கட்டுரை, கலாச்சாரம், இலக்கியம்

பா.வெங்கடேசனை நீங்கள் ஏன் படித்தாக வேண்டும்?

ஆசை
13 Aug 2022, 5:00 am
2

பா.வெங்கடேசனை நான் படிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒருவர் கேட்கலாம். தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன் வாழ்வின் மிக முக்கியமானவையாகக் கருதும் ஒருவர் எப்படி சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் வள்ளுவரும் ஆண்டாளும் கம்பரும் பாரதியும் புதுமைப்பித்தனும் படித்தாக வேண்டுமோ அப்படியே பா.வெங்கடேசனையும் படித்தாக வேண்டும் என்று நான் உளமார நம்புகிறேன்.

நான் ஏதோ மிகைப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியல்ல! இதுவரை பா.வெங்கடேசன் ‘தாண்டவராயன் கதை’ (2008), ‘பாகீரதியின் மதியம்’ (2016) என்ற இரண்டு பெருநாவல்களையும் ‘வாராணசி’ (2019) என்ற ஒரு சிறுநாவலையும் எழுதியிருக்கிறார். இதுதவிர ‘ராஜன் மகள்’ (2002) என்ற குறுநாவல் தொகுப்பையும், ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் கதைகள்’ (1995) என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். இவற்றில் ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் கதைகள்’ தொகுப்பை ஆரம்ப கட்ட முயற்சி என்ற அளவில் விட்டுவிடலாம். ஏனைய நான்கு புத்தகங்களையும் ஒருவர் திறந்த மனதோடு, வாசிப்பு உழைப்பைச் செலுத்தி, தங்கள் கற்பனைக் கண்ணைத் திறந்து வைத்துப் படிப்பார்களானால் பெரும்பாலும் எனது முடிவுக்கே அவர்களும் வருவார்கள்.

நான் ‘தாண்டவராயன் கதை’ நாவலுக்கு எழுதிய விமர்சனமொன்றில் அது நோபல் பரிசு பெறத் தக்க படைப்பு என்று கூறியிருந்தேன். அப்படிச் சொல்லும் முதல் ஆள் நானல்ல! ஏற்கெனவே ராஜன் குறை, வசுமித்ர போன்றோர்களும் இதே கூற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறியதையோ நான் சொன்னதையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். சாதகமான பாதகமான முன்னபிப்ராயங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பா.வெங்கடேசனின் பிரபஞ்சத்தில் நுழையுங்கள். அது அள்ளி அள்ளிக் கொடுக்கும்.

சரி! எங்கிருந்து தொடங்குவது? ’ராஜன் மகள்’ தொகுப்பிலிருந்து தொடங்குவதே நல்லது. அதில் உள்ள, பா.வெங்கடேசனின் முக்கியமான முதல் படைப்பான ‘மழையின் குரல் தனிமை’யிலிருந்தே தொடங்கலாம்.

அந்தக் கதை முதலில் காலச்சுவடு இதழில் 2000ல் வெளியானது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த எனக்கு ‘காலச்சுவடு’ இதழ் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன்பு கொஞ்சம் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் போன்றோரை மட்டுமே படித்திருந்தேன். பா.வெங்கடேசன் என்பவர் யார் எவர் என்றெல்லாம் தெரியாமல்தான் அந்தக் கதையைப் படித்தேன். அந்தக் கதைக்கு முன்பு பா.வெங்கடேசன் படைப்பாளியாகப் பிறக்கவில்லை என்பது உண்மை. கதை ஒரு மாயச்சுழலில் கட்டி இழுத்துக்கொண்டே போனது. (ஆனாலும், அதற்குப் பிந்தைய காலங்களில் பா.வெங்கடேசன் பாணியிலான எழுத்துகளிலிருந்து விலகிச்சென்றுவிட்டதோடு அல்லாமல் அவற்றைப் பம்மாத்து என்று நினைத்துக்கொண்டேன். மறுபடியும் வெங்கடேசன் எழுத்துகளை நோக்கி வருவதற்கு எனக்கு 17 ஆண்டுகள் ஆனது).

இரண்டு தலைமுறைகளாகக் கட்டப்பட்டுவரும், சாபம் பீடித்திருக்கும், ‘மழை வீடு’ என்று அழைக்கப்படும் வீட்டைப் பற்றிய கதை அது. ‘மழைவீடு மழையின் ஸ்தூல வடிவை ஒளியாயும் வாசனையாயும் மனநிலையாயும் அதன் சம்மதத்துடனேயே தொடர்ந்து சிதைத்துக்கொண்டிருந்த’தால் அதற்கு ‘மழை வீடு‘ என்று பெயர். தனது லட்சியமாக எடுத்துக்கொண்டு பரமசிவம் பிள்ளை கட்ட ஆரம்பித்துக் கைவிட்ட அந்த வீட்டை, மழையில் கண்டெடுக்கப்பட்ட அவருடைய தத்துபுத்திரன் சாரங்கன் கட்டி முடிக்கிறான். அதற்குப் பிறகு மேலும் அமானுஷ்யமாக மாறுகிறது கதை.

முதன்முதலில் அந்தக் கதையைப் படித்தபோது ஜுர மயக்கம் போன்ற ஒரு உணர்வில் திளைத்திருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அதே தொகுப்பில் உள்ள ‘ஆயிரம் சாரதா’ என்ற கதை படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் மிகுந்த புதிர்த்தன்மை கொண்டது. சாரதா-அனுமந்தராவ் என்ற இருவரின், முடிந்துபோன காலத்தின் காதலால் பீடிக்கப்பட்டு, அந்தக் காதலுக்குள் தன்னைத் திணித்துக்கொண்டு பிறகு காணாமல் போகிறது மயில்வாகனன் என்ற பாத்திரம். அவனைத் தேடும், பெயர் குறிப்பிடாத கதைசொல்லி சொல்லும் கதைதான் ‘ஆயிரம் சாரதா’. கிட்டத்தட்ட இதே கருப்பொருளும் பாணியும் பின்னாளில் ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் விரிவாகக் கையாளப்படுகின்றன. ‘நீல விதி’ கதை ஒரு சர்க்கஸ் கம்பெனி, இந்தியச் சுதந்திரப் போராட்டம், ஆஷ் படுகொலை என்று பல புள்ளிகளைத் தொடுகிறது.

வெவ்வேறு நபர்களால் இந்தக் கதையின் வெவ்வேறு பகுதிகள் சொல்லப்படுகின்றன. இந்தத் தொகுப்பின் அசாதாரணமாக கதை என்றால் ‘ராஜன் மகள்’ கதையைத்தான் சொல்ல வேண்டும். ‘மழையின் குரல் தனிமை’ கதை அதில் வரும் வீட்டைப் போன்றே பார்த்துப் பார்த்து இழைக்கப்பட்டது என்றால் ‘ராஜன் மகள்’ கதையானது அதன் கட்டுக்கோப்பில் சற்றே பிசிரடித்தாலும் கற்பனை விரிவில் அது எங்கெங்கோ சென்றுவருகிறது. பிறருடைய கனவுக்குள் சென்று பார்ப்பது பற்றி மிலோராத் பாவிச்சின் ‘கசார்களின் அகராதி’ நாவலில் வந்திருந்தாலும் இந்தக் கதையில் பொருள்களை மொழியற்ற தூய நிலையில் காணும் விலங்குகளின் கனவுக்குள்ளும் பா.வெங்கடேசன் சென்று வந்திருப்பது மலைக்க வைக்கும் கற்பனை.

‘ராஜன் மகள்’ தொகுப்புக்கு அடுத்ததாக ‘பாகீரதியின் மதியம்’ நாவலைப் படிக்கலாம். 700க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவல் என்றாலும் ஏற்கெனவே ‘ராஜன் மகள்’ மூலம் பா.வெங்கடேசனின் எழுத்து நடையை உள்வயப்படுத்திவிட்டிருந்தால் கற்பனைகளை அள்ளிக் கொடுக்கிற, ஆழமான, சுவாரசியமான ஒரு வாசிப்பனுபவத்தை இந்த நாவல் உங்களுக்குத் தரும்.

பெரியாரின் பிறந்த நாளன்று பிராமண இளைஞனான வாசுதேவனுக்கும் திமுக தொண்டனான உறங்காப்புலிக்கும் ஏற்படும் சண்டையில் பின்னவன் முன்னவனின் குடுமியை அறுப்பதில் தொடங்கும் கதை உறங்காப்புலிக்கும் பாகீரதிக்கும் முடிச்சுபோடுகிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், நெருக்கடிநிலைச் சூழல் என்று மாநிலமும் நாடும் கண்ட முக்கியமான காலப் பகுதிகளில் கதை நடக்கிறது. பெரியாரியம், பிராமணியம், கம்யூனிஸம், காந்தியம் என்று பல்வேறு தரப்புகள் நாவலுக்குள் மோதிக்கொள்கின்றன, உரையாடுகின்றன. ஓவியம், சுற்றுச்சூழல், பழங்குடிகள், நாட்டார் தெய்வங்களை பிராமணியமயமாக்கல், காலத்தை வளைக்கும் காதலின் சக்தி என்று வெவ்வேறு கருப்பொருள்கள் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கின்றன. கற்பனைக் கதாபாத்திரங்களுடன் காந்தி, பெரியார், சாரு மஜூம்தார், கருணாநிதி, ஓவியர் ஆதிமூலம் என்று பல உண்மையான பாத்திரங்கள் நேரடியாகவோ பின்னணியிலோ வருகிறார்கள். தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்து நாவல் தொடங்கும் இடம் சுவாரசியமாக இருக்கும் அதே நேரத்தில் திராவிட இயக்கம் என்பதற்குத் தீப்பொறி ஆறுமுகம் மட்டுமே அடையாளம் அல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.

காலம், இடம், காதல் இவை மூன்றும் வெவ்வேறு உடல்களையும் மனங்களையும் ஒன்றே போல காட்டும் மாயத்தை இந்த நாவல் நிகழ்த்துகிறது. இந்த நாவல் இரண்டு அடுக்குக் கதைசொல்லிகளைக் கொண்டது. தன்னை ‘டிராகுலா’வாகக் கருதிக்கொள்ளும் காந்தியர் அரங்கநாதன் நம்பி பாகீரதி-வாசுதேவன்-உறங்காப்புலி ஆகிய மூவரையும் குறித்துத் திரட்டிய தகவல்களைப் பெயரற்ற கதைசொல்லியிடம் சொல்ல அந்தக் கதைசொல்லி நாவலை நம்மிடம் சொல்கிறார்.

இந்த நாவலில் ‘தாண்டவராயன் கதை’, ‘ராஜன் மகள்’ போன்றவற்றில் உள்ளதுபோல மாயயதார்த்தக் கூறுகள் அநேகமாக இல்லை என்றாலும் நிகழ்வுகளை, யதார்த்தத்தை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கும் விதத்தில் ஒரு மாய யதார்த்த நாவலைப் படிக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எப்படி குறிப்பிட்ட விதத்தில் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருளை அடுக்கி, இடத்தின் சாத்தியங்களுடன் விளையாடி சாரங்கன் மழை வீடு என்ற மாய யதார்த்தக் கூறுகள் கொண்ட வீட்டை ‘மழையின் குரல் தனிமை’ நாவலில் கட்டுகிறானோ அதே போல் கதை சொல்லலில் ‘பாகீரதியின் மதியம்’  நாவலில் நிகழ்த்துகிறார் பா.வெங்கடேசன். தமிழில் இந்த அளவுக்குப் பல குரல்களைக் கொண்ட, வெற்றிகரமான பிறிதொரு 'பாலிபோனிக்' (polyphonic) நாவலை என்னால் சொல்ல முடியவில்லை.

பாகீரதியின் மதியம்’ பெரிய நாவல் என்பதால் அடுத்ததாக சிறிய நாவலான ‘வாராணசி’யைப் படிக்கலாம். 191 பக்கங்களைக் கொண்ட நாவல் இது. என்றாலும் வசிப்பதற்கு அவ்வளவு எளிமையானது என்று சொல்லிவிட முடியாது. நாவல் முழுக்க அடைப்புக் குறிகள் பரவிக் கிடக்கின்றன. அடைப்புக் குறி, அதற்குள் ஒரு அடைப்புக் குறி, அதற்குள் ஒரு அடைப்புக்குறி என்று கதைசொல்லும் விதத்தில் ‘வாராணாசி’ விளையாட்டு காட்டுகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு உத்தியாகத் தோன்றும். அப்படியல்ல, காலத்தை இந்த நாவல் எப்படி எடுத்துக்கொள்கிறது, எப்படி முன்வைக்கிறது என்பதற்கான உத்தி இது. வழக்கமாக காலவரிசை இல்லாமல் சொல்லப்படும் கதையில் (நான்லீனியர்) அத்தியாயத்துக்கு அத்தியாயம் காலம் முன்பின்னாகக் காட்டப்படும் என்றால் ‘வாராணசி’யில் ஒரு பத்திக்குள்ளாக மட்டுமல்லாமல் ஒரு வரிக்குள்ளாகவே காலம் முன்பின்னாகக்  காட்டப்படும். ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ போன்றவற்றில் அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ‘வாராணசி’யில்தான் அதிகம். தான், தன் சகோதரிகள் என்று மூன்று பேரையும் மணந்துகொண்டாலும் தன்னைத் தீண்டவே தீண்டாத கணவன் விஸ்வநாதன் மேல் வெறுப்புற்று வாராணசி செல்லும் பிராமணப் பெண்ணான பவித்ரா அங்கே ‘பிளேபாய்’ போன்ற ஒரு பத்திரிகையின் புகைப்படக் கலைஞராக இருக்கும் லோத்தருக்கு நிர்வாண மாடலாக ஆகிறாள். காவியக் கருப்பொருள்களைக் கொண்ட புகைப்பட வரிசைகளை எடுத்த பிறகு தனது முப்பதுகளிலேயே பவித்ரா இறந்துவிடுகிறாள். வெகு காலம் கழித்து பவித்ராவின் நிர்வாணப் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் பத்திரிகை விஸ்வநாதனின் எதிரி மூலம் விஸ்வநாதனுக்குக் கிடைக்க அந்தக் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பவித்ராவைத் தேடி விஸ்வநாதனும் அவரது கடைசி மனைவி மூலம் அவருக்குப் பிறந்த இதாவும்  வாரணாசிக்கு வருகிறார்கள். பவித்ரா இறந்தது தெரிந்து அந்தப் புகைப்படங்களை என்ன செய்வது என்பது பற்றி வெகு நேரம் விவாதிக்கப்படுகிறது. இதுதான் மையக் கதை. இதா போதைப் பழக்கம் கொண்டவள் என்பதால் அதுபோன்ற மயக்க நிலையில் ஆட்பட்டவர்களின் மனநிலையிலிருந்து படம் சில இடங்களில் செல்கிறது. புதிரான பல இடங்களைக் கொண்ட இந்த நாவல் அதன் நடைக்குப் பழகிக்கொண்டு ஒரு தடவைக்கும் மேல் படித்தால் வாசிப்பு இன்பத்தை அள்ளித்தரும் (‘Enter the Void’ போன்ற Psychedelic வகைமை திரைப்படங்களைப்  பார்த்திருப்பவர்களுக்கு இந்த நாவல் எளிதில் திறந்துகொள்ளும்).

கடைசியாக ‘தாண்டவராயன் கதை’ நாவலைப் படிக்கலாம். குறித்துக்கொள்ளுங்கள், இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல; உலக இலக்கியத்தின் முக்கியமான நாவல்களுள் ஒன்று. இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா என்று மூன்று நாடுகளில் விரியும் கதை இது.

இங்கிலாந்தின் கிராமமொன்றில் உள்ள சாபக்காட்டில் இந்த நாவலின் நாயகன் ட்ரிஸ்ட்ராம் அவனது காதலி (பின்னாளில் மனைவி) எலினாரைப் புணர்ந்ததால் அவளுக்கு வெண்ணந்தகம் என்ற பார்வையிழப்பு ஏற்படுகிறது. அதற்கு மருந்து தேடி முதலில் பிரான்ஸ், பிறகு கதைகளின் நிலமான இந்தியா என்று பயணம் மேற்கொள்கிறான் ட்ரிஸ்ட்ராம். அங்கே, செல்லி-கெங்கம்மா கதை, தாண்டவராயன் கதை, கோணய்யன் கதை, துயிலார்கள் சரித்திரம் என்று அவன் எதிர்பார்த்ததற்கும் மேலான கதைகள் அவனை வியப்பிலாழ்த்துகின்றன. தன் மனைவி சொல்லும் கதையின் கதாபாத்திரம்தான் தான் என்பதை நாவலின் முக்கால்வாசியில் ட்ரிஸ்ட்ராம் கண்டுபிடிக்கிறான்.  இறுதியில் ஒரு மாபாதக வலைப்பின்னலை அழித்துவிட்டு அவனும் வெண்ணந்தகத்துக்கு ஆளாகிறான். இதற்கிடையில் மொழியும் தொன்மங்களும் கதைகளும் வரலாறும் ஆறாகப் பாய்ந்தோடுகின்றன. இந்த நாவலில் இடம்பெறும் ‘நீலவேணியின் பாதை’ அதியற்புதமான கற்பனாசக்தி கொண்ட ஒரு மனதின் வெளிப்பாடு. அதேபோல, நாவல் அதன் போக்கில் சென்றுகொண்டிருக்க பாதியில் சன்னதம் வந்ததுபோல் நாட்டார் கதைப்பாடலுக்கு மாறிவிடுகிறார் பா.வெங்கடேசன்.

கோணய்யன் கதையும் தாண்டவராயன் கதையும் 25 பக்கங்களுக்கு கதைப்பாடலில் நீள்கின்றன. நாட்டார் இலக்கியத்துக்கும் பாஞ்சலி சபதம் போன்ற காவியத்துக்கும் பிறந்த குழந்தையாக, வெறும் மொழியழகுடன் நின்றுவிடாமல் கதையழகும் கற்பனையழகும் கொண்டு அந்தப் பகுதி சீறிப் பாய்கிறது.

தமிழில் சிறுபத்திரிகை உலகத்தில் அமைப்பியல், பின்நவீனத்துவம், மாயயதார்த்தம், பின்காலனியம், இண்டர்டெக்‌ஷுவாலிடி (intertexuality), இனவரைவியல், நாட்டாரியல், குறியீட்டியல் (Semiotics), மொழியியல், சூழலியல், வரலாறெழுத்தியல் (Historiography) போன்றவை குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்திருக்கின்றன, நடந்துகொண்டிருக்கின்றன. இலக்கியத்தில் அதன் பிரதிபலிப்பு என்ன என்று கேட்டால் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இவை யாவற்றையும் உட்செரித்துக்கொண்டு உள்ளூர் மரபுகளையும் உள்வாங்கிக்கொண்டு வெளிப்பட்ட சரியான விளைச்சல் என்று பா.வெங்கடேசனின் படைப்புகளைத்தான் என்னால் சுட்டிக்காட்ட முடிகிறது. அதன் அதிகபட்ச சாதனை ‘தாண்டவராயன் கதை’.  

பா.வெங்கடேசன் குறைவாக எழுதியிருக்கிறார் என்பதுபோல்தான் தோன்றும். பா.வெங்கடேசனின் புனைவு நூல்கள் ஐந்துதான் வந்திருக்கின்றன என்றாலும் பக்க எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2,500ஐத் தொடும். இது மௌனி எழுதியதைவிட கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகம், புதுமைப்பித்தன் எழுதியதைவிட மூன்று மடங்கு அதிகம். எண்ணிக்கையில் மட்டுமல்ல; படைப்பின் உயரத்திலும் தன் முன்னோடிகளைப் பெருமைகொள்ளச் செய்யும் சாதனைகளை பா.வெங்கடேசன் செய்திருக்கிறார். உங்கள் வாசிப்பைப் பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் பா.வெங்கடேசனைப் படியுங்கள். நான் அப்படித்தான் என் வாசிப்பைப் பெருமைப்படுத்திக்கொண்டேன்! 

தமிழின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான பா.வெங்கடேசன் இன்று தன் 60-வது வயதை நிறைவு செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அவருடைய புனைவுப் படைப்புகள் முழுவதையும் பல தடவை படித்தவன் என்ற முறையில் அவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான பார்வையை இத்தருணத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரை பிரதானமாக, பா.வெங்கடேசனைப் படித்திராத வாசகர்களையும் அவரைப் படிக்க முயன்று இயலாமலோ பிடிக்காமலோ விலகிச் சென்ற வாசகர்களையுமே இலக்காகக் கொள்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


4






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ramamoorthy   2 years ago

ஏற்கனவே பாகீரதியின் மதியம்,வாராணசி நாவல்கள் வாசித்து விட்டேன்.பா.வெங்கடேசன் மாதிரி யெல்லாம் இன்றைய தேதிகளில் தமிழில் எழுத யாரும் இல்லை.ஒரே ஒரு சமஸ்,ஒரே ஒரு ஆசை மாதிரி தான் அவர்.ஆசை அவர்களுடைய காந்தி பற்றிய படைப்புகள் பாடநூட்களுக்கு போகும்போது தமிழ் இலக்கிய உலகில் செழுமை மிகும்.சமஸ் அவர்களுடைய கட்டுரைகள் படித்த பின்னர் ஒருவரது வாசிப்பு தரம் உயர்ந்ததாக மாற்றம் கொள்வது போல பா.வெங்கடேசன் அவர்களுடைய படைப்புகள் வாசகனைத் தரம் உயர்த்தும்.ஆசை அவர்களுடைய பா.வெங்கடேசன் பற்றிய கட்டுரை மிகவும் முக்கிய ,கால அவதாரம் ஆகும்.இந்தப் பணி தொடர வேண்டும்.மேலும்,வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தயவுசெய்து அருஞ்சொல்.com ஐ,சந்தா செலுத்தி ஆதரியுங்கள் தமிழர்களே!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   3 years ago

இதே வரிசையில்தான் நானும் வாசித்தேன். அவரது படைப்புலகம் ஏற்படுத்தும் மலைப்பைத் தாண்டி, அவர் மதுரைக்காரர் என்பதுவும்; 'தனது கழுதையை விற்கச் சென்ற முல்லா, விற்றுத்தர முயன்றவன் பயன்படுத்திய புகழுரைகளைக் கேட்டுத் தானே அதை வாங்கிவருவது' என்ற கதையை ஒரு ஏற்புரையில் குறிப்பிட்டதுவும் அவரை அணுக்கமாக்கின

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

பாமகஜமுனா கினாரா மோரா காவோன்வில் ஸ்மித்கபில் சிபல்அமரத்துவம்மக்கள் வதைஅழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!இன்னொரு குரல்கௌசிக் தேகா கட்டுரைஷகி விஜயும் ஒன்றா?பிஜேபிசீனா பறக்கவிடும் இந்தியக் கொடி!அந்தமான் சிறைdenugaநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்ஹிலால் அகமது கட்டுரைவிக்கிப்பீடியாதலித் இயக்கங்கள்சாமானியர் பிம்பம்குழந்தைப்பேறுபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிகொமேனிகேப்டன் பிரபாகரன்படகுப் பயணம்இந்திய ஜனநாயகம்நிஹாங்திறனுக்கு அப்பால்தேசிய அரசியல்மோடி அரசுக்கு கவலை தரும் மூன்று!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!