடி பதவியேற்ற பின் எங்கெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றாரவாரக் கூச்சல்கள் - இவையெதையும் கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கு விழா எடுத்து கொண்டாடிவந்திருக்கிறார்கள். மோடிக்கு வரவேற்பு விழா நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் இப்போது விளைவுகளைப் பற்றி அச்சப்படாமல் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இப்போதெல்லாம் கூச்சப்படுவதில்லையா?

அவர்களில் பெரும்பாலோர் இப்போது கூச்சப்படுவதில்லை.

இது நீங்கள் 18 – 19 மாதங்களுக்கு எழுதியதிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது இல்லையா?

ஆம், அப்போது ஒருவித சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அவற்றையெல்லாம் எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஆனால், இப்போது தாராளர்கள் எதிர்த்து நிற்பதாகச் சொல்கிறீர்கள்?

ஆம், ஒரு சிலர்.

எனவே ‘மறுத்தல்’ என்பது 18 – 19 மாதங்களுக்கு முன் இருந்ததைப் போல இப்போது வலுவாக இல்லை, அப்படித்தானே?

இல்லை. மோடி பதவிக்கு வருவதற்கும், அவர் வரவேற்கப்படுவதற்கும், கொண்டாடப்படுவதற்கும் வழிவகுத்த பாராமுகத்தை, கண்ணிருந்தும் காண மறுத்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

இதே உரையில் நீங்கள் இன்னொரு கேள்வியை முன்வைக்கிறீர்கள் – இது முந்தைய ஒன்றைவிட சில விதங்களில் அதிகக் கவலையை ஏற்படுத்துகிறது, வாசகர்களையும் அது தொற்றிக்கொள்ளக்கூடும். நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், “பாசிஸம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பவர்கள், ஒரு கண்டமே அழிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மனிதர்கள் விஷவாயுக் கூடங்களில் கொல்லப்பட்ட பிறகுதான் பாசிஸம் என்பது உண்மையில் பாசிஸமாகும் என்று நினைக்கிறார்களா அல்லது பாசிஸம் என்பது இத்தகைய கொடுங்குற்றங்களுக்கு இட்டுச்சென்ற – கொடுங்குற்றங்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய – கொள்கை மட்டுமே, அதனைப் பின்பற்றுபவர்கள்தான் பாசிஸ்ட்டுகள் என்று நம்புகிறார்களா என்று தெரியவில்லை.” அதாவது, இப்படிச் சொல்கிறீர்கள் என்று சொல்லலாமா? பாசிஸத்திடம் கொண்டுசேர்த்துவிடக்கூடிய கொள்கை மரபு ஏற்கனவே இருந்துவருகிறது, நாம் விரைவாகச் செயலாற்றாமல் இருந்துவிட்டால், ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற கொடுஞ்செயல்கள் இந்தியாவிலும் நடக்கத் தொடங்கிவிடும் என்கிறீர்கள், இல்லையா?

அத்தகைய கொடுஞ்செயல்கள் வேறு வடிவங்களில் ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டன என்றுதான் தோன்றுகிறது. ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற இனப் படுகொலைகள் அல்ல. முஸ்லீம் இனத்தையே அரக்கர்களாக, பொதுச் சமூகத்திலிருந்து வேறுபட்டிருக்கும் ‘மற்றவர்கள்’ ஆக உருவகிக்கும் முயற்சிகள். கரோனா ஊரடங்கு தினங்களில் பயன்படுத்தப்பட்ட இனவெறி அறிக்கைகளை மறந்திருக்க மாட்டீர்கள். தப்லிகி ஜமாத் கூட்டம்தான் கரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது – டைஃபாய்ட் பரவியதற்கு யூதர்கள்தான் காரணம் என்று நாஜிகள் குற்றம்சாட்டியதைப் போல. தேசிய குடிமக்கள் அடங்கல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவை 1935இல் குடிமக்களிடம் அவர்களுடைய குடியுரிமைச் சான்றிதழைக் காட்டுமாறு கட்டாயப்படுத்திய நியூரெம்பெர்க் சட்டங்களை நினைவூட்டவில்லையா?

ஹன்னா ஆர்ன்ட் சொன்னதைப் போல, “குடியுரிமை என்பது உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை.” மனிதர்களின் கால்களுக்கு அடியில் இருக்கும் நிலத்தை குலுக்கும்போது, அது பட்டியலில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் எல்லோரையும் குப்புறத் தள்ளுகிறது.

அஸ்ஸாமிலும், வேறு சில இடங்களிலும் தடுப்புக்காவல் மையங்கள் இப்போது கட்டப்பட்டிருக்கின்றன. தேசிய குடிமக்கள் அடங்கலில் இடம்பெற்றிருக்கும் லட்சக்கணக்கானவர்களை அடைப்பதற்கு இந்த மையங்களில் இடம் போதாது. ஆனால், தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிவிக்கக்கூடிய செய்தி, அந்த ‘மற்றவர்கள்’ இருக்க வேண்டிய இடம் இதுதான் என்று எல்லோருக்கும் உரக்க அறிவிப்பதுதான். ஐரோப்பாவில் நடந்ததைப் போல இனப் படுகொலைகளும் கொலைகளும் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.

முன்பு சொன்னதற்கு முரண்பாடாக இருக்கிறதே இப்போது நீங்கள் சொல்வது? இனக்கொலைகள் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கின்றன என்றீர்கள், இப்போது அதற்கு மாறாகச் சொல்கிறீர்கள்; அப்படியெல்லாம் இங்கு நடக்க வாய்ப்பில்லை என்கிறீர்கள்.

அதாவது, ஐரோப்பாவில் நடந்த அளவுக்கு பெருமளவில் இங்கு நடக்காது என்கிறேன்.

ஏன்?

ஏனென்றால் வெகுகாலத்துக்கு முன்பே இந்தியாவில் இந்து தேசியம் தலையெடுத்துவிட்ட வரலாறு நமக்கு இருக்கிறது. அந்த நரகத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். இப்போது கடந்து வந்துவிடுவோம். அதற்காக நம் நாடு ஒரு விலையைக் கொடுக்க வேண்டி வரலாம், ஆனால், இங்கு பாசிஸம் வெல்லாது.

எப்படிச் சொல்கிறீர்கள்?  ஏதேனும் நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா அல்லது வெறும் நம்பிக்கையா?

நான் இந்த நாட்டில் வாழ்ந்துவருவதாலும், நாடெங்கும் பயணம் செய்துவருவதாலும், மக்களோடு உரையாடிக்கொண்டிருப்பதாலும், அந்த மக்கள் தமது கண்களையும் காதுகளையும் திறந்தே வைத்திருப்பதைப் பார்த்துகொண்டிருப்பதாலும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. உத்தர பிரதேசம் போன்ற கண்களைக் கூசவைக்கும் காவி அலை அடித்துக்கொண்டிருக்கும் இடங்களில் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ளவர்களிடம் பேசிப்பார்க்கும்போதுகூட –

சற்று குறுக்கிடலாமா? இந்திய மக்கள் மதச்சார்புடையவர்கள் அல்லர் என்கிறீர்கள்; அதேசமயம் முஸ்லீம், கிறித்துவர் என யாராக இருந்தாலும் அவர்கள் தம் சொந்தச் சகோதரர்கள் என்று கருதுவார்கள், மதக்கலவரங்களில் இறங்க மாட்டார்கள் என்கிறீர்கள். அரசாங்கமோ, ஆர்எஸ்எஸ்ஸோ அல்லது எந்த மதவெறி அமைப்போ அவர்களைக் கலவரத்துக்குத் தூண்டினாலும் அது இந்திய மக்களிடம் வெற்றி பெறாது என்கிறீர்கள், இல்லையா?

மக்களில் ஒருசிலர் வேறு மாதிரியாகவும் இருப்பார்கள். ஆனால், ஐரோப்பாவில் நடந்ததைப் போன்ற விஸ்தாரமான நரவேட்டையை இங்கு நடத்த முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் கொஞ்சம் குழம்பியிருக்கிறேன். வாசகர்களுக்கும் குழப்பம் இருக்கும். ஆர்.எஸ்.எஸ், பாஜக, நரேந்திர மோடி ஆகியோருக்குக் கீழே இந்தியா ஒரு பாசிஸ நாடாக மாறிவிடுவதற்கான அபாயம் இருக்கிறதா இல்லையா? அல்லது அத்தகைய முயற்சி தோல்வியில் முடியும் என்கிறீர்களா?

எல்லாமே மாறக் கூடியவை, ஆறு ஓடிக்கொண்டே இருப்பதைப் போல. மிக மோசமான விஷயங்கள் எவ்வளவோ நடந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். நாம் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்று நான் நினைப்பதற்குக் காரணம், இங்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாததுதான். மக்களில் பலர் இந்த மதவெறிச் சிந்தனையில் மயங்கி அவர்களின் சூழ்ச்சிவலையில் விழுந்திருக்கின்றனர், ஆனால் இப்போது சுதாரித்துக்கொண்டு மீண்டுவருவதாகவே உணர்கிறேன்.

இன்னும் அந்த அதளபாதாளத்தில்தான் இருக்கிறார்கள், ஆனால் அதிலிருந்து மேலேறி வந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறீர்கள்.

இந்தச் சரிவு, வழுக்குப் பாறையாக இருக்கிறது. அபாயம் இன்னும் நீங்கியிருக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தலில் அது வெளிப்படாமல்போகலாம், அடுத்துவரும் தேர்தலிலும் தெரியாமல்போகலாம், ஆனால் ஐரோப்பாவில் நடந்ததைப் போன்ற பேரழிவு இந்த நாட்டில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கிளார்க் உரையில் நீங்கள் குறிப்பிடும் இன்னொரு கருத்து இன்று இந்தியாவில் நிலவும் சூழலுக்கு மிகவும் பொருந்திவருகிறது: அது, பாசிஸத்துக்கும், பொய்ச் செய்திகள், பொய் வரலாறுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு! “பொய்ச் செய்தி என்பது ஆதாரச் சட்டம். போலிச்சீற்றத்தை அணிந்துகொண்டு தன்னைக் கட்டமைத்துக்கொண்டிருக்கும் பாசிஸத்தின் சாரக்கட்டு பொய்ச் செய்திகளே. இந்தச் சாரக்கட்டு ஊன்றி நின்றிருக்கும் அஸ்திவாரமாக இருப்பது பொய் வரலாறு. பொய்ச் செய்திகளின் ஆதிவடிவம் பொய் வரலாறாகவே இருக்கும்” என்கிறீர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், பாசிஸத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது பொய்ச் செய்திகளும் பொய் வரலாறுகளும் என்கிறீர்களா?

இதுவொன்றும் என்னால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் இல்லை. பாசிஸத்தைப் பற்றிப் பேசும் எல்லோருக்கும் இது நன்றாகத் தெரியும். ஆனால் புராணக்கதைகள் சரித்திரமாக்கப்படுகின்றன, சரித்திரம் புராணக்கதையாக்கப்படுகிறது. ‘வாட்ஸாப் பல்கலைக்கழக’மும், தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் அவற்றைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்த அபத்தங்கள் மக்களின் நாளங்களில் தொடர்ந்து ஏற்றப்பட்டுவருகின்றன. ஆனால், இந்த வரலாற்றின் அபத்தத்தைவிட முக்கியமான விஷயம், அது மற்றொரு பிரச்சினைக்குரிய கதையை மறைத்துவிடுவதுதான்.

என்ன சொல்ல வருகிறீர்கள்?

பொய்ச் செய்திகளில் பலவகை உண்டு; இந்துத்துவப் பொய்ச் செய்திகள் மட்டுமல்ல. உதாரணத்துக்கு, தலித்துகளைப் பற்றி இச்சமூகத்தில் பேசலாம்; துப்புரவுப் பணிகளைச் செய்பவர்கள் அவர்களன்றி வேறு எவருமில்லை. பாதாளச் சாக்கடைகளில் செத்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். சாதி என்பது அடக்குமுறை மட்டும் சார்ந்ததல்ல –

சாதியைப் பற்றிப் பேச வேண்டாம்...

ஏன், ஏன் வேண்டாம்?

நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தது பொய்ச் செய்தி, பொய் வரலாறு இவற்றுடன் பாசிஸத்துக்கு உள்ள தொடர்பைப் பற்றி. அதைதான் நீங்கள் விளக்க வேண்டும். இப்போது அதுதான் முக்கியமான அபாயமா?

பொய்ச் செய்திகள் என்பவை வெறும் பொய்த் தகவல்கள் மட்டுமல்ல. பொய்ச் செய்திகள் என்பவை பொய்க் கதையாடல்கள். நீங்கள் சாதியைப் பற்றிப் பேச விரும்பாமலிருப்பதைப் போல. நான் அதைப் பேச விரும்புகிறேன்.

இந்த நாட்டின் நீதிபதிகள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது? இந்த நாட்டின் செல்வத்தில் பாதியைத் தம்மிடம் குவித்துவைத்திருக்கும் ஒரு நூறுபேரின் சாதி என்னவென்று நீங்கள் ஏன் கேட்கக் கூடாது?  

இல்லை, நான் கேட்க விரும்பிய கேள்வி அதுவல்ல…

அதுதான். இந்தக் கேள்விகளை ஏன் நமது பகட்டு ஊடகங்கள் எழுப்ப விரும்புவதே இல்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

நான் கேட்ட கேள்வி பொய்ச் செய்திகள், பாசிஸம், பொய் வரலாறு இவற்றுக்கிடையே இருக்கும் தொடர்பைப் பற்றியும், பொய்ச் செய்திகள் மலிந்திருக்கும் இக்காலகட்டத்தில் அது எப்படி இந்தியாவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பற்றியும்தான்.

இதுவே ஒருவித பொய்ச் செய்திதான், கரண். கிட்டத்தட்ட நிறவெறிக்கு ஒப்பான ஒரு சமூகச்சூழலைப் பற்றிப் பேசாமல் மேலோட்டமாகக் கடந்துசெல்வது. புராணக்கதைகளையும், இந்துத்துவ பொய்ச் செய்திகளையும் கேட்டு நாம் சிரிப்போம், ஆனால் அதைவிட சூழ்ச்சிமிக்க அபாயகரமான வேறொரு கதையாடல் இருப்பதைக் கண்டுகொள்ளமாட்டோம்.

அதாவது, நாம் நம்புவதெல்லாம் செய்திகள்; நாம் பேச விரும்புவதெல்லாம் உண்மையில் பொய்ச் செய்திகள். அவை ஒன்று பொய்யாக இருக்கும், அல்லது அடையாளம் கண்டுகொள்ள மறுப்பவையாக இருக்கும் என்று சொல்கிறீர்களா?

இது ‘கண்டும் காணாமலிருப்பது’; அடையாளம் கண்டுகொள்ள மறுப்பது. இதுவே ஒருவகையான பொய்ச் செய்திதான் என்கிறேன்.

மோடியின் இந்தியாவைப் பற்றிய இன்னொரு அம்சத்தையும் உங்களிடம் விவாதிக்க வேண்டும். அதுவும் பாசிஸத்தோடு தொடர்புடையதுதான். அது காஷ்மீரைப் பற்றி. உங்களுடைய ஜொனாதன் ஷெல் உரையில் காஷ்மீர் மக்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்: “அவர்கள் ஏன் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்ப வேண்டும்? எந்த மகத்தான காரணத்துக்காக? சுதந்திரம்தான் அவர்களுக்கு வேண்டுமென்றால், அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும்” என்கிறீர்கள். இதனை சற்று விளக்க முடியுமா?

காஷ்மீர் இடுகாடுகள் மண்டியிருக்கும் பள்ளத்தாக்கு. கடந்த முப்பது ஆண்டுகளாக அங்கு அரங்கேறிவந்த எல்லா பயங்கரங்களுக்கும் மோடியைப் பொறுப்பாக்க முடியாது; அவர் பதவிக்கு வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்ட கொடுமை அது. இப்போது 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அது வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ளது. ஆனால் காஷ்மீரின் கதை; கூட்டாகக் காணாமலடிக்கப்படும் மனிதர்களின் கதைகள்; கேள்விமுறையற்ற மரண தண்டனைகளின் கதைகள், அந்த மக்களின் மீது கவிந்துகொண்டிருக்கும் பயங்கரங்களின் கதைகள் ஆகியவை இந்திய மக்களின் பார்வைக்கு நமது குருட்டுப் பிடிவாத ஊடகங்கள் கொண்டுவருவதே இல்லை.   

காஷ்மீரில் நடப்பவை எல்லாமும் வெளியே தெரியவந்தால் இந்தியர்கள் பலருடைய பார்வையே மாறிவிடும். அதனால்தான் ‘எந்தவொரு செய்தியும் வெளியே வரக்கூடாத’ பள்ளத்தாக்காக காஷ்மீர் இருந்துவருகிறது; அதனால்தான் காஷ்மீரின் பத்திரிகைகாரர்கள் வாய் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், கைதுசெய்யப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். அதனால்தான் குர்ரம் பர்வேஸ் என்ற அற்புதமான, மிகவும் அறிவார்ந்த மனிதர் காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களை விவரமாகப் பதிவு செய்த காரணத்துக்காக இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

நீங்கள் குறிப்பிட்ட என் கட்டுரை 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டவுடனே பல்லாயிரக்கணக்கான காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட்டபோது எழுதப்பட்டது. அப்போது ‘இந்திய-ஆதரவு’ முதல்வர்களும் கைதுசெய்யப்பட்டார்கள், ஏனெனில் நீங்கள் வெறுமனே இந்திய ஆதரவாளராக இருந்தால் மட்டும் போதாது, பாஜகவின் ஆதரவாளராகவும் இருக்க வேண்டும்.  அதேபோல ஆயிரக்கணக்கான பத்திரிகைகாரர்களும், களச் செயல்பாட்டாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இணையம் துண்டிக்கப்பட்டது, தொலைபேசிகள் செயல்படவில்லை, பள்ளத்தாக்கு முழுக்க முள்வேலிகள் நடப்பட்டன. அவர்களுடைய இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்? என்ன வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள்? உங்கள் கனவு என்னவாக இருந்திருக்கும்? எதை விரும்பியிருப்பீர்கள்?

சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகிறார்கள், என்கிறீர்களா?

ஆம்.

அவர்கள் விருப்பப்பட்டால் அதை வழங்கிவிடத்தான் வேண்டும் என்கிறீர்களா?

ஆம்.

இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதே காஷ்மீரிகளுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?

காஷ்மீரிகள் என்ன விரும்புகிறார்கள் என்று சொல்லும் இடத்தில் நான் இல்லை. ஆனால், இந்தியா என்ன விரும்புகிறது, அல்லது பாகிஸ்தான் என்ன விரும்புகிறது என்பதல்ல, காஷ்மீரிகள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டிய அரசியல் நிலைப்பாடே முக்கியம் என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் புதிய பார்வைத் தேவை. ஆனால், அரசுக்கு அதில் விருப்பம் இருக்காது, பிரச்சினையை விடாமல் தன்னிடமே வைத்திருப்பதுதான் அதன் நோக்கம்.

இந்தப் புதிய பார்வை என்பது, அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது, அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது, பின் அதை வழங்கிவிடுவது. அதுதானே?

அவர்கள் பேச வேண்டிய வார்த்தைகளை அவர்களுடைய வாயில் நாம் திணிக்க வேண்டாம். அவர்களின் வாய்களை அடைத்துவைத்திருப்பதை விட்டு, அவர்களைப் பேசவிடுவோம்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு, அதை நிறைவேற்ற வேண்டும், இல்லையா?

ஆம்.

அதாவது, காஷ்மீருக்கு சுதந்திரம்?

அதை அவர்கள் சொல்லட்டும். நீங்கள் ஏன் அவர்களிடமே கேட்கக் கூடாது? அவர்களுக்குத் தேவையானது எதுவென்று நீங்களும் நானும் ஏன் முடிவுசெய்ய வேண்டும்?

காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி நீங்கள் குறிப்பிடுவது மிகவும் கலக்கமூட்டுவதாக உள்ளது. “காஷ்மீரால் இந்தியாவைத் தோற்கடிக்க முடியாமல் போகலாம், ஆனால் அது இந்தியாவை அரித்தழித்துவிடும்” என்று எழுதுகிறீர்கள். உங்களுடைய ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவலில் வரும் ஒரு பாத்திரம், மூஸா யெஸ்வியும் இதைப் போலவே சொல்கிறான்: ‘ஒருநாள் காஷ்மீரும் இந்தியாவை இதைப் போலவே சுய அழிப்பு செய்துகொள்ளவைக்கும்!” – இந்தியா எப்படி காஷ்மீரை சுய அழிப்பில் தள்ளியிருக்கிறதோ அதேபோல என்று நீங்கள் சொல்வதாக நினைக்கிறேன் – “நீங்கள் எங்களை அழித்துக்கொண்டிருக்கவில்லை. எங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களேதான் அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்!” அதாவது காஷ்மீரில் ஒலித்துக்கொண்டிருக்கும் மணியோசை உண்மையில் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்காக ஒலித்துக்கொண்டிருக்கிறதா?

இந்த வசனத்தைப் பேசுவது என் நாவலில் வரும் மூஸா என்ற கதாபாத்திரம். பிப்லா தாஸ்குப்தா என்ற மிகவும் அறிவுக்கூர்மையுள்ள உளவுத்துறை அதிகாரியிடம் பேசும்போது சொல்கிறான். காற்றிலிருந்து ஆக்ஸிஜனை நீங்கள் திருடிக்கொண்டால் மிச்சமிருப்பது கார்பன் டை ஆக்ஸைடு மட்டும்தான் என்கிறான் – நீங்கள் விரும்பினால் ஒருவித பைங்குடில் (greenhouse) விளைவு என்றும் சொல்லிக்கொள்ளலாம். நம் சார்பாக இந்திய அரசு காஷ்மீரில் நடத்திவரும் அறவுணர்வு அரிப்பைப் பற்றி அவன் பேசுகிறான்.

நிறுவனரீதியான அரிப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிர்த்துப் போரிட வேண்டிய தீவிரவாதிகளின் மொத்த எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்று ராணுவத்தினரே சொல்கிறார்கள். அப்படியென்றால் உண்மையான எதிரிகள் பொதுமக்கள்தான். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “பொது சமூகத்தைத்தான் கைப்பற்ற வேண்டியிருக்கிறது” என்கிறார். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) திருத்தம் கொண்டுவரும்போது அமித் ஷா, “பயங்கரவாதிகளைவிட ஆபத்தானவர்கள் தனிநபர்களும் எழுத்தாளர்களும்” என்று சொன்னார். போராடிக்கொண்டிருக்கும் ராணுவம் இப்போது ஊதிப்பெருத்திருக்கும் நிர்வாக அமைப்பாக மாறி, கிட்டத்தட்ட காவல்துறையின் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் ராணுவத்துக்கு அழிவைக் கொண்டுவந்துவிடும் அபாயம் இருக்கிறது.

காஷ்மீரில் ஊடகங்கள் வாயடைக்கப்பட்டிருப்பதைப் பற்றி ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்தோம். நாளிதழ்களில் நேற்று வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள். தேச விரோதச் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது தடை விதிக்கப்படுமாம். தேச விரோதம் என்றால் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம். இப்போது ராணுவத்தைப் பாருங்கள்.  நாடாளுமன்றத்தில் அமித் ஷா கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சீனாவை வம்புக்கு இழுத்துப் பேசியதற்குப் பிறகு சீனா- பாகிஸ்தான் இரண்டு எல்லைப் பகுதிகளின் நெடுகிலும் ராணுவத்தைக் குவித்து வைத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பனிமலை உச்சிகளில் -30, -40 டிகிரி குளிரில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சீனாவை எதிர்த்துப் போராடாவிட்டாலும், இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வறுமையிலும் பசியிலும் வாடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் ராணுவத்தை, போர் நடக்காத காலத்திலும் இப்படி நிறுத்திவைத்திருப்பது மிகவும் முட்டாள்தனமான வெட்டிச்செலவு.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் கடப்பாடுகளை, மதிப்பீடுகளை, கொள்கைகளை, நமது ஜனநாயகக் கடமைகளை மதிக்காமல், காஷ்மீர் விவகாரச்த்தில் அவற்றை சீரழித்து வருவது இந்தியா முழுமைக்கும் பரவும், நாடெங்கும் எல்லா அம்சங்களிலும் பாதிப்புகளை உண்டாக்கும், நமது மதிப்பீடுகளை சிதைக்கும் என்கிறீர்கள். அது மட்டுமன்றி, நாம் நம்மையும், பிறரையும், நமது ஜனநாயகத்தையும், ஊடகர்களையும், செயல்பாட்டாளர்களையும், நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நடத்தும் விதமும் மோசமாக மாறிவிடும் என்கிறீர்கள், இல்லையா?

இதை நாம் ஏற்கெனவே கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

“காஷ்மீரால் இந்தியாவை தோற்கடிக்கமுடியாமல் போகலாம், ஆனால் அது இந்தியாவை அரித்தழித்துவிடும்” என்று நீங்கள் குறிப்பிடுவதன் பொருள் இதுதானா?

ஆம், இது இந்தியாவை அரித்துக்கொண்டிருக்கிறது, அழித்துக்கொண்டிருக்கிறது.

சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை நாம் மேலும் துணிவுள்ளவர்களாகவும், பலமிக்கவர்களாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறோம், அதே நேரத்தில் நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற பொருளில்தான், “நீங்கள் எங்களை அழித்துக்கொண்டிருக்கவில்லை. எங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று குறிப்பிடுகிறீர்களா?

நான் சொல்லவில்லை, அவ்வாறு மூஸா சொல்கிறான்.

மூஸாதான் சொல்கிறான், ஆனால் நாவலாசிரியரின் கருத்தும் அதுவாகத்தானே இருக்கிறது?

ஓ, இது ஒரு பெரும் இலக்கிய விவாதத்துக்கான விஷயம்.

இல்லை, இது நீங்கள் ஜொனாதன் ஷெல் உரையில் “காஷ்மீரால் இந்தியாவை தோற்கடிக்க முடியாமல் போகலாம், ஆனால் அது இந்தியாவை அரித்தழித்துவிடும்” என்று குறிப்பிடுவதைத்தான் மூஸாவும் சொல்கிறான்…

சரி, அதற்கு பிப்லாப் தாஸ்குப்தா சொல்லும் பதிலையும் பாருங்கள். அதை நாவலாசிரியரின் கருத்தாக -

சரி, பேட்டியின் முடிவுக்கு வந்துவிடலாம். ஏராளமான விஷயங்களை விவாதித்துவிட்டோம், வாசகர்களுக்குத் தெளிவாகத் தொகுத்துவிடுவோம். இந்தியாவின் எதிர்காலம் உங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கிறதா அல்லது முன்னேற்றத்துக்கான அறிகுறிகளைப் பார்க்கிறீர்களா? ஏனென்றால், நாம் ஒரு பாதாளத்தில் வீழ்ந்திருப்பதாகச் சொல்கிறீர்கள், ஆனால் அதிலிருந்து மேலேறி வருவதாகவும் சொல்கிறீர்கள். பாதாளத்திலிருந்து எழுந்து வரும்போது காட்சி தெளிவடைகிறது. எனவே, நிலைமை சீரடைந்துவருகிறது, மேம்பட்டுவருகிறது என்று சொல்லலாமா? அல்லது மிகவும் கவலையளிப்பதாகத்தான் இருக்கிறதா?

உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது அது.

உங்கள் பார்வைக் கோணம் என்ன?

நான் சொல்வது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் மக்கள் கைதுசெய்யப்படுவதையும், வாயடைக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டே இருப்பது பெரும் மன உளைச்சலை அளிப்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் மேலே ஏறி வந்துவிட்டால் எல்லா கொடுமைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது.

அதாவது, நிகழ்காலம் மோசமாக உள்ளது, எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்கிறீர்கள்...

மக்கள் இதை முடிவுக்குக் கொண்டுவருவார்கள். முடிவுக்குவருவதற்கான ஒரே வழி அதுதான். ஒன்றிரண்டு மனிதர்களோ, ஒரேயொரு அரசியல்வாதியோ, ஏதோவொரு மகத்தான தலைவரோ வந்து முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை. மக்கள் முடித்து வைப்பார்கள்.

எனவே, உங்களுடைய நம்பிக்கை இந்திய மக்களின் மீதுதான் இருக்கிறது…

ஆம்!

இந்திய மக்கள் மதச்சார்பின்றி, சகோதரத்துவத்தோடு, அனைத்து தரப்பினரோடும் இணக்கமாக வாழ்வார்கள். மதவெறி அரசு எவ்வளவுதான் அவர்கள் மனதை சீரழிக்க, தவறான வழியில் செலுத்த முயன்றாலும் அவர்கள் அதை முறியடிப்பார்கள் என்று சொல்கிறீர்கள்.

நீங்களாக இவ்வளவு வார்த்தைகளை என் வாய்க்குள் அடைக்க முயல்கிறீர்கள். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. இந்திய மக்கள் எல்லோருமே அவ்வளவு அழகான, அற்புதமான ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டு அன்பு பாராட்டும் பிறவிகள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கவில்லை. மனமாச்சரியங்களும், காழ்ப்புணர்வும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும், பாசிஸத்துக்குள் விழலாம், மிகக் கொடூரமான காரியங்களையும் செய்யக்கூடும்; ஆனால், அவர்களுக்கு விழிப்புணர்வும் வந்துகொண்டிருக்கிறது. தம்மையே அழித்துவிடும் காரியங்கள் அவை என்று புரிந்திருக்கிறது என்கிறேன்.

தம்மைத் தாமே திருத்திக்கொண்டுவருகிறார்களா?

திருத்திக்கொள்வார்கள். நாம் திருத்திக்கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அருந்ததி ராய் அவர்களே, “எந்த மாதிரியான நாடாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்?” என்ற கேள்வியோடு தொடங்கிய இந்த நேர்காணலில் விரிவாக உரையாடி பதில் அளித்திருக்கிறீர்கள், அதற்கு மிகவும் நன்றி. நிகழ்காலத்தை மிகவும் இருள்சூழ்ந்ததாகத்தான் வர்ணிக்கிறீர்கள், ஆனாலும் பாதாளத்திலிருந்து மக்கள் மேலே ஒளிசூழ்ச்ந்த உலகுக்கு எழுந்து வருவதாகவும் நம்பிக்கை அளிக்கிறீர்கள். இந்திய மக்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள். மிகவும் நன்றி.

நன்றி, வணக்கம்!

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கரண் தாப்பர்

கரண் தாப்பர், மூத்த பத்திரிகையாளர்.

தமிழில்: ஜி.குப்புசாமி

2






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

தேசம் பற்றிய அக்கறைமிகு நேர்காணல் - எடுப்பவரும் கொடுப்பவரும் கொண்டிருக்கும் தேசம் குறித்த பல்வேறு பயங்களும் ஊகங்களும் இயல்பாக வெளிப்பட்டிருக்கின்றன. இத்தளம் குடிமைப்பணித்தேர்வர்கள் வரும் இடம் எனவும் அறிகிறேன்; அவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும். பைங்குடில் எனும் சொல்லை இங்குதான் வாசிக்கிறேன்; பசுமை இல்ல விளைவு என்பதைக்காட்டிலும் நன்றாக இருக்கிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உடல்நலம்ராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா? அழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!வலிப்புஒடுக்குமுறைத் தேர்வுகள்தைமதுரை வீரன் கதைபிட்ரோடாரத்த அழுத்தம்வைக்கம் போராட்டம்நாட்டின் எதிர்காலம்மடாதிபதிகள்தமிழ் வணக்கம்அரசு அதிகார அமைப்புவிவசாயிகள் போராட்டம்இயக்குநர் சத்யஜித் ரேஆப்பிள் இறக்குமதிஈஸ்ட்ரோஜென்ஒரு பள்ளி வாழ்க்கைதமிழர் வரலாறுஎண்ணுப்பெயர்கள்கலை அறிவியல் கல்லூரிகள்சிந்த்வாராசமாஜ்வாதி ஜன பரிஷத்மலக்குடல்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?ஒரே அரசுதனியார்மயமாக்கம்தேசப் பாதுகாப்பில் முட்டாள்தனமான சிக்கனமா? துயரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!